Our Feeds


Sunday, March 6, 2022

ShortTalk

பெரும்பான்மையை இழக்கப்போகும் ஜனாதிபதி கோட்டாவின் ஆட்சி ? - முக்கிய MP க்கள் எதிரணியில் அமர திட்டம் ?





(லியோ நிரோஷ தர்ஷன்)


ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் இன்று பூதாகரமாக வெடித்துள்ளது.


இந்த  முரண்பாட்டு நிலைமையை மேலும்  தீவிரப்படுத்தும் வகையில்  விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கியுள்ளார். 

இதனால் கூட்டணியில் உள்ள 11 பங்காளி கட்சிகளும் மாற்று அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றன. 

இதனடிப்படையில் நாளை மறுநாள் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள பாராளுமன்ற அமர்வில் ஆளும் கூட்டணி கட்சியை பிரிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் பலர் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை தலைமையாக கொண்ட ஆளும் கூட்டணியில் உள்ள 11 பங்காளி கட்சிகளும் அண்மையக்காலமாக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் சுயாதீனமாக செயற்படப்போவதாகவும்  தெரிவித்து வந்தனர். 

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி , விமல் வீரவன்ச தலைமையிலான  தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுறு ஹெல உறுமய, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் லங்கா சமசமாஜ கட்சி, வீரசுமன வீரசிங்க  தலைமையிலான கம்யூனிச கட்சி மற்றும் அத்துரலியே ரத்ன தேரர் போன்ற தரப்புகள்  ஆளும்  கூட்டணியாட்சியின் பிரதான பங்காளிகள்  என்பதுடன் இவர்கள் அனைவருமே கடுமையான விமர்சனங்களை அரசாங்கத்திற்கு எதிராக முன்வைத்துள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் குறித்த பங்காளி கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும்  பாராளுமன்ற உறுப்பினர்கள் 30 பேரும் எதிர் தரப்பு ஆசனங்களில் அமர்ந்தால் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வடைவதோடு ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 121 ஆக குறைவடைந்து விடும்.  

இதனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் இழக்க நேரிடும்.  மறுபுறம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களான விதுர விக்கிரமநாயக்க  மற்றும் பிரேம்நாத் சி. தொலவத்த போன்றவர்களும் அரசாங்கத்துடன் சிறந்த உறவில் இல்லை. 

பங்காளி கட்சிகள் நடத்திய மாநாட்டிலும்  இவர்கள் கலந்துக் கொண்டிருந்தனர். அதேபோன்று மகஜன எக்சத் பெரமுனவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன. 

சுசில் பிரேமஜயந்தவை ஜனாதிபதி நீக்கிய போது உடனே சென்று தினேஷ் குணவர்தன அவரை சந்தித்திருந்தார். இவரது முக்கிய சகாக்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரும் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

எனவே ஆளும் கட்சிக்குள் காணப்பட கூடிய உக்கிரமான மோதல்கள் அரசாங்கத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கிவிடலாம். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தொடர்வது குறித்தும் பலர் கருத்துக்களை கூறிவருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »