
Wednesday, December 6, 2023

ஆங்கில மொழிக் கல்விக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும்
50 களில் இருந்து சிங்களம் மட்டும் என்று கூறும் பொறிமுறைக்குள் இருந்து கொண்டு ஒரு நாடாக முன்னேற முடியாது. எனவே சிங்கள மொழி உள்ளடங்களாக பிற மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது போல் ஆங்கில மொழிக் கல்விக்கும் முன்னுரிமை வழங்க வேண்டிய நேரம் வந்துள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எமது நாட்டின் கல்விப் பரப்பில் புதிய மாற்றங்களை உள்வாங்கி கல்வியின் புதிய யுகத்திற்குள் நுழைய வேண்டும். 50 களில் இருந்து சிங்களம் மட்டும் என்று கூறும் பொறிமுறைக்குள் இருந்து கொண்டு ஒரு நாடாக முன்னேற முடியாது. நாமாகவே சுவர்களைக் கட்டிக்கொண்டு, எல்லைகளை வகுத்து, குறுகிய மனப்பாங்குடன் செயல்படும் போக்கில் ஒரு நாடாக உண்மையான சுபீட்சத்தை எட்ட முடியாது என்பதால்,சிங்கள மொழி உள்ளடங்களாக பிற மொழிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவது போலவே ஆங்கில மொழிக் கல்விக்கும் முன்னுரிமை வழங்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்றார்.
எனவே, நாட்டில் இருக்கும் 10,126 பாடசாலைகளிலும் ஆங்கில கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதேபோன்று தற்போது பாடசாலைகளில் 6ஆம் தரத்தில் இருந்து 13ஆம் தரம் வரை கற்பிக்கப்படும் தொழிநுட்ப கல்வியை 1ஆம் தரத்தில் இருந்து 13ஆம் தரம் வரைக்கும் விருத்தி செய்ய வேண்டும். அத்துடன் தொழிந்டப கல்வியை தாய் மொழியில் அல்லாமல் ஆங்கில மொழியிலேயே கற்பிக்க வேண்டும். அதன் மூலமே அதன் உண்மையான கல்வியை பெற்றுக்கொள்ள முடியும். அதேநேரம் நாட்டில் இருக்கும் அனைத்து பாடசாலைகளையும் ஸ்மாட் வசதி உள்ள பாடசாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னரும் பின்னரும் கல்வியில் இருந்து வெளியேறும் மாணவர்கள் தொழிற்பயிற்சி கல்வியை நாடினாலும்,தற்போது, அதன் தரம் குறைந்துள்ளது.உயர்கல்வி வாய்ப்புகளை வலுப்படுத்த வேண்டும். உயர் கல்விக்கான வாய்ப்புகளை இழந்தோர்களுக்கான வாய்ப்புகளையும் விரிவுபடுத்த வேண்டும் நாட்டில் 70 வீதமானவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்களுக்கும் உயர்கல்விக்கான உரிமை வழங்கப்பட வேண்டும்.
அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக அரசாங்கம் மீண்டுமொரு முறை சிந்திக்க வேண்டும். மனப்பாட கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தரம் 5, கல்வி பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர் தர பரீட்சைகளின் சில பாடங்கள் மனப்பாடம் செய்து விடை எழுத வேண்டி இருக்கிறது என்றார்.

இலங்கை அணியின் உயர்மட்ட ஆலோசகராக சனத் ஜயசூரிய
இலங்கை அணியின் உயர்மட்ட ஆலோசகராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் உரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், உயர் செயல்திறன் நிலைய ஆலோசகர் பதவி ஜயசூரியவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி அண்மையில் ஓய்வு பெற்ற நான்கு இளம் வீரர்களைக் கொண்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உப்புல் தரங்க தலைமையிலான புதிய தெரிவுக்குழுவில் சுழற்பந்து வீச்சாளர்களான தில்ருவான் பெரேரா, அஜந்த மெண்டிஸ் மற்றும் தரங்க பரணவிதான ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

