Our Feeds


Thursday, March 10, 2022

SHAHNI RAMEES

வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் விவகாரம் : வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்க நீதிமன்றம் மறுத்தது.

 

(எம்.எப்.எம்.பஸீர்)
குருணாகல் போதனா வைத்தியசாலையில் தாய்மாருக்கு
 சட்ட விரோதமாக கருத்தடை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலையின் முன்னாள் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை, அவ்வழக்கிலிருந்து முற்றாக விடுவிக்க குருணாகல் நீதிவான் நீதிமன்றம் நேற்று (9) மறுத்தது.

குறித்த விவகாரத்தை விசாரணை செய்த குருணாகல் முன்னாள் நீதிவான், இவ்விவகாரத்தில் அமைத்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை இதுவரை மன்றில் சமர்ப்பிக்கப்படாத நிலையிலேயே, அதனை மையப்படுத்தி இந்த விடுவிப்பு தொடர்பிலான கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதற்கான உத்தரவை குருணாகல் நீதிவான் பந்துல குணவர்தன நேற்று பிறப்பித்துள்ளார்.

நேற்றைய தினம் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் குருணாகல் நீதிவான் நீதிமன்றில் மீள விசாரணைக்கு வந்தது. இதன்போது வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம் மன்றில் ஆஜரானது.

இதன்போது குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 120 (3) ஆம் அத்தியாயம் பிரகாரம் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன விஷேட கோரிக்கை ஒன்றினை முன் வைத்தார்.

இந்த விவகாரத்தில், வழக்கொன்றினை அல்லது குற்றப் பத்திரிகையினை தாக்கல்ச் எய்யும் அளவுக்கு சந்தேக நபரான தனது சேவை பெறுநருக்கு எதிராக எந்த சாட்சியமும் இல்லை எனில் அவரை குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 120 (3) ஆம் அத்தியாயத்துக்கு அமைய விடுதலை செய்யுமாறு அவர் கோரினார்.

இந் நிலையில் அந்த கோரிக்கை தொடர்பில் நேற்றைய தினம் தனது உத்தரவை நீதிவான் வழங்கினார்.

அதன் பிரகாரம் அக்கோரிக்கையை நிராகரிப்பதாக அறிவித்த நீதிவான் பந்துல குணவர்தன, அவ்வுத்தரவில் மேலும் சில விடயங்கலையும் வெளிப்படுத்தினார்.

சந்தேக நபரான வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட போதும், பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் அவருக்கு எதிராக எந்த சான்றுகளும் இல்லை என நீதிவான் குறிப்பிட்டார். அத்துடன் அவருக்கு எதிராக கறுப்பு பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் விடயங்கள் முன் வைக்கப்பட்ட போதும் அதற்கான சான்றுகளும் இதுவரை மன்றில் முன்னிலையில் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

எனினும் இதற்கு முன்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிவான், இந்த விவகாரம் தொடர்பில் அறிக்கை பெற நிபுணர்கள் குழுவொன்றினை நியமித்துள்ள நிலையில், அந்த நிபுணர்கள் குழாமின் அறிக்கை இதுவரை மன்றுக்கு கிடைக்காத நிலையில், அவ்வறிக்கையில் கூறப்படும் விடயங்களை கருத்தில் கொள்ளாது சந்தேக நபரின் கோரிக்கைக்கு அனுமதியளிக்க முடியாது எனக் கூறி அதனை மறுத்தார்.

இந் நிலையில், மற்றொரு கோரிக்கையை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, சந்தேக நபரான வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் இரு வாரங்கள் வெளிநாடு செல்ல வேண்டிய தேவை இருப்பதால் அவரது கடவுச் சீட்டை தற்காலிகமாக விடுவிக்குமாரு கோரினார்.

அதற்கு சி.ஐ.டி. தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இந் நிலையில், இரு தரப்பினருக்கும் அது குறித்து ஒரு வாரத்துக்குள் எழுத்து மூல சமர்ப்பணங்களை முன் வைக்க உத்தரவிட்ட நீதிவான், அது தொடர்பிலான உத்தரவை இரு வாரத்தில் அறிவிப்பதாக கூறி வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

முன்னதாக கடந்த 2019 மே மாதம் 6 ஆம் திகதி வைத்தியர் ஷாபியால் நடாத்தப்பட்டு வந்த வைத்திய நிலையம் குருணாகல் பொலிஸ் நிலைய அதிகாரிகளால், அப்போதைய குருணாகல் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிரி ஜயலத்தின் உத்தரவுக்கு அமைய பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.  பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிரி ஜயலத்தின் உளவாளி எனக் கூறபப்டும் நபர் கொடுத்ததாக கூறபப்டும் தகவல்களை மையப்படுத்தி இந்த சோதனை நடாத்தப்பட்டதாக  பிரதிப் பொலிஸ் மா அதிபர் தரப்பில் கூறப்படுகின்றது. 

குறிப்பாக வருமானத்தை மீறிய சொத்து, மற்றும் பயங்கரவாத , அடிப்படைவாத அமைப்புக்களுடனான தொடர்பு மற்றும்  குருணாகல் வைத்தியசாலைக்குள் சிலரால் பேசப்பட்ட வதந்தியான கருத்தடை விடயத்தை மையப்படுத்தி இந்த சோதனைகளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிரி ஜயலத்தின் உத்தரவில் பொலிஸார் முன்னெடுத்திருந்தனர். ஆனால், அதன்போது சந்தேகத்துக்கிடமான எதுவும் அங்கு கண்டுபிடிக்கப்படவில்லை.

