
எரிபொருள் விலை விரைவில் குறையும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
வளைகுடா நாடுகளுக்கிடையில் நிலவும் போர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் மிக விரைவில் எரிபொருள் விலை குறைக்கப்படுமென சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
களுத்துறை பிரதேசத்தில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘ஏனைய நாடுகளில் எரிபொருளுக்கான வரிசை தோற்றம் பெற்றுள்ள நிலையில், வாரத்துக்கு 23 முறைகள் எரிபொருள் விலையை அதிகரிக்கும் சந்தர்ப்பத்திலும் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய வகையிலேயே முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்.
தொடர்ச்சியான எரிபொருள் விநியோகம் மற்றும் மின்சார விநியோகத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். உலக சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களுக்கமைய எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை மேற்கொள்ள நேரிடும்.
அதற்காக விலையேற்றத்துக்கு ஏற்ப மொத்தமாக விலை அதிகரிப்பை மேற்கொள்வதில்லை. அதிலொரு பகுதியை திறைசேரி பொறுப்பேற்பதுடன் இன்னுமொரு பகுதிக்கான செலவை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பொறுப்பேற்றுக்கொண்டே ஓரளவு விலை அதிகரிப்புக்கான சுமையை மக்கள் மீது சுமத்த நேர்ந்துள்ளது.
வளைகுடா நாடுகளுக்கிடையில் நிலவும் போர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதும் மிக விரைவில் எரிபொருள் விலையை குறைப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
மக்கள் தமது வர்த்தகத் துறையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் கடமைகளிலும் புதிய எதிர்பார்ப்புகளுடன் முன்னோக்கிச் செல்வதே சகலரதும் விருப்பமும் குறிக்கோளுமாகும். அந்த எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக்கிக் கொள்வதற்கான சூழல் உருவாகியுள்ளது என்பதை சகலரும் அறிவார்கள்.
கடந்த ஒன்றரை வருட காலப் பகுதியில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை அடைந்து வருகிறது என்பதை சகலரும் அறிவார்கள். அதேபோன்று உலக மட்டத்தில் இலங்கைக்கு இருக்கும் வரவேற்பு அதிகரித்துள்ளது. டிட்வா புயலுக்கும் தற்போது நிலவும் போர் நிலைமையிலும் நாடு என்ற அடிப்படையில் ஸ்திரமாக எதிர்கொண்டு வருகிறோம். இந்த நெருக்கடிகளிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறோம்.
எனவே, மலர்ந்துள்ள இந்தப் புத்தாண்டு எதிர்பார்ப்புகளை வெற்றிக்கொள்வதற்கான வருடமாக அமையும் என்பது உறுதி. கடந்த ஒன்றரை வருடங்களில் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு இன்னும் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கும் வருடமாக இது அமையும்.
எதிர்க்கட்சியினருக்கு ஜனநாயகத்தை கற்பிக்க வேண்டும். ஒன்றரை வருடத்துக்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஐந்து வருடங்களுக்கு ஆட்சி பலத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளனர். இந்த ஐந்து வருடங்களுக்குள் நாட்டை ஸ்திரப்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே ஜனாதிபதி உள்ளிட்ட இந்த அரசாங்கத்தினதும் பொறுப்பாகும். அதனை நாங்கள் செய்து கொண்டே இருக்கிறோம்.
ஆனால், எதிர்க்கட்சியினர் ஒவ்வொரு மாதமும் போலி எதிர்பார்ப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அதனை தவிர அவர்களுக்கு செய்வதற்கு வேறு ஏதும் இல்லை. குறைந்தது கிராமங்களுக்கு ஏதாவது சேவை செய்துகொடுத்தார்கள் என்றால் அவர்களுக்கு சாதகமாக அமையும். ஆதரவாளர்களை தக்கவைத்து கொள்வதற்காக அவர்கள் கூறும் விடயங்கள் பயனளிக்காது’’ என்றார்.