’சட்டக் கல்வியை தமிழில் தொடர வேண்டும்’
யாழ்.பல்கலைக்கழக சட்ட பீட மாணவர்கள் தமிழ் மொழியில் சட்டக் கல்லூரியை தொடர்வதற்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தினார்
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆசிரியர்களின் நலன்களுக்காக தேசிய கல்வி நிறுவனத்தின் கிளை நிறுவனத்தை முல்லைத்தீவு மாங்குளத்தில் ஸ்தாபிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் கல்வியமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் சட்ட பீட மாணவர்கள் தமிழ்,ஆங்கிலம் மற்றும் சிங்களம் மொழியில் கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சட்ட பீட மாணவர்கள் தமிழ் மொழியில் சட்ட கல்வியை தொடர வாய்ப்பில்லை. தமது தாய்மொழியில் சட்ட கல்வியை கற்க எதிர்பார்க்கிறார்கள்.ஆகவே அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
1988 ஆம் ஆண்டு நான் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீடத்துக்கு தெரிவானேன்.அப்போதைய சூழ்நிலையால் என்னால் சட்ட கல்வியை தொடர முடியவில்லை.சட்டக்கல்வி வாய்ப்பு யாழ்.பல்கலைக்கழத்தில் இருந்திருந்தால் நானும் ஒரு சட்டத்தரணியாகியிருப்பேன்.ஆகவே தமிழ் மாணவர்கள் தமது தாய்மொழியில் சட்டத்தை கற்கும் வாய்ப்பை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மிக முக்கிய பல்கலைக்கழகமாக உள்ளது.யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வியற் துறையை 'பீடமாக ' உருவாக்குமாறு கடந்த ஆண்டும் வலியுறுத்தினேன்.ஆனால் இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
தேசிய கல்வி நிறுவகத்தின் கிளையை முல்லைத்தீவு மாங்குளத்தில் நிறுவுமாறு பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.தற்போதைய பொருளாதார சுமைகளுக்கு மத்தியில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளவர்கள் தமது துறைசார் நடவடிக்கைகளுக்காக தலைநகருக்கு வருவதால் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.ஆகவே இந்த கோரிக்கை தொடர்பில் கரிசனை கொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.
யாழ்.தீவக பாடசாலைகளில் சேவையாற்றும் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கடினமான முறையில் தான் சேவையில் ஈடுபடுகிறார்கள்.ஆகவே அவர்களுக்கு விசேட கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் என்றார்.
Tuesday, December 5, 2023

2024ல் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா தலங்களில் இலங்கையும் பதிவு
உலகின் முன்னணி பயணச் செய்தி ஆதாரமான Travel Off Path இன் அறிக்கையின்படி, 2024ல் அதிக வளர்ச்சி அடையும் முதல் ஐந்து நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.
“இலங்கைத் தீவு நாடானது அதன் கவர்ச்சியான இயல்பு, சூடான காலநிலை, வண்ணமயமான கலாச்சாரம் மற்றும் அற்புதமான உணவு ஆகியவற்றால் உலகெங்கிலும் உள்ள பயணிகளை நீண்ட காலமாக கவர்ந்துள்ளது என இலங்கையை விவரிக்கும் வகையில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துனிசியா, மெக்சிகோ, மொராக்கோ மற்றும் டொமினிகன் குடியரசு ஆகிய நாடுகளுடன் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

ஆதிவாசிகளின் கல்வி பிரச்சினைக்கு 24 மணி நேரத்தில் தீர்வு கொடுத்த செந்தில் தொண்டமான்!
மட்டக்களப்பு வாகரை ஆதிவாசிகள் கிராமத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆதிவாசிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
வாகரையில் உள்ள ஆதிவாசிகள் தங்களுடைய கிராமத்தில் பல வருட காலமாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்தனர்.
தங்களுடைய கிராமத்தில் உள்ள பாடசாலைகளில் கணித, விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது ஆதலால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு தள்ளப்படுகின்றனர் எனவும், கிராமத்திற்கான பாதைகள் கடும் மோசமான நிலையில் உள்ளதாகவும், வைத்தியசாலைக்கு உதவியாளர்களை நியமித்து தருமாறும் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆதிவாசிகளின் கோரிக்கையின் பிரகாரம் 24 மணித்தியாலத்தில் மாகாண கல்வி அமைச்சின் ஊடாக 02 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதுடன், பாதை புனரமைப்பதற்கான நடவடிக்கையும், வைத்தியசாலைக்கு உதவியாளர் நியமிப்பதற்கும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளுநரால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.