
Monday, June 15, 2026

உயர்தர பரீட்சை ஒத்திவைக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – கம்மன்பில
2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.
ஒகஸ்ட் 10ஆம் திகதி பரீட்சை நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முந்தைய தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியிடப்பட்டதால் மாணவர்களுக்கு தயாராக மிகக் குறுகிய காலமே கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மாணவர்களின் படிப்பு மற்றும் தயாரிப்பு காலம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் மாணவர்களின் சமத்துவ உரிமை பாதிக்கப்படுவதாகக் கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடும் வாய்ப்பும் உள்ளதாக குறிப்பிட்டதுடன், பரீட்சை அட்டவணையை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தையும் கல்வி அமைச்சையும் வலியுறுத்தியுள்ளார்.

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல், பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் வர்த்தகர் கொலை உட்பட 5 மனிதக் கொலைச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சி.சந்திரகாந்தன் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பிள்ளையான் கடந்த 2025 ஏப்ரல் 7ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து சிஜடியினர் தொடர் விசாரணையில் பிள்ளையானின் வழிகாட்டுதலின் கீழ் மட்டக்களப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடத்தப்பட்டதாக கூறப்படும் 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பான இரகசிய தகவல்கள் தெரியவந்துள்ளது.
2006ஆம் ஆண்டு கல்லடிப் பிரதேசத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை.
பிள்ளையான் குழுவினரால் கோரப்பட்ட கப்பப் பணத்தை வழங்க மறுத்த வர்த்தகர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை.
கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பிள்ளையானின் சொந்தக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை.
கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி கொழும்பில் வைத்து கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை.
இந்தக் கொலைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளாகச் செயற்பட்டு வந்த காத்தான்குடியைச் சேர்ந்த இருவரை கடந்த 2025 நவம்பர் மாதம் சிஐடியினர் கைது செய்திருந்தனர்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டிருந்த இவர்கள் மீதான வழக்குத் தாக்கல் விபரங்கள் அடங்கிய விசேட அறிக்கை இன்று (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் மட்டும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பிள்ளையானின் பாதுகாப்பு காரணங்களினால் அவரை நீதிமன்றிற்கு அழைத்து வர முடியாது என சிஐடியினர் நீதவானிடம் தெரிவித்தனர்.
அத்துடன், இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் இருவரில் ஒருவர் இறந்துவிட்டதாகவும், மற்றையவர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதாகவும் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சிறைச்சாலையில் இருந்த பிள்ளையானை 'zoom' இணையவழி ஊடாக விசாரணை செய்த நீதவான், பிள்ளையான் உட்பட மூவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை, பிள்ளையான் மற்றும் அவரது குழுவினருக்கு எதிராக இந்த வழக்கு தொடர்பான விபரங்கள் ஏற்கனவே கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அவர் தற்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், பிள்ளையானின் மிக நெருங்கிய தோழரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ரி.எம்.வி.பி கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான இனியபாரதி என அழைக்கப்படும் கே. புஷ்பகுமார் என்பவருக்கு எதிராக 7 மனிதக் கொலைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனியபாரதி தனக்கு எதிரான குற்றவியல் வழக்குகளின் சான்றுகளை அழிப்பதற்காக, கடந்த 2022ஆம் ஆண்டு அக்கரைப்பற்று நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகத்திற்கு தீ வைத்த சம்பவத்திலும் பிள்ளையான் மற்றும் அவரது குழுவினருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகக் கூறி இனியபாரதி கைது செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இன்று பிள்ளையானை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நீதிமன்றப் பகுதியைச் சுற்றி விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன் நீதிமன்றப் பகுதிக்குச் செல்லும் பொதுமக்கள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பொலிஸாரால் அனுமதிக்கப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