 அதிலிருந்து 6 நட்களின் பின்னர்  கடந்த 2019  மே 12 ஆம் திகதி, ஷாபி வைத்தியரை குறிவைத்த  இரண்டாவது நகர்வு எடுக்கப்ப்ட்டிருந்தது.

 குருணாகல் வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தௌஹீத் ஜமாஅத் அமைப்போடு தொடர்பு வைத்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி குருநாகல் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிரி ஜயலத் 2019 மே 12 ஆம் திகதி குருநாகல் பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்கவுக்கு டீஐஜி/ கேயூ/ ஆர்ஐயூ/ 134/19 இலக்கம் கொண்ட கடிதம் ஒன்றை அனுப்பி விசாரணைகளுக்கு உத்தர்விட்டிருந்தார். அந்த கடிதம் குருணாகல் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் புஷ்பலாலுக்கு , பொலிஸ் அத்தியட்சர் ஊடாக அனுப்பட்ட நிலையிலேயே விசாரணைகள் ஆரம்பித்துள்ளன.

இதனையடுத்து கடந்த 2019 மே 22 ஆம் திகதி குருணாகல் நீதிவான் நீதிமன்றுக்கு சென்றுள்ள , பொலிஸ் பரிசோதகர் புஷ்பலால், தெளஹீத் ஜமா அத்துடன் தொடர்புடைய வைத்தியர் ஒருவர் தொடர்பில் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பீ 1398/19 எனும் முதல் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். எனினும் அதில் அந்த வைத்தியர் யார் என குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

 இந்நிலையிலேயே 2019 மே 23 ஆம் திகதி திவயின பத்திரிகையில், ‘தௌஹீத் ஜமாஅத் டாக்டர், சிங்கள தாய்மார் 4000 பேருக்கு கருத்தடை செய்துள்ளார். சாட்சிகளோடு அம்பலமாகியுள்ளது’ என்று செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் அந்த செய்தியிலும் டாக்டரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

எனினும் இவ்வாறு கருத் தடை விவகாரம் ஒன்று தொடர்பில் நாட்டில் எங்கும் எந்த வைத்தியருக்கும் எதிராகவும் அப்போதும் விசாரணைகள் இடம்பெறவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர ஊடாக அந்த திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் 2019 மே 24 ஆம் திகதி குருணாகல் பகுதிக்குப் பொறுப்பான அப்போதைய பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்கவும் , குருணாகல் பொலிஸ் நிலையப் அப்பொதைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன, குற்றவியல் பிரிவு அப்போதைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் புஷ்பலால் உள்ளிட்டோருடன் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீன் விவகாரம் தொடர்பில் விஷேட கூட்டம் நடந்துள்ளது. இதனையடுத்து வைத்தியர் ஷாபியைக் கைது செய்ய பொலிஸ் அத்தியட்சர், பொலிஸ் பொறுப்பதிகாரி ஊடாக குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த பணிப்புரைக்கமையவே பொலிஸ் பரிசோதகர், புஷ்பலால் தலைமையிலான பொலிஸ் குழுவொன்று 2019 மே 24 ஆம் திகதி இரவு 10 மணிக்கு டாக்டர் ஷாபியை கைது செய்தது.

குருணாகல் பொலிஸ் அத்தியட்சருடனான கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ள மூன்று விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த கைது நடவடிக்கையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

முதலாவதாக, தௌஹீத் ஜமாஅத் அமைப்பிடமிருந்து பணம் பெற்று, அவ்வமைப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம், சிங்களத் தாய்மார்களை கருத் தடை செய்தமை செய்தமை, இரண்டாவது தவறான வழிகளில் பெற்ற பணத்தைக்கொண்டு சொத்துக்கள் சேர்த்தமை, மூன்றாவதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் இவர் கைது செய்யப்படாது போனால் நாட்டை விட்டு அவர் தப்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் இவருக்கும் இவரது வீடுகளுக்கும் சேதம் விளைவிக்கப்படலாம் என்பதாகும்.

எனினும் அதற்கு முன்பதாக 2019 மே 23 ஆம் திகதியே வைத்தியர் ஷபைக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடையைப் பெற குருனாகல் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இவ்வாறான பின்னணியிலேயே மே 24 ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வைத்தியர் ஷாபி குருனாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட வைத்தியர் ஷாபிக்கு எதிராக 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்புச் சட்ட (தற்காலிக விதிகளின்) 6(1) ஷரத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைப்பதற்கு குருநாகல் பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்க, குருநாகல் பொலிஸாருக்கு அதிகாரமளித்துள்ளார்.

இதனையடுத்தே 2019 மே 25 ஆம் திகதி அவரை சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கும்படி பதில் பொலிஸ்மா அதிபர் குருனாகல் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தார். அது முதல் சில மாதங்கள் வைத்தியர் ஷாபி சி.ஐ.டி. தடுப்புக் காவலில் இருந்தார். பின்னர் அவர் கடந்த 2019 ஜூலை 12 ஆம் திகதி குருணாகல் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். அதன் பின் அவரை விளக்கமரியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டிருந்தார். அதன் பின்னரே அவருக்கு பிணையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »