Our Feeds



Friday, December 5, 2025

Zameera

அனர்த்த எச்சரிக்கைகளை எப்படி கையாள்வது என்று கோட்டாபய அரசாங்கத்திடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் ; நாமல்

சைக்ளோன் ‘தித்வா’ (Cyclone Ditwah) காரணமாக ஏற்பட்ட நெருக்கடிக்கு பதிலளிப்பதில் ஏற்பட்ட தவறு குறித்து விசாரிக்க பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, சில அதிகாரிகள் நெருக்கடிக்கு அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவதாகவும், அரசாங்கம் அதிகாரிகளைக் குறை கூறுவதாகவும் தெரிவித்தார்.

>”குறைபாடுகளை மூடிமறைப்பதற்காக நியமிக்கப்பட்ட கொள்கலன் (container) சம்பவத்தைப் பற்றி ஆராயும் குழுவைப் போலன்றி, இந்த நெருக்கடியில் எங்கு தவறு நடந்தது என்பதை நேர்மையாக விசாரிக்கக்கூடிய ஒரு குழுவை நியமிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இதேபோன்ற தீவிர வானிலை எச்சரிக்கைகளுக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழ் 2020-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளை அரசாங்கம் ஆய்வு செய்யுமாறு நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

“அந்த நிர்வாகத்தில் இருந்து பெறுமதியான பாடங்களைக் கற்றுக்கொள்வது தவறாக கருதப்படாது. தற்போதைய அமைச்சுகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் எந்தவிதமான ஒருங்கிணைப்பும் இல்லை.

வழிமுறைகள் பெரும்பாலும் எதிர்ப்புக்குள்ளாகின்றன. அவர்கள் ஒரு திட்டத்தை கடைப்பிடிப்பதில்லை. இந்த நெருக்கடியின் மத்தியில் அரசாங்கத்தின் அமைப்பு செயல்படுகிறதா என்றும், அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்றும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது,” என்றார்.

நாட்டில் நிலவும் நெருக்கடியின் மத்தியில் தற்போதைய வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டுடன் இந்த அரசாங்கத்தால் மேலும் செல்ல முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தேசிய திட்டத்திற்கும் தற்போதைய சூழ்நிலைகளுக்கும் ஏற்ப வரவுசெலவுத் திட்டத்தை திருத்துவது நல்லது என்று நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

“சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) கலந்துரையாடி, தற்போதைய நிலைமையை அவர்களுக்குத் தெரிவிக்கவும். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி இருக்கும் வரி முறையின் கீழ், தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவது கடினம்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

 

Zameera

அனர்த்தத்தினால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்க தயாரான IMF


 நாடு முழுவதும் உயிர்களைப் பலிகொண்டு, ஆயிரக்கணக்கானோரை இடம்பெயரச் செய்த அழிவுகரமான புயல் மற்றும் வெள்ள நிலைமையினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பைக் குறைப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) தயாராக உள்ளது. 


ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே IMF இன் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசேக் இதனைத் தெரிவித்தார். 


அனர்த்தத்தின் மனிதாபிமான, சமூக மற்றும் பொருளாதார தாக்கங்களை மதிப்பிடுவதற்கு இலங்கை அதிகாரிகள், அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் ஏனைய சகாக்களுடன் நெருக்கமாக செயற்படுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். 


"புயலினால் இலங்கையின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் மனித உயிரிழப்புகளுக்கு மேலதிகமாக பொருளாதார நடவடிக்கைகளிலும் இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என அவர் அங்கு குறிப்பிட்டார். 


இலங்கை தற்போது அதன் பங்காளிகளுடன் இணைந்து உடனடி அனர்த்தத்திற்குப் பிந்திய சேத மதிப்பீட்டை மேற்கொண்டு வருகிறது. 


இந்த மதிப்பீடு நிறைவடைந்த பின்னர் பொருளாதார தாக்கங்கள் குறித்த தெளிவு கிடைக்கும் என அவர் கூறுகிறார். 


இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதி (EFF) தொடர்பில் உறுதிப்படுத்திய கோசேக், நாட்டின் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்க IMF அர்ப்பணிப்புடன் உள்ளதாகத் தெரிவித்தார். 


"EFF ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையின் மீட்சி, மறுசீரமைப்பு மற்றும் தாங்கும் திறன் ஆகியவற்றுக்கு நாங்கள் தொடர்ச்சியாக ஆதரவளிப்போம்" எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார். 


புலயலுக்கு முன்னதாக கடந்த ஒக்டோபர் மாதம் ஐந்தாவது மீளாய்வு தொடர்பில் இலங்கை அதிகாரிகளும் IMF பணியாளர்களும் ஏற்கனவே பணியாளர் மட்ட இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக அவர் வலியுறுத்தினார். 


அத்துடன் "மீட்புச் செயல்பாட்டில் இலங்கைக்கு மேலும் உதவுவதற்கான மாற்றீடுகளை IMF பணியாளர்கள் தற்போது ஆராய்ந்து வருவதாகவும்", டிசம்பர் 15 ஆம் திகதி IMF பணிப்பாளர் சபை கூட்டத்தை நடத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். 


