
Thursday, June 4, 2026

பரீட்சை திணைக்களத்திடமிருந்து விசேட அறிவித்தல்
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 2026 க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்கு விண்ணப்பிக்க எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்களின் தேசிய அடையாள அட்டைகளைத் தயாரித்துக் கொள்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்குமாறு அனைத்து அதிபர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறிப்பிட்ட பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கு முன்னர், தங்களது தேசிய அடையாள அட்டையைத் தயாரித்துக் கொள்வது அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களின் பொறுப்பாகும் என அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் - 9 பேர் உயிரிழப்பு
காஸா மீது நேற்று நள்ளிரவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா படைகளுக்கும் இடையே போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், திடீரென காஸா மீது இஸ்ரேலிய படைகள் கடந்த நேற்று (03) நள்ளிரவு வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன.
காஸாவில், போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்ட பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மட்டும் இதுவரை 936 பேர் கொல்லப்பட்டதாக, காஸாவின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கல்முனை பாடசாலைக்கு சீன தூதுவர் விஜயம்
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பெற்றோருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு..!
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், பெற்றோருக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கும் நிகழ்வு இன்று (04) கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எஸ்.எம்.எஸ். ரிஸானா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் அழைப்பின் பேரில், இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களையும், பெற்றோருக்கான உலர் உணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டதுடன், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர்.
“சீன - இலங்கை சகோதரத்துவ பாசம்” எனும் திட்டத்தின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வு, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவையும் மனிதாபிமான ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் கல்வி மற்றும் சமூகப் பணிகளைப் பாராட்டி, பாடசாலை அதிபரினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
-- ஊடகப்பிரிவு

சுரேஷ் சலேவின் மனு தொடர்பான தீர்மானம்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை விசேட வைத்திய சபை முன்னிலையில் ஆஜர்படுத்தி அறிக்கை ஒன்றைக் கோருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு சட்டமா அதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கை மீதான உத்தரவை எதிர்வரும் 10ஆம் திகதி அறிவிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சுரேஷ் சலே சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்று இன்று (04) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டது.
அங்கு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நிதி அமைச்சின் நிலைப்பாட்டை ஏற்மாட்டேன் - கடிதத்தை நிராகரித்தார் ஹர்ஷ!
“திறைசேரியில் ஹெக்கிங் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பான அறிக்கை நான்கு வாரங்களைக் கடந்து தனக்கு தனிப்பட்ட ரீதியாகத் தனது தனிப்பட்ட பார்வைக்காக மட்டுமே” எனக் குறிப்பிட்டு நிதி அமைச்சின் செயலாளரால் அரச நிதி பற்றிய குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்கு அனுப்பிய கடிதத்தை அவர் நிராகரித்துள்ளார்.
அத்துடன், இந்த அறிக்கையை குழுவிடம் இருந்து மறைத்து தனது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக மட்டும் அனுப்ப நிதியமைச்சின் செயலாளர் எடுத்த முயற்சியை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கை தொடர்பில் நேற்று (03) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
குறித்த நிதி மோசடி தொடர்பான அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக நிதியமைச்சின் செயலாளருக்கு நான்கு வார கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறு நீண்ட தாமதத்துக்குப் பின்னர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கையில் ஒன்லி (ONLY) என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதாவது, குழுவின் தலைவர் என்ற ரீதியில் நான் தனிப்பட்ட முறையில் பார்ப்பதற்கு மட்டுமேயான ஒரு விசேட அறிக்கை. அப்படி இருக்க முடியாது அல்லவா? அது எப்படி நடக்கும்? அப்படி என்றால் நான் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்? நான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். அந்த மக்கள் என்னிடமிருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறார்கள்.
தலைவர் என்ற ரீதியில் நிதிக்குழுவில் அரச நிதியைக் கையாளுதல் மற்றும் அந்த அரச நிதியின் பொறுப்பை ஆராய்தல் தொடர்பாக நிதிக்குழுவுக்கு ஒரு பொறுப்பு உள்ளது. என்னால் அந்தப் பொறுப்பை தனிப்பட்ட ரீதியில் எடுக்க முடியாது. என்னால் தனிப்பட்ட முறையில் இதற்குப் பொறுப்புக்கூற முடியாது. எனக்கு பொறுப்புக்கூறுவதற்கான சந்தர்ப்பமும் இல்லை. அதற்கான திறனும் இல்லை. நான் எப்படி தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்பது?
எனவே, இது எந்த வகையிலும் மக்களிடமிருந்து மறைத்துச் செய்ய வேண்டிய ஒன்றல்ல. உண்மையில், இந்தக் கலந்துரையாடல் மக்களுக்கு திறந்திருக்க வேண்டும். இந்த அறிக்கை பாராளுமன்றத்துக்கு வழங்கப்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்றுதான் நான் தொடர்ந்து வாதிடுகிறேன்.
இதில் பல்வேறு குழு உறுப்பினர்களிடமிருந்து பல தர்க்கங்கள் எழுகின்றன. குழுவின் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த இணக்கப்பாட்டின் அடிப்படையில், இன்று ஒட்டுமொத்த பாராளுமன்றக் குழுவுக்கும் பகிரங்கப்படுத் தக்கூடிய வகையிலான புதிய அறிக்கை யொன்றை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

