Our Feeds



Tuesday, July 21, 2026

Admin

எல்.பி.எல் தொடரிலிருந்து விலகிய குசல் மெந்திஸ்!


2026-ஆம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து, கொழும்பு கேப்ஸ் (Colombo Kaps) அணியின் தலைவரான குசல் மெந்திஸ் தொடை தசைநார் காயம் காரணமாக விலகியுள்ளார்.

கென்டி ரோயல்ஸ் அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியின் போது அவருக்கு இந்த காயம் ஏற்பட்டது.

 காயம் அடைந்ததைத் தொடர்ந்து, போட்டியின் இடைநடுவே குசல் மெந்திஸ் 'ரிட்டயர்ட் ஹர்ட்' (retired hurt) முறையில் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, அவர் இத்தொடரின் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது கொழும்பு கேப்ஸ் அணியின் தொடர் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

இத்தொடரின் தொடக்கப் போட்டிகளில் கொழும்பு கேப்ஸ் அணியை வெற்றிகரமாக வழிநடத்தியதுடன், துடுப்பாட்டத்திலும் முக்கிய பங்காற்றி வந்த மெந்திஸின் விலகல், லீக் சுற்றின் எஞ்சிய போட்டிகளுக்குத் தயாராகி வரும் அவ்வணிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

SHAHNI RAMEES

நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவின் கடைசி நாட்கள்!

 


தனது அரசியல் எதிர்காலம் குறித்து நாடாளுமன்றில்

SHAHNI RAMEES

டெல்லியில் பரபரப்பு: பிரதமர் இல்லம் அருகே ராகுல் காந்தி கைது!


பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே போராட்டத்தில்

SHAHNI RAMEES

டெல்லியில் பிரதமர் வீடு அருகே காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தியுடன் போலீசார் பேச்சுவார்த்தை!

 

டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி நேற்று பேரணி
Admin

ஸ்பெயின் - ஆர்ஜென்டினா வீரர்கள் மோதல் - FIFA விசாரணைக்கு உத்தரவு!


உலகக்கிண்ணக் கால்பந்து இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து, மைதானத்தில் இரு அணி வீரர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் பிபா விசாரணைக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

போட்டிக்குப் பின் நடைபெற்ற விதிமீறல்கள் மற்றும் கைகலப்பு சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்க பிபா வழக்கறிஞர் மற்றும் ஒழுங்குமுறைக் குழுவை நியமித்துள்ளது.

ஸ்பெயின் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஆர்ஜென்டினா வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் வீரர் எரிக் கார்சியாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியபோது, இதைத் தடுக்க வந்த மாற்று வீரர் கேவி-யையும் அவர் கீழே தள்ளிய காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.

அத்துடன், வெற்றியை க் கொண்டாட ஓடி வந்த ஸ்பெயின் அணியின் தலைவர் ரோட்ரியின் வயிற்றில் ஆர்ஜென்டினாவின் தடுப்பாட்ட வீரர் நஹூயல் மொலினா தாக்கியதைத் தொடர்ந்து, மான்செஸ்டர் சிட்டி அணியில் தன்னுடன் விளையாடிய ஆர்ஜென்டினா வீரர் நிக்கோலஸ் ஒட்டமெண்டியுடன் ரோட்ரி காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

எவ்வாராயினும், ஆர்ஜென்டினா பயிற்சியாளர் லயோனல் ஸ்கலோனி மற்றும் பிற வீரர்கள் உடனடியாக தலையிட்டு நிலைமையைச் சமாதானப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி கிண்ணத்தை உயர்த்தியபோது, ஆர்ஜென்டினா வீரர்கள் மேடைக்கு முதுகைக் காட்டியபடி நின்றது சாம்பியன் அணிக்கு அவமரியாதை செய்வதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, ஆட்டத்திற்குப் பின் பரேடெஸுக்கு நேரடியாகச் சிவப்பு அட்டை காட்டப்படாததால், ஆரம்ப கட்ட அறிக்கையில் அவரது பெயர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. விசாரணைக்கான கால அவகாசம் குறித்து பிபா இன்னும் அறிவிக்கவில்லை.

Admin

சலேவின் மனு ஒத்திவைப்பு!


ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகத் தன்னை கைது செய்து தடுத்து வைப்பதைச் சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவை மேலதிக பரிசீலனைக்காக வரும் ஜூலை 27 ஆம் திகதிக்கு அழைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இம்மனு இன்று (21) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன தனது வாய்மொழி வாதங்களை நிறைவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, மேலதிக மனு பரிசீலனையை இந்த மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் கருத்துக்களை முன்வைக்கவுள்ளார்.

SHAHNI RAMEES

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான அறிவிப்பை திரும்பப் பெறவும் - UNP கோரிக்கை


சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் அல்லது

Admin

பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு!


மாத்தறை, எலியகந்த வீதி, பிரவுன்ஸ் ஹில் பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் தென்னை நிலத்தை 6 கோடி ரூபாய்க்கு கொள்வனவு செய்தது தொடர்பான வழக்கில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை இன்று (21) மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்காக இரண்டாவது முறையாகவும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து, மாத்தறை பிரதான நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இந்த உத்தரவுகள் இன்று (21) வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது மாத்தறை பிரதான நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டன.