பொருளாதாரத் தேவைகள் மற்றும் சேதங்கள் குறித்த மேலதிக தகவல்கள் எம்மிடம் உள்ளதால், அத்தகவல்கள் இலங்கைக்கு மேலும் உதவக்கூடிய விதம் குறித்து எடுக்கப்படும் இறுதித் தீர்மானங்களுக்கு காரணமாக அமையலாம் எனவும் ஜூலி கோசேக் மேலும் தெரிவித்தார். 


இந்த ஊடக சந்திப்பில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கும், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் மக்களுக்கும் அவர் தனது அனுதாபத்தைத் தெரிவித்தார்.

Zameera

மேல் மாகாணத்தில் குவிந்துள்ள கழிவுகளை 3 வாரங்களில் அகற்ற வேண்டும்


 மேல் மாகாண கழிவு முகாமைத்துவக் குழுக் கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் இன்று (04) பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. 


இதன்போது, அனர்த்த நிலைமை காரணமாக குவிந்துள்ள கழிவுகளை முறையான வகையில் அகற்றி, துப்புரவு பணிகளை மூன்று வாரங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என பிரதமர் தெரிவித்தார். 


இத்திட்டத்தின் கீழ் சேரும் கழிவுகளை விரைவாக அகற்றுவதற்காக காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான கெரவலப்பிட்டியவில் உள்ள காணியிலிருந்து ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளதால், அதற்கமைய தற்போது சேரும் கழிவுகளை எவ்வித சிக்கலுமின்றி அகற்ற முடியும் என குழு தீர்மானித்தது. 


அக்காணியில் சேகரிக்கப்படும் கழிவுகளை முறையாக அகற்றுவதற்கும் அங்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

Zameera

சீனாவில் நிலநடுக்கம்


  

சீனாவில் இன்று உள்ளூர் நேரப்படி மதியம் 1.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

இந்த நிலநடுக்கம் 6.2 ரிச்டர் அளவில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை 2 மில்லியன் மக்கள் உணர்ந்தனர்.

 

சீனாவின் கிர்கிஸ்தான்-ஜின்ஜியாங் எல்லைக்கு அருகிலுள்ள அக்கி மாவட்டத்திற்கு அருகில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.


Zameera

சேதமடைந்த வீதிக் கட்டமைப்புகளின் புனர்நிர்மாணப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் - ஜனாதிபதி


அனர்த்தத்திற்குப் பின்னர் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் போது, சேதமடைந்த வீதிக் கட்டமைப்பை உடனடியாக புனர்நிர்மாணம் செய்து, மக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.


டித்வா சூறாவளியால் சேதமடைந்த பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் பற்றிய தகவல்களை ஆராய்வதற்கும், அவற்றை சீர்செய்ய எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் சேதமடைந்த பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளை சீர்செய்வது, அதற்கு எடுக்கும் காலம் மற்றும் தொடர்புடைய நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.


சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் A மற்றும் B தர வீதிகள் சுமார் 247 கிலோமீட்டர் சேதமடைந்துள்ளதாகவும், 40 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். பகுதியளவில் சேதமடைந்த 256 வீதிகளில் தற்போது 175 வீதிகள் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபோன்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் டி. பாஸ்கரன், பணிப்பாளர் நாயகம் கே.டபிள்யூ. கண்டம்பி உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

Zameera

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று


 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (05) மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது. 


இன்றைய தினம் பாராளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், விவாதத்தின் பின்னர் இவ்வாறு மாலை 6.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரையை கடந்த நவம்பர் 7 ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். 

கடந்த நவம்பர் 14 ஆம் திகதி 2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெற்றதுடன் அது பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 

இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் கிடைத்ததுடன் 8 பேர் வாக்களிப்பதில் இருந்து தவிர்ந்திருந்தனர். 

அதற்கமைய 118 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது. 

மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்திற்காக 17 நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், நிலவிய சீரற்ற வானிலை காரணமாக சபை அமர்வுகள் பல சந்தர்ப்பங்களில் ஒத்திவைக்கப்பட்டன. 

இதேவேளை, சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக குறைநிரப்பு பிரேரணை ஒன்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


Zameera

'Rebuilding SriLanka' நிதிக்கு வெளிநாட்டு இலங்கையர்களிடமிருந்து மில்லியன் கணக்கான நிதி


 'Rebuilding SriLanka' நிதியத்திற்கு வெளிநாடு வாழ் இலங்கையர்களிடமிருந்து இதுவரை 635 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். 


இது தொடர்பாக விசேட அறிக்கையொன்றை விடுத்த அவர், இலங்கை வங்கியின் கீழ் இயங்கும் கணக்கின் ஊடாக இதுவரை 30,470க்கும் மேற்பட்ட வைப்புக்கள் (transaction) இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். 

