
Tuesday, April 29, 2025

தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் (29) நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரை தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்கள் இன்று தங்கள் பணியிடங்களில் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

பொய்யான தகவல்களை பரப்பிய 6 சமூகவலைத்தள கணக்குகள் தொடர்பாக விசாரிக்க CID யினருக்கு நீதிமன்றம் அனுமதி
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சஷி மகேந்திரன் அவர்களுக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் பொய்யான தகவல்களைப் பரப்பிய ஆறு சமூக ஊடக கணக்குகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணைய கண்காணிப்பு மற்றும் புலனாய்வு பிரிவுக்கு கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி இன்று (28) அனுமதி வழங்கியுள்ளார்.
நீதிபதி பாலேந்திரன் சஷி மகேந்திரன் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக, குறித்த சமூக ஊடக கணக்குகளுக்கு ஒன்பது கேள்விகளை அனுப்பி, அதற்கு தொடர்புடைய பதில்களைப் பெறுவதற்கு அனுமதி வழங்குமாறு புலனாய்வு பிரிவு கோரியிருந்தது.
இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாட்டில் பரவலாகப் பேசப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, பிள்ளையான் உள்ளிட்டவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் தனக்கும் அவதூறு விளைவிக்கும் வகையில், குறித்த சமூக ஊடக கணக்குகளில் பொய்யான தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளதாக நீதிபதி தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இதற்காக தனது உத்தியோகபூர்வ உடையுடன் கூடிய புகைப்படங்களும் பதிவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Monday, April 28, 2025

நுவரெலியாவில் கடும் மழை: வெள்ளப்பெருக்கு மற்றும் பாதிப்புகள்
நுவரெலியாவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியான பிற்பகல் நேரத்தில் கன மழை பெய்து வருகின்றது.
இன்று (28) திங்கட்கிழமை பெய்த மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பல்வேறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக நுவரெலியாவில் அதிகமான தாழ்நிலப் பகுதிகள் முற்றாக மூழ்கியுள்ளன.
அத்துடன், பிரதான வீதிகள் சில மழை நீரினால் நிரம்பியுள்ளதுடன், நுவரெலியா பதுளை பிரதான வீதியில் சிபெட்கோ எரிபொருள் நிலையத்திற்கு முன்பகுதி வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து சில மணித்தியாலயத்திற்கு மேல் முற்றாக துண்டிக்கப்பட்டது.
இதேவேளை நுவரெலியா - உடப்புசல்லாவ நுவரெலியா ஹட்டன் பிரதான வீதிகளின் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டது.
மேலும் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெஸ்போட் , கிளாரண்டன் ,கிரிமிட்டி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழைக்காரணமாக வெள்ளம் ஏற்பட்டதால், பிரதான வீதிகளும் அதிக குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன
இதில் குறிப்பாக அதிக மழை வீழ்ச்சி காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதில் நுவரெலியா – கந்தபளை பகுதிகளில் கடும் மழை காரணமாக பெருமளவான மரக்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மேலும் நுவரெலியா பிரதான நகரில் வர்த்தக நிலையங்களில் வெள்ள நீர் புகுந்ததால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது ,
அத்தோடு, தோட்டங்களை அண்டிய வீடுகளுக்கும் வெள்ள நீர் புகுந்ததையும் காணக்கூடியதாக உள்ளது பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் பாரிய மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.

A/L Fail ஆகிட்டீங்களா? கவலைய விடுங்க | அரசாங்கத்தின் புதிய திட்டம் வருகிறது.
உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையாக பரீட்சை எழுதத் தயாராகி வருவதாகவும், சில மாணவர்களுக்கு அடுத்து என்ன செய்வது என்பது குறித்து எந்த நோக்கமும் இல்லை என்றாலும், தற்போதைய அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களுக்கும் முறையான வழிகாட்டுதலுடன் கூடிய ஒரு திட்டம் 2026 இல் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ, ஹூங்கம மற்றும் தங்காலை பகுதிகளில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் எழுபத்தைந்து ஆண்டுகளாக ஊழல் மற்றும் குற்றங்களுக்கு இருந்த அரசியல் பாதுகாப்பை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளதாக கூறிய பிரதமர் அந்த மக்கள் விரோத ஊழல் மற்றும் குற்றங்களுக்கு பாதுகாப்பு இல்லாததால், பயந்து குழப்பமடைந்த அரச மற்றும் பாதுகாப்பு சேவையில் உள்ளவர்கள், அரசியல் ஆசீர்வாதத்துடன் இவை அனைத்தையும் தொடர்ந்ததாகவும் கூறினார்.

ஆசியைக்கு துடப்பத்தினால் அடித்த ஆசியருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.
துடைப்பக் கைப்பிடி மற்றும் குடையால் தாக்கி ஆசிரியை ஒருவரை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு ஆசிரியையை குற்றவாளி எனக் கண்டறிந்த அனுராதபுரம் மேலதிக நீதவான் திருமதி. பி.கே. சமரசிங்க குறித்த ஆசிரியைக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஆசிரியருக்கு ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனை விதித்தார். பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.
மேலும், முறைப்பாடு செய்த ஆசிரியைக்கு முப்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு பிரதிவாதியான ஆசிரியைக்கு நீதவான் உத்தரவிட்டார்.
மிஹிந்தலை, கன்னடிய, கல்வல சந்திப்பில் வசிக்கும் ஒரு பெண் ஆசிரியரை துடைப்பக் கைப்பிடி மற்றும் குடையால் தாக்கி காயங்களை ஏற்படுத்தியதாக 54 வயதான ஆசிரியைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
2021 செப்டம்பர் 30, மிஹிந்தலை, கன்னட்டியவைச் சேர்ந்த 59 வயதான ஆசிரியையின் வீட்டுக்குள் நுழைந்து, இந்த தாக்குதலை ஆசிரியையை மேற்கொண்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியையால் தாக்கப்பட்ட ஆசிரியை, மிஹிந்தலை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக நீதிமன்ற விசாரணையின் போது தெரியவந்தது.
தனது தோட்டத்தில் உள்ள ஒரு வெறிச்சோடிய கிணற்றில் இரண்டு காட்டுப்பன்றிகள் விழுந்து இறந்து விட்டதாகவும், அது துர்நாற்றம் வீசுவதாகவும் கூறியதற்காக முறைப்பாட்டாளரான ஆசிரியை திட்டிய பின்னர், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை இந்த தாக்குதலை நடத்தியதாகவும் நீதிமன்ற விசாரணையின் போது தெரியவந்தது.

