Our Feeds



Tuesday, September 1, 2026

ShortNews

22வது திருத்தத்திற்கு எதிராக 67 மனுக்கள் தாக்கல்!

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.

அதற்கமைய, இன்று (01) காலை 10.00 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளன.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளன.

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கடந்த 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி, குறித்த மனுக்களைப் பரிசீலிப்பதற்காகப் பிரதம நீதியரசரால் 5 பேர் நீதிபதிகள் அமர்வு நேற்று அறிவிக்கப்பட்டதுடன், அதில் பிரதம நீதியரசருக்கு மேலதிகமாக அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதிபதிகள் பெயரிடப்பட்டுள்ளனர்.

Zameera

நேபாளத்தில் பேரழிவு - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 939 ஆக அதிகரிப்பு


 நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக அதிகரித்துள்ளதுடன், காணாமல் போனோரின் எண்ணிக்கை 4,250 ஆக உயர்ந்துள்ளது.




திபெத்–நேபாள எல்லையில் ஏற்பட்ட பெரும் பனிப்பாறைச் சரிவைத் தொடர்ந்து, கடந்த மாதம்-


 26ஆம் திகதி லெண்டே நதியில் ஏற்பட்ட வெள்ளம் போடே கோஷி நதியில் பெருக்கெடுத்தது. இதனால் கரையோர கிராமங்கள் மற்றும் சிறு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், வீதிகள் மற்றும் நீர்மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.




போடே கோஷி நதியின் வெள்ளம் திரிசூலி மற்றும் நாராயணி நதிகளிலும் கலந்ததால் ரசுவா, நுவாகோட், சித்வன், நவல்பராசி, கோர்கா மற்றும் தனாஹு உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது.




வெள்ளத்தில் 85 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் 320 வெளிநாட்டவர்கள் உட்பட 4,250 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதனிடையே, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் கண்டக் ஆற்றில் அடையாளம் காணப்படாத மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆணின் சடலங்கள் மீட்கப்பட்டு நேபாள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.




மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரசுவா பகுதியில் சிக்கியிருந்த மூன்று இந்தியர்களை நேபாள இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக நேபாளத்துக்கான இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.




வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன.

Zameera

13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – 20 வயது இளைஞன் கைது


 13 வயது சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 20 வயதுடைய இளைஞன் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.


 


பிங்கிரிய, ஹிருவெல்பொல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


 


துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் தந்தை தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டிலிருந்த அவரது தாய் கடந்த மாதம் 01 ஆம் திகதி நாட்டிற்குத் திரும்பியுள்ளார்.


 


தாய் வெளிநாட்டில் இருந்த காலத்தில், சிறுமி தனது பாட்டி, சித்தி மற்றும் சகோதர சகோதரிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.


 


கைது செய்யப்பட்ட இளைஞரும் அவர்களுடன் அதே வீட்டில் வசித்து வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


 


வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பங்களில் சந்தேகநபர் தன்னைத் தொடர்ச்சியாகப் பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தியதாகச் சிறுமி, நாட்டிற்குத் திரும்பிய தனது தாயிடம் தெரிவித்துள்ளார். அதற்கமைய தாய் அளித்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


 


பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக வைத்தியப் பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.


 


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மாதம்பே பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Zameera

எல் நினோ தாக்கம் - இலங்கையில் ஆண்டிறுதியில் அதிக மழைக்கு வாய்ப்பு

 

தற்போது நிலவும் எல் நினோ காலநிலை நிலைமை காரணமாக, இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் வழக்கத்தை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நீர்நிலைகள் நிரம்பி வழிதல் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ள

ஆசிய பிராந்திய நாடுகளில் எல் நினோ காலநிலை நிலைமையால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய மதிப்பீட்டு அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, எல் நினோ நிலைமை காரணமாக கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில் வறட்சியைக் காட்டிலும் அதிக மழைவீழ்ச்சியே பிரதான காலநிலை அபாயமாகக் காணப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும், டிசம்பர் முதல் பெப்ரவரி வரையான காலப்பகுதியில் வடகிழக்கு பருவக்காற்று தீவிரமடைவதால் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, காலநிலை அபாயங்களுடன் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியின் தாக்கமும் இணைந்து இலங்கையின் பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Zameera

வைத்திய அதிகாரிகளுக்கான இடைநிலைத் தரநிலை: 6 பேர் கொண்ட குழு நியமனம்


 வைத்திய அதிகாரிகளுக்காக இடைநிலைத் தரநிலை ஒன்றை உருவாக்குவது குறித்த யோசனையை ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக 6 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.


