
Sunday, August 9, 2026
Saturday, August 8, 2026

தரக் குறைபாடுகள் காரணமாக சில நாடுகளில் புதிய இலங்கை கடவுச்சீட்டுகள் நிராகரிப்பு - முஜீப் எம்.பி.
புதிய இலங்கை கடவுச்சீட்டுகளில் காணப்படும் தரக்குறைபாடுகள் காரணமாக, முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டை முறையாக வாசிக்க முடியாததால், அது போலியானதாக இருக்கலாம் என பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் சந்தேகித்ததாக சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை கடவுச்சீட்டுகளில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை 64 இலிருந்து 48 ஆக குறைக்கப்பட்டுள்ள போதிலும், கடவுச்சீட்டு வழங்குவதற்கான ரூ.6,000 கட்டணத்தில் எந்தக் குறைப்பும் செய்யப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
புதிய கடவுச்சீட்டுகளில் குறிப்புகள் அல்லது நீட்டிப்புகளுக்கான பக்கங்கள் இடம்பெறவில்லை என்றும், அச்சுத் தரம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குடிவரவு முத்திரைகளின் மை எதிர்பக்கத்திலும் பதியும் நிலை உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக சில நாடுகள் இந்தக் கடவுச்சீட்டுகளை நிராகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, புதிய இலங்கை கடவுச்சீட்டுகளில் தரக்குறைபாடுகள் இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
கடவுச்சீட்டுகளின் பக்கங்களின் எண்ணிக்கையை குறைத்தமை சர்வதேச தரநிலைகளுக்கு அமைவானது என்றும், பல நாடுகளும் இதே நடைமுறையைப் பின்பற்றுகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், 50 இலட்சம் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பத்திரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், மின்னணு கடவுச்சீட்டு (e-passport) முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பகுதியில் கடும் போக்குவரத்து!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஒரு வழியில் (Lane) மட்டுமே வாகனங்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த வழியில் வாகனமொன்று இயந்திரக் கோளாறுக்கு உள்ளானமையினாலும் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-இலங்கை எரிசக்தித் துறை ஒத்துழைப்பு குறித்து ஆய்வு!
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான எரிசக்தித் துறை இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
டெல்லியில் நடைபெற்ற இவ் ஆய்வு கூட்டத்தில், மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் இந்தியக் குழுவிற்கு தலைமை தாங்கினார், அதேவேளை இலங்கைக் குழுவிற்குத் துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தலைமை தாங்கினார்.
பிராந்தியத்தில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தும் மற்றும் தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில், எல்லை தாண்டிய மின்சார வர்த்தகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பரிமாற்றக் கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.
பொது - தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரியாக கட்டண அடிப்படையிலான போட்டி ஏல (TBCB) கட்டமைப்பு மூலம் பரிமாற்ற அமைப்பு மேம்பாட்டில் தனது அனுபவத்தையும் இந்தியத் தரப்பு பகிர்ந்து கொண்டது.
நிலையான வளர்ச்சி மற்றும் பிராந்திய எரிசக்தி பாதுகாப்புக்காக மின் துறைசார்ந்த இருதரப்பு வழிமுறைகளின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இரு தரப்பினரும் ஆய்வு செய்ததுடன், ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
மகசின் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முற்பட்ட இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று (08) மதியம் பேஸ்லைன் வீதி மகசின் சிறைச்சாலை பக்கச் சுவர் அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் குறித்த இடத்தில் இருந்து சிறைச்சாலைக்குள் 2 பொதிகளையும் வீச முற்பட்டவேளை சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் வசமிருந்த 2 பொதிகளையும் பரிசோதனை செய்த போது, 22 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 02 மில்லிகிராம் ஆஷ் (Ash) போதைப்பொருள், 02 தொலைபேசி சார்ஜர்கள்,10 லைட்டர்கள் மற்றும் 02 சிறிய கையடக்கத் தொலைபேசிகள் என்பவை பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 29 வயதுடைய கொழும்பு 14 பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நாளை(09) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதுடன், பொரளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு தழுவிய சோதனைகளில் தரமற்ற தலைக்கவசங்கள் 431 பறிமுதல்!
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளின் போது மொத்தம் 431 தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தரமற்ற தலைக்கவசங்களைப் பயன்படுத்திய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, 3,500 தரமற்ற தலைக்கவசங்களை உற்பத்தி செய்வதில் ஈடுபட்ட இரண்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் வீதிப் போக்குவரத்து விபத்துக்கள் காரணமாக 2,500 முதல் 2,700 வரையான நபர்கள் உயிரிழப்பதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த உயிரிழப்புகளில் சுமார் 1,000 மரணங்கள் மோட்டார் சைக்கிள் விபத்துக்களினாலேயே ஏற்படுகின்றன என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண மோசடி - எச்சரிக்கை!
சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் மூலமாக இலங்கையர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டு வரும் பாரிய அளவிலான ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழிப் பண மோசடி தொடர்பிலான தகவல்களை இலங்கை கணினி அவசர கால பதிலளிப்புக் குழு கண்டறிந்துள்ளது.
இதுவரை திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த மோசடி நடவடிக்கைகள் இந்தியாவிலிருந்தே முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர கால பதிலளிப்புக் குழு கண்டறிந்துள்ளது.
மோசடி செய்பவர்கள் தாங்கள் இலக்கு வைக்கும் நபர்களைப் பற்றி முன்கூட்டியே நன்கு ஆராய்ந்து, அவர்களின் உறவினர்கள், உடன்பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களைத் தங்களது தொடர்பிலக்கங்கள் அல்லது நண்பர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்கின்றனர்.
வழக்கமாக, கவர்ச்சிகரமான ஒரு இளம் பெண்ணின் புகைப்படத்தைப் பயன்படுத்தும் அறிமுகமில்லாத இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து, பாதிக்கப்பட்ட நபருக்கு "ஹாய்" என்ற எளிய குறுஞ்செய்தி அனுப்பப்படுவதன் மூலமே இந்த அணுகுமுறை தொடங்குகிறது.
அந்த நபரிடமிருந்து பதில் வந்தால், மோசடிக்காரர்கள் பல நாட்களுக்கு உரையாடலைத் தொடர்ந்து நம்பிக்கையை கட்டியெழுப்ப முயல்கின்றனர்.
அதன் பின்னர், அந்த நபரைத் தூண்டி அவர்களின் அந்தரங்கப் படங்களைப் பகிருமாறு செய்கின்றனர் அல்லது வீடியோ அழைப்புகளில் பங்கேற்க வைக்கின்றனர்.
இவ்வாறு பெறப்படும் புகைப்படங்கள் அல்லது வீடியோ காட்சிகளைப் பயன்படுத்தி, கேட்கும் பணத்தைக் தராவிட்டால் அவற்றை அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் அல்லது நண்பர்களுக்கும் அனுப்பி விடுவதாக அச்சுறுத்தி பணப்பறிப்பில் ஈடுபடுகின்றனர் என இலங்கை கணினி அவசர கால பதிலளிப்புக் குழு தெரிவித்துள்ளது.
எனவே, அறிமுகமில்லாத கணக்குகள் அல்லது தொலைபேசி எண்களிலிருந்து வரும் குறுஞ்செய்திகள், நண்பர் கோரிக்கைகள் அல்லது அழைப்புகளுக்கு பதிலளிக்கும் போது பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்கவும்.