பாகிஸ்தானின் மிக முக்கியமான 16 YouTube Channel களுக்கு இந்தியாவில் தடை - ஏன்?
பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்து இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் பஹல்காமிம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில், இந்திய இராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பாகிஸ்தான் ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, ஜியோ நியூஸ், சமா டிவி, போல் நியூஸ், ஜிஎன்என் போன்ற பிரபல செய்தி நிறுவனங்களின் யூடியூப் சேனல்களின் ஒளிபரப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இர்ஷாத் பாட்டி, அஸ்மா ஷிராசி, உமர் சீமா மற்றும் முனீப் ஃபரூக் போன்ற பத்திரிகையாளர்களின் யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த 16 யூடியூப் சேனல்களின் மொத்த பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 6.30 கோடி ஆகும்.
இந்த சேனல்களை இந்திய பயனர்கள் அணுகினால், “தேசிய பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கு தொடர்பான அரசாங்கத்தின் உத்தரவின் காரணமாக இந்த உள்ளடக்கம் தற்போது இந்த நாட்டில் கிடைக்கவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக செய்வார்கள் | சுமந்திரனுக்கு ஏற்பட்டுள்ள அச்சம்.
மத்தியிலே ஆளும் தரப்பிற்கு வவுனியா வடக்கு பிதேச சபையின் ஆட்சி அதிகாரம் போகுமாக இருந்தால் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக நடைமுறைப்படுத்துவார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா புளியங்குளத்தில் இன்று (27) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியா வடக்கில் போருக்கு பின்னர் கடும் வேகத்தில் குடியேற்ற செயற்பாடுகள் நடைபெறுகின்றது. வவுனியா வடக்கு பிரதேச சபையில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுகட்சி ஆட்சியமைப்பதற்காக நாம் பல்வேறு செயற்பாடுகளை எடுத்திருந்தோம்.
இன்று நிலைமை மாறியிருக்கிறது. நாட்டிலே ஆட்சி செய்யும் ஒரு அமைப்பு இந்த பிரதேச சபையை கைப்பற்றுவதற்கு போட்டியிடுகின்றது. எனவே மத்தியிலே ஆளும் தரப்பிற்கு இந்த பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் போகுமாக இருந்தால் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக நடைமுறைப்படுத்துவார்கள்.
பாராளுமன்றில் எங்களுக்கு அடுத்தபடியாக இருந்த ஒரு கட்சி இன்று தேர்தல் மூலம் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஊழல், துஷ்பிரோயகம் என்று மாறிமாறி ஆட்சி செய்த தரப்பின் மீது மக்களுக்கு வெறுப்பு இருந்தது. எனவே அவர் 42 சதவீதம் வாக்குகளை எடுத்திருந்தாலும், மாற்றம் வருகின்றது என்ற எதிர்பார்ப்பிலே அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்தை மக்கள் கொடுத்தனர்.
அந்தவகையில் சாணக்கியனின் தனி முயற்சியினால் கிழக்கு தப்பிவிட்டது. துரதிஷ்டவசமாக வடக்கிலும் அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் எப்படியான முடிவு பாராளுமன்ற தேர்தலில் வந்திருந்தாலும் அங்கு மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பது தமிழரசுக் கட்சியே. ஒரு குடியும் மூழ்கி போகவில்லை. குறைந்திருக்கிறது தான். ஆனாலும் நாங்கள் தான் இன்றும் பிரதான தமிழ்க் கட்சி. அதில் மாற்றம் இல்லை.
தேர்தல் முறைமையினால் ஏற்ப்பட்ட பிரதிபலனை வைத்து தமிழ் மக்களின் ஆணையும் எங்களுக்குத் தான் இருக்கிறது. ஆகவே தமிழ்த் தேசிய பிரச்சனையை தாங்கள் பார்த்து கொள்வோம் என்று கூறும் அவர்கள் அதிகாரப் பகிர்வில் நம்பிக்கை இல்லாதவர்கள். வட- கிழக்கு இணைப்பையும் பிரித்தவர்கள். அவர்கள் தமிழர்களின் ஆணை எங்களிடம் தான் இருக்கிறது என்று சொன்னால் அதைவிட அபத்தம் வேறு எதுவுமில்லை. அதைவிட மோசமான ஆபத்து எதுவும் கிடையாது. அந்த ஆபத்தை உடனடியாக நீக்க வேண்டும்.
எனவே பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னரான முதலாவது சந்தர்ப்பம் இந்த உள்ளூராட்சி தேர்தல். இதில் தான் அதனை புறந்தள்ள முடியும். எமக்கு ஒற்றை ஆட்சியிலே இணக்கமில்லை. முறையான அதிகாரப் பகிர்வு வழங்கப்படவேண்டும். என்ற கோரிக்கைகளின் உறுதியான மக்கள் தீர்ப்பு தேர்தல்களில் இருந்தே வருகின்றது.
எனவே, கடந்த தேர்தல் மயக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அதனை களையக்கூடிய முதலாவது சந்தர்ப்பமாக இது உள்ளது. உள்ளூரின் ஆட்சியை கூட நாங்கள் தக்கவைக்க முடியாவிட்டால் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது என்று பரப்புரை செய்யக்கூடும். எனவே நாட்டுக்கும் உலகுக்கும் தெளிவான ஒரு செய்தியை சொல்லக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இது. அதனை நாம் நழுவ விடக்கூடாது.
எங்களுக்கு தேவை தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசை அப்படியேதான் இருக்கிறது. அதில் மாற்றம் இல்லை. அதை சொல்லுவது எப்படி. வாக்குகளை சிதறடித்துவிட்டு சொல்ல முடியாது.
எனவே அதனை ஒருமுகப்படுத்தி சமஸ்டி என்ற ஒரே நிலைப்பாட்டில் இருக்கும் தமிழரசுகட்சிக்கு அந்த வாக்குகளை கொடுத்தால் எங்கள் அரசியல் நிலைப்பாட்டில் ஒரு உறுதி இருக்கும். எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்ற கனமான செய்தி சொல்லப்படும். அது கேட்கப்படும். அதுவே பலமானதாக இருக்கும் என்றார்.
-வவுனியா தீபன்-

குண்டுவெடிப்பு தொடர்பில் - உயர்நீதிமன்றில் சாட்சியமளித்தார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி
2008ம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
2008 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் திகதி பொரலஸ்கமுவ பகுதியில் அப்போதைய விவசாய அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை கொல்லும் நோக்கில் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு உதவியதாக இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதியரசர் ஆர்.எஸ்.எஸ். சப்புவிட முன் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
அந்த நேரத்தில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் சாட்சியாக ஆஜரானார்.
அதன்படி, வழக்கில் முதல் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சாட்சியத்தைப் பதிவு செய்த பின்னர் அவரை விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

சிமன்ட் தொழிற்சாலைக்குள் அழிக்கப்படும் ஹெரோயின் போதை - எப்படி?
பொலிஸ் சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட, 494 கிலோ 48 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருட்கள் இன்று (28) அழிக்கப்படவுள்ளன.
புத்தளம், பாலவி பகுதியில் உள்ள INSEE சிமென்ட் நிறுவனத்திற்கு சொந்தமான எரியூட்டியில் இவைகளை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்திட்சகருமான புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.
அதற்கமைய, இன்று (28) காலை குறித்த போதைப்பொருட்கள் புத்தளம், பாலவி பகுதிக்கு அதியுயர் பாதுகாப்பின் கீழ் கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.