 


சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் பணிப்புரைக்கு அமைவாக, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


 


இந்தக் குழுவின் தலைவராகச் சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி நியமிக்கப்பட்டுள்ளார்.

 


குழுவின் செயலாளராக வைத்தியர் அமில சுரங்க நியமிக்கடைந்துள்ளதுடன், வைத்தியர் டபிள்யூ.கே. விக்ரமசிங்க, வைத்தியர் சமிந்த சமரகோன், சிரேஷ்ட பேராசிரியர் எச்.டி.என்.பி. ஓபாத மற்றும் சிரேஷ்ட பேராசிரியர் திலீப் டி சில்வா ஆகியோர் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.


 


இந்த நிபுணர் குழுவின் மூலம் இடைநிலைத் தர நிலையை வரையறை செய்தல், அதில் உள்ளடங்கும் மருத்துவ நிபுணத்துவத் துறைகளை அடையாளம் காணுதல், வைத்திய அதிகாரிகளை உரிய துறைக்குத் தெரிவு செய்யும் நடைமுறை, அவர்கள் அங்கு சேவை ஆற்ற வேண்டிய கால எல்லை, அவர்களுக்கு உரித்தாகும் நன்மைகள் மற்றும் இடமாற்றச் செயற்திட்டம் குறித்து விரிவான ஆய்வொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.


 


உரிய தொழிற்சங்கங்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொண்டு ஒரு மாதத்திற்குள் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சிடம் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு அந்தக் குழுவிற்குக் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Zameera

22ஆவது திருத்தம்: ஜனாதிபதியின் அறிவிப்பு பொறுப்பற்றது – ரஜீவ் அமரசூரிய


 “ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களின் பிரதிநிதி. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு மக்கள் எதிர்ப்பு வெளியிடுகிறார்களென்றால், இல்லை இதனை எவ்வாறாவது நிறைவேற்றுவேன், இடைநிறுத்த மாட்டேன் என்று ஜனாதிபதி கூற முடியுமா? ஜனாதிபதியும் மக்களின் நம்பிக்கை அடிப்படையிலேயே செயலாற்றுகிறார். மக்கள் தரப்பிலிருந்து இவ்வளவு எதிர்ப்பு வரும்போது, எவ்வாறாவது நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி கூறுகிறாரென்றால் அது பொறுப்பற்ற அறிவிப்பாகும்” என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.




22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையொன்று கொழும்பிலுள்ள சட்டத்தரணிகள் சங்க பிரதான அலுவலகத்தில் நேற்று (31) இடம்பெற்றது. அந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.




அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,




‘‘சட்டத்தரணிகளாகிய எங்களுக்கும் எல்லை இருக்கிறது. இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கிறார்கள் என்பதை அவரே கூறியிருக்கிறார். எனவே, எங்களால் முடிந்த வகையில் எங்களின் எதிர்ப்பை முன்வைப்போம்.




22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதா இல்லையா என்பதை உயர் நீதிமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டும். ஆரம்பத்தில் இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை உயர்நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றால் உயர்நீதிமன்ற தரப்பினரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகுவார்கள் என்று ஜனாதிபதியிடம் கூறியிருந்தோம்.




எனவே, இந்த அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது அவசியமென்று உயர்நீதிமன்றத்தில் நாங்கள் மனுத்தாக்கல் செய்திருக்கிறோம். வழக்கு விசாரணைகளை உயர்நீதிமன்றம் இந்த வாரத்தில் ஆரம்பிக்குமென எதிர்பார்க்கிறோம். அந்தச் சந்தர்ப்பத்திலேயே என்னவாகும் என்பதை அவதானிக்க முடியும்.




எல்லா சந்தர்ப்பங்களிலும் வேறு வேறு விடயங்களை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. தற்போதும் அதனையே இந்த அரசாங்கம் செய்ய முயற்சிக்கிறது. கொள்கை அடிப்படையில், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.




இது தற்போதுள்ள பிரச்சினை மாத்திரமல்ல. அரசியலமைப்பை திருத்தும்போது, மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை நீண்டநாள் தொடர் பிரச்சினையாக மாறும் என்பதில் ஐயமில்லை. மக்களையும் பாதிக்கும்.




