Our Feeds



Wednesday, March 4, 2026

Zameera

ஈரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் வைத்தியசாலையில் அனுமதி


 ஈரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காலி கடற்பரப்பிலிருந்து 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 'IRIS Dena' கப்பலில் 180 பேர் இருந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட அமைச்சர், அவர்களில் 30 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டு, தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

Zameera

தங்கத்தின் விலை வீழ்ச்சி


 உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. 


இதற்கமைய, இன்று (04) காலை கொழும்பு செட்டியார்தெரு தங்க சந்தையில் "22 கரட்" தங்கப் பவுண் ஒன்றின் விலை 376,500 ரூபா வரை குறைந்துள்ளது. நேற்று (03) இதன் விலை 388,500 ரூபாவாகக் காணப்பட்டது. 


இதேவேளை, நேற்று 420,000 ரூபாவாகக் காணப்பட்ட "24 கரட்" தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 407,000 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Zameera

அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்த நபர் கைது


 புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


நேற்று (03) இரவு வேளையில் புல்மோட்டைபொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 


இதன்போது பொலிஸார் குறித்த வர்த்தக நிலையத்தை முற்றுகையிட்டு சந்தேகநபரை கைது செய்துள்ளதோடு, அவரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 390 லீற்றர் டீசலையும் பொலிஸ் பொறுப்பில் எடுத்துள்ளனர். 


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அர்பத் நகர், புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார். 


சந்தேகநபர் இன்று (04) குச்சவெளி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, புல்முடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHAHNI RAMEES

எந்தவொரு இராணுவ நடவடிக்கை அல்லது மோதலின்போதும் பொதுமக்களின் பாதுகாப்பு பாதிக்கப்படக்கூடாது!

 


மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் மோதல்களில்

Zameera

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது

பாதுகாப்பு காரணங்களுக்காக பெஷாவரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் செயல்பாடுகள் மார்ச் 2 ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தான் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், கராச்சி மற்றும் லாகூரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகங்களைச் சுற்றி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கராச்சியில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் அருகே போராட்டக்காரர்களுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதல்களில் பத்து பேர் கொல்லப்பட்டதாகவும், இஸ்லாமாபாத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


நிலைமையைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளையும் தடியடிகளையும் வீசினர், இதனால் இரு தூதரகங்களும் திட்டமிடப்பட்ட அனைத்து அமெரிக்க விசா மற்றும் அமெரிக்க குடியுரிமை சேவைகளையும் ரத்து செய்தன.

Zameera

லெபனான் மீது தாக்குதல்: 58,000 பேர் இடம்பெயர்வு, 50 பேர் பலி


 லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் 58,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாக லெபனான் அரசாங்கத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், லெபனான் முழுவதும் தாக்குதல்களில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய பாரிய வான்வழித் தாக்குதல்களால் ஏற்பட்ட மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

லெபனான் அரசாங்க அறிக்கைகளின்படி, கடந்த 48 மணி நேரத்தில் தெற்கு லெபனான் மற்றும் தலைநகர் பெய்ரூட்டில் 58,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளனர்.

Zameera

எரிபொருள் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை


 ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது  தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக கட்டமைப்பு தொடர்பில் அச்சமூட்டி மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற   அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது  ஐக்கிய  மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


 அங்கு அவர்  மேலும் உரையாற்றியதாவது,


மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற நிலைமையை அரசாங்கம்  என்ற ரீதியில் எம்மால் கட்டுப்படுத்த முடியாது. இருப்பினும் அதனால் ஏற்படும் பாதிப்புக்குள் மற்றும் நெருக்கடி நிலைமையை அரசாங்கம் என்ற ரீதியில்  முகாமைத்துவ செய்ய முடியும்.


எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ  அல்லது தாமதமோ ஏற்படாது. நாட்டில் தற்போது எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது.எரிபொருள் விநியோக கட்டமைப்பு  தொடர்பில்  அச்சமூட்டி மக்களை தவறாக  வழிநடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.


இறக்குமதி செய்யப்படும் மசகு  எண்ணெய் தொகையை சுத்திகரித்து அவற்றை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான வசதிகள் போதுமானதாக இல்லை. திருகோணமலை  எண்ணெய் தாங்கிகளில் இலங்கைக்குச் சொந்தமான தாங்கிகள் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. அப்பகுதியில் மேலதிகமாக இரண்டு எண்ணெய் தாங்கிகளை  நிர்மாணிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு  வழங்காமலிருந்திருந்தால்  தேவைக்கு மேலதிகமான வகையில் எண்ணெய் தொகையை களஞ்சியப்படுத்தி வைக்க முடியும். ஆகவே விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கும் எதிர்க்கட்சியினர் கடந்த காலங்களை பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Zameera

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மனிதாபிமான ரீதியிலான சிகிச்சை வழங்கப்பட வேண்டும் - இம்ரான் மகரூப்


 பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் தற்போது சிறையில் அனுபவித்து வரும் இன்னல்கள் மற்றும் அவரது உடல்நிலை குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிடுவதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

​இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

​மனிதாபிமான ரீதியிலான அணுகுமுறை அவசியம்

​பாகிஸ்தானின் ஒரு தலைவராக மட்டுமன்றி, உலகப்புகழ் பெற்ற ஒரு விளையாட்டு வீரராகவும் திகழ்ந்த இம்ரான் கான், தற்போது சிறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகள் மற்றும் மனிதாபிமான ரீதியிலான சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுவதை பாகிஸ்தான் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

அரசியலுக்கு அப்பால், ஒரு மனிதனாக அவருக்கு முறையான மருத்துவ வசதிகளும், கௌரவமான பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டியது சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

​இலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தவர்

​இலங்கை முஸ்லிம்கள் மிக இக்கட்டான நிலையில் இருந்தபோது, எங்களுக்காக சர்வதேச அரங்கில் துணிச்சலுடன் குரல் கொடுத்தவர் இம்ரான் கான் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

குறிப்பாக, இலங்கையில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை (ஜனாசாக்களை) கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அன்றைய அரசாங்கம் பலவந்தமாக எரித்தபோது, அதற்கு எதிராக உலக அளவில் கடும் அழுத்தம் கொடுத்தவர் இம்ரான் கான்.

​அவர், இலங்கை வந்திருந்த வேளையிலும், சர்வதேச ராஜதந்திர மட்டத்திலும் அவர் கொடுத்த அழுத்தங்கள், முஸ்லிம்களின் மத உரிமையை நிலைநாட்டவும், ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை மீளப் பெற்றுக்கொள்ளவும் மிக முக்கிய காரணியாக அமைந்தது.

​எமது சமூகத்தின் மத உரிமைகளுக்காகவும், உணர்வுகளுக்காகவும் அன்று தோள் கொடுத்த ஒரு தலைவரின் இன்றைய நிலை குறித்து மௌனம் காக்க முடியாது. அவருக்கு இழைக்கப்படும் அநீதிகள் களையப்பட்டு, அவர் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.

அரசியல் பழிவாங்கல்களைத் தவிர்த்து, நீதியான முறையில் இம்ரான் கானின் விவகாரம் அணுகப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசாங்கத்தையும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளையும் இந்த அறிக்கையினூடாக வலியுறுத்துகின்றேன்.

Zameera

பொருளாதார மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்


 இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதல்கள் தொடருமானால், மத்திய கிழக்கில் உள்ள அனைத்து பொருளாதார மையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

தாக்குதல்கள் தொடர்ந்தால் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை ஜெனரல் இப்ராஹிம் ஜப்பாரி எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் பிரதான மையங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தத் தீர்மானித்தால், அதற்குப் பதிலடியாக பிராந்தியத்தின் அனைத்து பொருளாதார மையங்களும் இலக்கு வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை ஏற்கனவே 80 டொலர்களைக் கடந்துள்ள நிலையில், இது விரைவில் 200 டொலர்களை எட்டக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஈரான் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் காரணமாக இதுவரை அந்நாட்டில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் செம்பிறை சங்கம் அறிவித்துள்ளது.

Zameera

மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்


 மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று (03) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி முதலாவது விமானம் புறப்பட்டுச் சென்றது.

ஃபிட்ஸ் எயார் (Fits Air) விமான சேவைக்குச் சொந்தமான 8D 821 என்ற விமானம் இன்று பிற்பகல் 01.20 மணியளவில் கட்டுநாயக்கவிலிருந்து துபாய் நோக்கிப் புறப்பட்டதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

இந்த விமானத்தில் 47 பயணிகளும் 10 விமானப் பணியாளர்களும் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கு வான்பரப்பு குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்கு மாத்திரம் திறக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடைப்பட்ட நேரத்தில் விமானங்கள் இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பறக்கின்றன.

இதற்கிடையில், ஏர் அரேபியா (Air Arabia) நிறுவனத்திற்குச் சொந்தமான G-9509 என்ற விமானம் இன்று மாலை 04.45 மணியளவில் கட்டுநாயக்கவிலிருந்து சார்ஜா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது. இதில் 44 பயணிகளும் 10 பணியாளர்களும் பயணித்துள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான ஏனைய விமான சேவைகளும் படிப்படியாக வழமைக்குத் திரும்புவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, March 3, 2026

Zameera

இலங்கையில் உள்ள யூத வழிபாட்டு மையங்களுக்கு 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பு!



 மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலைக் கருத்திற்கொண்டு, இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், வெளிநாட்டவர்கள் தங்கியுள்ள விடுதிகள் மற்றும் பிரபலமான சுற்றுலாத் தலங்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக தூதரகங்கள் அல்லது சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து இடம்பெறக்கூடிய வன்முறைகள் அல்லது போராட்டங்களைத் தடுத்ததே இந்தத் தீர்மானத்தின் நோக்கமாகும்.

இது குறித்த மேலதிக விபரங்கள்:

பாதுகாப்பு பலப்படுத்தல்: பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், சுற்றுலாப் பொலிஸ் பிரிவு உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்கனவே பலப்படுத்தியுள்ளன.

சபாட்’ (Chabad) மையங்கள்: குறிப்பாக நாட்டிலுள்ள ‘சபாட்’ மையங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பை வழங்கவும், இராஜதந்திர வலயங்கள் மற்றும் சுற்றுலா மையங்களில் பகல் மற்றும் இரவு நேர ரோந்துப் பணிகளை முன்னெடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்கொண்டுள்ள சவால்கள்

இந்த பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸ் திணைக்களம் கடுமையான உத்தியோகத்தர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தூதரகங்களுக்கு 24 மணி நேர நிலையான பாதுகாப்பை வழங்குவது சவாலாக மாறியுள்ளது.

மேலும், கொழும்பு பகுதியில் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை கிரிக்கெட் போட்டிகளின் கூட்டக் கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து முகாமைத்துவத்திற்காக பெருமளவிலான அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் இந்த நிலைக்கு ஒரு காரணமாகும். இருப்பினும், அந்தப் போட்டிகள் நிறைவடைந்தவுடன் அந்த அதிகாரிகளும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.


Zameera

அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு கடும் நெருக்கடி


 ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ஆரம்பித்துள்ள ‘Operation Epic Fury’ (ஒபரேஷன் எபிக் பியூரி) இராணுவ நடவடிக்கை காரணமாக அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதிய அறிக்கைகளின்படி, இந்த நடவடிக்கையின் முதல் 24 மணித்தியாலங்களில் மாத்திரம் அமெரிக்கா தோராயமாக 779 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது.



பாரிய இராணுவச் செலவுகள்



இந்த பாரிய செலவினங்களுக்கு மேலதிகமாக, போர் தொடங்குவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தயார்படுத்தல்கள் மற்றும் கப்பல்களை இப்பகுதிக்கு கொண்டு வருவதற்கு மாத்திரம் மேலும் 630 மில்லியன் டாலர்கள் செலவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.



