பம்பலப்பிட்டியில் உள்ள சொகுசு வீடொன்றில் 25 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்தை நபர் ஒருவர் திருடிச்சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த வீட்டின் உரிமையாளரின் பதிவு செய்யப்பட்ட துப்பாக்கியையும் சந்தேக நபர் எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் இரகசியமாக நுழைந்த நபர் ஒருவர் சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான பொருட்களை திருடியுள்ளனர்.
சந்தேகநபர் 5,000 ரூபா நோட்டுகள், வெளிநாட்டு நாணயம், தங்கம் மற்றும் வீட்டுக்குச் சொந்தமான வர்த்தகரின் பதிவு செய்யப்பட்ட கைத்துப்பாக்கியுடன் தப்பிச் சென்றுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
திருட்டுச் சம்பவத்தின் போது தொழிலதிபரின் மனைவி மற்றும் இரண்டு ஊழியர்களும் வீட்டில் இருந்துள்ளனர்.
சந்தேக நபர் வீட்டிற்குள் நுழையும் காட்சியும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.