குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்காக வழங்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்யக் கோரி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேலும் பரிசீலிப்பதை ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று (11) மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மனுதாரரான சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கருத்தியல் இலங்கைக்குள் எவ்வாறு செயற்பட்டது என்பது குறித்து நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்.
39 இலங்கையர்கள் சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி, இது குறித்து முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்ததை நினைவு கூர்ந்தார்.
மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அதற்குப் பின்னால் வெளிநாட்டு தீவிரவாதக் குழுவொன்றின் கருத்தியல் இருப்பது வெளிச்சத்திற்கு வந்தபோதிலும், அப்போதைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராகப் பணியாற்றிய ஷானி அபேசேகர அது குறித்து முறையான விசாரணைகளை நடத்தவில்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணி குற்றம் சாட்டினார்.
குறித்த சம்பவத்தில் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பொன்றின் கருத்தியல் ரீதியான தலையீடு இருப்பது வெளிப்பட்டுள்ள நிலையிலும், சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற்று அது குறித்து மேலதிக விசாரணைகளை நடத்த வாய்ப்பு இருந்தபோதிலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் அது தொடர்பில் அலட்சியமாகச் செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், சஹ்ரான் ஹஷிம் உள்ளிட்ட தீவிரவாதக் குழுவினரின் செயல்பாடுகள் குறித்த 97 அறிக்கைகள் பொலிஸ் மா அதிபருக்கு (IGP) அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் நிலாந்த ஜயவர்தனவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சத்தியக்கடதாசியில் குறிப்பிடப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, இவ்வாறான தீவிரவாதச் செயல்பாடுகளுக்கு ஆதரவளித்த 129 பேரின் பட்டியலும் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாகக் கூறினார்.
இருப்பினும், இவ்வாறான எச்சரிக்கை அறிக்கைகள் தொடர்பாக அப்போதைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரும் அதன் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமாகப் பணியாற்றிய ரவி செனவிரத்ன ஆகியோர் முறையான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சஹ்ரான் ஹஷிம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள், சுற்றுலா விடுதிகள் மற்றும் இந்திய தூதரகம் ஆகியவற்றை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத்தாக்குதல், கத்திக்குத்து தாக்குதல் மற்றும் லொறி மூலம் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் 2019 ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கை அதிகாரிகளுக்கு அறிவித்திருந்ததாகவும், அந்தத் தாக்குதலில் பங்கேற்கவிருந்த சஹ்ரான் ஹஷிம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களின் பெயர்கள் கூட அந்தத் தகவலில் வெளிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.
எனினும், பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அந்த விடயங்கள் குறித்து முறையான கவனம் செலுத்தி விசாரணைகளை நடத்தவில்லை என்று குற்றம் சாட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, இந்தத் தாக்குதல்களுடன் சுரேஷ் சலே தொடர்புபட்டிருப்பதாக எந்தவொரு விசாரணையிலோ அல்லது விசாரணை ஆணைக்குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளிலோ வெளிப்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
இந்தத் தாக்குதல் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகீ டி அல்விஸ் அவர்களின் குழு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் அதன் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்திருந்ததாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, மனு தொடர்பான மேலதிக சமர்ப்பிப்புகளை ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.