Our Feeds



Friday, August 7, 2026

ShortNews

குருவிட்ட மற்றும் பல்லன்சேன சிறைச்சாலைகளின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!


குருவிட்ட மற்றும் பல்லன்சேன ஆகிய இரு சிறைச்சாலைகளின் கட்டுப்பாடும் தற்போது முழுமையாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை பதற்றமான நிலைமை நிலவிய இவ்விரு சிறைச்சாலைகளின் நிலைமையும் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று (07) காலை குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமை, பின்னர் நீர்கொழும்பு பல்லன்சேன சிறைச்சாலையிலும் உருவானது.

இப்பதற்றமான சூழ்நிலையினால் குருவிட்ட சிறைச்சாலையின் 13 கைதிகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் உயிரிழந்தனர்.

நீர்கொழும்பு, பல்லன்சேன சிறைச்சாலையிலும் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பதற்ற நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினர், இராணுவத்தினர் மற்றும் விமானப் படையினரின் உதவியும் பெறப்பட்டது.

இருப்பினும், பதற்ற நிலைமை நிலவிய இரு சிறைச்சாலைகளின் கட்டுப்பாடும் தற்போது சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைகளின் பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ShortNews

வர்த்தமானியில் வெளியானது 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம்!



நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.

 

இச்சட்டமூலத்தில் உள்ள முக்கிய சாரம்சங்கள் வருமாறு:

 

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மாற்றம்: 

அரசியலமைப்பின் 107(5) உறுப்புரையைத் திருத்துவதன் மூலம், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

தலைமை நீதிபதியின் ஓய்வுக் காலம்: 

பிரதம நீதியரசர் (தலைமை நீதிபதி) 67 வயதை அடையும் நாளில் அல்லது அவர் பிரதம நீதியரசராகப் பதவியேற்ற நாளில் இருந்து 6 ஆண்டுகள் பூர்த்தியாகும் நாளில் - இதில் எது முன்னதாக வருகிறதோ அந்நாளில் ஓய்வுபெற வேண்டும்.

 

அரசியலமைப்பு உறுப்புரை 137 இல் திருத்தம்: 

அரசியலமைப்பின் 137வது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள "12 பேருக்கு மிகாமல்" எனும் சொல்லாடலுக்குப் பதிலாக "24 பேருக்கு மிகாமல்" எனத் திருத்தம் செய்யப்படுகிறது.

ShortNews

யாழ்.சிறைச்சாலையிலும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை!


நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் மோதல் மற்றும் அமைதியின்மை சம்பவங்கள் பதிவாகியுள்ளதையடுத்து, யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் இன்று (07) விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் பாதுகாப்பு நிலைமையை ஆராயும் நோக்கில் இராணுவம், பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து அவசர ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

குறிப்பாக, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் பாதுகாப்பை வலுப்படுத்துவது, கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மற்றும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுப்பது தொடர்பில் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ShortNews

இலங்கை அணியின் பலம் துடுப்பாட்டத்திலேயே உள்ளது!


கிரிக்கெட் என்பது "பந்துவீச்சை விட துடுப்பாட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு விளையாட்டு" என்று தான் நம்புவதாக இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் விருது வழங்கும் வருடாந்த விழாவில் உரையாற்றியபோதே விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இந்த தனிப்பட்ட கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்காக இலங்கை அணி வெற்றி பெற்ற சில போட்டிகளை அவர்கள் உதாரணங்களாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில், இலங்கை அணியின் பலம் துடுப்பாட்டத்திலேயே உள்ளது எனக் குறிப்பிட்ட அமைச்சர், தேசிய அணியின் 20க்கு 20 உலகக்கிண்ண பயணம், "வீரர்களால் மட்டுமே தோல்வியில் முடியவில்லை" என்றும் கூறியுள்ளார்.

Zameera

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சந்தேகநபர்கள் 62 ஆக உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் மேலும் 24 கைதிகளை சந்தேகநபர்களாக பெயரிடுவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) அனுமதி கோரியிருந்த நிலையில், நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (07) நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷிலனி பெரேரா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கமைய, ஏற்கனவே பெயரிடப்பட்ட 38 சந்தேகநபர்களுடன் இன்று பெயரிடப்பட்ட 24 பேரையும் சேர்த்து, இச்சம்பவத்துடன் தொடர்புடைய மொத்த சந்தேகநபர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சந்தேகநபர்களின் பெயர்கள் திறந்த நீதிமன்றத்தில் பகிரங்கப்படுத்தப்படவில்லை. 

அது தொடர்பான பெயர் பட்டியலையும் 'பி' அறிக்கையையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேரடியாக நீதவானிடம் ஒப்படைத்தது.

