(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஒரு சகோதரர் ஜனாதிபதியாகவும் மற்றொரு சகோதரர் பிரதமராகவும், மூத்த சகோதரர் அமைச்சராகவும் இருப்பதற்காக நிதியமைச்சர் நாட்டின் நிலைமைகளை கருத்தில் கொள்ளாது செயற்பட முடியாது.
இது வீடுகளில் சாதாரணமாக இருக்கலாம், ஆனால் நாடாளுமன்றத்தில் அவ்வாறு நடந்து கொள்ள முடியாது. எனவே, நிதியமைச்சர் தனது பொறுப்புக்களை உணர்ந்து, இந்த சபையில் நாட்டின் நிலைமைகள் குறித்து அறிவிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (11) வெள்ளிக்கிழமை, 27/2இன் கீழ் சிறப்பு கூற்றொன்றை முன்வைக்க முன்னர் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் இதன்போது மேலும் கூறுகையில்,
இரண்டு நாட்களில் டொலருக்கான பெறுமதி 260 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய அதிர்வை ஏற்படுத்தும். அதேபோல் நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளது. நாட்டில் என்ன நடக்கின்றது என்பதை நாம் மட்டும் அல்ல ஆளும் கட்சியில் உள்ளவர்களுக்கும் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
ஆகவே இந்த நிலைமைகளை தெளிவுபடுத்துவது நிதிய மைச்சரின் பிரதான கடமையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.