Our Feeds



Tuesday, May 12, 2026

Zameera

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று பெலாரஸ் பயணம்


 பெலாரஸ் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் மாக்சிம் ரிஜென்கோவ் விடுத்த அழைப்பின் பேரில் இன்று (12) முதல் 2026 மே 15 வரை பெலாரஸிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மேற்கொள்ளவுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஆண்டுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்த விஜயம் இருதரப்பு உறவுகளில் ஒரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Zameera

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்


 தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 


குறித்த சந்தேகநபர்கள் இன்று (12) நீர்கொழும்பு நீதவான் சுபாணி அபேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 


தாய்லாந்திற்குச் சுற்றுலா சென்றிருந்த 22 பிக்குகள், கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நாட்டிற்குத் திரும்பிய போது, அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் இருந்து 112 கிலோகிராம் 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். 


அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 'அமிதானந்த' என்ற பிக்கு ஒருவரே இந்த சட்டவிரோத செயலை வழிநடத்தியுள்ளமை தெரியவந்தது. 


இதனைத் தொடர்ந்து, அமிதானந்த என்ற பிக்குவும் கம்பஹா பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டார்.

SHAHNI RAMEES

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மஹிந்த!


வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை

Zameera

சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிக உர மானியம் வழங்க தீர்மானம்


 சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிக உர மானியம் வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். 


இதற்காவே நிதி திறைசேரியினால் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


நாட்டில் உரத் தட்டுப்பாடு எதுவும் இல்லை எனவும், எனினும் வருங்காலத்தில் உரத்தின் விலையில் சில அதிகரிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டுள்ளார். 


மேலும் கருத்துத் தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, 


''தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையால் உரத்தின் விலை உயர்ந்துள்ளது. கப்பல் கட்டணங்கள் மற்றும் காப்புறுதி கட்டணங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக நாம் இறக்குமதி செய்யும் உரத்தின் விலையில் உயர்வு ஏற்படும். உர விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும், ஆனால் விலை உயர்வு இருக்கும். இந்த விலை அதிகரிப்பால் விவசாயிகளுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்க, நெல் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 5,000 ரூபா மானியம் வழங்கினோம். போர்ச் சூழல் காரணமாக இது மேலதிகமாக வழங்கப்பட்டது. இது 2 ஹெக்டேயர் வரை வழங்கப்படும், அதாவது 10,000 ரூபா கிடைக்கும். அதேபோல், போர்ச் சூழல் காரணமாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கும் 5,000 ரூபா மேலதிக மானியம் வழங்கத் தீர்மானித்துள்ளோம். அதன்படி உரத் தட்டுப்பாடு ஏற்படாது. விலை உயரக்கூடும், அவ்வாறு விலை உயரும்போது விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய இழப்பைக் குறைக்க அரசு இவ்வாறு மானியத்தை அதிகரித்து வழங்குகிறது'' எனத் தெரிவித்தார்.


Zameera

16 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும் 10 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார். 


அனுராதபுரத்தின் இராஜாங்கனை நீர்த்தேக்கம், பதுளை மாவட்டத்தின் சொரபொர நீர்த்தேக்கம், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரவில, லுணுகம்வெஹெர, வெஹெரகல நீர்த்தேக்கங்கள், குருநாகல் மாவட்டத்தின் மாகல்ல, தெதுறு ஓயா நீர்த்தேக்கம் மற்றும் கண்டி மாவட்டத்தின் வாமெடில்ல, நாலந்த நீர்த்தேக்கங்களும் மொனராகலை மாவட்டத்தின் அலிகொட்டஆர நீர்த்தேக்கமும் இவ்வாறு வான்பாய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


கலா ஓயா வடிநிலப் பகுதியில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, அந்த வடிநிலத்தில் அமைந்துள்ள இராஜாங்கனை, தேவஹுவ, வெமெடில்ல ஆகிய நீர்த்தேக்கங்கள் வான்பாய்ந்து வருவதாக எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் மேலும் தெரிவித்தார். 


இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 12 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளனதுடன், அவற்றின் ஊடாக வினாடிக்கு 18,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. 


அதேபோல், கிரிந்தி ஓயா வடிநிலப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அந்த வடிநிலத்திலுள்ள லுணுகம்வெஹெர, திஸ்ஸவாவி, வீரவில, யோதவாவி மற்றும் அலிகொட்டஆர ஆகிய நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாகப் பணிப்பாளர் குறிப்பிட்டார். 


லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதுடன், வினாடிக்கு 7,100 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது. 


மேலதிகமாக, வெஹெரகல நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 2,400 கன அடிக்கும் அதிகமான நீர் மாணிக்க கங்கைக்குள் வெளியேற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 


வான்பாயும் நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களில் அங்கமுவ, போபுருஎல்ல, மஹாசியம்பலாங்கமுவ, சத்தாதிஸ்ஸ, மாலிம்பொத்த மற்றும் மருதமடு ஆகிய நீர்த்தேக்கங்கள் அடங்கும். 


தொடர்ந்து பெய்யும் மழையினால் வான்கதவுகள் ஊடாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வரும் நாட்களில் மாற்றமடையக்கூடும் என்பதால், நீர்த்தேக்கங்களை சூழவுள்ள பகுதிகளிலும் தாழ்நிலப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் அறிவுறுத்தியுள்ளார்.


 

Zameera

ஊழல் மோசடிகளுக்கு எந்தவித இடமும் வழங்கப்படமாட்டாது - அமைச்சர் சுசில் ரணசிங்க


 தேசிய மக்கள் சக்தியின் (NPP) எந்தவொரு அமைச்சரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது தலைவரோ ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனவும், எதிர்காலத்திலும் இத்தகைய ஊழல் மோசடிகளுக்கு எவ்வித இடமும் அளிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் சுசில் ரணசிங்க வலியுறுத்தியுள்ளார்.


தம்புள்ளை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்:


அரசின் பிரதிநிதிகள் என்ற வகையில் தாம் எவ்வித ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என குறிப்பிட்டார்.


கட்சிக்கு எதிராக பல்வேறு தரப்பினரால் நீண்ட கதைகளும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்ட போதிலும், அடிப்படையற்ற அக்குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Zameera

இணையவழி மோசடியுடன் தொடர்புடைய 198 வெளிநாட்டவர்கள் கைது


தென் மாகாணத்தின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது, கணினி குற்றங்களில் ஈடுபட்டதாகக் கருதப்படும் 198 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிதிகம, ஹிக்கடுவை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்தியப் பிரஜைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மொத்த 198 பேரில் இனங்காணப்பட்டவர்கள்:

இந்தியர்கள்: 174 பேர்

நேபாளிகள்: 25 பேர்

நேற்று (11) இரவு மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிங்வத்த பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் மிதிகம பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது 33 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 28 இந்தியர்களும், 5 நேபாளிகளும் அடங்குவர். இவர்கள் அனைவரும் 25 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பின்வரும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன:

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்தமை.

சுற்றுலா விசாவில் வருகை தந்து சட்டவிரோதமாக தொழில் செய்தமை.

தீர்வையற்ற சிகரெட்டுகளை கைவசம் வைத்திருந்தமை.

கணினி குற்றங்கள் சட்டத்தின் கீழ் வரும் மோசடிகளில் ஈடுபட்டமை.

இதேவேளை, ஹிக்கடுவை பகுதியில் 35 இந்தியர்களும் 20 நேபாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காலி பகுதியில் மேலும் 110 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Zameera

மூடப்பட்டிருந்த தெனியாய பாடசாலைகள் நாளை மீள திறப்பு


 காய்ச்சல் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயப் பாடசாலைகளை நாளை (13) முதல் மீண்டும் திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


தென் மாகாண ஆளுநரின் தலைமையில் நேற்று (11) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தென் மாகாண கல்விச் செயலாளர் நிஷாந்த பத்திரண தெரிவித்துள்ளார். 


பாடசாலை மாணவர்களிடையே காய்ச்சல் பரவியதையடுத்து, தெனியாய கல்வி வலயத்திலுள்ள 4 பாடசாலைகள் கடந்த வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டன. 


குறித்த பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 56 மாணவர்கள் இந்தக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்ததாக சுகாதாரப் பிரிவினர் குறிப்பிட்டிருந்தனர். 


தற்போது சம்பந்தப்பட்ட பாடசாலைகளில் பாதுகாப்பான சுகாதாரச் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நீரைப் பயன்படுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Monday, May 11, 2026

Zameera

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக மாலைதீவுக்குப் புறப்படுகிறார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ


 (இணையத்தள செய்தி பிரிவு) 


21வது ஆசிய ஊடக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாளை  செவ்வாய்க்கிழமை (12) மாலைதீவுக்குப் புறப்படவுள்ளார். 


