Our Feeds



Sunday, March 29, 2026

Zameera

ஈரானில் 600 கல்வி நிறுவனங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன


 ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து சுமார் 250 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 


மேலும் 600 கல்வி நிறுவனங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஈரான் கல்வி அமைச்சின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு மையத்தின் தலைவர் ஹொசைன் சாதகி தெரிவித்துள்ளார். 


இந்தத் தாக்குதல்களில் 184 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காயமடைந்துள்ளதாகத் அவர் தெரிவித்தார். 


தெஹ்ரானில் மட்டும் 16 மாணவர்கள் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 


எட்டு மாணவர்கள் மற்றும் ஐந்து கல்வியாளர்கள் காயமடைந்துள்ளனர் என்று அவர் கூறினார். 


பெப்ரவரி 28 முதல் சுமார் 200 நிர்வாக, கலாச்சார மற்றும் கல்வி வசதிகள் சேதமடைந்துள்ளதாக சாதகி தெரிவித்துள்ளார்.

Zameera

மத்திய கிழக்கு மோதல் : இலங்கைக்கு பல்வேறு கோணங்களில் கடுமையான தாக்கங்கள் நேரடியாக ஏற்படும்


 தற்போது மத்திய கிழக்கு யுத்தம் தீவிரமடைந்து, யேமனின் வடமேற்கு பகுதியையும் சனா நகரையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூதி அமைப்பினர் மத்திய கிழக்கு போரில் புதிதாக நேரடியாக தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்துள்ளனர். 


இதனால் இலங்கைக்கு பல்வேறு கோணங்களில் கடுமையான தாக்கங்கள் நேரடியாக ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (29) விசேட உரையொன்றினை முன்வைத்து தெரிவித்துள்ளார். 


இதன் பிரகாரம், பாப் அல் மந்தாப் நீரிணை வழியில் ஹூதி அமைப்பினர் போர் களத்திற்கு வருவதால் பல தாக்கங்கள் நமது நாட்டில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும். 


இந்த நீரிணை என்பது செங்கடல், மத்திய தரைக்கடல், அரேபியக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய அனைத்தையும் இணைக்கும் இடமாக காணப்படுவதனால், இந்த நீரிணை வழியாக நடைபெறும் சரக்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 


இதனால் எண்ணெய் விலை உயர்வு, கடல் வழி சரக்குகள் போக்குவரத்தில் தாமதங்கள் போன்றன ஏற்படலாம். 


இதனால் போக்குவரத்து கட்டணம், மின்சார கட்டணம் அதிகரித்து அன்றாட வாழ்க்கைச் செலவுகளும் அதிகரிக்கலாம். 


பாப் அல் மந்தாப் நீரிணையைத் தவிர்த்துச் செல்ல வேண்டுமெனில் நன்னம்பிக்கை முனையை பாறைக் குடாவைக் கடந்து செல்ல வேண்டும். இதனால் போக்குவரத்து மற்றும் காப்பீட்டு கட்டணங்கள் அதிகரிக்கும். போர் அபாயக் கட்டணங்கள் கூட அதிகரித்து கடுமையான தாக்கங்கள் ஏற்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 


இறக்குமதி செலவுகளும் அதிகரித்து, ஏற்றுமதி இலாப விகிதங்கள் கூட குறையலாம். நமது பொருட்களை வாங்குவோர் வேறு விநியோகஸ்தர்களை தேடுவதால் போட்டித்தன்மை காரணமாக அபாயங்கள் ஏற்படலாம். 


இந்த ஹூதி தாக்குதல்கள் மூலம் நமது நாடு எதிர்காலத்தில் அதிக செலவுகளை ஏற்க வேண்டியிருக்கும் என்பதால் அரசாங்கம் இதுகுறித்து உடனடி செயல்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 


இந்த நீரிணை மூடப்படுவதனால் ஏற்படும் பாதிப்பிற்கு அரசிடம் மாற்று செயற்திட்டம் அமைந்து காணப்பட வேண்டும். அரசாங்கம் இவற்றிற்கு தீர்வுகளை கொண்டிருக்க வேண்டும். 


இந்த சவால்களை எதிர்கொள்ள அரசாங்கத்திடம் செயற்றிட்டமொன்று காணப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

SHAHNI RAMEES

டிஜிட்டல் Train Ticket அறிமுகம்!