Admin

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு!


நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

"2026 ஜூலை 05 மற்றும் 06 ஆகிய இரு தினங்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட கைதிகள் சிலர் உயிரிழந்ததுடன், மேலும் சிலர் பலத்த காயமடைந்துள்ளனர். இதன் போது விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அவர்கள் தனது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியமையால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று இன்று (21) சபாநாயகர் கௌரவ (மருத்துவர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களிடம் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கையளிக்கப்பட்டது."

"இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 2024 நவம்பர் 25 ஆம் திகதிய 2412/08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகை மூலம் நீதித்துறைக்குப் பொறுப்பான அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள சிறைச்சாலை மறுசீரமைப்பு தொடர்பான கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல், சிறைச்சாலை நிர்வாகம் மற்றும் மறுசீரமைப்பு, சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நெரிசலைக் குறைத்தல் ஆகிய பணிகளைப் பொறுப்புடன் நிறைவேற்றவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அது தொடர்பான பிரச்சினைகள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருந்தன."

ஊடகப் பிரிவு
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்
இலங்கைப் பாராளுமன்றம்.

Admin

கட்டுவான தொழிற்சாலை தீ விபத்தில் ஐவர் பலி!


ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டு வரும் அதேவேளையில், தீயில் சிக்கியுள்ளவர்களைக் கண்டறிவதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று (21) காலை இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அந்நேரத்தில் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் எவரேனும் உள்ளே சிக்கியுள்ளனரா? என்பதைக் கண்டறிவதற்காக தொடர்ந்து மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Admin

நுகர்வோர் பாதுகாப்புக்காக பழ விற்பனையில் புதிய கட்டுப்பாடுகள்!


செயற்கையாகவும், நச்சுத்தன்மை கொண்ட இரசாயனங்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் தேவையான புதிய சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளுடன் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

வாழைப்பழம், மாம்பழம், பப்பாளி மற்றும் ஆனைக்கொய்யா போன்ற பழங்களைச் சட்டவிரோதமான முறையில் நச்சுத்தன்மை கொண்ட இரசாயனங்கள் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்வதாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்நிலையைக் கட்டுப்படுத்த தேவையான நுகர்வோர் விவகாரச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும், சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் விவசாயத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட அறிவியல் பூர்வமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு வர்த்தகர்களை வழிநடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பழங்களில் உள்ள இரசாயனங்களின் அளவை விரைவாகப் பரிசோதிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைக்குத் தேவையான ஆய்வக வசதிகளை வழங்கி, எதிர்காலச் சோதனைகளை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகர்கள் தொடர்ந்தும் இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டால், அடுத்த கட்டமாக அத்தகைய இடங்கள் சோதனையிடப்பட்டு, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Admin

செம்மணி மனித புதைக்குழி அகழ்வுப் பணிகளை நாளை பார்வையிடுகிறது ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு!


யாழ்ப்பாணம் செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைக்குழியில் முன்னெடுக்கப்படும் அகழ்வுப் பணிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தூதுக்குழு நாளை பார்வையிடவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ தலைமையிலான இந்தத் தூதுக்குழுவில், இத்தாலியத் தூதுவர் டொமியானோ ஃபிரான்கோவிக், ஜெர்மனித் தூதுவர் டி பெலிக்ஸ் நியூமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லாம்பர்ட் மற்றும் நெதர்லாந்துத் தூதர் வீபே டி போயர் ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.

செம்மணி என்புக்கூட்டுப் புதைகுழி தொடர்பான வழக்கு, இந்த வாரம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த தூதுக்குழுவின் பயணத்துக்காக நீதிமன்றத்தின் அனுமதி கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி, நீதிமன்ற அனுமதியுடன் குறித்த தூதுக்குழுவினர் இன்று வடக்குக்குச் செல்லவுள்ளனர்.

யாழ்ப்பாண நகரின் நுழைவாயிலில் அமைந்துள்ள செம்மணி மனித புதைகுழி, 1998 ஆம் ஆண்டில் இலங்கைப் படையினரால் பாடசாலை மாணவி கிரிஷாந்தி குமாரசுவாமி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

கடந்த பெப்ரவரி மாதம், செம்மணி மயானத்திற்கான தகனமேடை அமைப்பதற்காக குழி தோண்டியபோது, மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனைதொடர்ந்து, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் அதிகார வரம்புகுட்பட்டு, தொல்பொருள் ஆய்வாளர்கள், சட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகளின் பங்களிப்புடன், நடைபெற்று வரும் இந்த அகழ்வுகள் கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்று வரையிலான நிலவரப்படி, செம்மணி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 454 என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன.

அவற்றில் 440 மனித என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHAHNI RAMEES

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று கையளிக்க திட்டம்!

 

பாராளுமன்றம் இன்று (21) மீண்டும் கூடவுள்ளது.