Our Feeds


Tuesday, August 11, 2026

ShortNews

அரசு விவசாயிகளை ஏமாற்றி ஐ.எம்.எப்.பிடம் அடிபணிந்துவிட்டது - சஜித்!


இலங்கையின் பெருமளவிலான மக்கள் பல்வேறு சிரங்களை எதிர்கொண்டு சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பல கணக்கெடுப்பு அமைப்புகளின் தகவல்களின் பிரகாரம் நாட்டின் வறுமை 30-40% வரை காணப்படுகின்றன. வேலையின்மை அதிகரித்துச் செல்வதுடன், பொருட்களின் விலை உயர்ந்து, பொருளாதார வளர்ச்சி குறைவடைந்து வருகின்றன. நாளுக்கு நாள் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் மக்கள் அதிகரித்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

லுணுகம்வெஹரவில் பிரதேசத்தில் இடம்பெற்ற விவசாயிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்களின் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவே மக்கள் அரசாங்கத்திற்கு 3 தேர்தல்களின் ஊடாக அதிகாரத்தைப் பெற்றுத் தந்ததனர். இருந்த போதிலும், மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறியுள்ளனவா, மக்கள் எதிர்பார்த்த உயரிய வாழ்க்கை முறை உருவாகியுள்ளதா என்பதில் சந்தேகம் எழுந்து காணப்படுகின்றன. 2019 ஆம் ஆண்டைப் போலவே 2024 ஆம் ஆண்டும் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

நெற்செய்கையாளர்கள் நியாயமான உத்தரவாத விலையைக் கோரியபோது, தேர்தல் காலத்தில் ரூபா 150 நிலையான விலையை பெற்றுத் தருவோம் என தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் தெரிவித்தனர். தற்சமயம் ஒரு கிலோ நெல் உற்பத்திக்கு ரூபா 137 செலவானாலும் அரசாங்கம் ரூபா 120 வையே பெற்றுக் கொடுத்துள்ளது.

வாக்குகளைம் பெற்று அரச அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், இவர்கள் திட்டமிட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அரசாங்கம் மூலம் நெல் கிலோ ஒன்றுக்கு விவசாயிகளுக்கு ரூபா 17 நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற பிரச்சினைகள் இருக்கத்தக்க நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையாக காணப்படுகின்றன. அரசாங்கம் எப்போதும் பொய் மற்றும் ஏமாற்று வேலைகளையே செய்து வருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்திருந்தால் புதிய நீர்ப்பாசன புனரமைப்புத் திட்டங்களை உருவாக்கி, புதிய குளங்கள் மற்றும் நீர்த்தேக்க கலாச்சாரத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தது. இன்று அத்தகைய வேலைத்திட்டங்கள் எதனையும் காண முடியாதுள்ளது. அரசாங்கத்திலிருந்து விவசாயிகளுக்கு தரமான உரம், விவசாய இரசாயனங்கள், விதைகள் கூட உரிய நேரத்தில் கிடைத்தபாடில்லை.

உர மானியம் கூட முறையாகக் கிடைப்பதில்லை. விவசாய உபகரணங்களுக்கு கூட VAT வரி விதிக்கப்படுகின்றன. விவசாயிகளின் உயிர் என்று கூறி வாக்கு கேட்டுவிட்டு, இன்று விவசாயியை மறந்துவிட்ட தற்போதைய அரசாங்கம் IMF ற்கு அடிபணிந்த நல்ல சேவகனாகவும், செல்லப் பிராணியாகவும், அடிமையாகவும் மாறியுள்ளது.

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது.

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால் நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது. பணவீக்கம் குறையாது. ஏற்றுமதி மைய உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது போலவே முன்னேற்றம் காணாது.  




புதிய தொழிற்சாலைகள் உருவாகாது. அரசாங்கம் இத்தருணத்திலும் மக்களை ஏமாற்றவே முற்படுகின்றது. பொதுமக்களின் வாழ்க்கையுடன் விளையாட முற்படுகின்றது. ' வளமான நாடு, அழகான வாழ்க்கை' என்பது இன்று காண்பதற்கில்லை.




அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை ஸ்தாபிக்க முற்படுகிறது.




நாட்டினுள் ஒரு சர்வாதிகார ஆட்சியை உருவாக்கவும், தனிக் கட்சியாட்சியை நடைமுறைப்படுத்தவுமே அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. இன்றும் கிராமத்தில் ஜனநாயகம் இல்லை. சிவில் பாதுகாப்புக்குழு மற்றும் இளைஞர் அமைப்புகளுக்கு கூட பெலவத்தை கட்சி அலுவலகத்தில் இருந்து வரும் பெயர் பட்டியலின் அடிப்படையில்தான் அதன் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். 




தகுதியின் அடிப்படையில் பதவிகள் வழங்கப்படுவதற்குப் பதிலாக அரசியல் நியமனங்கள் மூலமே இப்பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவை நியாயமற்ற செயலாகும். இது தான் முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வர வந்தவர்கள் செய்துள்ள வேலையாகும்.




இன்றும் சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை. 




இன்று சிறைச்சாலைகளின் அதிகூடிய கொள்ளளவு 11,000 என்றபோதிலும் 40,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகளின் இந்தப் பிரச்சினைக்கு இன்றும் அரசாங்கத்தால் தீர்வு வழங்க முடியாதுபோயிள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலைகள் அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் தோற்கடிக்க நடவடிக்கை எடுத்தது. 




இறுதியில் சில நாட்களுக்குள் மஹர சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை, குருவிட்ட சிறைச்சாலை, பல்லன்சேனை சிறைச்சாலைகளில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றன. இன்றும் சிறைச்சாலைகள் அமைச்சரால் நிலைமைகளை கட்டுப்படுத்தவோ அல்லது இந்த நெரிசலுக்கான தீர்வை வழங்கவோ முடியாது போயுள்ளது. இவற்றுக்கு மத்தியில் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கவே இவர்கள் முற்பட்டு வருகின்றனர்.




தனிக் கட்சியாட்சியை ஸ்தாபிக்கவே இவர்கள் முற்படுகின்றனர். 




பொய்யை அடிப்படையாகக் கொண்டு ஏமாற்றுதல், முட்டாளாக்குதல், திசைதிருப்பல் என்பவற்றையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அரசாங்கத்தின் கொள்கைகளும் இதன் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. அஸ்வெசும கொடுப்பனவுகள் தற்போது வெட்டப்பட்டு வருகின்றன. 




‘வளமான நாடு, அழகான வாழ்க்கை' என்று கூறி அதற்கு மக்கள் ஆணை கிடைத்த போதிலும், பொதுமக்களுக்கான நலன்புரிகளில் வெட்டுகளையே இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. நாட்டைத் தனிக் கட்சி ஆட்சி செய்யும் யுகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். 




நீதித்துறையின் சுதந்திரத்திற்கு மரண அடி கொடுத்து, நீதியின் ஆட்சியைப் பாதுகாக்கும் நீதித்துறை மீது நம்பிக்கையை இழக்கச் செய்ய இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »