(க.சிவலிங்கமூர்த்தி)
மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் அதனை நாளுக்கு நாள் காலதாமதம் செய்வதன் மூலம் தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற விடயத்தை அரசாங்கமே நாட்டுக்கு வெளிப்படுத்தி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் அரசியல் நிலவரங்கள் தொடர்பில் புதன்கிழமை (09) மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சாகர காரியவசம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற கருத்தை நாங்கள் முன்வைக்கவில்லை. மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் நாளுக்கு நாள் காலதாமதம் செய்வதன் மூலம் மக்கள் ஆதரவு தொடர்பான உண்மையான நிலைமையை அரசாங்கமே நாட்டுக்கு வெளிப்படுத்தி வருகிறது.
மக்கள் விடுதலை முன்னணிக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்படும் மக்கள் சந்திப்புகளுக்கு பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வதையும் நாம் பார்க்கின்றோம். ஆனால், ஒரு கூட்டத்துக்கு பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வதை மாத்திரம் வைத்து அந்தக் கட்சிக்கு நாடு முழுவதும் அதிகளவான மக்கள் ஆதரவு இருக்கின்றது என்று கூற முடியாது.
மக்கள் விடுதலை முன்னணி தேர்தல்களில் குறைந்த வாக்குகளைப் பெற்றிருந்த காலங்களிலும் நாட்டில் மிகப் பெரிய மக்கள் கூட்டங்களை நடத்தியுள்ளது. அந்தக் கட்சியுடன் நீண்டகாலமாக இணைந்துள்ள உறுதியான உறுப்பினர்கள் ஒரு குழுவினர் உள்ளனர். நாட்டின் எந்தப் பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டம் நடைபெற்றாலும் அவர்கள் அங்கு சென்று கலந்துகொள்வார்கள். எனவே, ஒரு கூட்டத்துக்கு திரண்டுவரும் மக்களின் எண்ணிக்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு அந்தக் கட்சிக்கான மக்கள் ஆதரவை மதிப்பிட முடியாது.
எனினும், மக்கள் விடுதலை முன்னணிக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதை நாங்கள் கூற வேண்டிய அவசியமில்லை. அந்த விடயத்தை மக்கள் விடுதலை முன்னணியே அதன் செயற்பாடுகள் மூலம் நாட்டுக்கு வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக, நடத்தபபட வேண்டிய மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வருகின்றனர். மக்கள் ஆதரவு இருப்பதாக அரசாங்கம் நம்புமானால், மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் தீர்ப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்.
தேர்தலை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் எந்த அச்சமும் இருக்கக்கூடாது. மக்கள் தமக்கு ஆதரவாக இருக்கின்றார்கள் என அரசாங்கம் நம்பினால், தேர்தலை நடத்தி அந்த மக்கள் ஆதரவை நிரூபிக்க முடியும். மாகாண சபைகள் நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பில் முக்கியமானவை. அவற்றுக்கான தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்பட்டு, மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் உரிமையை அனுபவிக்க வேண்டும். தேர்தலை தொடர்ச்சியாக பிற்போடுவதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமை மட்டுப்படுத்தப்படுகிறது.
மக்கள் ஆதரவு தொடர்பில் அரசாங்கம் உண்மையாகவே நம்பிக்கையுடன் இருந்தால், தேர்தலை நடத்துவதற்கு ஏன் தயங்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. தேர்தலை நடத்தாமல் காலம் கடத்துவதன் மூலம் தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு தொடர்பில் அரசாங்கத்துக்கே அச்சம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் மக்களிடம் உருவாகிறது. எந்தவொரு அரசாங்கமும் மக்கள் ஆணையின் அடிப்படையிலேயே ஆட்சியை முன்னெடுக்க வேண்டும். மக்கள் தமது வாக்குரிமையின் மூலம் தமது விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். எனவே, மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் காலதாமதம் செய்யாமல் அதனை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
மக்கள் விடுதலை முன்னணிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். அதற்கான சிறந்த அளவுகோல் தேர்தலாகும். தேர்தலை நடத்தாமல் மக்கள் ஆதரவு தொடர்பில் அரசாங்கம் பல்வேறு கருத்துகளை முன்வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே, அரசாங்கம் தேர்தலை எதிர்கொண்டு மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.