நாடளாவிய ரீதியில் தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமையான QR முறைமையின் கீழ் மாத்திரம் இன்று முதல் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
வாகனத்தின் இலக்கத்தகட்டில் உள்ள எண்னையும், தேசிய எரிபொருள் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள வாகன இலக்கத்தையும் சரிபார்த்து எரிபொருளை விநியோகிக்குமாறு சகல எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
1140 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளது.
மோசடிகள் தொடர்பில் அவதானம்
சட்டவிரோதமாக எரிபொருளை சேமித்தல் மற்றும் அதனை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் தொடர்பில் பொதுமக்கள் முறையிட முடியும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான படங்கள் மற்றும் காணொளி ஆதாரங்களை 0742 123 123 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபர்களின் QR குறியீடு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இறுதி இலக்க முறைமை ரத்து
வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் நேற்றைய தினம் வரை எரிபொருள் விநியோகம் இடம்பெற்றிருந்தது.
எவ்வாறாயினும், வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் மற்றும் கூப்பன் ஆகிய முறைமைகளில் எரிபொருள் விநியோகம் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வருமான வரி பத்திரம் மூலம் பதிவு
வாகன செஸி இலக்கத்தின் மூலம் QR முறைமைக்கு பதிவு செய்ய முடியாத வாகன உரிமையாளர்கள் வருமான அனுமதி பத்திரம் மூலம் பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று முதல் நடைமுறையாகும் QR முறைமையூடாக வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள, ஒதுக்கீட்டு முறைமை மூலம் எரிபொருளை பெற்றுக்கொள்ள ஒரு வார காலம் காணப்படுவதுடன், அதனை நெருக்கடியின்றி பெற்றுக்கொள்ளுமாறு வலுச்சக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
எரிபொருள் தொகையில் பற்றாக்குறை
QR முறைமை வெற்றியளித்தாலும், விநியோகத்திற்காக வழங்கப்படும் எரிபொருள் தொகையில் பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக எரிபொருள் நிரப்பு உரிமையாளர்கள் மற்றும் தாம் பாரிய நெருக்கடியை எதிநோக்குவதாக அந்த சங்கத்தின் செயலாளர் டி.வி. சாந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.
சூத்திரத்துக்கமைய விலை திருத்தம் எரிபொருள்
விலைச்சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில் இவ்வாறு விலைத்திருத்தம் இடம்பெறவுள்ளன.
அதன்படி, எரிபொருளின் விலை 50 முதல் 100 ரூபா வரை குறைக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், முகக்கவசங்களை அணியாதவர்களுக்கு இன்று முதல் எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.