கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களுடன் தாய்லாந்துப் பெண்கள் மூவர் கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் "குஷ்" மற்றும் "ஹஷீஷ்" ஆகிய போதைப்பொருட்களைக் கடத்தி வந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 3 பெண்கள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தாய்லாந்தின் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களான 31, 36 மற்றும் 38 வயதுடையவர்கள் ஆவர்.
இவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை 12:50 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து தாய் எயார்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான TG-307 என்ற விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
சந்தேக நபர்கள் கொண்டுவந்த பயணப்பொதிகளைச் சோதனையிட்டபோது, கூடுதல் ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் கொலாஜன் போத்தல்களுக்குள்ளும், வெளிப்புறத்தில் சவர்க்கார பாக்கெட்டுகள் போலத் தோற்றமளிக்கும் காற்றுப் புகாத பொதிகளுக்குள்ளும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான 5 கிலோகிராம் 214 கிராம் "குஷ்" போதைப்பொருளும், 2 கிலோகிராம் 472 கிராம் "ஹஷீஷ்" போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட 3 பெண்களும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியும் மேலதிக விசாரணைகளுக்காக இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மேலும், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.










