Our Feeds



Tuesday, August 18, 2026

Zameera

உலக பல்கலைக்கழக தரவரிசையில் பேராதனை பல்கலைக்கழகம் முன்னிலை

(நமது நிருபர்)


உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசைக்கான மைய வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலில் இலங்கையின் பல்கலைக்கழகங்களில் பேராதனை பல்கலைக்கழகம் முன்னிலை பெற்றுள்ளது.Travel Guides & Travelogues


உலக பல்கலைக்கழக தரவரிசையில் கல்வி பெறுபேறுகள், பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன், கல்வி ஊழியர்களின் தரம் மற்றும் ஆராய்ச்சி செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு குறிகாட்டிகள் கருத்தில் கொள்ளப்பட்டு உலகளவிய ரீதியில் 21,291 பல்கலைக்கழகங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.


இந்நிலையில், உலகளாவிய ரீதியில் பேராதனைப் பல்கலைக்கழகம் 1,695ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த சாதனை, பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் சர்வதேச மட்டத்திலான செயற்திறனை வெளிப்படுத்தும் முக்கியமான மதிப்பீடாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Zameera

இம்ரான் கானை வைத்தியசாலைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு


 பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறைச்சாலையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிபா சர்வதேச வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




சிறையில் உள்ள இம்ரான் கானின் உடல்நிலை தொடர்பில் கவலைகள் எழுந்துள்ள நிலையில், அவருக்கு உரிய வைத்திய சிகிச்சை வழங்கப்பட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தபோதே நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.




மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, இம்ரான் கானை வைத்தியசாலைக்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்வதுடன், அவரது உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை வழங்க வைத்தியர்கள் குழுவொன்றும் நியமிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.




மேலும், வைத்திய பரிசோதனை மற்றும் சிகிச்சையின்போது இம்ரான் கானின் சகோதரி மற்றும் தனிப்பட்ட வைத்தியர் ஆகியோர் உடனிருக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.




அடுத்த விசாரணை வரை அல்லது வைத்தியர்கள் அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறத் தகுதியானவர் எனத் தெரிவிக்கும் வரை அவர் வைத்தியசாலையில் தங்கியிருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Zameera

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மனு தாக்கல்!


 அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று (18) முதலாவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொருளாளர் டி.எம்.எஸ். பசிது சில்வா மற்றும் அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் ஆகியோரால் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்குத் தேவை எனின், அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கினால் அங்கீகரிக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமும் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

SHAHNI RAMEES

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் உள்ளிட்டவர்களுக்கு பிணை!

 


ஊழல் குற்றச்சாட்டொன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில்

Zameera

80 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது



அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


சந்தேகநபர் குறித்த போதைப்பொருளை வீடொன்றிலிருந்து மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்வதற்கு தயாரான வேளையிலேயே கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


நேற்று முன்தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞராவார். 


சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கடத்துவதற்குத் தயார்படுத்தப்பட்டிருந்த சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 204 கிராம் 660 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 


சந்தேகநபர் நேற்று (17) பலபிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

 

Zameera

கச்சா எண்ணெய் விலை 80 டொலராக இருந்தால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும் – மத்திய வங்கி ஆளுநர்


 உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை இந்த ஆண்டின் இறுதி வரை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 80 அமெரிக்க டொலர் அளவில் நிலவினால், இலங்கையால் பணவீக்கத்தைச் வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 


அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே மத்திய வங்கி ஆளுநர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 


"இந்த ஆண்டின் இறுதி வரை எண்ணெய் விலை சுமார் 80 டொலர் அளவில் இருந்தால், எம்மால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும். எனினும், ஏதேனும் எதிர்பார்க்காத மாற்றம் ஏற்பட்டால், அது நிச்சயமாக ஒரு சவாலாக அமையும்" என்று அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார். 


உலகளாவிய வலுசக்தி விலையேற்றம் காரணமாக பணவீக்கம் மற்றும் உள்ளூர் நாணயத்திற்கு ஏற்படும் அழுத்தங்களைக் கையாண்டு இலங்கை செயற்பட்டு வரும் பின்னணியிலேயே அவர் இக்கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 


இந்த ஆண்டின் இரண்டாம் பாதியிலும் அடுத்த ஆண்டிற்குள் பிரவேசிக்கும் போதும் இலங்கையின் பணவீக்கம் மத்திய வங்கியின் 5% என்ற இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 


மத்திய வங்கியினால் மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பணவியல் கொள்கை நடவடிக்கைகள் மற்றும் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் இந்நிலைமை சீரடைவதற்குக் காரணமாக அமைந்தன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் தொடர்ந்து நிலவியபோதிலும், கடுமையான நிபந்தனைகள் மற்றும் அதிக விலைகள் காரணமாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பாரிய பாதகமான தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படவில்லை என்று மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். 


இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4% முதல் 5% வரையான அளவில் மிதமானதாக இருக்கும் என அவர் எதிர்பார்க்கிறார். 


2022 ஆம் ஆண்டில் நாட்டின் இறையாண்மைக்கடன் செலுத்த முடியாமல் போனதில் முடிந்த பொருளாதார நெருக்கடியிலிருந்தும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தில் இணைந்த பின்னரும் இலங்கை தொடர்ந்து மீட்சியடையும் செயன்முறையில் ஈடுபட்டு வருகிறது. 


