
Monday, August 24, 2026

கடந்த கால மின் கட்டண உயர்வுக்கு அனல் மின் உற்பத்தியே காரணம்
அனல் மின் உற்பத்தியைக் குறைப்பதற்குக் நடவடிக்கை எடுத்தால், மின்சாரக் கட்டண மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கே. பி. எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணம் மாற்றமடைந்தமைக்கு அனல் மின் உற்பத்திக்கு அதிக செலவானதே காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
பல்வேறு சக்தி மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வது தொடர்பில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சூரிய சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும் போது, இன்னும் அனல் மின்சாரத்தைப் பெறுவது பொருத்தமான நிலைமை அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தேவையற்ற முறையில் அந்நியச் செலாவணி வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் காரணமாக அமைவதுடன், உலகச் சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்புடன் தீர்வை மதிப்புகளும் மாறுபடுவதால், அது மின்சாரக் கட்டண மாற்றத்திற்கும் வழிவகுக்கும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

22ஐ சவாலுக்கு உட்படுத்தி 21 மனுக்கள் தாக்கல்!
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தை சவால் செய்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
'வினிவித' அமைப்பின் பொருளாளர் சுனில் ஜெயசுந்தர, கலாநிதி அஜந்தா பெரேரா, சட்டத்தரணி ஷிரால் லத்திலக, இளம் சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த சட்ட மூலத்தை சவால் செய்து இதற்கு முன்னர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பேராசிரியர் ரஞ்சன் அபேரத்ன உள்ளிட்டோரும் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக மக்களின் இறையாண்மை மற்றும் நீதிமன்றத்தின் சுதந்திரம் என்பன பாதிக்கப்படுவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, அதனை நிறைவேற்றுவதற்குத் தேவைப்படின் குறித்த சட்ட மூலம் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பு வழங்குமாறு மனுக்களில் கோரப்பட்டுள்ளது.

எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் சரி கடுமையான நடவடிக்கை எடுக்க நாங்கள் தயார்!
"எப்போதும் நிலக்கரி பற்றியும், கன்டெய்னர்கள் (Container) பற்றியும் பேசுகிறார்கள்... நமது அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருந்தால், அதை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை, முடிவெடுக்க நாங்கள் தயார்." - பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை:
நாட்டில் போதைப்பொருளை முற்றிலும் ஒழிப்பதற்கான தேசிய இயக்கம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு முந்தைய அரசியல்வாதிகள் மற்றும் சில அதிகாரிகளுக்குத் தொடர்பு இருந்தது.
தற்போதைய அரசில் உள்ள 160 மக்கள் பிரதிநிதிகளுக்கும் (ஜனாதிபதி உட்பட) போதைப்பொருள் வியாபாரிகளுடன் எந்தவித அரசியல் தொடர்பும் இல்லை.
நாட்டில் 25% ஆக இருக்கும் வறுமையை ஒழிப்பதற்கு "ப்ரஜா ஷக்தி" (Praja Shakthi) போன்ற திட்டங்கள் மூலம் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில்:
நிலக்கரி கொள்முதல், கன்டெய்னர் விவகாரம் அல்லது 2.5 மில்லியன் டொலர் மோசடி என எதுவாக இருந்தாலும், அதில் இந்த அரசாங்கத்தைச் சேர்ந்த எவருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.
அரசாங்கத்தில் உள்ள யாராவது ஊழல் அல்லது முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தால், அதை மற்றவர்கள் சுட்டிக்காட்டும் வரை நாங்கள் காத்திருக்க மாட்டோம்.
அவர்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும், கட்சி மற்றும் அரசியலில் இருந்து அவர்களை நீக்கி கடுமையான நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

காங்கோவில் வேகமாகப் பரவும் எபோலா – 2,642 பேர் உயிரிழப்பு
மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,642 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,515 ஆக அதிகரித்துள்ளது. ,
காங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு சுகாதாரத்துறை திணறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து எபோலா வைரசை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு காங்கோவுக்கு 16 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.

பதுளை வைத்தியரின் மரணம் : தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம்
சடலமாக மீட்கப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
காணாமல் போயிருந்த பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் பிரபாத் அநுராத தயாரத்னவின் சடலம் பொலிஸாரால் இன்று (24) முற்பகல் மீட்கப்பட்டது.
இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, பதுளை - மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டைக்கு அருகிலுள்ள அடர்ந்த புதர் பகுதியில் வைத்து இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியரான பிரபாத் அநுராத தயாரத்ன நேற்று (23) முற்பகலில் இருந்து காணாமல் போயுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதன் பலனாக, வைத்தியரின் கார் பதுளை - மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் வைத்து நேற்றிரவு (23) கண்டெடுக்கப்பட்டது.
இதற்கமைய, காணாமல் போன வைத்தியரைத் தேடும் நோக்கில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து அப்பகுதியில் கூட்டுத் தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்தனர்.
இதன்போது, காணாமல் போன வைத்தியரின் சடலம் அப்பகுதியிலுள்ள அடர்ந்த புதருக்குள் சுமார் 800 மீற்றர் உட்புறமாக அமைந்திருந்த பாறையொன்றின் மீது கிடந்த நிலையில் இன்று (24) காலை கண்டெடுக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்து 3 வகையான மருந்துகளையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
இதற்கமைய, அந்த மாத்திரைகளை உட்கொண்டு வைத்தியர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், அவர் நீண்டகாலமாக மன அழுத்தத்திற்காக மருந்துகளை உட்கொண்டு வந்துள்ளமையும் பொலிஸாரால் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டில் 94,037 டெங்கு நோயாளர்கள் அடையாளம்
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,962 ஆகும்.
அத்துடன், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஒகஸ்ட் மாதத்தில் இதுவரை 8,701 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
ஜனவரி மாதத்தில் 7,866 பேரும், பெப்ரவரி மாதத்தில் 5,721 பேரும், மார்ச் மாதத்தில் 6,013 பேரும், ஏப்ரல் மாதத்தில் 5,651 பேரும், மே மாதத்தில் 8,590 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
நாட்டின் மொத்த டெங்கு நோயாளர்களில் 52.93 சதவீதமானோர், அதாவது 49,771 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக, தென் மாகாணத்தில் 13,763 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,519 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்ட மட்டத்தில் நோக்கும் போது, அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 20,034 ஆகும்.
கொழும்பு மாவட்டத்தில் 18,652 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் மாத்திரம் 3,787 நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர்.
மேலும், கண்டி மாவட்டத்தில் 6,818 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 6,093 பேரும், காலி மாவட்டத்தில் 6,079 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 5,160 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 5,003 பேரும், கேகாலை மாவட்டத்தில் 2,713 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 2,651 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2,510 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
நாடு முழுவதும் அதிக அபாயம் உள்ள 76 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
டெங்கு நுளம்பு பெருகும் இடங்களைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், காய்ச்சல் நிலை காணப்பட்டால் தகுதியான மருத்துவரிடம் தாமதமின்றி சிகிச்சை பெறுமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களை அறிவுறுத்துகின்றனர்.

537 சந்தேகநபர்கள் கைது
நாடு முழுவதும் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள குற்ற மற்றும் போதைப்பொருள் தடுப்பு நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் மேலும் 537 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (23) 27,001 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்களில் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 147 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 50 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 89 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஏனைய வீதிப் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 4,126 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.