நீதிமன்ற சுயாதீனத்தன்மை என்பது உன்னதமான கருத்தாடல். அந்த கருத்தாடலுக்கு ஆபத்து அல்லது பிரச்சினை ஏற்படுமாக இருந்தால் கட்டாயம் நாங்கள் அதற்கு எதிர்ப்பை வெளியிடுவோம். நாங்கள் அறிந்த வகையில், கொள்கை அடிப்படையில் அந்த அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆளுந்தரப்பினரிலும் அநேகமானவர்கள் அவர்களின் எதிர்ப்பை வெளியிடுகிறார்கள் என்று கருதுகிறேன்.




நாட்டை ஆதரிக்கும் ஜனநாயகம், சட்டவாட்சி, நீதிமன்ற சுயாதீனத்தை மதிக்கும் எந்தவொரு நபரும் இதுபோன்ற திருத்தத்துக்கு இணக்கம் தெரிவிக்க மாட்டார்கள். சில பிரச்சினைகளுக்கு சரியான பதிலெதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.




இந்தத் திருத்தம் தொடர்பில் எங்களுக்கு இருக்கும் கொள்கை அடிப்படையிலான பிரச்சினைகளை முன்வைத்தே இருக்கிறோம். அவரும் அவரது தரப்பு நியாயத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், அவருடனான பேச்சுவார்த்தையில் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.




தற்போதும் கூட நாங்கள் ஒன்றுகூற ஜனாதிபதி அதற்கு மாறான வேறொரு நிலைப்பாட்டையே வெளிப்படுத்துவார். இன்னும் இந்தக் கலந்துரையாடல் நடுநிலைக்கு வரவும் இல்லை.




அரசாங்கத் தரப்பைத் தவிர்ந்த ஏனைய சகலத் தரப்பினரும் இதற்கு அவர்களின் எதிர்ப்பையே வெளிப்படுத்துகிறார்கள். சர்வதேச மட்டத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமே வேறு யார் எதிர்ப்பு வெளியிட வேண்டும் என்பது புரியவில்லை.




அரசாங்கத் தரப்பினர் மாத்திரமே இதற்கு ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள். இவ்வாறான எதிர்ப்புகள் இருக்கும்போது அப்படியொரு அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதற்கான கட்டாயத்தேவை என்னவிருக்கிறது என்பது புரியவில்லை.




ஜனாதிபதி நாட்டு மக்களின் பிரதிநிதி. மக்கள் எதிர்ப்பு வெளியிடுகிறார்கள் என்றால், இல்லை இதனை எவ்வாறாவது நிறைவேற்றுவேன். இடைநிறுத்த மாட்டேன் என்று ஜனாதிபதி கூற முடியுமா? ஜனாதிபதியும் மக்களின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே செயலாற்றுகிறார்.




மக்கள் தரப்பிலிருந்து இவ்வளவு எதிர்ப்பு வரும்போது, எவ்வாறாவது நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி கூறுகிறார் என்றால் அது பொறுப்பற்ற அறிவிப்பாகும்’’ என்றார்.

Zameera

இன்றைய வானிலை முன்னறிவிப்பு


 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.



ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.



நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது.



மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.



இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 



சூரியனின் தோற்ற தென்திசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. 


 


அதற்கிணங்க இன்று (01ஆம் திகதி) நண்பகல் 12.10 அளவில் கல்பிட்டி, தலாவ, சிங்காரகம, கல்கடவல, நாச்சதுவ, படிகாரமடுவ, கோமரன்கல்ல மற்றும் வெருகல் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. 

 

Monday, August 31, 2026

ShortNews

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக NPP-யின் லால் விஜேநாயக்க உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!


தேசிய மக்கள் சக்தியின் (NPP) நிறைவேற்றுக் குழு உறுப்பினரான லால் விஜேநாயக்க, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த அரசியலமைப்புத் திருத்தம் மக்களின் அங்கீகாரத்திற்காக பொதுவாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு அவர் உச்ச நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான நிலைப்பாட்டை வெறுமனே அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான போட்டியாக சித்தரிப்பது பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக விஜேநாயக்க அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இப்போராட்டம் நீதித்துறையின் சுயாதீனத்தைக் காப்பதற்கும், ஒழுக்கமான சமூகத்தில் வாழ்வதற்கான மக்களின் உரிமையைப் பாதுகாப்பதற்குமான போராட்டம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மக்கள் முன்னிலையில் உள்ள தெரிவு, ஒரு அரசியல் கட்சியைப் பாதுகாப்பதா என்பதல்ல. மாறாக, நீண்டகால அர்ப்பணிப்பு மற்றும் போராட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட, எதிர்கால தலைமுறையினருக்கு ஒழுக்கமான சமூகத்தில் ஒழுக்கமான குடிமக்களாக வாழும் உரிமையைப் பாதுகாப்பதா என்பதேயாகும்.”

