Our Feeds



Saturday, April 18, 2026

Zameera

'கரன்தெனிய ராஜு' இலங்கை அழைத்து வரப்பட்டார்


 இந்தியாவில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'கரன்தெனிய ராஜு' என்பவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவினரால் நேற்றிரவு (17) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

கொலைச் சம்பவங்கள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே, இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவர், பாதாள உலகக் குழுத் தலைவரான 'கரன்தெனிய சுத்தாவின்' சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Zameera

நீர் நிலைகளில் பதிவான விபத்துகளில் 20 பேர் உயிரிழப்பு


 (செ.சுபதர்ஷனி)


இவ்வருடம் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 20 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள நீர் நிலைகளை அண்டிய பகுதிகளில் பதிவான விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


பத்தரமுல்ல பகுதியில் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


கடந்த 12 ஆம் திகதி முதல் வியாழக்கிழமை (16)  வரையான காலப்பகுதியில் மாத்திரம் நீர் நிலைகளை அண்டிய பகுதிகளில் பதிவான விபத்துகளில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளனர். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறான அனர்த்தங்களுக்குப் பெற்றோரும் பெரியோரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்றாமையே முக்கிய காரணம். சித்திரைப் புத்தாண்டு விடுமுறைக்காலத்தை முன்னிட்டு மக்கள் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருவதோடு துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி பலர் உயிரிழந்த நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன.


குறிப்பாக கோபேகனே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெதுரு ஓயா பகுதியில் இடம்பெற்ற சம்பவம் மிகவும் சோகமானது. அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களே மிகவும் பாதுகாப்பற்ற ஓரிடத்தை நீராடுவதற்காகத் தெரிந்தெடுத்துள்ளனர். அங்கிருந்த பெரியவர்கள் தமது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறியுள்ளனர். இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, ஐவரைப் பாதுகாப்பாக மீட்க முடிந்தது.



நாட்டின் இளைய சமுதாயத்தினரையும் உழைக்கும் வர்க்கத்தினரையும் இவ்வாறு அகால மரணங்கள் மூலம் இழப்பது நாட்டிற்குப் பெரும் இழப்பாகும். எதிர்வரும் நாட்களில் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் பெற்றோர்களுக்கும் பெரியவர்களுக்கும், அறிமுகமில்லாத மற்றும் பழக்கமில்லாத நீர்நிலைகளில் நீராடுவதைத் தவிருங்கள். தற்போது நாடு முழுவதும் உள்ள குளங்கள், ஆறுகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் மக்களின் பாதுகாப்பிற்காக 400-இற்கும் மேற்பட்ட அனுபவம் வாய்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


எனவே, பாதுகாப்பான இடங்களை மாத்திரமே நீராடுவதற்குத் தெரிவு செய்யுங்கள். ஆபத்தான இடங்கள் குறித்து பொலிஸாரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள எச்சரிக்கைப் பலகைகள் மற்றும் கொடிகளை அவதானித்து அதற்கேற்பச் செயல்படுங்கள். பாதுகாப்பு என்பது பொலிஸாரின் அல்லது அரசாங்கத்தின் பொறுப்பு மாத்திரமல்ல, இது ஒவ்வொருவரதும் சமூகப் பொறுப்பாகும். கிராம மட்டத்திலான சிவில் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் நலன்புரிச் சங்கங்கள் ஒன்றிணைந்து இவ்வாறான அனர்த்தங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.

Zameera

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாரியளவில் சரிவு


 சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 10 சதவீதத்திற்கும் அதிகமான பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஜூன் மாத விநியோகத்திற்கான பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 10.42 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து, ஒரு பீப்பாய் 89.03 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.


அதேவேளை, மே மாத விநியோகத்திற்கான வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெயின் விலை 11.11 சதவீதத்தால் சரிவடைந்து, ஒரு பீப்பாய் 84.17 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.


