
Monday, August 31, 2026

ஐஓசி, சினோபெக் பெற்றோல் விலைகளும் குறைப்பு!
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் பெற்றோல் விலைகளைக் குறைத்ததைத் தொடர்ந்து, லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் (LIOC) தனது எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது.
இதற்கமைய, ஐ.ஓ.சி நிறுவனம் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ளதுடன், அதன் புதிய விலை 399 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையும் 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 475 ரூபாவாகும்.
ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளாமல் இருக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதனிடையே, சினோபெக் (Sinopec) நிறுவனமும் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பெற்றோல் விலைகளை திருத்தியமைத்துள்ளது.
இதற்கமைய, சைனோபெக் நிறுவனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 399 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 475 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

பேக்கரி உணவுகளின் விலை அதிகரிக்குமா? இன்று முடிவு
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பேக்கரி உணவுகளின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
பிரீமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை நேற்றுமுன்தினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 17 ரூபாவினால் உயர்த்தியுள்ளன.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கடந்த பெப்ரவரி மாதம் முதல் கப்பல் கட்டணங்கள், காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் தானியங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, மாவின் விலை அதிகரிப்புக்கேற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகளை உயர்த்துவது தொடர்பான இறுதி முடிவு இன்று ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
கோதுமா மாவின் விலை உயர்வினைத் தொடர்ந்து ஏற்கனவே சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பூட்டான் பயணம்
உலகளாவிய விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit - GCFSS) பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (31) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பூட்டானுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
செப்டம்பர் 1 ஆம் திகதி பூட்டானில் நடைபெறும் இம்மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பங்கேற்கவுள்ளதுடன், அங்கு "நெருக்கடிகளை எதிர்கொள்ள விழிப்புணர்வோடு எழுச்சி பெறுதல்" (Rising to the Moment: Igniting Consciousness to Address the Polycrisis) என்ற தலைப்பில் முதன்மை உரையாற்றவுள்ளார்.
இப்பயணத்தின் போது பிரதமர், சர்வதேசத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதுடன், நிலையான உணவு முறைமைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பங்களிப்பிற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்திற்காகப் பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
இந்த விசாரணை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவுசெய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அங்கு சமூகளிக்கவில்லை.
இதன்காரணமாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று முன்தினம் அவரது வீட்டிற்குச் சென்றிருந்தது.
எனினும், அந்தச் சமயத்திலும் அவர் வீட்டில் இருக்கவில்லை என்பதுடன், தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு ரவி கருணாநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்றைய தினம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு அவர் முன்னிலையாகியுள்ளார்.

பமுணுகம கடலில் 4 பேர் நீரில் மூழ்கி மாயம்
பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவினருள் பெண் ஒருவர், இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
இவ்வாறு காணாமல்போனவர்கள் 35 வயதுடைய பெண், 04 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள் மற்றும் 13 வயதுடைய ஒரு சிறுவன் ஆவர்.
இவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

22-ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: மனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு
22-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கான காலவகாசம் இன்றுடன் (31) நிறைவடைகின்றது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவால் கடந்த 18 ஆம் திகதி 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இச்சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 27 மனுக்களும், அதற்கு ஆதரவாக 3 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரவி கருணாநாயக்க இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு
பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (31) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்திற்காகப் பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த விசாரணை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவுசெய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அங்கு சமூகளிக்கவில்லை.
இதன்காரணமாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று முன்தினம் அவரது வீட்டிற்குச் சென்றிருந்தது.
எனினும், அந்தச் சமயத்திலும் அவர் வீட்டில் இருக்கவில்லை என்பதுடன், தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு ரவி கருணாநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்றைய தினம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
Sunday, August 30, 2026

இலங்கையில் டெங்கு பாதிப்பு 95,174 ஆக அதிகரிப்பு
நாடு முழுவதும் மொத்தம் 50 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பகுதிகள் டெங்கு நோய்க்கான உயர் அபாய வலயங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில், 95,174 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த மொத்த எண்ணிக்கையில், ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 9,838 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் பதிவாகி வருகின்றன.
இந்த ஆண்டில் இதுவரை அங்கு 50,358 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
தெற்கு மாகாணத்தில் 13,854 நோய்த்தொற்றுகளும், அதனைத் தொடர்ந்து மத்திய மாகாணத்தில் 8,659 நோய்த்தொற்றுகளும், சபரகமுவ மாகாணத்தில் 7,825 நோய்த்தொற்றுகளும் பதிவாகியுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 20,276 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்படி, இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் டெங்கு தொடர்பான 72 மரணங்கள் பதிவாகியுள்ளன.

பொதுமக்களுக்கு இடையூறின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை!
(செ.சுபதர்ஷனி)
பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்காத வகையில் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கி சாதனங்களை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேற்படி விடயம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (30) பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டிருந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
ஒலிபெருக்கிகளால் ஏற்படும் அதிக சத்தம் சிறுவர்கள், மாணவர்கள், முதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பாரிய உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துதகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பிறருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகளை இயக்குவது தண்டனைச் சட்டக்கோவையின் 261 ஆம் பிரிவின் கீழ் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் குற்றமாகக் கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இரவு 10.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது.
இருப்பினும், மத ரீதியான அல்லது விசேட நிகழ்வுகளுக்கு உரிய பொலிஸ் அனுமதிப் பத்திரத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு சலுகைகள் வழங்கப்படும்.
இதன்படி, திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10.00 மணி வரையிலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அதிகாலை 1.00 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 12.30 மணி வரையிலும் அனுமதி பெறப்பட்ட நேரங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த முடியும்.
அனுமதி பெறப்பட்டிருப்பினும், குறித்த வளாகத்தைத் தாண்டி அதிக சத்தம் எழுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாடுகளை மீறிச் செயற்படுபவர்களின் ஒலிபெருக்கி சாதனங்களைக் கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
பொதுமக்கள் இவ்வாறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் பட்சத்தில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 118, 119 ஆகிய துரித தொலைபேசி இலக்கங்களையோ தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும்.

எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலையில் தீ விபத்து
எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலையின் கழிவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (30) மாலை 3:20 மணியளவில் இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ பரவாமல் தடுப்பதற்காகக் காகித தொழிற்சாலையின் தீயணைப்புப் பிரிவு, இராணுவம், பொலிஸ், எம்பிலிபிட்டிய நகர சபை மற்றும் செவனகல சர்க்கரை தொழிற்சாலையின் தீயணைப்புப் பிரிவு ஆகியவை இணைந்து தீவிர முயற்சி மேற்கொண்டு, தற்போது தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளன.
காகித தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்ட கழிவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியிலேயே இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