கட்டுகஸ்தோட்டையில் பாடசாலை வேன் விபத்து - 17 பேர் வைத்தியசாலையில்
கண்டி – யாழ்ப்பாணம் A-9 வீதியின் கட்டுகஸ்தோட்டை, கலுகல பகுதியில் இன்று (15) பிற்பகல் பாடசாலை வேனும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 17 பாடசாலை மாணவ, மாணவிகளும் வேன் சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கட்டுகஸ்தோட்டை பிரதேச வைத்தியசாலையிலும், கண்டி தேசிய வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோஷிதவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், 'சதித்திட்டம்' என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி யோஷித ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட சீராய்வு மனுவை நாளை (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகிய நீதியரசர்கள் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதற்கு முன்னர் இந்த மனு பரிசீலிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், யோஷித ராஜபக்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஹஃபீல் ஃபாரிஸ் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், இந்த வழக்கில் தமது கட்சிக்காரருடன் டெய்சி ஃபொரஸ்ட் என்ற பெண்மணி பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த போதிலும், பின்னர் அவர் சட்டமா அதிபரினால் விடுவிக்கப்பட்டார் என சுட்டிக்காட்டினார்.
அவ்வாறானதொரு பின்னணியில், தமது கட்சிக்காரருக்கு எதிராக மாத்திரம் "சதித்திட்டம்" என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது சட்டத்திற்கு முரணானது என்றும் சட்டத்தரணி வாதிட்டிருந்தார்.
எனினும், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கையில், ஒரேயொரு பிரதிவாதிக்கு எதிராகவேனும் "சதித்திட்டம்" என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என வலியுறுத்தினார்.
இதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் நாளை முழுமையான விசாரணையொன்றை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி
100 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் ஈரானும் அறிவித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 3.55% சரிந்து ஒரு கொள்கலன் 83.77 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்போது டபிள்யூ.டி.ஐ மசகு எண்ணெய் 4.10% சரிந்து 80.78 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன் மேர்பன் ரக மசகு எண்ணெய் 4.23 சதவீதம் வீழ்ச்சியடைந்து 83.02 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரினால் கடந்த மே மாதம் மசகு எண்ணெய் விலை உச்சத்தை எட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த அமைதி ஒப்பந்தம் தொடர்பில் அவ்வப்போது எழுந்த வதந்திகள் காரணமாக மசகு எண்ணெய் விலை படிப்படியாக வீழ்ச்சியடைந்தது.

கண்டி தோட்டங்களை துண்டுகளாக்கி விற்க அரசாங்கம் முயற்சி - வேலுகுமார்
(எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டின் வளங்களை பாதுகாப்பதாக பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் கண்டி மாவட்டத்தில் அதிகமான தோட்டங்களை துண்டுகளாக பிரித்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீதிக்கிறங்கி போராட அனைவரும் ஒன்றுபட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் தெரிவித்தார்.
சத்தியத்தை வெற்றிபெறச்செய்வோம் எனும் தொனிப்பொருளில் கூட்டு எதிர்க்கட்சி ஞாயிற்றுக்கிழமை (14) கண்டியில் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய காலம் தற்போது எமக்கு வந்திருக்கிறது. அதனால் அரசியல் கட்சி தலைவர்கள் நாட்டை பாதுகாக்கம் போராட்டத்தில் ஒன்றாக இணைந்துகொண்டுள்ளனர். தலைவர்கள் இவ்வாறு நாட்டை பாதுகாக்கும் போராட்டத்தில் இணைந்துசெயற்படும்போது நாங்கள் எமது மாகாணத்தை பாதுகாத்துக்கொள்ள அரசியல் போராட்டத்தை மேற்கொள்வதற்கான நேரம் வந்துள்ளது.
தித்வா அனர்த்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் கண்டியாகும். ஆனால் பாதிக்கப்பட்ட ஒரு சிறிய பாலம் ஒன்றை கூட அரசாங்கத்தினால் மீள கட்டியெழுப்ப முடியாமல் போயிருக்கிறது. அதனால் இந்த அரசாங்கத்தால் ஒன்றும் முடியாது என்பதை மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்துக்கு ஆதரவளித்த அதிகமானவர்கள் தற்போது அரசாங்கத்தை விட்டு வெளியெறியுள்ளனர்.
நாட்டின் வளங்களை பாதுகாப்பதாக பிரசாரம் செய்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.ஆனால் கண்டி மாவட்டத்தில் இருக்கும் தோட்டங்களை துண்டுகளாக பிரித்து ஏல விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்றது. 100 ஹெக்டயர் அடிப்படையில் ஆயிரம் ஹெக்டயாராக பிரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
கம்பளை லெவனன் தோட்டத்தை 7 பகுதிகளாக பிரிக்கிறார்கள். தெல்தொட்ட தோட்டத்தை 8 துண்டுகளாக பிரிக்கிறார்கள். இவ்வாறு கண்டி மாவட்டத்தில் அதிகமான தோட்டங்களை பிரித்து, விற்னை செய்ய நடவடிக்கை எடுப்பட்டிருக்கிறது.
அதனால் தோட்டங்களை துண்டுகளாக பிரித்து விற்பனை செய்ய எடுத்துவரும் நடவடிக்கைக்கு எதிராக நாங்கள் எமது போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். அதற்காக நாங்கள் வீதிக்கிறங்கி போராட்டம் மேற்கொள்ள அணிதிறள ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த அரசாங்கத்தை விரட்டியடித்து சுபீட்சமான அரசாங்கம் ஒன்றை அமைத்துக்கொள்ள ஒன்றுபட வேண்டும் என்றார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு
(க.சிவலிங்கமூர்த்தி)
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பன்னிரண்டாவது தேசிய மாநாடு வவுனியா மாவட்டத்தில் உள்ள வோர்ஸ் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை (14) மாலை ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில் எட்டு மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொண்ட பொதுக்குழு உறுப்பினர்களினால் மத்திய குழு உறுப்பினர்கள், தலைமை குழு உறுப்பினர்கள் உட்பட கட்சி நிர்வாகிகளின் தேர்வு இடம்பெற்றது.
இத்தேர்வுகளில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவராக மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டார். கட்சியின் உப தலைவராக குருசுவாமி சுரேந்திரன் தெரிவு செய்யப்பட்டார். செயலாளர் நாயகமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவு செய்யப்பட்டார். கட்சியின் நிதிச் செயலாளராக கமலவிஜிந்தன், தேசிய அமைப்பாளராக செந்தில்நாதன் மயூரன், நிர்வாகச் செயலாளராக பரமலிங்கம் நித்தியானந்தன், இளைஞர் அணிச் செயலாளராக தியாகராஜா பிரபாகரன் ஆகியோரும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்கள்.
இம்மாநாட்டில் செயலாளர் அறிக்கை, நிதிச்செயலாளர் அறிக்கை மற்றும் தலைவர் உரையுடன் உப தலைவரால் கட்சியின் மாநாட்டு பிரகடனமும் வெளியிடப்பட்டது.