பட்டகொட முதியோர் பராமரிப்பு நிலைய தீ விபத்து - உரிமையாளர் கைது
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், குறித்த தனியார் முதியோர் பராமரிப்பு நிலையத்தின் உரிமையாளரை தற்போது கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்விபத்தில் காயமடைந்த 6 பேர் தற்போது ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும், தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த இல்லத்திற்குள் சுமார் 72 பேர் வரை இருந்துள்ளனர். அவர்களில் 51 பேர் எவ்வித ஆபத்துகளுமின்றி தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
'மவ்பிய செவன செநெஹஸே கெடெல்ல' என்ற பெயரில் தனியார் நிறுவனமாக நடத்தப்பட்டு வந்த இந்த மையத்தில், முதியவர்களுடன் மனநலக் குறைபாடுடைய நபர்களும் தங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (03) பிற்பகல் ஏற்பட்ட இந்தத் திடீர் தீ விபத்தினால் இல்லத்தின் பெரும்பகுதி முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், பலத்த சேதமும் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தின் கொடூரத்தினால் இல்லத்தில் இருந்த சிலர் தீயில் கருகியுள்ளனர். அவ்வாறு தீயில் கருகிய 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று (04) காலை நடத்தப்பட்டதை அடுத்து, சடலங்களை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதன் ஒரு கட்டமாகவே, பராமரிப்பு நிலையத்தின் தரம், பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் அலட்சியப்போக்கு குறித்து விசாரிப்பதற்காக அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலியில் சிறுவன் மீது கொடூரத் தாக்குதல்: பேஸ்புக் காணொளி ஆதாரமாக வைத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது
காலி பகுதியில் திருட்டுக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 16 வயது சிறுவன் ஒருவரை அநாகரிகமான முறையில் தாக்கிய சம்பவம் தொடர்பில், இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன் தாக்கப்படும் காணொளி பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெரலபனாதர, தந்தெனியாகந்த பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன், காலி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட திருட்டு முறைப்பாடு தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் நேற்று (03) புதன்கிழமை காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், திருட்டு சம்பவம் குறித்துப் முறைப்பாடு அளித்த தரப்பினரே தனது மகனை மனிதநேயமற்ற முறையில் கொடூரமாகத் தாக்கியதாக அச்சிறுவனின் தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வைரலாகிய காணொளிப் பதிவுகளையும் ஆதாரமாகக் கொண்டு புலனாய்வாளர்கள் விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர்.
அதன்படி, நேற்றையதினம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் காலி, மிலித்துவ பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண், அவரது 47 வயதுடைய கணவர், அவர்களின் 19 வயதுடைய மகன் மற்றும் 17 வயதுடைய மகள் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் காலி நீதவான் நீதிமன்றத்தில் இன்று (04) வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சிறுவனால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் திருட்டுச் சம்பவம் மற்றும் அச்சிறுவன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் ஆகிய இரு வேறு சம்பவங்கள் குறித்தும் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தனர்.

யோஷித ராஜபக்ஷக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ தொடர்பான வழக்கை ஜூலை 09ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (04) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மறுஆய்வு மனு காரணமாக சாட்சிய விசாரணைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு அரச தரப்பு கோரியதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கும் வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த விசாரணை ஜூலை 09ஆம் திகதி நடைபெறும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.