நிபுணர்களின் கூற்றுப்படி:



• ‘USS Gerald R Ford’ போன்ற ஒரு விமானம் தாங்கி கப்பல் குழுவைப் பராமரிக்க மாத்திரம் ஒரு நாளைக்கு சுமார் 6.5 மில்லியன் டாலர்கள் தேவைப்படுகின்றன.


• தற்போது அமெரிக்கா இத்தகைய இரண்டு கப்பல் குழுக்களை இப்பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது.



பிராந்திய ரீதியான ஒட்டுமொத்த செலவு


பிரவுன் பல்கலைக்கழகத்தின் (Brown University) 2025 ஆம் ஆண்டு அறிக்கையை மேற்கோள் காட்டி, 2023 அக்டோபர் 7 முதல் தற்போது வரை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா செலவிட்டுள்ள மொத்தத் தொகை 31.35 பில்லியன் முதல் 33.77 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதில்:


• 21.7 பில்லியன் டாலர்கள் நேரடியாக இஸ்ரேலுக்கு இராணுவ உதவியாக வழங்கப்பட்டுள்ளன.


• ஏனைய 10 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகை ஏமன், ஈரான் மற்றும் சுற்றியுள்ள பிராந்தியங்களில் அமெரிக்க நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டுள்ளது.


ஆயுதத் தட்டுப்பாடு குறித்த எச்சரிக்கை


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்போதைய பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தை 1.5 ட்ரில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்க முன்மொழிந்துள்ள போதிலும், செலவினங்களை விட ஆயுத இருப்புக்கள் தீர்ந்து போவது குறித்து பொருளாதார மற்றும் இராணுவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


குறிப்பாக, பேட்ரியட் (Patriot) போன்ற ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளின் மட்டுப்படுத்தப்பட்ட இருப்பு காரணமாக, இத்தகைய பாரிய நடவடிக்கையை சில வாரங்களுக்கு மேல் முன்னெடுத்துச் செல்வது கடினமாக இருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.


ஈரானின் 1,250 க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, நான்கு வாரங்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது அமெரிக்க வரி செலுத்துவோர் மீது மேலும் பாரிய சுமையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Zameera

அமேசான் தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்


 மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 

இத்தாக்குதல்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இரண்டு தரவு மையங்கள் நேரடியாக சேதமடைந்துள்ளதுடன், பஹ்ரைனில் அமைந்துள்ள ஒரு மையமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த எதிர்பாராத சம்பவத்தினால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வங்கி நடவடிக்கைகள், இணையத்தளங்கள் மற்றும் பல கைப்பேசி செயலிகளின் செயற்பாடுகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தாக்குதல்கள் காரணமாக கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், மின்சார விநியோகம் தடைப்பட்டதால் தரவு செயலாக்க நடவடிக்கைகளும் ஸ்தம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், தீயணைப்பு அமைப்புகள் இயங்கியதன் காரணமாக, தொழில்நுட்ப உபகரணங்களுக்கு நீரினால் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறுகிறது. 

நிலவும் பாதுகாப்பற்ற தன்மை காரணமாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தமது சேவைகளை பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களையும் உடனடியாக தமது தரவுகளை ஐரோப்பா அல்லது அமெரிக்கா போன்ற பாதுகாப்பான வலயங்களில் அமைந்துள்ள சேவையகங்களுக்கு மாற்றுமாறு அமேசான் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 

இதற்கிடையில், அமீரகத்தின் பல முன்னணி வங்கிகளின் டிஜிட்டல் பரிவர்த்தனை அமைப்புகள் செயலிழந்துள்ள நிலையில், இது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமொன்றின் தரவு உட்கட்டமைப்பு மீது போர் தாக்குதல் நடத்தப்பட்ட முதல் சந்தர்ப்பங்களில் ஒன்றாக இது கருதப்படுவதுடன், இதன் காரணமாக பிராந்தியத்தின் டிஜிட்டல் ஸ்திரத்தன்மை தொடர்பில் பாரிய சிக்கல் எழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.