எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வரும் வாகனங்களை கண்காணித்து, நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் உடனடியாக தரவுகளை பரிமாறிக் கொள்ளும் செயலி, நாட்டின் பல இடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தகவல் தொழில்நுட்ப திணைக்களத்தினால் இந்த செயலி உருவாக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து எரிபொருளை பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளரின் வாகனத்தின் இலக்கத்தகடு உரிய செயலியில் உள்ளடக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த வாகனம் தொடர்பான தரவுகள் ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் உடனடியாக பரிமாறிக் கொள்ளப்படும்.
வாகனத்தின் இலக்கத் தகட்டை அடிப்படையாக கொண்டு அன்றைய தினம் வேறு இடத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டதா என்பதையும், வாகனத்துக்கு எரிபொருள் கிடைத்ததா என்பது பற்றிய முன்னறிவிப்புகளையும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.