நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையை மூடிவிடுங்கள், நாங்கள் வீட்டில் இருந்து உணவெடுத்து வந்து உண்கின்றோம். – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த கெட்டகொட தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போதே சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பிய ஜயந்த கெட்டகொட எம்.பி.,
” நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் திரவப்பால் கோரி , நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேயாட்டம் ஆடினர் என பத்திரிகைகளிலும், இணைய ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறானதொரு சம்பவம் நடைபெறவில்லை. நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உள்ள உணவு பெறுமதி மிக்கது என்றெல்லாம் தகவல்கள் வெளிவருகின்றன. இப்படியான சம்பவத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயருக்குக் களங்கம் ஏற்படுகின்றது. நாடாளுமன்றத்தில் திரவப்பால் கோரி எந்தவொரு சண்டையும் இடம்பெறவில்லை. எனவே, இது தொடர்பில் விசாரணை நடத்தி, போலித் தகவல்களை பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலை மூடப்பட்டால்கூட பரவாயில்லை, நாங்கள் வீட்டில் இருந்து உணவு எடுத்துவந்து உண்கின்றோம். ” என்றும் கெட்டகொட குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர்,
“தவறான செய்தி வெளியானதையிட்டு கவலை அடைகின்றேன். ஊடக சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது. இப்பிரச்சினை சிறப்புரிமைக்குழுவுக்கு வழங்கப்படும்” – என்றார்.
அதேவேளை, சிற்றுண்டிச்சாலையை மூடினால் எமக்கும் பிரச்சினை இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டார்.