(எம்.மனோசித்ரா)
இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு இந்தியாவினால் 125 நவீன ரக பொலிஸ் ஜீப்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவிடமிருந்து பாதுகாப்பு படைகளுக்கு தேவையான 500 வாகனங்களைப் பெற்றுக் கொள்ளும் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் முதற்தொகுதியாக இவை கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் , பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன உள்ளிட்டோரிடம் குறித்த ஜீப் வாகனங்கள் வியாழக்கிழமை (டிச. 22) கையளிக்கப்பட்டன.
'அயல்நாட்டுக்கு முதலிடம்' கொள்கைக்கு அமைய இந்திய அரசாங்கம் இலங்கை மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கிவருகிறது.
அதற்கமைய தற்போது வரை புகையிரத திணைக்களம், உட்கட்டமைப்பு, பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, பெற்றோலியம், உரம் வழங்கல் போன்ற பல்வேறு துறைகளில் சுமார் 3.2 பில்லியன் டொலர் பெறுமதியான கடன்கள் இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவற்றுக்கு மேலதிகமாக கடந்த மார்ச்சில் உணவு, மருந்துகள், எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக 1 பில்லியன் டொலர் சலுகைக் கடன் வசதியை நீட்டித்தமை குறிப்பிடத்தக்கது என இந்திய உயர் ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.