Our Feeds



Tuesday, February 17, 2026

Zameera

பாராளுமன்ற ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்றையதினம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது


 பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்றையதினம் (17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.




இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட் விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 02 வாக்குகளும் பதிவாகின.






இதனைத் தொடர்ந்து குழு நிலையில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் சாமர சம்பத் ஆகியோர் சட்டமூலத்தின் மூன்றாவது பிரிவுக்கு திருத்தங்களை முன்வைத்தனர். அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லையென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டதுடன், இதன்போது சாமர சம்பத் அவர்கள் தனது திருத்தத்திற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.


இதற்கு அமைய குறித்த சட்டமூலத்தை திருத்தங்கள் இன்றி நிறைவேற்றுவதற்கு ஆதரவாக 152 வாக்குகளும், முன்மொழியப்பட்ட திருத்தத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஆதரவாக 4 வாக்குகளும் அளிக்கப்பட்டன.






அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சட்டமூலத்தின் 4ஆவது பிரிவுக்கு திருத்தம் முன்வைக்கப்பட்டதுடன், இதனை ஏற்றுக் கொள்ளவில்லையென நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சரினால் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது மதிப்பீட்டின் பின்னர் சட்டமூலம் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.


இந்தச் சட்டமூலம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் 2026 ஜனவரி 07ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இதற்கு அமைய குறித்த சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.


இச்சட்டத்தின் ஊடாக தேசிய அரசுப் பேரவையின் 1977ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம் நீங்குகின்றது. இதற்கு அமைய சட்டத்தின் 3வது பிரிவின் நியதிகளின் படி ஓய்வூதியமொன்றறைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடையவரானவரும் மற்றும் இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு முன்னதாக ஓய்வூதியமொன்றைப் பெற்றுக்கொள்கின்றவருமான எவரேனும் ஆளுக்கு இச்சட்டம் தொடங்கும் தேதியன்றும் அதன் பின்னரும் அத்தகைய ஓய்வூதியம் நிறுத்தப்படும்.

Zameera

BIMSTEC நிபுணர் குழு கூட்டம் 2026 இலங்கையில்


 அரச நிதி மற்றும் நாணயக் கொள்கை தொடர்பான பிம்ஸ்டெக் (BIMSTEC) நிபுணர் குழுவின் ஆரம்பக் கூட்டத்தை, 2026 ஆம் ஆண்டில் இலங்கையில் நடத்துவதற்காகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 


வங்காள விரிகுடா பிராந்தியத்தில் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு (BIMSTEC) நிறுவப்பட்டுள்ளது. 


7வது இந்து சமுத்திர உச்சிமாநாட்டிற்கு இணையாக 2024 பெப்ரவரி மாதம் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அரச நிதி மற்றும் நாணயக் கொள்கைகளை வகுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பான நிபுணத்துவ அறிவு மற்றும் அனுபவங்களை உறுப்பு நாடுகளுக்கிடையில் பகிர்ந்துகொள்வதற்கு வசதி அளிப்பதற்காக 'அரச நிதி மற்றும் நாணயக் கொள்கை தொடர்பான நிபுணர் குழுவொன்றை அமைப்பதற்கு, அந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் முன்மொழிந்திருந்தார். 


அந்த முன்மொழிவுக்கு அமையத் தயாரிக்கப்பட்ட நிபுணர் குழுவை அமைப்பது தொடர்பான எண்ணக்கருவுக்கு அனைத்து உறுப்பு நாடுகளினதும் அமைச்சர்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. 


குறித்த நிபுணர் குழுவின் பணிப்புரை விதிமுறைகள் மற்றும் செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு ஏதுவாக, அந்த நிபுணர் குழுவின் ஆரம்பக் கூட்டத்தை இலங்கையில் நடத்துவது குறித்துப் பரிசீலிக்குமாறு பிம்ஸ்டெக் செயலகம், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு ஊடாக உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 


அதற்கமைய, குறித்த நிபுணர் குழுவின் ஆரம்பக் கூட்டத்தை 2026 ஆம் ஆண்டில் இலங்கையில் நடத்துவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

Zameera

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும்


நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்னவென்பது தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஆதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்கு அருகாமையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்

சட்டத்தரணியும் அவரது மனைவியுமே சம்பவத்தில் உயிரிழந்தனர்.

சட்டத்தரணிக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண குடிமகனின் பாதுகாப்புக்கு என்ன நடக்கும்.

சட்டத்தை உரிய வகையில் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதேநேரம், பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரே தினத்தில் இரண்டு இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகின.

கடந்த வருடம் 111 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகின.

