Our Feeds



Tuesday, August 11, 2026

ShortNews

நெல் இருப்புகளை சதொச மூலம் அரிசியாக்க திட்டம் - அரசாங்கம் அதிரடி தீர்மானம்!


நெல் சந்தைப்படுத்தல் சபை வசமுள்ள நெல் இருப்புகளை, கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம்(சதொச) மூலம் அரிசியாக மாற்றி சந்தைக்கு விநியோகிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2026-07-22 ஆம் திகதி நடாத்தப்பட்ட 34 ஆவது உணவுப் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுக்கூட்டத்தில், அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்யும் நடைமுறைக்கு வசதிகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ShortNews

மலையக தமிழர்களின் காணி உரிமை தொடர்பில், அரசு பேசி பேசியே காலம் கடத்துகிறது!



இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் காணி உரிமை தொடர்பில், அரசு பேசிய பேசியே காலத்தை கடத்துகிறது. இப்போது புதிய, "மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை” (Central Highlands Protection Authority) என்ற ஒரு புதிய புரளி-சபையை கொண்டு வந்து, “காலநிலை, மண்சரிவு, நீர் பிடிப்பு”, என்று விற்பனை ஆகும் சொற்களை சந்தை படுத்தி, ஒட்டு மொத்த பெருந்தோட்ட வாழ் மலையக தமிழருக்கும் காணி உரிமையை தந்திரமாக மறுக்கவும், அவர்களை வெளி பலான இடங்களில் குடியேற்றவும், தொடர்மாடி வீடுகளை கட்டி குடியேற்றவும், என்பிபி அரசு திட்டம் இடுகிறது.

இது இவர்களது பழைய ஜேவிபி கொள்கை. இதற்கு இவர்கள் இன்று, ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கை ஐநா அலுவலகம், ஆகிய சர்வதேச நிறுவனங்களை தந்திரமாக பயன்படுத்த முயல்கிறார்கள். 

காலநிலை, மண்சரிவு, நீர் பிடிப்பு, ஆகிய உன்னத விஷயங்களை தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்கிறது. ஆனால், இவை எமது மக்களின் காணி உரிமைக்கு குந்தகம் விளைவிக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இலங்கையில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தேச இயக்குனர் ஷனென் கோவ்லின் தலைமையிலான வங்கி குழுவினரிடம்  தெளிவாக தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று, ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில், மனோ கணேசனுடன், தமுகூ அரசியல் குழு உறுப்பினர்கள் பேராசிரியர் விஜயசந்திரன், சட்டத்தரணி பாரத் அருள்சாமி, பொறியிலாளர் பிரஜீவன் ஆகியோரும், ஏடிபி சார்பில் இயக்குனர் ஷனென் கோவ்லின், தேச செயற்பட்டு தலைவர் சொல்பொன் மம்பேடோவா உட்பட உயர் மட்ட குழுவினர் இடம் பெற்றனர். 

ஏடிபி குழுவினருக்கு மனோ எம்பி மேலும் கூறியுள்ளவை தொடர்பில், தமுகூ ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள  செய்தி அறிக்கையில் கூற பட்டுள்ளதாவது;       

இலங்கையின் ஏனைய மக்களுடன் ஒப்பிடுகையில், மலையக மக்கள் வளர்ச்சி குன்றிய பிரிவினர். இதற்கு வரலாற்று காரணங்கள் உள்ளன. எமது மக்களுக்கு 2003 ஆண்டு தான் கடைசி தொகுதி குடியுரிமையே கிடைத்தது. 

ஆகவே நாம் ஆரம்பித்த புள்ளி தாமதம் ஆனது. ஆகவே வளர்ச்சியும் தாமதம் ஆனது. இன்று எமது குடியுரிமை முழுமை அடைய வேண்டும் என்றால், எமது காணிக்கான உரிமை உறுதி படுத்த பட வேண்டும். காணி  உரிமை இல்லாவிட்டால், எமது குடியுரிமை முழுமை அடையாது. அது கிடைத்தால், ஏனைய உரிமைகள் படிப்படியாக வந்து சேரும்.

இன்று ஆளும் அரசு, “மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை” (Central Highlands Protection Authority) என்ற புதிய யோசனையை முன்வைத்து, சட்டபூர்வமாக அதை உருவாக்க முனைகிறது. இதன் மூலம், மலைநாட்டு காலநிலை, மண்சரிவு, நீர் பிடிப்பு, ஆகிய விஷயங்களுக்காக இதை செய்ய போவதாகவும், அதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உதவ போவதாகவும் கூறுகிறது.