முக்கியமான இக்கடல்வழிப் பாதை மீண்டும் முழுமையாகச் செயற்படத் தொடங்கியுள்ளமை சந்தை நம்பிக்கையை மேம்படுத்தியுள்ளதுடன், சமீபத்திய தளம்பல் நிலையின் பின்னர் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை இது சீர்செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Zameera

மத்திய கிழக்கு மோதல்களால் ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் வறுமைக்குள் விழும் அபாயத்தில் 8.8 மில்லியன் மக்கள் - ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம்


 (நா.தனுஜா)


அண்மையில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட இராணுவ மோதல்களின் விளைவாக ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்கள் கடுமையான சமூக மற்றும் பொருளாதார ரீதியான அழுத்தங்களுக்கு முகங்கொடுத்துவருகின்றன. குறிப்பாக 8.8 மில்லியன் மக்கள் வறுமையால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதுடன், 97 பில்லியன் டொலர் - 299 பில்லியன் டொலர் வரையான உற்பத்தி இழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடாத்திய கூட்டுத்தாக்குதலை அடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்த மோதல்களின் விளைவாக ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியம் முகங்கொடுத்திருக்கும் பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அமைப்பான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:


அண்மையில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட இராணுவ மோதல்களின் விளைவாக ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்கள் கடுமையான சமூக மற்றும் பொருளாதார ரீதியான அழுத்தங்களுக்கு முகங்கொடுத்துவருகின்றன. ஒரு தற்காலிக போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ள போதிலும் எரிபொருள், வர்த்தகம் மற்றும் தொழிலாளர் சந்தைகளில் தொடர்ந்து நிலவும் தளம்பல்களால் வருமானம், வேலைவாய்ப்பு மற்றும் சமூகப்பாதுகாப்பு என்பன பெருமளவுக்கு சிதைவடைந்து வருகின்றன.



இந்நெருக்கடியினால் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் சுமார் 8.8 மில்லியன் மக்கள் வறுமையால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதுடன் குறிப்பாக பெண்கள், குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் சிறு வணிக உரிமையாளர்கள் ஆகியோர் வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர். அதேபோன்று மத்திய கிழக்கு மோதல்களால் ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் 97 பில்லியன் டொலர் - 299 பில்லியன் டொலர் வரையான உற்பத்தி இழப்புக்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதுடன், இது பிராந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3 - 0.8 சதவீதத்துக்குச் சமமானதாகும்.


எரிபொருள் மற்றும் சரக்குக்கப்பல் கட்டண உயர்வு என்பன மத்திய கிழக்கு மோதல்களால் ஏற்பட்ட உடனடிப் பாதிப்பாகக் காணப்படுகிறது. ஹோர்முஸ் நீரிணை ஊடாகக் கொண்டுசெல்லப்படும் மசகு எண்ணெய் மற்றும் திரவ எரிவாயு என்பவற்றில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவை ஆசிய சந்தைகளுக்கென ஒதுக்கப்படுவதனால், தற்போது அவற்றில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் போக்குவரத்து, மின்சாரம், உணவு மற்றும் உரம் ஆகியவற்றின் கட்டணங்கள் மற்றும் விலைகளில் உடனடியாகப் பிரதிபலிக்கிறது.  


தெற்காசியப் பிராந்தியத்தில் வருமானம் மற்றும் விலைகள் மீதான தாக்கங்கள் உயர்வாக இருப்பதனாலும், கொள்கை ரீதியிலான போதிய பாதுகாப்பு இல்லாததனாலும் மத்திய கிழக்கு நெருக்கடியினால் ஏற்பட்ட இழப்புக்கள் உயர்வாக உள்ளன. இருப்பினும் ஒப்பீட்டளவில் நோக்குகையில் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பின்னடைவுகளே பதிவாகியுள்ளன என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Zameera

பிள்ளையான் வெலிசர கடற்படை முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளமை முற்றிலும் தவறானது - சாகர காரியவசம்

(இராஜதுரை ஹஷான்)

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் தற்போது வெலிசர கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இது முற்றிலும் தவறானது. கிழக்கு மாகாணத்தில் அரசியல் செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்வதற்காக ஒரு தரப்பின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றுகிறது. விடுதலை புலிகள் அமைப்பை முற்றாக அழிப்பதற்கு இராணுவத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான் தேசிய மட்டத்தில் கௌரவிக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனநாயகத்தை குழித் தோண்டி புதைக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. அரசாங்கத்தின்  தன்னிச்சையான மற்றும் சர்வாதிகார செயற்பாடுகளினால் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது.இதுவரையில் ஆட்சியில் இருந்த எந்தவொரு ஜனாதிபதியும் இவ்வாறு செயற்படவில்லை.