அத்துடன், சந்தேகநபர்களான 38 பேரை இன்று அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சம்பவத்தில் காயமடைந்த சாட்சியாளர்களான சிறைச்சாலை அதிகாரிகள் இன்னமும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால், அந்த அடையாள அணிவகுப்பை எதிர்வரும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டார்

இது தவிர, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சந்தேகநபர்களையும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், அன்றைய தினம் 62 சந்தேகநபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இந்த சந்தேகநபர்களுக்கு எதிராக கொலைக் குற்றம், நெரிப்படைச் சட்டம், பொதுச் சொத்துச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

 

ShortNews

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!


தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள பிரதேச செயலகப் பிரிவுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை, கொத்மலை மேற்கு, அம்பகமுவ, நுவரெலியா, நோர்வுட் மற்றும் கொத்மலை கிழக்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, புலத்கொஹுபிட்டிய, யட்டியாந்தோட்டை, தெரனியகல மற்றும் அரநாயக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்டத்தின் கீழ் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கண்டி மாவட்டத்தின் தொலுவ, பன்வில, மெததும்பர, உடபலாத, கங்க இஹல கோரள, உடுதும்பர மற்றும் தெல்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, ஓபநாயக்க மற்றும் இம்புல்பே ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்டத்தின் கீழ் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ShortNews

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலத்த பாதுகாப்பு!


மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவு சிறைச்சாலை பகுதியை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் கைதிகள் பாதுகாப்பாக இருப்பதாக சிறைச்சாலை அத்தியட்டசகர் தெரிவித்தார்.

மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்தின, சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

நாட்டின் பல சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள பதற்றநிலையை தொடர்ந்து மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று(7) இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், நீர் கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டட சிறை உடைப்பையடுத்து அங்கிருந்து 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது குறித்த சிறைச்சாலையில் நீர் கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட 60 கைதிகளில் 42 பேர் உள்ளதுடன் இன்று 980 பேர் சிறையில் உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் சிறைச்சாலை அதியட்சகர் மோகன் தெரிவித்தார்.

ShortNews

லலித் - குகன் காணாமற்போன வழக்கு கோட்டாபய ராஜபக்ச செப்டம்பர் 29ஆம் தேதி காணொளி மூலம் சாட்சியமளிக்க நீதிமன்றம் உத்தரவு!



2011ஆம் ஆண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமற்போன சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் தேதி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திலிருந்து காணொளி (Video Link) ஊடாக சாட்சியமளிக்க வேண்டும் என யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற காலத்தில் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்திருந்தார். இந்த விசாரணையில் சாட்சியமளிக்குமாறு அவருக்கு முதன்முதலில் 2019 செப்டம்பர் 27ஆம் தேதி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.

இந்த ஆண்டு ஆரம்பத்தில், பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி மின்னணு ஒலி-ஒளி (Electronic Audiovisual) வசதியின் மூலம் சாட்சியமளிக்க அனுமதி கோரி அவர் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

கடந்த ஆண்டு டிசம்பரில் கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர் என நீதிமன்ற பதிவுகள் குறிப்பிடுகின்றன.

அதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை தொடர்வதற்காக, அந்த அச்சுறுத்தல் குறித்த தகவல்களை முறையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ShortNews

நேற்றைய மெகசின் சிறை மோதலில் கைதி ஒருவர் பலி!



கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். 

இந்த சம்பவத்தில் காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சிறைச்சாலைக்கு வௌியில் இருந்து பொதியொன்று எறியப்பட்ட நிலையில், அதனை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைப்பற்றியதாக கூறப்படுகின்றது. 

இதனையடுத்து சிறைச்சாலைக்குள் இருந்த கைதிகள் குழுவொன்று அமைதியின்மையை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஒன்பது கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்தார். 

சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், நேற்று ஏற்பட்ட சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் முப்படை அதிகாரிகளின் ஒத்துழைப்பு பெறப்பட்டதாகக் குறிப்பிட்டார். 

இதனிடையே, உருவாகியுள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இன்றைய தினம் சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ShortNews

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள் - முப்படையினருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!


அனைத்து சிறைச்சாலைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெறும் சிறைக்கலவரங்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ShortNews

சிறையின் வாயிற்கதவை முற்றுகையிட்ட பல்லன்சேன கைதிகள்!


நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சற்றுமுன்னர் அதன் வாயிற்கதவை முற்றுகையிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

குறித்த சிறைச்சாலையின் இறுதி வாயிற்கதவுக்கு அருகில் பெருந்திரளான கைதிகள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

முன்னதாக பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலர் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இதனால் அங்கு தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் அதிகளவான பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலையைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் சிலர் பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Zameera

பேராதனைப் பல்கலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு


 சீரற்ற வானிலை காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளையும் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


அதற்கமைய, எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளையும் வழமை போன்று பாதுகாப்பாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தற்போது அனைத்துக் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார். 


இதற்கமைய, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் விடுதிகளுக்குத் திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் உபவேந்தர் மேலும் குறிப்பிட்டார்.

Zameera

பள்ளஞ்சேனை சிறையில் பதற்றம்: கைதிகள் கூரையில் ஏறி போராட்டம்


 பல்லன்சேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.