மலைநாட்டின் நீர்வளங்கள், காடுகள், உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் சூழலியல் அமைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. 

ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் வாழ்விட உரிமையும் காணி உரிமையும் பறிக்கப்படக்கூடாது. அதுவே இன்று நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வியாகும்.

மலையக மக்கள் பாரம்பரியமாக சில பெருந்தோட்ட மாவட்டங்களில் மட்டுமே வாழ்கின்றனர் என்ற தவறான அணுகுமுறையை அரசு கவனத்தில் கொள்கிறது.  உண்மையில், மலையக மக்கள் 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரவலாக வாழ்கின்றனர். 

நுவரெலியா, கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களுடன், இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, மொனராகலை, கொழும்பு/அவிசாவளை, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் குருநாகல் உள்ளிட்ட கீழ் நாட்டு மாவட்டங்களிலும் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அரசாங்க கட்சியான ஜேவிபி, மலையக மக்களின் காணி உரிமைக்கான கோரிக்கையை சித்தாந்தரீதியாக பாரம்பரிரயமாக நிராகரித்து வந்ததுடன், அதற்கு பதிலாக பெருந்தோட்டக் காணிகளை மீளக் காடாக்கும் (reforestation) கருத்தை முன்னிறுத்தி வந்துள்ளது. இந்த திட்டத்தின் பின்னணி இதுவா? என்ற பலத்த சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.

நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் சில மலை உச்சி பகுதிகளும் சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் கொண்ட பகுதிகளும் உயர் மலைநாடு (Highlands) என அடையாளப்படுத்த பட்டு பாதுகாக்கப்பட வேண்டியிருக்கலாம். ஆனால், முழு பெருந்தோட்ட பகுதிகளையும் பாதுகாக்க பட்ட காணிகளாக கருதுவது, மலையக மக்களின் நியாயமான காணி உரிமையை மறுக்கும் நிலைக்கு கொண்டு செல்லக்கூடும்.

எமது தலையீடுகளின் விளைவாக, பெருந்தோட்டங்களில் வீடமைப்பதற்காக இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்குவதற்கு இணங்கியுள்ளது. நிதி தயாராக உள்ளது. ஆனால் காணி வழங்கப்படவில்லை. பெருந்தோட்ட நிறுவனங்களால் காணி விடுவிக்கப்படாததற்கு அடிப்படையான காரணம், மலையக மக்களின் காணி உரிமை தொடர்பாக அரசாங்கத்திடம் இன்னமும் தெளிவான கொள்கை இல்லாததே ஆகும்.

கீழ்நாட்டு பெருந்தோட்டங்களில் வாழும் மலையக குடும்பங்களுக்கு வீடமைப்பிற்கான காணி துண்டுகளை உடனடியாக ஒதுக்குமாறு அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம். 

நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களின் மலை உச்சி பகுதிகளை தவிர்த்து, நெடுஞ்சாலைகளுக்கு அருகாமையில் பாதுகாப்பான இடங்களில் வீடமைப்பிற்கான காணிகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் நாம் கோருகிறோம்.

மேலும் பாதுகாப்பான குடியிருப்புகளை பற்றி பேசும் அரசு, மலைகளில், தொடர்மாடிகள் கட்டி, எமது மக்களை அங்கே குடியமர்த்த போடும் திட்டம்களையும் நாம் நிராகரிக்கிறோம்.

இது உட்பட, சிறுபான்மை சமூகத்தின் காணி உரிமை, வாழ்விட உரிமை, ஆகியவற்றை உதாசீனம் எந்தவித முயற்சிக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி துணை போய் விட கூடாது. உங்கள் நல்லெண்ண உதவிகள் முறையற்று பயன்படுத்த இடம் கொடுத்து விட கூடாது.


இது பற்றி தெளிவு படுத்த, நான் எமது குழுவினருடன், இலங்கை ஐநா வதிவிட பிரதிநிதியை மீண்டும் சந்திக்க உள்ளேன். ஏனைய சர்வதேச பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளேன்.


