கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்காக ஜனாதிபதி செயலணியைத் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலைத்துள்ளார்.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் ஒருவர் சமர்ப்பித்த விண்ணப்பத்துக்கு ஜனாதிபதி செயலகம் வழங்கிய பதிலில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த செயலணியை 2020ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்தார். அப்போதே இந்த நடவடிக்கைக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.
தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்துக்கென அமைக்கப்பட்ட அந்தச் செயலணியில், சிங்களவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டமையே, அந்த எதிர்ப்புக்கு காரணமாக அமைந்தது.
இதையடுத்து, அந்தச் செயலணியில் தமிழர் ஒருவரும், முஸ்லிம் ஒருவரும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.
“தொல்பொருள் உள்ள இடங்கள்” என தெரிவித்து சிறுபான்மை மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதாக தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்மையின் காணமாக, கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியை தேவையற்ற ஒன்றாகவே கருதினர்.
இந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் 22ஆம் திகதி மேற்படி செயலணியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலைத்துள்ளார் என்று தனது விண்ணப்த்துக்கு வழங்கப்பட்டுள்ள பதிவில் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகவியலாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அந்தச் செயலணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் எஸ்.கே.ஹேனாதீர அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.