கையாகலாத, வங்குரோத்து நிலையை அடைந்துள்ள மொட்டு அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் SJB யின் கண்டி மாவட்ட அமைப்பாளருமான ஹிதாயத் சத்தார் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இப்போதும் கூட IMFக்கு சென்று எமது நாட்டின் நிலைமையைக் கூறி உதவி பெற்றுகொள்வதற்கு ஒரு நாடு என்கிறவகையில் நாம் தாமதமாகிவிட்டோம். நாளை IMFக்கு சென்றாலும் கூட இலங்கைக்கு கடன் கிடைக்க குறைந்தது இன்னும் மூன்று மாதங்கள் வரை செல்லும். அதுவரை தாக்குப் பிடிக்கும் நிலையில் எமது நாட்டின் பொருளாதாரம் இல்லை, மக்கள் இன்று பொருட்களின் விலை பல மடங்காக உயர்ந்துள்ளது என்று நினைத்தாலும் கூட நாளுக்கு நாள் அதிகரிக்கப் போகும் விலைவாசியினால் மக்கள் அவதிப்படப் போவதை இந்த அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த எந்தவொரு நல்ல வேலைத்திட்டமும் இல்லை.
விரைவில் அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டி இந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் இதர அமைச்சர்களின் இயலாமையை நாட்டு மக்களுக்கு சொல்லி உடனடியாக ஒரு சிறந்த அரசியல் உடன்பாட்டினை எட்ட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.