ஆரசாங்கத்தின் அசமந்த போக்கு காரணமாகவே இந்த சம்பவங்கள் அதிகளவில் பதிவாவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


Zameera

விஜித் விஜயமுனி பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை


 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (17) காலை பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.

விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக தான் பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டதாக ஊடகவியலாளர்களிடம் அவர் கூறினார்.

SHAHNI RAMEES

தயசிறியின் கட்சி உறுப்புரிமை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்ற
Zameera

பிரித்தானிய துணைப் பிரதமர் இலங்கையில்


 பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (17) காலை நாட்டை வந்தடைந்தார்.

 

டேவிட் லாமியுடன் அவரது அலுவலகத்தைச் சேர்ந்த 7 உயர்மட்ட அதிகாரிகள் தூதுக்குழுவினராக வருகை தந்துள்ளனர்.

 

தோஹாவிலிருந்து கட்டார் எயார்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR-664 என்ற விமானம் மூலம், இன்று (17) காலை 09:11 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

 

அவர்களை வரவேற்பதற்காக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன உள்ளிட்டோர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர்கள் அறைக்கு வருகை தந்திருந்தனர்.

 

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கிலேயே பிரித்தானிய துணைப் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

 

இதன்போது, பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

 

'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய இராச்சியத்தினால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகள் மற்றும் அந்த வேலைத்திட்டங்களை மேற்பார்வை செய்வதும் துணைப் பிரதமரின் விஜயத்தின் நோக்கமாகும்.

 

மேலும், சிறுவர் பராமரிப்புக்கான பூகோள சாசனத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதும் பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமியின் இந்த விஜயத்தின் போது இடம்பெறவுள்ளது.

SHAHNI RAMEES

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு!: ஆறாம் ஆண்டு நிறைவுக்கு முன் எவரையாவது ஒருவரை குற்றவாளி காட்ட அரசாங்கம் முயற்சி

 



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு எதிர்வரும்

Zameera

12,000 சட்டவிரோத சிகரெட்டுகளுன் ஒருவர் கைது


 சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பெருமளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில், விமான நிலையத்தின் வருகை தரும் முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இன்று (17) அதிகாலை இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 12,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர் 58 வயதான கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலைய அலகினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Zameera

இலங்கை போக்குவரத்து சபையில் இனி தகுதிக்கே இடம்!


 இனிவரும் காலங்களில் இலங்கை போக்குவரத்து சபையின் பதவிகளுக்கு ஊழியர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள், தகைமைகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

 

அனைத்து பதவிகளுக்குமான ஊழியர் உள்வாங்கல் செயன்முறையை முறைப்படியாக மேற்கொள்வதே இதன் நோக்கம் என அவர் சுட்டிக்காட்டினார்.

 

எதிர்வரும் சில நாட்களில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய அலுவலகங்களிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனப் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மேலும் குறிப்பிட்டார்.

Zameera

இன்றைய வானிலை அறிக்கை


நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதன்படி, இன்று முதல் எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையின் அளவு அதிகரிக்க கூடும். 

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையில் மழை பெய்யும். 

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் சாத்தியம் நிலவுகிறது.

அதேநேரம், இன்று பிற்பகல் வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும்.

வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பணியுடனான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு,  வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை, கடற் பிராந்தியங்களில் நாட்டிற்கு தென்கிழக்காக தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளது. எனவே, மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஹம்பாந்தோட்டை முதல் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடற் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமிற்றர்  வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

களுத்துறை முதல் புத்தளம் ஊடாக மன்னார் வரையான, அத்துடன் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமிற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


 

Monday, February 16, 2026

Zameera

சவூதி அரேபியாவின் மன்னர் மற்றும் இளவரசர் தலைமையில் இலங்கைக்கு 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழம்.!


 🇸🇦🇱🇰 மனிதநேய உதவிகள்: சவூதி அரேபியாவின் மன்னர் மற்றும் இளவரசர் தலைமையில் இலங்கைக்கு 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழம்.!


✍️ எஸ். சினீஸ் கான்


புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்கும் மக்களின் தேவைகளை உணர்ந்து கொண்டு செயல்படும் சவூதி அரேபிய அரசாங்கத்தின் மனிதநேய அணுகுமுறை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகளாவிய ரீதீயில் 120 நாடுகளில் வழங்கப்படும் ரமழான் இந்த உதவிகள் இதன் சிறந்த எடுத்துக்காட்டாகும்.