மாலைதீவில் உள்ள வில்லா நௌட்டிக்காவில் இன்று திங்கட்கிழமை (11) ஆரம்பமாகும் 21வது ஆசிய ஊடக மாநாட்டு 14ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ செவ்வாய்க்கிழமை (12) இலங்கையில் இருந்து புறப்படவுள்ளார். இலங்கை செய்திகள்


இதில் பல்வேறு ஆசிய நாடுகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், ஊடக உரிமையாளர்கள், ஊடக வல்லுநர்கள், தகவல் தொடர்பு ஆராய்ச்சியாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் பலர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மாலைதீவு அரசாங்கப் பிரதிநிதிகள் மட்டுமின்றி, வங்கதேசத்தின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர், பிம்ஸ்டெக் அமைப்பின் பொதுச்செயலாளர், சார்க் அமைப்பின் பொதுச்செயலாளர், திமோர்-லெஸ்டேயின் சமூகத் தொடர்புக்கான அரச செயலாளர் மற்றும் ஆசியப் பிராந்திய நாடுகளைச் சேர்ந்த பல துறைத் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.



இந்த மாநாட்டின் நான்காவது அமர்வில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ , ஊடகக் கொள்கை, ஊடகத் தொழில்சார் மற்றும் பொது நலனுக்கான தகவல் தொடர்புப் பொறுப்புகள் ஆகிய விடயங்கள் குறித்து முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.

SHAHNI RAMEES

தோட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்டறிய சென்ற ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல்! #VIDEO

 

நுவரெலியா மாவட்டம், ராகலை, டெல்மார்
Zameera

கபில சந்திரசேனவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல, அது ஒரு தற்கொலைக்கான தூண்டுதல் - சாகர காரியவசம்

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மர்ம மரணம் என்பது வெறும் தற்கொலை அல்ல, அது ஒரு தற்கொலைக்கான தூண்டுதல் என்பது தற்போது மிகத் தெளிவாகத் தெரியவந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். 

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக தற்போது பல்வேறு மர்மமான தகவல்கள் கிடைத்து வருவதாகவும், குறிப்பாக அவருக்குப் பிணை வழங்குதல் மற்றும் அந்தப் பிணையை எதிர்த்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் தமது கட்சித் தரப்புத் தகவல்களைத் திரட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். 

மிக விரைவில் இந்த மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளைத் தாம் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தப் போவதாகக் கூறிய அவர், இது திட்டமிட்ட முறையில் தற்கொலைக்குத் தூண்டப்பட்ட ஒரு சம்பவம் என்பதை வலியுறுத்தினார்.

மறைந்த கபில சந்திரசேனவை மரண அச்சுறுத்தல் விடுத்து, அவரிடமிருந்து பலாத்காரமான முறையில் வாக்குமூலம் ஒன்று பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சாகர காரியவசம், அந்த வாக்குமூலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களை வலுக்கட்டாயமாகச் சேர்க்குமாறு அவர் வற்புறுத்தப்பட்டதாகத் குறிப்பிட்டுள்ளார். 

இவ்வாறான பலாத்கார அச்சுறுத்தல்கள் குறித்து கபில சந்திரசேன உயிருடன் இருந்தபோதே நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு பலாத்காரமான முறையில் பெறப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டுக்காக உழைத்த தலைவர்களைச் சட்டவிரோதமாகச் சிக்க வைக்க அரசாங்கம் முயலுமானால், அதற்கு எதிராக நாட்டு மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவார்கள்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நோக்கிக் கடும் விமர்சனங்களை முன்வைத்த அவர், ஜனாதிபதி ஜனநாயக ரீதியில் மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்தவர் என்பதை நினைவூட்டியதுடன், அவர் அடக்குமுறையை ஏவி ஆட்சியை முன்னெடுக்க முற்பட்டால், அந்த அடக்குமுறையைத் தமது தரப்பு முடிவுக்குக் கொண்டுவரும். 

இதேவேளை, மின்சாரக் கட்டணம் மீண்டும் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்தும் அவர் விசனம் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதாகப் போலி வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது தொடர்ச்சியாகக் கட்டணத்தை உயர்த்தி வருவதாகக் குற்றஞ்சாட்டினார். குறிப்பாக, நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற ஊழல்களினால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டவே மக்கள் மீது இந்தச் சுமை ஏற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அண்டை நாடான இந்தியாவின் தமிழக முதலமைச்சர் (விஜய்) பதவியேற்றவுடன் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதைச் சுட்டிக்காட்டிய சாகர காரியவசம், இந்தியாவிற்கு ஒரு 'தளபதி' கிடைத்திருந்தாலும் இலங்கைக்கு ஒரு 'பச்சபதி' (பொய்யர்) மாத்திரமே கிடைத்துள்ளதாகச் சாடினார். 

அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் நிலக்கரி மற்றும் ஏனைய வழிகளில் கொள்ளையடித்துத் தங்கள் பைகளை நிரப்பிக்கொள்ளும் நிலையில், ஏழை மக்கள் மின்சாரக் கட்டண உயர்வினால் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த 18 சதவீத அதிகரிப்பானது நாட்டின் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களை அழிவுக்கு இட்டுச் செல்வதுடன், அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் உயர்த்தி நாட்டு மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் என்றும் அவர் தனது ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

(ஞான பிரசாந்தன்)

 

Zameera

மஹிந்த ராஜபக்ஷ நாளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை


 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை (12) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமேஜ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளை காலை 9.00 மணிக்கு அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், சில சட்ட ரீதியான விடயங்கள் குறித்து கலந்துரையாட வேண்டியுள்ளதால், இன்று மாலை சட்டத்தரணிகள் குழுவொன்றுடன் இது குறித்து ஆலோசிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, மறைந்த கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த வாக்குமூலமானது அச்சுறுத்தி, வலுக்கட்டாயமாகப் பெறப்பட்டது என கபில சந்திரசேன நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி மனோஜ் கமேஜ், அத்தகைய சூழலில் இந்த அழைப்பு விடுக்கப்படுவது பாரதூரமான விடயம் எனவும் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான சட்டவிரோத வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்படுமானால், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிச்சயமாக ஆணைக்குழுவிற்கு வருவார் என்றே நாம் தீர்மானித்துள்ளோம். ஏனெனில் அவர் ஒருபோதும் பிரச்சினைகளில் இருந்து தப்பியோடுபவர் அல்ல. எனினும், சில சட்ட ரீதியான காரணிகளை நாம் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.


Zameera

அமெரிக்காவிற்கு மீன் ஏற்றுமதி செய்வதற்கான தடைகள் நீக்கம்

அமெரிக்காவிற்கு மீன் ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீங்கியுள்ளதாகவும், இலங்கையிலிருந்து கடல் நண்டுகளை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்க அரசு நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அனுமதி கிடைத்துள்ளதாகவும் கடற்றொழில், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவ்வமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவிற்கு மீன் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது, "கடல் பாலூட்டிகள் பாதுகாப்புச் சட்டத்தின்" கீழ் விதிக்கப்பட்டிருந்த கடுமையான நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் தேசிய சமுத்திர மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு, இலங்கையின் கடல் நண்டு பிடிப்புச் செயல்முறை மற்றும் அது தொடர்பான விதிமுறைகள் அமெரிக்கத் தரத்திற்கு இணங்குவதை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

2025 நவம்பரில் அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்பொன்றினால் இந்த ஏற்றுமதி நடவடிக்கைகளில் சில பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும், கடற்றொழில் திணைக்களம், NARA நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிவியல் தரவுகள் மற்றும் விடயங்களைக் கருத்திற்கொண்டு, NOAA அமைப்பு தனது முடிவை மறுபரிசீலனை செய்து இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

இந்த அனுமதியின் கீழ் பின்வரும் விசேட அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன:

அமெரிக்காவிற்கு மீன் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யத் தேவையான "ஒப்பீட்டுத் தகுதிச் சான்றிதழ்" இதன் மூலம் இலங்கைக்கு கிடைக்கிறது.

இந்த உத்தியோகபூர்வ அனுமதி 2029 டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் என்பதுடன், அக்காலப்பகுதிக்குள் இலங்கையிலிருந்து கடல் நண்டுகளை எவ்வித தடையுமின்றி ஏற்றுமதி செய்ய முடியும்.

மீன்பிடிக்கும் போது டொல்பின்கள், திமிங்கலங்கள் போன்ற கடல் பாலூட்டிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இலங்கை பின்பற்றும் வழிமுறைகள் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டுள்ளன.

இந்த வெற்றியானது நாட்டின் கடற்றொழில் சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அந்நியச் செலாவணி வருவாயை அதிகரிக்கவும் பெரும் பக்கபலமாக அமையும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.