 


இலங்கை தொடரூந்து சேவையை நவீனமயப்படுத்தும்

SHAHNI RAMEES

அவர்கள் மீது நெருப்பு மழையைப் பொழிவோம்! - ஈரான் எச்சரிக்கை...

 

அமெரிக்கா பகிரங்கமாக பேச்சுவார்த்தைக்கான
SHAHNI RAMEES

ஹோர்முஸ் நீரிணை வழியாக 20 பாகிஸ்தான் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி!


பாகிஸ்தான் கொடியுடன் கூடிய 20 கப்பல்கள் ஹோர்முஸ்

Zameera

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என். எஸ். குமனாயக்கவினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


‘டித்வா’ புயலுடன் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, நாட்டில் ஏற்பட்டுள்ள பொது அவசரகால நிலைமையின் அடிப்படையில் பொதுப்பாதுகாப்பு மற்றும் நாட்டின் வழமை நிலையைப் பாதுகாப்பதற்கும், பொதுமக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைத் தொடர்ந்து பேணுவதற்குமாக இந்த அவசரகால நிலையை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, எந்தவொரு அரச கூட்டுத்தாபனம், அரச திணைக்களம், உள்ளூராட்சி நிறுவனம், கூட்டுறவுச் சங்கம் அல்லது அவற்றின் கிளைகளினால் வழங்கப்படும் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலும் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், பெற்றோலிய பொருட்கள், எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் விநியோகம், சுகாதார சேவை தொடர்பான அனைத்து சேவைகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றிய வர்த்தமானி அறிவித்தல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.


SHAHNI RAMEES

​ஈரானின் ட்ரோன் அச்சுறுத்தல்களை முறியடிக்க வளைகுடா நாடுகளுடன் உக்ரைன் பாதுகாப்பு ஒத்துழைப்பு

 

ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களை முறியடிக்க வளைகுடா நாடுகளுடன் உக்ரைன் பாதுகாப்பு ஒத்துழைப்பு


​வளைகுடா நாடுகளுக்கான தனது பயணத்தின் போது, ஏவுகணை மற்றும் ட்ரோன் (ஆளில்லா விமானம்) அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதை மையமாகக் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), கத்தார் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒப்புதல் அளித்துள்ளார்.


​ஒப்பந்தங்களின் முக்கிய அம்சங்கள்:
​கத்தார்: ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வான்வழி அமைப்புகளை (Unmanned Aerial Systems) முறியடிப்பதில் ஒத்துழைப்பது தொடர்பான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உக்ரைனும் கத்தாரும் கையெழுத்திட்டுள்ளன.
​ஐக்கிய அரபு அமீரகம்: ஐக்கிய அரபு அமீரகத்துடனான பேச்சுவார்த்தைகள், பரந்த பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தத்திற்கு வழிவகுத்துள்ளன.


​சவுதி அரேபியா: சவுதி அரேபியாவுடன் ஏற்கனவே இது போன்ற பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் உக்ரைன் கையெழுத்திட்டுள்ளது. இது வருங்கால தொழில்நுட்ப கூட்டாண்மை மற்றும் குறிப்பாக ட்ரோன் பாதுகாப்பில் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும்.


​உக்ரைனின் பங்களிப்பு:
​ரஷ்யாவுடனான போரின் போது, ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முறியடிப்பதில் உக்ரைன் பெற்ற நேரடிப் போர்க்கள அனுபவங்களை (Battlefield-tested expertise) பகிர்ந்து கொள்வதே இந்த ஒப்பந்தங்களின் மையப்புள்ளி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


​மேலும், ஈரானிய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் வளைகுடா நாடுகளுக்கு:
​இன்டர்செப்டர் ட்ரோன்கள் (தாக்கி அழிக்கும் ஆளில்லா விமானங்கள்),
​மின்னணு போர் திறன்கள் (Electronic warfare capabilities),
​ஆலோசனை ஆதரவு ஆகியவற்றை வழங்க உக்ரைன் முன்வந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


Zameera

இஸ்ரேலிய – அமெரிக்க பல்கலைக்கழகங்களை தாக்குவோம்


 மத்திய கிழக்கிலுள்ள இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை இலக்கு வைக்கப்போவதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் தெஹ்ரானில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இதன்படி, பிராந்தியத்திலுள்ள அத்தகைய அனைத்துப் பல்கலைக்கழகங்களும் சட்டபூர்வமான இலக்குகளாகக் கருதப்படும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.


மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் அனைத்துப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறு ஈரானிய இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவுறுத்தியுள்ளது.


பிராந்தியத்திலுள்ள அமெரிக்க நிறுவனங்கள் மீதான தாக்குதல்களைத் தவிர்ப்பதற்கு, ஈரான் பல்கலைக்கழகங்கள் மீதான குண்டுத் தாக்குதல்களை அமெரிக்கா கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


இந்தக் கண்டனத்தை மார்ச் 30ஆம் திகதி ஈரான் நேரப்படி நண்பகல் 12:00 மணிக்கு முன்னதாக அமெரிக்கா தெரிவிக்க வேண்டும் எனவும் ஈரானியப் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Zameera

இன்றைய வானிலை


 சப்ரகமுவ மாகாணத்திலும் கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 


நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வரட்சியான மற்றும் வெப்பமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Zameera

மணல் மாஃபியா பின்னால் அரசியல்வாதிகள்: கடற்தொழில் அமைச்சர் எச்சரிக்கை


 வடக்கிலுள்ள மணல் மாஃபியாக்களுக்குப் பின்னால் சில அரசியல்வாதிகளும், சில பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளனர் என்பது எமக்குத் தெரியும். கடந்த கால ஆட்சியாளர்களை ஏமாற்றியது போல, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் ஏமாற்றலாம் என நினைக்க வேண்டாம். தவறு செய்யும் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (28) இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

"மணல் கொள்ளையர்களிடம் இருந்து எமது வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அண்மைய நாட்களில் மணல் கொள்ளையர்களினால் 6 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. இன்று ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் உயிரைக் கூட அவர்கள் பறித்துள்ளனர். இது 'ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த' கதையாக, பொலிஸாரின் உயிரையே பறிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. இவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மணல் விநியோகத்தை முறைப்படுத்தி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதன் ஊடாக, ஒரு கியூப் மணலை 7,500 ரூபாவுக்கு வழங்க முடியும். அதன்படி ஒரு டிப்பர் மணலை 23,000 ரூபாவுக்குப் பெறலாம். யாழ்ப்பாணத்திற்கு அதனைக் கொண்டு வருவதற்கான போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய செலவுகளைக் கணித்தால், சுமார் 55,000 முதல் 65,000 ரூபாவுக்குள் மணலை விநியோகிக்க முடியும்.

ஆனால், சட்டவிரோதமாக மணலை விற்பனை செய்யும் மாஃபியாக்கள், ஒரு டிப்பர் மணலை ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா வரை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்கின்றனர். இவ்வாறான மாஃபியாக்களின் பின்னால் அரசியல்வாதிகளும் பொலிஸாரும் இருப்பதை நாம் அறிவோம். எமது அரசாங்கத்திடம் இத்தகைய விளையாட்டுகள் செல்லுபடியாகாது.

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு முதல் தடவை சிக்கினால் 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது தடவையும் அதே தவறைச் செய்தால் 20 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது தடவையும் சிக்கினால் குறித்த வாகனம் அரசுடைமையாக்கப்படும். இது தொடர்பான சட்டங்கள் மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். இது குறித்து நீதி அமைச்சு உள்ளிட்ட தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம்.

அத்துடன், பொலிஸாரின் நடவடிக்கைகள் சாதாரண மக்களை வஞ்சிப்பதாக இருக்கக் கூடாது; அது மாஃபியாக்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையாக அமைய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். மாஃபியாக்களுக்கு அஞ்சும் மக்கள், அவர்கள் தொடர்பான தகவல்களை வழங்கத் தயங்குகின்றனர். எனவே, இவ்வாறான சட்டவிரோதச் செயற்பாடுகள் குறித்துத் தகவல் வழங்க விரைவில் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்துவோம். இத்தகைய செயற்பாடுகளை பொலிஸாரோ அரசாங்கமோ தனித்து நின்று கட்டுப்படுத்த முடியாது; பொதுமக்களின் பங்களிப்பு அவசியமானது" என அவர் மேலும் தெரிவித்தார்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

Zameera

நாடு பாரிய ஆபத்தை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது - சஜித் பிரேமதா


 ​தற்போதைய அரசாங்கம் நாட்டின் நெருக்கடிகளை எதிர்கொள்ளத் தேவையான எந்தவொரு முறையான திட்டங்களையும் இதுவரை வகுக்கவில்லை என்றும், இதனால் நாடு பாரிய ஆபத்தை நோக்கித் தள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