பொலிஸ் திணைக்களம் முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.தேசிய மக்கள் சக்தியின் அரசியல் மேடைகளில் தேர்தல் பிரச்சாரம் செய்த நபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானியாகவும், பிறிதொருவர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறான நிலையில் விசாரணைகள் எவ்வாறு சுயாதீனமாக இடம்பெறும் என்ற சந்தேகம் காணப்படுகிறது.

30 வருடகால யுத்தம் பற்றி தற்போதைய இளைஞர்கள் அறியமாட்டார்கள். அதன் கொடுமையை நாங்கள் நன்கு அறிவோம். விடுதலை புலிகள் அமைப்பை முற்றாக அழிப்பதற்கு பிள்ளையான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். இராணுவத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்.

விடுதலை புலிகள் அமைப்பு பலவந்தமான வகையில் சிறுவர்களை தமது போராட்டத்துக்கு இணைத்துக் கொண்டது. பிள்ளையானும் சிறுவர் போராளியாக  புலிகள் அமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டார். 1991 முதல் 2004 ஆம் ஆண்டு வரை புலிகள் அமைப்பில் போராளியாக இருந்தார்.

விடுதலை புலிகள் அமைப்பின் செயற்பாடு நாட்டுக்கும்,நாட்டு மக்களுக்கும் ஒருபோதும் நன்மை பயக்காது என்பதை அறிந்த பிள்ளையான் ஜனநாயக பாதையை தெரிவு செய்து,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒன்றிணைந்து இலங்கை இராணுவத்தினருக்கு ஆதரவாக செயற்பட்டார். விடுதலை புலிகள் அமைப்பு குறித்து பல தகவல்களை பிள்ளையான் வழங்கினார்.

பிள்ளையான் வழங்கிய தகவல்களை அடிப்படையாக கொண்டே இறுதிக்கட்டத்தில் யுத்தம் வெற்றிக் கொள்ளப்பட்டது. இதனால் தான் சிங்கள கிராமங்களுக்கு சவப்பெட்டிகள் செல்வதும் தடுக்கப்பட்டது. ஆகவே பிள்ளையானின் சேவையை தேசிய மட்டத்தில் பாராட்டி, கௌரவித்து, அவரை பாதுகாக்க வேண்டும்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் விவகாரத்தில் 19 ஆண்டுகளுக்கு பின்னர்  பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். உப வேந்தர் காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் எவ்வாறு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்வது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் தற்போது வெலிசர கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இது முற்றிலும் தவறானது. கிழக்கு மாகாணத்தில் அரசியல் செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்வதற்காக ஒரு தரப்பின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றுகிறது. இதற்காக பிள்ளையான் பழிவாங்கப்படுகிறார். 

யுத்தத்தை வெற்றிக் கொள்வதற்கும், விடுதலைப் புலிகள் அமைப்பை அழிப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பிள்ளையானை பாதுகாக்க வேண்டும். அவருக்காக நாங்கள் முன்னிலையாவோம்.அவருக்காக குரல் கொடுப்போம் என்றார்.


 

Friday, April 17, 2026

SHAHNI RAMEES

#BREAKING | ஹார்முஸ் நீரிணை திறப்பு -ஈரான் அறிவிப்பு!

 

ஈரான் தேசத்தின் கடல்வழிப் பாதை (Strait of Iran) தற்போது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், கப்பல் போக்குவரத்துப் பயன்பாட்டிற்கு அது தயாராக இருப்பதாகவும் ஈரான் அறிவித்துள்ளதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர்,


"ஈரான் கடற்பாதை (Strait of Iran) முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், முழுமையான போக்குவரத்திற்குத் தயாராக இருப்பதாகவும் ஈரான் தற்போது அறிவித்துள்ளது. மிக்க நன்றி!" எனக் குறிப்பிட்டுள்ளார். 

SHAHNI RAMEES

நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடைபெறவில்லை - அமைச்சர் விஜித ஹேரத்

 


நிலக்கரி இறக்குமதியின் போது எவ்வித ஊழலும் நடைபெறவில்லை

Zameera

எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்


 ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜ் சமர்ப்பித்த பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.Travel Guides & Travelogues

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதம பொலிஸ் பரிசோதகர் புஷ்பகுமார மற்றும் சந்தேக நபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன ஆகியோரின் வாதங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம மனு நிராகரிப்பை அறிவித்தார். 

