
Tuesday, April 28, 2026

திறைசேரி நிதி திருட்டு விவகாரம்: அரசாங்க நிதி குழு இன்று கூடுகிறது
இந்தக் கலந்துரையாடலின் போது, நிதி அமைச்சின் செயலாளரை குழுவின் முன்னிலையில் அழைப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக அரசாங்க நிதி பற்றிய குழு முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்
2025 உயர்தரப் பெறுபேறுகளின்படி, 176,527 மாணவர்கள் (62.64%) பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
கடந்த மார்ச் 31 ஆம் திகதி இரவு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்ட நிலையில், இம்முறை பரீட்சைக்கு 281,810 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
இதற்கிடையில், 111 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
2025 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 30,000-க்கும் மேற்பட்டோர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் 'A' சித்தியைப் பெற்ற பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை 7,477 ஆகும், இது 3.38 சதவீதமாகும்.
மேலும், 823 தனியார் பரீட்சார்த்திகளும் அனைத்துப் பாடங்களிலும் 'A' சித்தியைப் பெற்றுள்ளனர்.

உள்நாட்டு இறைவரித் திணைக்கள திறன் மேம்பாடு குறித்து கலந்துரையாடல்
வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள வரிகளை அறவிடுதல் உள்ளிட்ட உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் குறித்தும், 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் அத்திணைக்களம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
இந்த இலக்குகளை அடைந்துகொள்வதில் நிறுவனத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதன்படி, தேசிய e-invoicing முறையை அறிமுகப்படுத்தும் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன், முழுமையான திட்டத்தை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தினார்.

இன்றைய வானிலை
தென் மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அநுராதபுரம், குருணாகல் மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
Monday, April 27, 2026

Rebuilding Sri Lanka நிதியத்தின் பணம் பாதுகாப்பாக உள்ளது
'Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு கிடைத்த பணம் திறைசேரியில் பாதுகாப்பாக இருப்பதாக தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
குறித்த நிதியம் தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விசேட விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு 9,583 மில்லியன் ரூபாய் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதில் 49 நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் இலங்கையர்களும் வெளிநாட்டவர்களும் தமது பங்களிப்புகளை வழங்கியுள்ளதாக கலாநிதி அனில் ஜயந்த மேலும் தெரிவித்தார்.
'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் கடந்த டிசம்பர் மாதம் 500 பில்லியன் ரூபாய் மேலதிக ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டது.
இதற்காக 'Rebuilding Sri Lanka' நிதியத்திலுள்ள 10 பில்லியன் ரூபாய் பணத்தையும் பயன்படுத்த முடியும் எனவும், ஏனைய 490 பில்லியன் ரூபாயை மாத்திரமே அரசாங்கம் மேலதிகமாகப் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த நிதியம் தொடர்பில் சில தரப்பினர் முன்வைக்கும் கருத்துக்கள் முற்றிலும் உண்மையற்றவை மற்றும் அடிப்படையற்றவை என அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே இந்த நிதி பயன்படுத்தப்படும் என தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த மேலும் தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல்: பிக்குகளை வழிநடத்திய பிரதான சந்தேகநபருக்கு தடுப்புக்காவல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் தொகையுடன் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளை வழிநடத்திய பிரதான சந்தேகநபரான பிக்குவை, எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் இன்று (27) நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபாணி அபேசேகர இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கடவத்தை ரம்முத்துகல ஸ்ரீ புண்ய லங்காராம விகாரையைச் சேர்ந்த அகுணுகொலே அமிதானந்த என்ற இந்தச் சந்தேக நபர், தாய்லாந்திலிருந்து கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொறுப்பேற்பதற்காகக் காத்திருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருளுடன் 22 பிக்குகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதை அடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்ற இந்த பிரதான சந்தேக நபர் மிரிஸ்வத்தை பகுதியில் ஒளிந்திருந்துள்ளார்.
அங்கு வைத்து நேற்று (26) பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.
அமிதானந்த என்ற இந்த பிக்குவின் மருத்துவ அறிக்கையின்படி, அவர் கைது செய்யப்படும் வேளையில் போதைப்பொருள் உட்கொண்டிருந்தமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய பிக்குகளைத் தாய்லாந்திற்கு அனுப்பியமை மற்றும் அவர்களை வழிநடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட 'WhatsApp' கணக்கை இயக்கியமை போன்றவற்றை இவரே முன்னின்று செய்துள்ளமை நீதிமன்றில் அம்பலமானது.
சுமார் 112 கிலோகிராம் எடையுள்ள "குஷ்" (Kush) மற்றும் "ஹேஷ்" (Hash) வகை போதைப்பொருட்களை மிகவும் சூட்சுமமான முறையில் பயணப் பொதிகளில் மறைத்து வைத்து இவர்கள் நாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
இதன் பெறுமதி 110 கோடி ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று (27) மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, மேல், சபரகமவ, மத்திய, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியடன் கூடிய மழையும் மின்ன்ல தாக்கமும் ஏற்படும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.