அத்துடன், இலங்கை மத்திய வங்கியின் கீழ் இயங்கும் வெளிநாட்டு நாணயத்தில் வைப்பிலிடக்கூடிய கணக்குகள் ஊடாக இந்த நிதியத்திற்கு சுமார் 61 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

33 நாடுகளிலிருந்து உரிய கணக்குகளுக்கு இந்தப் பணம் கிடைத்துள்ளது. 

அதற்கமைய, 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு சுமார் 700 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாக திறைசேரி செயற்பாடுகள் திணைக்களம் அறிவித்துள்ளதாக சூரியப்பெரும மேலும் தெரிவித்தார். 

கடந்த 02 திகதி வரையில் 19,000க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இலங்கையர்கள் பணத்தை வைப்பிலிட்டிருந்தனர்.

Thursday, December 4, 2025

Zameera

அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 481 ஆக அதிகரிப்பு


 நாடளாவிய ரீதியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 481 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 


இன்று (04) பி.ப. 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

அந்த அறிக்கையின் படி, 345 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர்.

Zameera

தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் 86% வழமைக்கு


 சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மின்சார விநியோகத்தில் சுமார் 86% தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 


73 இலட்சத்திற்கும் அதிகமான மின் பாவனையாளர்களில் சுமார் 39 இலட்சம் பேருக்கு சீரற்ற வானிலையின் தாக்கத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார். 

மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்காக மின்சார சபை ஊழியர்கள் கடந்த சில நாட்களாக மிகுந்த முயற்சியுடன் செயற்பட்டதாக பிரதிப் பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார். 

அதற்கமைய, விரைவில் மின்சார விநியோக கட்டமைப்பை முழுமையாக வழமைக்கு கொண்டுவர முடியும் என நோயல் பிரியந்த குறிப்பிட்டார்.
Zameera

இந்திய நிவாரணப் பொருட்களுடனான மற்றொரு விமானம் இலங்கையை வந்தடைந்தது


 இந்திய அனர்த்த நிவாரண உதவிகளைத் தாங்கிய 8வது விமானமும் இன்று (04) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. 


அவ்விமானத்தில் 53 மெட்ரிக் தொன் எடையுள்ள, 110 அடி நீளமான, இரண்டு வழித்தடங்களைக் கொண்ட இரும்பு பெய்லி பாலம் (Bailey bridge) ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இது இந்திய அரசினால் நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள 10 பாலங்களில் 2வது பாலமாகும். 

இப்பாலம் உட்பட இந்திய விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட பொருட்கள் தொகையை இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவு அதிகாரிகளிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 

இப்பாலம் இந்திய இராணுவ பொறியியலாளர்கள் மற்றும் இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவு அதிகாரிகளால் இணைந்து நுவரெலியா பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ளது. 

இதற்கு மேலதிகமாக படகுகள், சீனி மற்றும் மின்பிறப்பாக்கிகள் தொகையொன்றும் இந்திய உதவிகளில் அடங்குகின்றன. 

இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலாய அதிகாரிகள் குழுவொன்று மற்றும் இலங்கை இராணுவ பொறியியல் படைப்பிரிவு மற்றும் இலங்கை விமானப்படை அதிகாரிகள் குழுவொன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சமூகமளித்திருந்தனர்.
Zameera

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு


 வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (4) பி.ப. 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பின் படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அத்துடன் மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். 

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.


Zameera

HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நிதி நன்கொடை


 

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அன்றாடம் நன்கொடைகள் கிடைத்துக்கொண்டிருப்பதுடன், அதன்படி, இன்று (04) HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நிதி நன்கொடையை வழங்கியது.


ஹச்ஸன் ஆசியா டெலிகொம் ஹொங்கொங் நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் மற்றும் ஹட்ச் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏன் சென் மற்றும் ஹட்ச் நிறுவனத்தின் இலங்கைப் பிரதான நிறைவேற்று அதிகாரி சௌமித்ர குப்தா ஆகியோர் இதற்கான காசோலையை இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவிடம் வழங்கி வைத்தனர்.


பின்னர், ஹட்ச் நிறுவன அதிகாரிகளுடன் உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதியின் செயலாளர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்தார்.




மேலும், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச அழைப்புகள், டேட்டா மற்றும் குறுஞ்செய்தி வழங்குதல், நடமாடும் சார்ஜிங் நிலையங்களை நிறுவவும், தகவல் தொடர்பு கோபுரங்களை அவசரமாக சீர்செய்யவும் விமானப் பொறியியலாளர்களை பணியமர்த்தியவும் HUTCH நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) தலைவர் வருண ஸ்ரீ தனபால, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) பந்துல ஹேரத், ஹட்ச் (பதில் பிரதான நிதி அதிகாரி) ஷகில விஜேசிங்க, ஹட்ச் சந்தைப்படுத்தல் தொடர்பு முகாமையாளர் திலானி பொன்சேகா, ஹட்ச் இன் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் அதிகாரி திசர நிபுன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Zameera

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் மீண்டும் கட்டணம் அறவீடு

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று (4) முதல் மீண்டும் கட்டணம் அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் பயண நடவடிக்கைகளுக்காக எவ்வித கட்டணமும் அறவிடாதிருக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்திருந்தது.