மது முன்வைப்புகளை செவி மடுத்த, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தேச இயக்குனர் ஷனென் கோவ்லின் தலைமையிலான குழுவினர், இந்த முக்கிய விவகாரங்களை தம் கவனத்துக்கு கொண்டு வந்தமைக்காக, தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு நன்றி தெரிவித்தனர். சிறுபான்மை மக்களின் காணி, கலாச்சார உரிமைகளை மறுக்கும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் தமது நிறுவனம், ஒருபோதும் துணை போகாது என்றும், இவற்றை தாம் அரசுடன் முன்னேடுக்கும் திட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் கவனம் செலுத்துவதாகவும் உறுதி அளித்தனர்.

ShortNews

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் உயர் நீதிமன்றமே தீர்மானிக்கும் - நளிந்த ஜயதிஸ்ஸ!


அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமா, அல்லது சாதாரண பெரும்பான்மை போதுமா, அல்லது பாராளுமன்ற பெரும்பான்மையுடன் மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டுமா என்பதை உயர் நீதிமன்றமே தீர்மானிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ShortNews

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!


சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல் - அசாத் மற்றும் அவரது இளைய சகோதரருக்கு மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிரிய நீதிமன்றமொன்றினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அசாத் மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் விசாரணை நடத்தப்பட்டு இம்மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஐந்து இலட்சம் பேர் உயிரிழந்த 14 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பிலேயே இவர்களுக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு தாரா (Daraa) பகுதியில் இடம்பெற்ற போராட்டங்களை அடக்குவதற்கு தலைமை தாங்கிய அசாத்தின் உறவினரான ஆட்டெஃப் நஜீப் (Atef Najib) என்பவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அசாத்தும் அவரது சகோதரரும் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட நஜீப் சிறைச்சாலை உடையில் நீதிமன்றக் கூண்டில் நின்றபோதே இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ShortNews

முத்துராஜவெலயில் புதிய 3 எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள் - அமைச்சரவை அனுமதி!


முத்துராஜவெல முனையத்தில் மூன்று புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை 3.04 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2,796.14 மில்லியன் இலங்கை ரூபா தொகைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய மொத்த சேமிப்பு முனைய நிறுவனத்தின் நிதியைப் பயன்படுத்தி 15,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளையும் 10,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட மற்றொரு எரிபொருள் சேமிப்புத் தொட்டியையும் அமைப்பதற்காக 2025 ஜூன் 2 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது சுற்றாடல், சட்ட மற்றும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்மானங்களை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர்களுக்கு அறிவுறுத்துவதற்கு 2026 ஜூலை 20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் விதிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கொள்முதல் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர்கள் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.

சர்வதேச போட்டித்தன்மை மிக்க விலைமனுக்களைக் கோரும் நடைமுறையின் கீழ் பெறப்பட்ட விலைமனுக்களில், உயர் மட்டக் கொள்முதல் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட குறைந்த விலைமனுதாரரான M/s Indo-East Engineering & Construction (Lanka) (Private) Limited மற்றும் Ceylex Engineering (Private) Limited கூட்டுப் பங்காளித்துவத்திற்கு இந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இவ்வொப்பந்தத்தின் பெறுமதி 3.04 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2,796.14 மில்லியன் இலங்கை ரூபாவாகும் என்பதுடன், இத்தொகை பெறப்பட்ட பெறுமதி கூட்டப்பட்ட வரியிலிருந்து (VAT) விலக்களிக்கப்பட்டதாகும்.

ShortNews

ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!


ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மீன்பிடி அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தின் மணலை அகற்றும் நடவடிக்கையை கொரிய நிறுவனமொன்றிடம் ஒப்படைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தியே, பிரதிவாதியான ராஜித சேனாரத்னவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ShortNews

கல்முனை வைத்தியசாலை விவகாரம் - இனப் பதற்றத்தை உருவாக்கும் செயல் - நிசாம் காரியப்பர்!



கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து கடமையேற்கச் சென்ற முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், இன ரீதியான பதற்றங்களை மீண்டும் உருவாக்கும் வகையிலான தனிநபர்களின் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் தலையை மூடிய ஆடையுடன் கடமையேற்கச் சென்ற புதிய முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களுக்கு, ஆடை விதிமுறையை மீறியதாகக் கூறி கடமையைப் பொறுப்பேற்க அனுமதி மறுக்கப்பட்டமை வேதனைக்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் பேசும் மக்களிடையேயும், இறுதியில் அனைத்து இலங்கையர்களிடையேயும் இனப் பிரிவுகளைக் கடந்து ஒற்றுமையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், இவ்வாறான சம்பவங்கள் கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக மக்களால் நிராகரிக்கப்பட்ட இனப் பதற்றங்களை மீண்டும் உருவாக்கும் வகையில் தனிநபர்களின் செயற்பாடுகள் அமைய ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனவும் நிசாம் காரியப்பர் வலியுறுத்தியுள்ளார்.