களனிப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப செயற்பட அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். அமெரிக்கா, ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளில் இடம்பெற்ற சர்வதேச அரசியல் மாற்றங்களை அவதானித்து, வினைத்திறனான ஒரு அரசாங்கம் முன்கூட்டியே தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் இந்த அரசாங்கம் சர்வதேசக் கொள்கைகளைப் புரிந்துகொள்ளாமல் மெத்தனமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

​நாட்டின் மின்சக்தித் துறை கடும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, நுரைச்சோலை மின் நிலையத்தில் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்படுவதால் மின் உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த நிலக்கரி மோசடியை மூடிமறைக்கவே அரசாங்கம் மின் கட்டணத்தை அதிகரிக்கத் திட்டமிட்டு வருவதாகவும், இதன் சுமை ஒட்டுமொத்த நுகர்வோர் மீதும் சுமத்தப்படுவதாகவும் அவர் சாடினார். 

தரமற்ற நிலக்கரியால் மின் நிலைய உபகரணங்கள் சேதமடைவதுடன், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதிப்புகளும் ஏற்படுவதாக அவர் எச்சரித்தார். மேலும், இந்தியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் வரிச்சலுகைகள் மூலம் தமது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிலையில், இந்த அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாகத் குறிப்பிட்டுள்ளார்.

​விவசாயத் துறையிலும் உரத் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக உணவுப் பாதுகாப்பிற்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். உரத்தின் விலை அதிகரித்துள்ள நிலையிலும், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கூப்பன்களுக்கு எரிபொருள் கிடைக்காத நிலையிலும், விவசாய உற்பத்தி வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 

இதற்கிடையில், நாட்டின் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஏனைய நாடுகளுக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளதாகவும், இது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி முன்வைக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்களை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அரசாங்கம் சேறுபூசும் நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட சஜித், உரத்திற்கான வட் (VAT) வரியை நீக்கி, மக்களுக்குத் தேவையான நிவாரணத் தொகுப்புகளை உடனடியாக வழங்க வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

(ஞான பிரசாந்தன்)

Zameera

இன்று நீர் வெட்டு


 அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் நிறுத்தப்படுவதன் காரணமாக, இன்று (29) தெஹிவளை - கல்கிசை மாநகர சபைக்குட்பட்ட பல பகுதிகளில் 5 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை களுபோவில, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவ, ராவத்தாவத்தை மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.

Zameera

அரசாங்கம் பொய்களைக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது


 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக மாவட்ட அமைப்பாளர்களை நியமிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அடுக்கடுக்கான பொய்களைக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். 

தற்போதைய வரிக்கொள்கை மற்றும் அரசாங்கத்தின் முறையற்ற தீர்மானங்களால் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும், அரசாங்கத்தினால் ஏற்படும் நட்டங்கள் அனைத்தும் மக்கள் மீதே சுமத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, எரிபொருள் விவகாரத்தில் 45 நாட்களுக்குப் போதுமான கையிருப்பு இருப்பதாக முன்னதாகக் கூறிவிட்டு, தற்போது உலக சந்தை விலையை விட அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். 

முன்னைய ஆட்சியின்போது கணக்கில் ட்ரில்லியன் கணக்கில் பணம் இருப்பதாகக் கூறியவர்கள், இன்று அது குறித்துப் பேசுவதே இல்லை எனவும் அவர் விமர்சித்தார். விவசாயத் துறை குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், உள்நாட்டு விவசாயிகளை வலுப்படுத்துவதை விடுத்து, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து நுகரும் கலாச்சாரத்தை அரசாங்கம் திட்டமிட்டு உருவாக்கி வருவதாகக் குற்றம் சாட்டினார். இதன் காரணமாகக் கிராமப்புறங்களில் உரத் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பாதுகாப்புத் தொடர்பான அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 

ஒரு அணியாகச் செயற்பட்டு நாட்டுக்காக வேலை செய்ய வேண்டிய அரசாங்கம், பழைய அணிகளைக் குற்றம் சுமத்தித் தனது தோல்விகளை மறைக்க முயலக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தினார். மேலும், நாட்டின் புலனாய்வுப் பிரிவுகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளதாகவும், ஊழலுக்கு எதிராகப் பேசுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று பல்வேறு முறைகேடுகளில் சிக்கியுள்ளதாகவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

ஞான பிரசாந்தன்