இலங்கையில், “இரு புனிதஸ்தலங்களின் பாதுகாவலரின்” பேரீச்சம்பழ விநியோகத் திட்டம் மற்றும் நோன்பு நோற்கும் மக்களுக்கான இப்தார் உணவுகள் வழங்கும் உயரிய நோக்கத்தின் கீழ், இலங்கைக்காகான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமுத் அல்-கஹ்தானி அவர்களின் தலைமையில், இந்த உதவிகள் நியாயமான முறையில் மசூதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இஸ்லாமிய மையங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.


மேலும், சவூதி அரேபியா மன்னர் சல்மான் மனிதநேய உதவி மற்றும் நிவாரண மையம் மூலம் இலங்கைக்கு 50 டன் பேரீச்சம்பழம் வழங்கப்பட்டுள்ளது. இதனை சவூதி அரேபிய  தூதுவர் காலித் பின் ஹமுத் அல்-கஹ்தானி அதிகாரப்பூர்வமாக வழங்கிவைத்தார்.


இந்த முயற்சி, ரமழான் மாதத்தின் ஆன்மீகமும் மனிதநேய உணர்வையும் பிரதிபலிக்கும் ஒன்றாகும். 


இது மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் ஸவூத் மற்றும் இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையிலான சவூதி அரேபியாவின் தூய்மையான மனிதநேய பார்வையை வெளிப்படுத்துகிறது.

நாடு மற்றும் மத வித்தியாசங்களை மீறி உலகெங்கிலும் தேவையுள்ளவர்களுக்கு உதவுதல், மனிதநேய சேவையை வழங்குதல் என்பது சவூதி அரசின் முக்கியக் குணமாகும்.


இந்த உதவி  இலங்கையின் முஸ்லிம் சமூகத்துக்கும் பொதுமக்களுக்கும் நிம்மதி மற்றும் நம்பிக்கையைக் கொண்டுவருகிறது. 

மேலும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் பரஸ்பர மரியாதையை வலுப்படுத்துகிறது.


இலங்கை மக்கள் சார்பில், மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல்ஸவூத் மற்றும் இளவரசர் முகம்மது பின் சல்மான் ஆகியோருக்கு இந்த மனிதநேய உதவிக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அல்லாஹ் இந்த நேர்த்தியான தலைமையின் கீழ் சவூதி அரேபியாவை மனிதநேயத்தின் ஒளியாய் நிலைநாட்டச் செய்வாயாக.!

Zameera

மன்னார் இளைஞர் படுகொலையின் பாரதூரம்; ஜனாதிபதியிடம் ரிஷாட் எம்.பி அவசர உரையாடல்




 மன்னார் இளைஞர் படுகொலையின் பாரதூரம்;

ஜனாதிபதியிடம் ரிஷாட் எம்பி அவசர உரையாடல்


மன்னார் இளைஞர் கொழும்பு ஜிந்துப்பட்டியில் சுட்டுக் கொல்லப்பட்டதன் பாரதூரத்தை, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவசரமாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். இன்று (16) தொலைபேசியில் ஜனாதிபதியை தொடர்பு கொண்ட அவர்,


அப்பாவி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குறிவைத்து சுடப்படுவது, சிவில் சமூகத்தின் அன்றாட வாழ்வை அச்சுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இது குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்ததாவது:


சட்டவிரோத ஆயுதக் கும்பல் கள் சுதந்திரமாக உலவுவது, அப்பாவி சிவில் சமூகத்தை அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது.


கொழும்பு ஜிந்துப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மன்னார் வெள்ளிமலையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் சஹ்ரீ மரணமடைந்தார்.இத் துயரம் அப்பாவிகளுக்கு விழுந்த பாரிய இடி. தமது ஜீவனோபாயத்திற்காக கொழும்பில் பணிபுரிந்துவந்த இவ்விளைஞன், விடுமுறைக்காக வீடு திரும்புவதற்கு சலூனுக்கு சென்றிருந்தார். இந்தத் தருணத்திலே இவர் சுடப்பட்டார்.


இந்தக் கொலைக்குப் பின்னால் உள்ளவர்களை, அவசரமாக கைது செய்து சட்டத்தின் பிடியில் நிறுத்துங்கள். நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங் கள் இல்லாது ஒழிக்கப்பட வேண்டும். பாதுகாப்புத்துறையை இவ்விடயத்தில் தீவிர கவனம் செலுத்துமாறு அறிவுறுத்துங்கள்.


பாதளக் கோஷ்டியை ஒழிப்பதற்கும் போதைப் பாவனைகளை அழிப்பதற்கும் தீவிரமாக செயல்படும் அரசாங்கம், அப்பாவிகளின் உயிர்களை பாதுகாப்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.


இச்சம்பவம் தொடர்பில் தேவையான சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென இதன் போது ஜனாதிபதி உறுதியளித்தார்.

Zameera

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமனம்


 ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளிக்கப்பட்டது.