
Friday, April 24, 2026

நிதி அமைச்சுடன் தொடர்புடைய 2.5 மில்லியன் டொலர் சைபர் மோசடி குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
நிதி அமைச்சின் ஊடாக சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (24) முற்பகல் கண்டி மல்வத்து மகா விகாரை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் மேலும் கூறுகையில்,
இந்த விடயம் தொடர்பாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் தொடர்புடைய நபர்களுக்கு எதிராகத் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதற்கான சர்வதேச ஒத்துழைப்புகளும் இலங்கைக்கு கிடைத்துள்ளன.
ஒரு அரசாங்கம் என்ற ரீதியில், இந்தச் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தயாராக உள்ளோம்.
அதேவேளை, தமக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டு வரப்படவுள்ளதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார்.
எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரப் பார்க்கிறார்கள்.
அது பாராளுமன்றத்திற்கு வரும் வரை நான் காத்திருக்கிறேன். ஏனென்றால், அப்போதுதான் அவற்றுக்கு பதிலளிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
அவர்கள் பல கதைகளைச் சொல்கிறார்கள். மக்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சி இருப்பது மிகவும் அவசியம். அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும், மாற்று அரசியல் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் முக்கியமானது.
ஆனால், தற்போதுள்ள எதிர்க்கட்சி அதைத்தான் செய்கிறதா என்பதை நாமும் சிந்திக்க வேண்டும், மக்களும் சிந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வெளியில் தெரியும் பழைய சிதைவுகள் | கடும் வறட்சி மலையகத்தின் மிக முக்கிய நீர் தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் அமைந்துள்ள நீரேந்து பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியான வானிலை காரணமாக, காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக அந்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் இன்று (24) காலை 6 மணி நிலவரப்படி, நீர்மட்டமானது வான் மட்டத்திலிருந்து 50 அடி 11 அங்குலம் வரை குறைவடைந்துள்ளது.
எனினும், நேற்று (23) இப்பகுதிக்கு 12 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமானது வான் மட்டத்திலிருந்து 40 அடி 10 அங்குலம் வரை குறைவடைந்துள்ளது.
இந்த நீர்த்தேக்கப் பகுதிக்கு நேற்று 14 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதாகப் பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
இந்த இரண்டு நீர்த்தேக்கங்களினதும் நீர்மட்டம் குறைந்துள்ளதால், நீர்த்தேக்கங்கள் நிர்மாணிக்கப்பட்ட போது நீரில் மூழ்கியிருந்த பழைய சிதைவுகள் மற்றும் பல தீவுகள் தற்போது மீண்டும் தென்படத் தொடங்கியுள்ளன.
விமலசுரேந்திர, லக்ஷபான, புதிய லக்ஷபான, கெனியன் மற்றும் பொல்பிட்டிய ஆகிய நீர்மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான நீர் இந்த நீர்த்தேக்கங்களிலிருந்தே பெற்றுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன? - மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷிதவின் வழக்கு பிற்போடப்பட்டது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை ஜூன் மாதம் 10ம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இந்த வழக்கு இன்று (24) அழைக்கப்பட்டது.
இதன்போது, அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு இணையாக மற்றுமொரு வழக்கு இலக்கம் 08 மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அந்த வழக்கிற்காக திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய இந்த வழக்கிற்கும் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும் என்றும் அரச சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அறிவிப்பதற்காக திகதியொன்றை வழங்குமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி, இந்த வழக்கினை ஜூன் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, அன்றைய தினம் இது தொடர்பான முன்னேற்றத்தை அறிவிக்குமாறும் கட்டளையிட்டார்.
2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கும் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், ஈட்டிய முறையை வெளிப்படுத்த முடியாத 59 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பணத்தை மூன்று தனியார் வங்கிகளில் நிலையான வைப்பு கணக்குகளில் வைப்பிலிட்டதன் மூலம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாகக் கூறி, சட்டமா அதிபரால் பிரதிவாதிகளுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை ShortNews ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.

மாணவர்களுக்கான அவசர அறிவிப்பு | A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு
2026ம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று (24) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்ளை தற்போது நிகழ்நிலை ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விண்ணப்பிக்க முடியாது என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரலுக்கான காலப்பகுதியானது எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனவே இதுவரை 2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்பிக்காத பரீட்சார்த்திகள் உடனடியாக அதனை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்
இன்று (24) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தென் மாகாணம் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நீடிப்பு
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான தற்போதைய போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்க இரு தரப்பினரும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைளின் பின்னர் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய மற்றும் லெபனான் தூதுவர்களுக்கு இடையே நேற்றைய தினம் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய 10 நாள் போர் நிறுத்தம், எதிர்வரும் திங்கட்கிழமை முடிவடையவிருந்தது.
இந்த புதிய இணக்கப்பாட்டின் மூலம் அதனை தொடர முடிந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

குவைட் விமான சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளன
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் குவைட் விமான சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளதாக குவைட் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசின் இந்த முடிவுக்கு இணங்க, குவைட்டின் தேசிய விமான சேவையான குவைட் எயார்வேஸ் மற்றும் தனியார் விமான சேவையான ஜசீரா எயார்வேஸ் ஆகியன தமது போக்குவரத்து நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கவுள்ளன.
பத்துக்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளுக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குவைட் அரசாங்க தகவல் தொடர்பு நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த குவைட் சர்வதேச விமான நிலையம் முழுமையாக திறக்கப்பட்டுள்ள நிலையில், விமான சேவைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Thursday, April 23, 2026

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் நாளையுடன் நிறைவு
இதற்கான விண்ணப்பங்ளை தற்போது நிகழ்நிலை ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் நாளை நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விண்ணப்பிக்க முடியாது என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரலுக்கான காலப்பகுதியானது எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனவே இதுவரை 2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்பிக்காதவர்கள் உடனடியாக அதனை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



