
Wednesday, September 16, 2026
கொழும்பு துறைமுக நகரில் பாரிய முதலீடு: பிறைம் மெல்வா நிறுவனத்திற்கு மூலோபாய முக்கியத்துவ அந்தஸ்து
(எம்.மனோசித்ரா)
கொழும்பு துறைமுக நகரத்தில் பிரம்மாண்ட திட்டத்தை முன்னெடுப்பதற்காகப் பிறைம் மெல்வா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தை 'மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வணிகமாக' பெயரிடுவதற்கும், அதற்குரிய சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புகளை வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பிறைம் மெல்வா நிறுவனம் எதிர்வரும் சில ஆண்டுகளில் 112.2 மில்லியன் டொலர் மற்றும் 15.9 பில்லியன் இலங்கை ரூபாவை முதலீடு செய்யவுள்ளது. இம்மாபெரும் முதலீட்டின் மூலம் கொழும்பு துறைமுக நகரத்தில் அடையாளமிக்க கலப்பு-பயன்பாட்டு நீர்முனை அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 800 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ், வணிகமொன்றை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வணிகமாகப் பெயரிடுவதற்கும், அத்தகைய வணிகங்களுக்கு வரி விலக்குகள் அல்லது ஊக்குவிப்புகளை வழங்குவதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் அவசியமாகும்.
அதற்கமைய, துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் ஏற்பாடுகளைப் பின்பற்றி உத்தேசிக்கப்பட்டுள்ள விலக்குகள் மற்றும் ஊக்குவிப்புகளை வழங்குவதற்கும், பிறைம் மெல்வா நிறுவனத்திற்கு முதன்மை வணிக அந்தஸ்தை வழங்குவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
களுத்துறையில் ரயிலில் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு
களுத்துறை தெற்கு புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று (16) புதன்கிழமை புகையிரதத்தில் மோதி இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரத்திற்குச் செல்லும் புகையிரதத்தில் ஏறுவதற்காக, களுத்துறை தெற்கு புகையிரத நிலையத்தின் தெற்குப் பகுதியில் உள்ள நடைமேடையை சென்றடைய இவர்கள் புகையிரத தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர்.
இதன்போது மருதானையிலிருந்து காலி நோக்கிப் பயணித்த சேவைப் புகையிரதம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் மற்றும் உறவுக்கார மகள் ஆகியோர் மருதானையிலிருந்து காலி நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் மோதியுள்ளதில், தாயும் உறவுக்கார மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக களுத்துறை ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர்கள் பாதுகாப்பற்ற முறையில் தண்டவாளத்தில் நடந்து சென்றதே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இரு பெண்களின் சடலங்களும் களுத்துறை தெற்கு புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை
(எம்.மனோசித்ரா)
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை. எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டே, உள்நாட்டில் விலைகளைத் தீர்மானிக்கலாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (15) கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இதுவரை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை. முன்னர் முற்பதிவு செய்யப்பட்ட எரிபொருட்களே தற்போது நாட்டை வந்தடைகின்றனர். இது குறித்து அரசாங்கமும் இன்னும் கலந்துரையாடவில்லை.
எவ்வாறிருப்பினும் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் சில, தற்போதுள்ள விலையில் எரிபொருட்களை விநியோகிப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளன. கடந்த 3 மாதங்களாக எரிபொருள் விலையில் அரசாங்கம், நுகர்வோருக்கு சலுகைகளை வழங்கியிருக்கிறது.
இதற்காக 57 பில்லியன் ரூபா அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது. எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டே, உள்நாட்டில் விலைகளைத் தீர்மானிக்கலாம் என்றார்.
இலங்கை பொருளாதாரம் 2026 இரண்டாம் காலாண்டில் 4.2% வளர்ச்சி
இலங்கையின் பொருளாதாரம் 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.2 சதவீத வளர்ச்சியடைந்துள்ளது. விவசாயத்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் சேவைத்துறையின் மந்தமான வளர்ச்சியை ஈடுசெய்யும் வகையில், தொழிற்துறை நடவடிக்கைகள் திறம்படச் செயற்பட்டதே இதற்குக் காரணம் எனத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2.91 டிரில்லியன் ரூபாவாக இருந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2026ஆம் ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 3.03 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய சந்தை விலைகளின் அடிப்படையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.3 சதவீதம் அதிகரித்து 8.25 டிரில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கைத்தொழில் துறை 25.9 சதவீதம், விவசாயம் 8.4 சதவீதம், பொருட்களின் மீதான வரிகள் நீங்கலாக மானியங்கள் 13.0 சதவீதம், சேவைகள் 52.7 சதவீதம் என்ற அடிப்படையில் பங்களிப்பு செலுத்தியுள்ளன.
(இராஜதுரை ஹஷான்)
22ஆவது திருத்தம் தொடர்பில் பொது வெளியில் கூறப்படும் கருத்துக்களுக்கு எம்மால் பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது - நளிந்த ஜயதிஸ்ஸ
(எம்.மனோசித்ரா)
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் பொது வெளியில் கூறப்படும் கருத்துக்களுக்கு எம்மால் பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது. நீதிமன்றத்தால் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டாலும், அதனை ஏற்றுக் கொள்வதற்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் மற்றும் நீதி சேவை ஆணைக்குழு திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் எம்மால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இவ்வாறு விமர்சனங்களை முன்வைப்பவர்கள் எவரானாலும் அவர்கள் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று மனு தாக்க செய்ய முடியும்.
அவற்றை ஆராய்ந்து நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். நாட்டில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பிற்கமைய சட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் போது, எந்தளவு பெரும்பான்மை வேண்டும் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும். அந்த வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதுமானதா அல்லது அதற்கும் மேல் சர்வசன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டுமா என்பதை அரசாங்கத்தால் தீர்மானிக்க முடியாது.
நீதிமன்றத்தால் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டாலும், அதனை ஏற்றுக் கொள்வதற்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். 22ஆவது திருத்தத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்திருப்பவர்களும் நீதிமன்றத்தின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இது குறித்த தீர்மானம் 21ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், 24 மற்றும் 25ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்படவுள்ளது. எனவே பொது வெளியில் கூறப்படும் கருத்துக்களுக்கு எம்மால் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது என்றார்.
ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் புறப்பட்டார்
ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அவருடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இவர்கள் இன்று அதிகாலை 1.10 மணிக்கு சிங்கப்பூர் எயார்லைன்ஸ் சேவைக்குச் சொந்தமான SQ-469 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.
ஷிரந்தி ராஜபக்ஷ வரும் செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