இதன்படி, சந்தேக நபரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நுவரெலியா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அரசுக்குச் சொந்தமான காணி ஒன்றின் அபிவிருத்தித் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கு அதன் உரிமையாளருக்குச் சாதகமான முறையில் செயற்பட்டதன் மூலம் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Zameera

அரசாங்கம் சட்ட அமுலாக்க நிறுவனங்களில் தலையிடுகிறது : சாகர காரியவசம் குற்றச்சாட்டு


 (இணையத்தள செய்திப் பிரிவு )


நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மீது நேரடி மற்றும் கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்கும் நிலை உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.


பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அனைத்து இலங்கை மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், ஒரு ஜனநாயக நாட்டின் அடிப்படைத் தூணான தனிமனித சுதந்திரம் மற்றும் பிரஜைகளின் உரிமைகள் இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்


அவர் மேலும் தெரிவிக்கையில், 


தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, நீதித்துறை மற்றும் சிறைச்சாலைத் துறை போன்ற நிறுவனங்கள் காணப்படுகின்ற போதிலும், இன்று அவை அரசாங்கத்தினால் மிக மோசமான முறையில் கையாளப்படுகின்றன. 


குறிப்பாக, பொலிஸ் மா அதிபர் அரசாங்கத்தின் விருப்பத்திற்கு இணங்க செயற்படுவதாகவும், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஓய்வுபெற்ற மற்றும் ஆளுங்கட்சியின் அரசியல் மேடைகளில் இருந்த ஒரு அதிகாரியின் கீழ் கொண்டுவரப்பட்டு எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. 



அதேபோன்று, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், அவர் எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்வதற்காக சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 


சிறைச்சாலைத் துறையிலும் அரசாங்கம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகத் தெரிவித்த சாகர காரியவசம், எவ்வித அரசியல் சார்புமின்றி நேர்மையாகச் செயற்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய சட்டவிரோதமான முறையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. 


இதற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனித உரிமை வழக்கின் மூலம், அரசாங்கத்தின் நடவடிக்கை தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது என்பது உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். நீதி அமைச்சின் செயலாளராக அரசாங்கத்திற்கு நெருக்கமானவர் நியமிக்கப்பட்டுள்ளமை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிட முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தல். 


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கைது செய்யப்பட்ட விவகாரமானது தெளிவான அரசியல் பழிவாங்கல் எனத் தெரிவித்த சாகர காரியவசம், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர இராணுவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஒருவரை அரசாங்கம் இன்று தவறாகச் சித்தரிக்கிறது. 


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கர்தினால் அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக பிள்ளையான் கைது செய்யப்பட்டதாக அரசாங்கத் தரப்பினர் மேடைகளிலும் நாடாளுமன்றத்திலும் கூறினாலும், நீதிமன்ற அறிக்கைகளின்படி அவருக்கும் ஈஸ்டர் தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது அம்பலமாகியுள்ளது. 

19 வருடங்களுக்கு முந்தைய சம்பவமொன்றை அடிப்படையாகக் கொண்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை மற்றும் தற்போது கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டத்தை அவமதிக்கும் செயல். எனவே, நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை நேசிக்கும் மக்கள், கட்சி பேதங்களைக் கடந்து அரசாங்கத்தின் இத்தகைய ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை அவதானிக்க வேண்டும் என்றார். 

Zameera

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பிணையில் விடுவிப்பு


 ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோரைப் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.


இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகளின் வாதங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.



சந்தேக நபர்கள் ஒவ்வொருவரும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்கள் இருவருக்கும் வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


வழக்கை மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றகரமான நிலையை அறிவிக்குமாறும் அறிவுறுத்தினார்.


இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக, 6 ஊழியர்களைப் பணியில் அமர்த்தி, அவர்களை முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட ஊழியர் குழாமில் இணைத்ததன் மூலம் கூட்டுத்தாபனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Zameera

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை


 (இணையத்தள செய்தி பிரிவு) 

நாட்டின் தெற்கு மாகாணத்திலும் கொழும்பு, களுத்துறை, மொனராகலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அபாயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் 'அம்பர்' எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளிக்கிழமை (17) நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, தெற்கு மாகாணத்திலும் கொழும்பு, களுத்துறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சில இடங்களில் பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Zameera

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா!


 நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். 


ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் இவர்கள் தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர். 


நிலக்கரி இறக்குமதி மற்றும் அது சார்ந்த மின்சார உற்பத்தியின் போது ஏதேனும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இன்று (17) விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. 


இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் பக்கச்சார்பற்ற முறையிலும் சுதந்திரமாகவும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இவர்கள் பதவிலகியுள்ளனர்.

Zameera

எரிபொருள் விலை விரைவில் குறையும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ


 வளைகுடா நாடுகளுக்கிடையில் நிலவும் போர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் மிக விரைவில் எரிபொருள் விலை குறைக்கப்படுமென சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

‘‘ஏனைய நாடுகளில் எரிபொருளுக்கான வரிசை தோற்றம் பெற்றுள்ள நிலையில், வாரத்துக்கு 23 முறைகள் எரிபொருள் விலையை அதிகரிக்கும் சந்தர்ப்பத்திலும் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய வகையிலேயே முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்.

தொடர்ச்சியான எரிபொருள் விநியோகம் மற்றும் மின்சார விநியோகத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். உலக சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களுக்கமைய எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை மேற்கொள்ள நேரிடும்.

அதற்காக விலையேற்றத்துக்கு ஏற்ப மொத்தமாக விலை அதிகரிப்பை மேற்கொள்வதில்லை. அதிலொரு பகுதியை திறைசேரி பொறுப்பேற்பதுடன் இன்னுமொரு பகுதிக்கான செலவை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பொறுப்பேற்றுக்கொண்டே ஓரளவு விலை அதிகரிப்புக்கான சுமையை மக்கள் மீது சுமத்த நேர்ந்துள்ளது.

வளைகுடா நாடுகளுக்கிடையில் நிலவும் போர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதும் மிக விரைவில் எரிபொருள் விலையை குறைப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

மக்கள் தமது வர்த்தகத் துறையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் கடமைகளிலும் புதிய எதிர்பார்ப்புகளுடன் முன்னோக்கிச் செல்வதே சகலரதும் விருப்பமும் குறிக்கோளுமாகும். அந்த எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக்கிக் கொள்வதற்கான சூழல் உருவாகியுள்ளது என்பதை சகலரும் அறிவார்கள்.

கடந்த ஒன்றரை வருட காலப் பகுதியில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை அடைந்து வருகிறது என்பதை சகலரும் அறிவார்கள். அதேபோன்று உலக மட்டத்தில் இலங்கைக்கு இருக்கும் வரவேற்பு அதிகரித்துள்ளது. டிட்வா புயலுக்கும் தற்போது நிலவும் போர் நிலைமையிலும் நாடு என்ற அடிப்படையில் ஸ்திரமாக எதிர்கொண்டு வருகிறோம். இந்த நெருக்கடிகளிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறோம்.

எனவே, மலர்ந்துள்ள இந்தப் புத்தாண்டு எதிர்பார்ப்புகளை வெற்றிக்கொள்வதற்கான வருடமாக அமையும் என்பது உறுதி. கடந்த ஒன்றரை வருடங்களில் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு இன்னும் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கும் வருடமாக இது அமையும்.

எதிர்க்கட்சியினருக்கு ஜனநாயகத்தை கற்பிக்க வேண்டும். ஒன்றரை வருடத்துக்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஐந்து வருடங்களுக்கு ஆட்சி பலத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளனர். இந்த ஐந்து வருடங்களுக்குள் நாட்டை ஸ்திரப்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே ஜனாதிபதி உள்ளிட்ட இந்த அரசாங்கத்தினதும் பொறுப்பாகும். அதனை நாங்கள் செய்து கொண்டே இருக்கிறோம்.

ஆனால், எதிர்க்கட்சியினர் ஒவ்வொரு மாதமும் போலி எதிர்பார்ப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அதனை தவிர அவர்களுக்கு செய்வதற்கு வேறு ஏதும் இல்லை. குறைந்தது கிராமங்களுக்கு ஏதாவது சேவை செய்துகொடுத்தார்கள் என்றால் அவர்களுக்கு சாதகமாக அமையும். ஆதரவாளர்களை தக்கவைத்து கொள்வதற்காக அவர்கள் கூறும் விடயங்கள் பயனளிக்காது’’ என்றார்.