உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவத்தின் போது பாதுகாப்புத் துறையினரிடையே முறையான ஒருங்கிணைப்பு இருக்கவில்லை என்றும், அலரி மாளிகைக்குச் செல்ல வேண்டாம் என அதிகாரிகளுக்கு அன்றைய ஜனாதிபதியால் உத்தரவிடப்பட்டிருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதுடன், குண்டுத்தாக்குதல் அரங்கேறிய உடனே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது கைபேசிக்கு நேரடியாக அழைத்து இரங்கல் தெரிவித்ததோடு, எப்.பி.ஐ புலனாய்வு அமைப்பின் ஒத்துழைப்பை பெற்றுக் கொடுத்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு 7இல் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவுக் கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதியும் தாக்குதல் சம்பவத்தின் போது பிரதமராக இருந்தவருமான ரணில் விக்ரமசிங்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளிவராத பல உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளார். தாக்குதல் நடந்த போது அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் இல்லாததால், ரணில் விக்ரமசிங்கவே நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் சம்பவம் அறியக்கிடைத்த உடனேயே பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளை அலரி மாளிகைக்கு வருமாறு தான் பணித்ததாகவும், அப்போது அங்கு வந்திருந்த அப்போதைய சட்டமா அதிபர் ஜெயந்த ஜயசூரிய உள்ளிட்ட அதிகாரிகள், 'அலரி மாளிகைக்குச் செல்ல வேண்டாம்' என்று ஜனாதிபதி தமக்கு உத்தரவிட்டதாகக் கூறியதாகவும் ரணில் தெரிவித்தார்.
இதனால், பாதுகாப்பு அமைச்சிற்கே தாம் செல்ல நேரிட்டது என்றும், அங்கு அப்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவின் அறையில் அதிகாரிகள் கூடி விவாதங்களில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அங்கு நிலவிய குழப்பகரமான சூழலில், ஒருபுறம் ஹேமசிறி பெர்னாண்டோவும் மறுபுறம் மற்றுமொரு அதிகாரியும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனரே தவிர, யார் என்ன செய்கிறார்கள் என்ற ஒருங்கிணைப்பு எவரிடமும் இருக்கவில்லை என ரணில் சுட்டிக்காட்டினார்.
அதிகாரிகள் அனைவரும் கூட்டு முயற்சியில் ஈடுபடாமல், தனித்தனி அறைகளில் இருந்துகொண்டு கடிதப் பரிமாற்றங்களை மட்டுமே செய்திருந்ததாகவும், மோட்டார் சைக்கிள் வெடிப்புச் சம்பவம் பற்றி கூட தனக்கு எவரும் அறிவிக்கவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டார். அத்துடன், சிங்கள புத்தாண்டு வார இறுதி என்பதால் பொலிஸார் கொழும்புக்கு வெளியேயான கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையும் நிலைமையை மோசமாக்கியது.
பாதுகாப்புத் துறையினரிடையே ஒற்றுமை இல்லை என்பதை உணர்ந்த பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவல்களைப் பகிர்ந்து விசாரணைகளை ஆரம்பித்ததாக குறிப்பிட்ட ரணில், பாதுகாப்பு அமைச்சில் நிலவிய கடுமையான குழப்பம் காரணமாக அன்றைய தின மாலைக் கூட்டத்தை முப்படைப் பிரதானியின் அலுவலகத்திலேயே நடத்த வேண்டியேற்பட்டது என்றும் கூறினார்.
மகாநாயக்க தேரர்கள் மற்றும் கர்தினால் ஆகியோரைத் தொடர்புகொண்டு நிலைமைகளைத் தெளிவுபடுத்திய அதேவேளை, கொச்சிக்கடை தேவாலயப் பகுதிக்குத் தாம் சென்றபோது அங்கு அருகில் இருந்த வானில் வெடிகுண்டு இருந்ததை தாம் அறிந்திருக்கவில்லை என்றும், அதன் பின்னரே கட்டுவாப்பிட்டியவிற்குச் சென்றதாகவும் அவர் விவரித்தார்.
தொடர்ந்து அநுர குமார திஸாநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சித் தலைவர்களை அலரி மாளிகைக்கு அழைத்து நிலைமைகளை விளக்கியதாகக் கூறிய அவர், இத்தாக்குதலில் அமெரிக்கப் பிரஜைகளும் உயிரிழந்ததால் அமெரிக்க அரசாங்கத்தின் பிரதிநிதி ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது கைபேசிக்கு நேரடியாக அழைத்து தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்ததாக ரணில் விக்ரமசிங்க நினைவு கூர்ந்தார். அந்த உரையாடலின் போது, இலங்கையின் பாதுகாப்பு நிறுவனங்களிடையே தற்போதைய சூழலில் ஒருங்கிணைப்பு இல்லாததால், எமது அதிகாரிகளை அமெரிக்காவின் எப்.பி.ஐ அமைப்போடு இணைந்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு டிரம்ப் உடன்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த அழைப்பிற்குப் பின்னர், 2019 ஏப்ரல் 22 அன்று மாலை 6.05 மணிக்கு ஜனாதிபதி டிரம்ப் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், 'பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா இலங்கையுடன் நிற்கிறது என்பதை உறுதிப்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசினேன்' எனப் பதிவிட்டிருந்ததை ரணில் சுட்டிக்காட்டினார்.
எப்.பி.ஐ அதிகாரிகள் எமது தரப்போடு இணைந்து செயல்பட்டே அந்த இறுதி விசாரணை அறிக்கையைத் தயாரித்ததாகவும், பாராளுமன்றக் குழுக்கள் உட்பட அனைத்தும் அதன் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டதால் அந்த அறிக்கையை யாரும் நிராகரிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், தனது ஆட்சிக் காலத்திலேயே செனல் 4 ஊடகம் இதுகுறித்த ஒளிபரப்பைச் செய்ததாகவும், அது குறித்து ஆராய நீதியரசர் ஒருவரின் தலைமையில் குழுவொன்றை நியமித்ததாகவும் குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, தேவாலயத்திற்குத் தேவையான அனைத்து அறிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் எப்.பி.ஐ அறிக்கையே முதன்மையானது என்றும் தெரிவித்துள்ளார்.