ShortNews

முஸ்லிம் விவாகர சட்டத்துக்கு தீர்வு அவசியம் - ஜம்இய்யத்துல் உலமா சபை!



முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்தம், காதி நீதிமன்ற விவகாரம், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விவகாரங்களுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டுமென ஜம்மிய்யத்துல் உலமா சபையினர் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலிஹ், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் முனீர் முளப்பர் உள்ளிட்ட அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவினர் நேற்று (10) அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபைக்கு வருகை தந்து நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினர்.


நீதித்துறை மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் விடயத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் புதிய மறுசீரமைப்புகள் தொடர்பாக ஜம்மிய்யா தரப்பினருக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, சமய விவகாரங்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புபட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் இருதரப்பினரிடையே பல ஆக்கபூர்வமான கருத்துகள் பரிமாறப்பட்டன.

குறிப்பாக முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்தம், காதி நீதிமன்ற விவகாரம், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விவகாரம், மூடப்பட்ட பள்ளிவாசல்கள் குறித்த விவகாரம், சமய நூல்கள் மற்றும் மொழிபெயர்ப்புகளை இறக்குமதி செய்வது தொடர்பான விவகாரம், கொவிட் 19 காலத்தில் கட்டாய தகனம் செய்யப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்கள் விவகாரம் மற்றும் அரச முஸ்லிம் பாடசாலைகள் தொடர்பான விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன் அவற்றுக்கான உரிய தீர்வுகளை பெறுவது குறித்தும் பேசப்பட்டன.

நிகழ்வின் இறுதியாக, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஜம்மிய்யாவினால் வெளியிடப்பட்ட அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு உள்ளிட்ட முக்கிய சில வெளியீடுகளும் கையளிக்கப்பட்டன.

இந்தச் சந்திப்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முப்தி எம்.ஐ.எம்.ரிஸ்வி, உப தலைவர் அஷ்ஷைக் உமர்தீன், உப பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.எஸ்.எம்.தாஸிம், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்ஷைக் எஸ்.எல்.நவ்பர், அஷ்ஷைக் ரிபாஹ் ஹஸன், அஷ்ஷைக் ஏ.எச்.எம்.அக்ரம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

SHAHNI RAMEES

இனவாதமாக செயற்பட்ட அதிகாரிகள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபையில் வலியுறுத்தல்

 


கல்முனை ஆதார வைத்தியசாலை சம்பவம்

ShortNews

சாகரவின் கருத்தை அரசியல் கோணத்தில் மட்டும் பார்க்க வேண்டாம் - நாமல்!


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்டுள்ள கருத்தையும் அதை கூறியவர் யார் என்ற அரசியல் கோணத்தில் மட்டும் பார்க்காமல், அதிலுள்ள செய்தியைக் கவனத்திற்கொள்ளவேண்டுமென பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தள கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் மேலும்,

எமது பொதுச் செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்டுள்ள கருத்தை, அதை கூறியவர் யார் என்ற அரசியல் கோணத்தில் மட்டும் பார்க்காமல், அதிலுள்ள செய்தியைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

பொலிஸ் என்பது ஆட்சியில் இருக்கும் எந்த அரசாங்கத்தினதும் அரசியல் கருவியாக மாறக் கூடாது.

அது அரசுக்கும் மக்களுக்கும் சேவை செய்யும் சுயாதீன நிறுவனமாக இருக்க வேண்டும். மக்களைப் பாதுகாக்கவும் சட்டத்தை நிலைநாட்டவும் மக்களின் உண்மையான தேவைகளுக்கு பதிலளிக்கவும் பொலிஸாரை பயன்படுத்துங்கள். கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கோ அல்லது அரசியல் கணக்குகளை தீர்ப்பதற்கோ பொலிஸாரை பயன்படுத்த வேண்டாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

ShortNews

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த ஜீவன் எம்.பி!


அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் வெள்ளப்பெருக்கு மற்றும் மன்சரிவினல் பாதிக்கப்பட்ட கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் (10) விஜயம் மேற்கொண்டார்.

கடந்த வாரம் ஏற்பட்ட கடும் மழை வெள்ளப்பெருக்கு மற்றும் மன்சரிவு காரணமாக கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட திம்புல்ல கீழ் பிரிவு, ஸ்டோனிக்கிளிப் கீழ் பிரிவு, ஸ்டோனிக்கிளிப் டி.பி டிவிசன் மற்றும் லொக்கில் டிவிசன் உள்ளிட்ட பகுதிகளில் பல குடியிருப்புகள் உள்ளிட்ட மக்களின் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி மண்டபங்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தற்காலிகமாக தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்த ஜீவன் தொண்டமான், அவர்களின் தற்போதைய நிலைமைகள், எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் அவசரத் தேவைகள் தொடர்பில் விரிவாக கேட்டறிந்தார்.

வெள்ளப்பெருக்கு மற்றும் மன்சரிவு ஏற்படக்கூடிய அபாயப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நீண்டகால அடிப்படையில் பாதுகாப்பான இடவசதிகளை ஏற்படுத்துவது அவசியம் என சுட்டிக்காட்டிய ஜீவன் தொண்டமான், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடங்களில் காணிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட பெருந்தோட்டக் கம்பனிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அத்துடன், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கத்தின் கவனத்திற்கு இந்த விடயங்களை கொண்டு சென்று, உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாள் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கேற்ப தொழில் அழுத்தங்களும் பணிச்சுமையும் அதிகரித்துள்ளதாகவும், இதனால் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மேலும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அரசியல் நிலைப்பாடுகளை கடந்து தொடர வேண்டிய பொறுப்பு என குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து மக்களின் தோளோடு தோள் நின்று பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்ததைப் போன்று, தற்போது எதிர்க்கட்சியில் இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்தும் முன்னிலைப்படுத்தி, அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அர்ப்பணிப்புடன் செயற்படும் என தெரிவித்தார்.

இந்த மக்கள் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பி. சக்திவேல், கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாந்த், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் ரவி குழந்தைவேல், இ.தொ.கா. காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் அணியின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

ShortNews

சிறைச்சாலை கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம் இருந்தால் எதற்கு அரசாங்கம்? - திலும் அமுனுகம!



சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் மோதல்களுக்கு எதிர்க்கட்சியினரே காரணம் என அரசாங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதுடன், சிறைச்சாலைக்குள் கலவரங்களை உருவாக்கும் அளவுக்கு எதிர்க்கட்சிக்கு அதிகாரம் இருக்குமாயின், நாட்டில் அரசாங்கம் ஒன்று எதற்கு என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (9) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அவ்வாறு தங்களுக்கு அத்தகைய அதிகாரம் இருக்குமெனின், அது அரசாங்கத்தின் நிர்வாகத் தோல்வியையே வெளிப்படுத்துவதாக அமையும். இதேவேளை, தற்போதைய அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது. விசேடமாக, நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மகாநாயக்க தேரர்கள், சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரும் தமது எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், எவருடைய கருத்துக்களுக்கும் செவி சாய்க்காது அரசாங்கம் தனது விருப்பத்தின்படி செயற்படுவது, நாட்டின் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதையே காட்டுகிறது என்றார்.

ShortNews

டெங்கு பரவல் தீவிரம் - 90 ஆயிரத்தை கடந்த பாதிப்பு!


நாட்டில் இந்த ஆண்டு பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

ஓகஸ்ட் 10ஆம் திகதி நள்ளிரவு நிலவரப்படி, நாட்டில் மொத்தமாக 90,306 டெங்கு தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,973 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஓகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் 4,959 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

மாவட்ட ரீதியில், கம்பஹா மாவட்டத்தில் 19,204 நோயாளர்கள் பதிவாகி அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது. இது மொத்த நோயாளர்களில் 21.27 சதவீதமாகும். கொழும்பு மாவட்டத்தில் 17,965 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தலா 6,971 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

நடப்பாண்டில் இதுவரை டெங்கு காரணமாக 65 மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன்படி, டெங்கு மரண விகிதம் 0.07 சதவீதமாக உள்ளது.

இந்நிலையில், டெங்கு பரவும் அபாயத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுவதுடன், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டு பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.