
இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 10,000 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும், சுமார் 10,000 கிலோ கிராம் எடையுடைய 60,448 கடல் அட்டைகளுடன் 26 மீனவர்கள் இன்று (09) மன்னார், சௌத்பார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் கடத்தப்படுவதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தச் சட்டவிரோத கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 12 படகுகளும், அவற்றில் இருந்து சுமார் 10,000 கிலோ கிராம் எடையுடைய 60,448 கடல் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் கடல் அட்டைகள் சௌத்பார் கடற்கரைக்குக் கொண்டு வரப்பட்டு, முதற்கட்ட நடவடிக்கைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
மீட்கப்பட்ட கடல் அட்டைகள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு, பொலித்தீன் பைகளில் பொதியிடப்பட்ட நிலையில் காணப்பட்டன. இது குறித்து கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் இன்று (09) மாலை கடற்படை மற்றும் பொலிஸார் முன்னிலையில் பகிரங்க ஏல விற்பனை செய்யப்பட்டன.
அதேவேளை, கைது செய்யப்பட்ட 26 மீனவர்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகுகள் உள்ளிட்ட ஏனைய பொருட்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-மன்னார் நிருபர் லெம்பட்-