தனது தனிப்பட்ட மனுவுக்கு மேலதிகமாக, ‘Lawyers for Democracy’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் ஸ்தாபக உறுப்பினருமான விஜேநாயக்க, அந்த அமைப்பின் ஊடாகவும் மற்றுமொரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அரசியலமைப்பின் 3ஆவது உறுப்புரையுடன் முரண்படுவதாகவும், எனவே அது பொதுவாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஏற்கனவே பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ShortNews

அதிவேக நெடுஞ்சாலை வருமானம் கடந்த வாரத்தில் 40 கோடியை கடந்தது!


கடந்த வாரத்தில் மட்டும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் 408 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த 24 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பிற்குச் சொந்தமான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு வெளிவட்ட வீதி, கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்களின் எண்ணிக்கை 1,095,895 ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த ஐந்து நாள் விடுமுறைக் காலத்தில் மட்டும் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 355 மில்லியனுக்கும் அதிகமான சாதனை வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Zameera

வெப்பமான வானிலை குறித்து வெளியான எச்சரிக்கை




 நாட்டின் பல பகுதிகளுக்கு, நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில், வெப்பமான வானிலைக்கான 'அம்பர்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் மொணராகலை மாவட்டத்திலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் 'கவனம்' (Caution) செலுத்த வேண்டிய மட்டத்தை எட்டும் என இயற்கை பேரிடர்கள் முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.




எனவே பொதுமக்கள் போதியளவு நீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளுமாறும், அதிக சிரமமான வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளுமாறும், முடிந்தவரையில் நிழலான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




அத்துடன், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.




பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், நிலவும் வானிலை குறித்து விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ShortNews

பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவிப்பு!


2027 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் நாளை (01) முதல் ஆரம்பமாகும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

துப்பாக்கி உரிமங்களைக் கொண்டுள்ள அனைத்து தனிநபர்களும் நிறுவனங்களும் 2026 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் தங்களது உரிமங்களைப் புதுப்பிப்பது கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்லுபடியாகும் உரிமம் இன்றி துப்பாக்கியை வைத்திருப்பது, துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் 22வது பிரிவின் விதிகளுக்கு அமைய குற்றமாகும் என அமைச்சு எச்சரித்துள்ளது.

எனவே, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உரிமங்களைப் புதுப்பிக்கத் தவறும் துப்பாக்கி உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2026.09.01 முதல் 2026.12.31 வரை இடைப்பட்ட காலப்பகுதியில் பதிவுகளைப் புதுப்பிக்கத் தவறுகின்ற தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களுக்குத் தாமதக் கட்டணம் விதிக்கப்படும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காகக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்னர் உரிய புதுப்பித்தல்களை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடமும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ShortNews

பிரதமராகும் எண்ணம் துளியும் இல்லாதவர் விஜய் - வைகோ!


தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதை தவிர்த்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்தலில் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை நடவடிக்கை ஜனநாயகத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை கைவிட வேண்டும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

ShortNews

நேபாள சுரங்க மீட்புப் பணியில் இணைந்தது இந்திய நிபுணர் குழு!


நேபாளத்தில் வெள்ளத்தால் நீர்மின் நிலையப் பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில், அந்நாட்டு இராணுவத்துடன் இணைந்து இந்திய சுரங்க மீட்பு நிபுணர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

போடே கோஷி மற்றும் திரிசூலி நதிகளுக்கு அருகிலுள்ள நீர்மின் நிலையங்களில் பலர் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்க உதவுவதற்காக இந்திய சுரங்க மீட்பு தொழில்நுட்ப நிபுணர் குழு ஞாயிற்றுக்கிழமை நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீர்மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நேபாள இராணுவத்துடன் இணைந்து இந்திய நிபுணர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன், இந்தியாவிலிருந்து மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட 68.5 தொன் நிவாரணப் பொருட்கள் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், மரபணு பரிசோதனைகளுக்கு உதவ தடயவியல் நிபுணர் குழுவும் அனுப்பப்பட்டுள்ளது.