விஜித் விஜயமுனி சொய்சா நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (15) காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றிற்கு அமைவாக, வாக்குமூலம் வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு இணங்கவே அவர் அங்கு முன்னிலையானமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகள் வரவேற்பு
அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு ஐ.நா அமைப்பு, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல்வேறு தரப்பும் வரவேற்பு தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்து பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா-ஈரான் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கட்டார் பிரதமர் வரவேற்றதோடு, அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இந்த மோதலை நிறுத்த இராஜதந்திர முயற்சிகளில் கட்டார் ஒரு பங்கை வகித்ததுடன், சமரசம் செய்ய ஈடுபட்ட முக்கிய நாடுகளில் ஒன்றாகவும் இருந்தது என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதற்கு வாழ்த்துகள். உடனடி மற்றும் நிரந்தர போர்நிறுத்தம், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது, அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும்.
மேலும், இந்த ஒப்பந்தத்தை எளிதாக்க உதவியதற்காக பாகிஸ்தான், கட்டார், எகிப்து, சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பிற பிராந்திய நாடுகளுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

சிலாபம் மருத்துவமனையில் தாக்குதல்: இருவர் கைது
சிலாபம் பொது மருத்துவமனையில் பாதுகாப்பு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த மூன்று பாதுகாப்பு ஊழியர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியைப் பார்க்க வந்த மூவர், மருத்துவமனைக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதாகவும், அதைத் தடுக்க முயன்ற பாதுகாப்பு ஊழியர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் தாக்குதலாக மாறியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஈரானுடனான அமைதி உடன்படிக்கை முழுமையடைந்தது - ட்ரம்ப்
ஈரானுடனான அமைதி உடன்படிக்கை தற்போது முழுமையடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் தமது ட்ருத் சமூக வலைத்தளத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, ஹோர்முஸ் அருகே முன்னெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்குவதற்கு தாம் இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதில் மத்தியஸ்தராகச் செயல்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை அதிகாலையில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவித்த சில நிமிடங்களிலேயே ட்ரம்பின் இந்தப் பதிவு வெளியானது.
இந்த ஒப்பந்தம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திடப்படும் என்று ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் அமைதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் இறுதி செய்யப்பட்ட வரைவில் ஈரானும், அமெரிக்காவும் ஜூன் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் கையெழுத்திடும் என்று சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான ஈரானிய துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாடி தெரிவித்துள்ளதாக தஸ்நிம் செய்தி நிறுவனமும் தகவல் வௌியிட்டுள்ளது.

இன்றைய வானிலை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.