சர்வதேச நாணய நிதியத்தின் நான்கு வருட திட்டம் 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதன் அடுத்தகட்ட மீளாய்வு இந்த ஆண்டின் நவம்பர் அல்லது டிசம்பர் மாதமளவில் எதிர்பார்க்கப்படுகிறது. 


கொழும்பு பங்குச் சந்தைக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் மத்திய வங்கி ஆளுநர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு விஜயம் செய்துள்ள நிலையிலேயே இந்த நேர்காணலில் பங்கேற்றுள்ளார்.

Zameera

கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்


 முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சற்றுமுன்னர் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். 


தற்போது இடம்பெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.

Zameera

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு


 பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 




பதில் நீதவான் முன்னிலையில் இன்று (18) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர் காணொளி வழியே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 




2008 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து படுகொலைகள் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பல சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) வழக்குத் தொடரப்பட்டிருந்தது. 




2008 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு கல்லடி முருகன் கோயிலுக்கு அருகில் முன்னாள் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், 2008 மே 22 அன்று காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், மற்றும் 2008 ஆகஸ்ட் 20 ஆம் திகதி இரவு வவுணதீவு பகுதியில் ஆயுதக் குழு ஒன்றினால் மற்றுமொரு நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல சம்பவங்களுடன் தொடர்புடைய 3ஆம் சந்தேகநபராக சந்திரகாந்தனைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பெயரிட்டுள்ளது.

SHAHNI RAMEES

9 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இடமாற்றம்! சுகாதார அமைச்சர் அறிவிப்பு.

 


கல்முனை வைத்தியசாலைக்குநியமிக்கப்பட்ட

SHAHNI RAMEES

கல்முனை வைத்தியசாலை சீருடைப் பிரச்சினை! - அமைச்சர் நலிந்தவை சந்தித்த ஆளும் தமிழ், முஸ்லிம் எம்பிக்கள்!

 

கல்முனை வைத்தியசாலை சீருடைப் பிரச்சினை
Zameera

அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு: போதைப்பொருள் குழுக்களுக்கு இடையிலான மோதலா?


 அத்துருகிரிய - ஹபரகட, முல்லேகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு இரு போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையே நிலவும் மோதலே காரணம் எனப் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


வெளிநாடொன்றில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான 'ஹபரகட கசூன்' என்பவரின் உறவினர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


நேற்று (17) இரவு இடம்பெற்ற இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 29 வயதான வர்த்தகர் ஒருவர் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரே இத்துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 


சுமார் மூன்று தோட்டாக்கள் தீர்க்கப்படும் சத்தம் கேட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டை நடத்திய உடனேயே துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்றுவிட்டதாகவும் சம்பவ இடத்திலிருந்த அயலவர்கள் 'அத தெரண' செய்திச் சேவைக்குத் தெரிவித்தனர். 


இச்சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Zameera

ஓமானில் கைதுசெய்யப்பட்ட 'சமித்புர சது ’ நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார் !


 இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த  திமுத்து சதுரங்க (28) எனப்படும் ‘சமித்புர சது ’ ஓமானில் கைது செய்யப்பட்டு இன்று (18) அதிகாலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.



மட்டக்குளியை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த சந்தேகநபர், ஓமானில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


 

Zameera

‘கஞ்சிப்பான இம்ரானின்’ நெருங்கிய உறவினர் கொலை - ஐவர் கைது


 திட்டமிடப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான 'கஞ்சிபானை இம்ரான்' என்பவரின் நெருங்கிய உறவினராகக் (சித்தப்பா) கருதப்படும் 54 வயதான மொஹமட் அஸ்மின் மொஹிதீன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று (17) கைது செய்துள்ளனர். 


கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி பிற்பகல் வேளையில் இத்தூப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதோடு, பிரான்சில் தங்கியுள்ள திட்டமிடப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான 'கூடு அஞ்சு' என்பவரே இந்த கொலையை வழிநடத்தி உள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 


அதன்படி, குறித்த கொலை தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்திருந்த கொழும்பு வடக்கு குற்றவியல் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று காலை மற்றும் நண்பகல் வேளையில் இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


அவர்களில் ஒரு ஆண் சந்தேகநபரும் ஒரு பெண் சந்தேகநபரும் 25 கிராம் 840 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 


கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர் 21 வயதானவர் என்பதோடு, பெண் சந்தேகநபர் 23 வயதானவர் என்றும், இவர்கள் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


மற்றைய மூன்று சந்தேகநபர்களும் 12 கிராம் 380 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் குற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 


குறித்த சந்தேகநபர்கள் 19, 25 மற்றும் 28 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் மட்டக்குளிய, தொம்பே மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர். 


ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் உரிமையாளரை இலக்கு வைத்து கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி பிற்பகல் 1.20 மணியளவில் இத்தூப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது. 


மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில், தாக்குதலில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். 


சமீபத்தில் இரத்மலானை பகுதியில் 'கூடு அஞ்சு' என்பவரின் நெருங்கிய சகாவொருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்கும் வகையிலேயே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.