
Tuesday, March 10, 2026

பிரசாத் ரணசிங்கவுக்கு பிணை
இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் இன்று கைது செய்யப்பட்டார்.
கைதான அவர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுப்பட்டார்.
இதன்போது அவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

பலநாள் மீன்பிடி படகில் இருந்து 600 கிலோவுக்கும் அதிக போதைப்பொருள் மீட்பு
குறித்த படகு அடுத்த இரண்டு நாட்களுக்குள் கரைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அதனுள் கணிசமான அளவு ஆயுதங்களும் பாதுகாப்புக் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த படகு பொறுப்பேற்கப்பட்டது.
இதேவேளை, கடந்த 7ஆம் திகதியும் தெற்கு கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனையில் மற்றுமொரு படகு கைப்பற்றப்பட்டது. அது திக்ஓவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு சோதிக்கப்பட்ட போது, அதனுள் 102 கிலோ ஹெரோயின் மற்றும் 900 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன், அதிலிருந்த 6 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
இன்று (10) நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆனந்த விஜேபால:
"போதைப்பொருள் விநியோக வலையமைப்பை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. போதைப்பொருளுக்கு அடிமையான பிரஜைகளை மீட்டெடுக்கும் அதேவேளை, சமூகத்தையும் நாம் சுத்தப்படுத்த வேண்டும். இந்த விநியோக வலையமைப்பு திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் பிணைந்துள்ளது. இதனை முற்றாக ஒழிப்பதற்காக இலங்கை பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்" எனக் குறிப்பிட்டார்.

ஈரானிய வீராங்கனைகளுக்கு புகலிடம் வழங்கிய அவுஸ்திரேலியா!
தமது நாட்டில் ஏற்படக்கூடிய அரசியல் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த வீராங்கனைகள் அரசியல் புகலிடம் கோரியிருந்தனர்.
அவுஸ்திரேலியப் பிரதமர் எண்டனி எல்பானீஸ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆசியக் கிண்ணக் கால்பந்தாட்ட தொடருக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த ஈரான் மகளிர் அணி, தென் கொரியாவுக்கு எதிரான போட்டியின் போது ஈரான் தேசிய கீதத்தைப் பாடுவதைத் தவிர்த்தது.
இது ஈரான் அரசுக்கு ஆதரவான ஊடகங்களால் "அவமரியாதையான செயல்" என விமர்சிக்கப்பட்ட நிலையில், வீராங்கனைகளின் பாதுகாப்பு குறித்து சர்வதேச கவனம் திரும்பியது.
அவுஸ்திரேலியாவினால் பாதுகாப்பு வழங்கப்பட்ட வீராங்கனைகள்:
சாரா சர்பாலி அலிஷா (Zahra Sarbali Alishah)
மோனா ஹமூதி (Mona Hamoudi)
சாரா கன்பாரி (Zahra Ghanbari)
பாத்திமா பசந்திதே (Fatemeh Pasandideh)
அத்தேபே ரமசானிசாதே (Atefeh Ramezanizadeh)
இந்த வீராங்கனைகள் மீண்டும் ஈரானுக்கு நாடுகடத்தப்பட்டால் அவர்கள் கொல்லப்படக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், அவுஸ்திரேலியப் பிரதமருடனான பேச்சுவார்த்தையின் பின்னர், அவுஸ்திரேலியா இந்த "உணர்திறன் மிக்க சூழலை" மிகச் சிறப்பாகக் கையாளுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த துணிச்சலான பெண்களின் நிலை குறித்து அவுஸ்திரேலியர்கள் அதிர்ச்சியடைந்ததாகவும், அவர்கள் இங்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும் பிரதமர் எல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
அணியின் ஏனைய வீராங்கனைகளுக்கும் அவுஸ்திரேலியாவின் ஆதரவு திறந்த நிலையில் உள்ள போதிலும், ஈரானில் உள்ள தமது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் காரணமாக சில வீராங்கனைகள் மீண்டும் தாய்நாடு திரும்ப முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸிடம் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறிய ஈரான் அணியின் ஏனைய உறுப்பினர்கள் டுபாய் ஊடாக நாடு திரும்ப முயன்ற போதிலும், ஐக்கிய அரபு இராச்சியம் அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை எனத் தெரிகிறது.
அதன்படி அவர்கள் துருக்கி அல்லது மலேசியா ஊடாக மீண்டும் ஈரானுக்குச் செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.
ஐந்து வீராங்கனைகளுக்குப் புகலிடம் அளித்தது சாதகமான நடவடிக்கை என்றாலும், எஞ்சிய வீராங்கனைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் பாதுகாப்பு குறித்து இன்னும் பலத்த சந்தேகம் நிலவுவதாக உலகளாவிய வீரர்கள் சங்கமான FIFPRO தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் மோதல்; வெளிநாட்டு பிரஜைகளுக்கு 14 நாட்கள் விசா நீடிப்பு
பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சில வெளிநாட்டுப் பயணிகள் திட்டமிட்டபடி நாட்டிலிருந்து வெளியேற முடியாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் விளைவாக, பல சுற்றுலாப் பயணிகள் தமது விசா காலம் முடிவடைவதற்குள் வெளியேற முடியாத அபாயத்தை எதிர்நோக்கினர்.
இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, பெப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கிற்கான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாட்களுக்குக் கட்டணமின்றி விசா நீடிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகள் இலங்கையில் சட்டப்பூர்வமாகத் தங்கியிருக்கும் அதேவேளை, மாற்றுப் பயண ஏற்பாடுகளைச் செய்ய அவர்களுக்குப் போதிய கால அவகாசம் வழங்குவதே இதன் நோக்கமாகும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிகமாக, வரும் நாட்களில் விமான ரத்துக்கள் தொடருமானால், மேலும் 14 நாட்களுக்குக் கட்டணமின்றி விசா நீடிப்பு வழங்குவதற்காகப் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு மாற்று விமானங்களைப் பெற்றுக்கொள்ளும் வரை, நாட்டில் சிக்கியுள்ள பயணிகள் சட்டப்பூர்வமாகத் தங்கியிருப்பதை உறுதி செய்வதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.

நீர்கொழும்பு, கட்டான பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு
நீர்கொழும்பு மற்றும் கட்டான ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் (12) முற்பகல் 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, நீர்கொழும்பு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகள், கட்டான பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் எத்தியாவல, ஜன்குரவெல, களுவரிப்புவ, மிரிஸ்வத்த, கோன்கொடமுல்ல, ஹல்பே, எண்டிமுல்ல, அம்பலாயாய, தோப்புவ, வைக்கால் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பம்புகுலிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள சபை, நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு: பிரதான சந்தேகநபர் கைது!
ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின்போது, ஒருவர் உயிரிழந்ததுடன் இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதற்கமைய, கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, நேற்று திங்கட்கிழமை (09) சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் உடவளவை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு துப்பாக்கிதாரி கடந்த 03ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இரண்டாவது சந்தேகநபர் தொடர்பில் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

லெபனானில் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு
தற்போதைய போர் மோதல்கள் காரணமாக லெபனானில் சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசாங்கத்தினால் தற்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக 560 தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக லெபனானின் சமூக விவகார அமைச்சர் ஹனின் சையத் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் முன்னாள் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர், லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல், லெபனான் மீது பதில் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




