
Sunday, September 6, 2026

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம்
வறட்சியான வானிலையினால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த 35 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குத் தொடர்ந்தும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
வறட்சியான வானிலை காரணமாக இந்தப் பிரதேச செயலகப் பிரிவுகளுக்குள் உள்ள 113,354 நபர்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதில் அதிகபட்ச பாதிப்பு மொனராகலை மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ளதுடன், அந்த மாவட்டத்தின் 08 பிரதேச செயலகப் பிரிவுகளில் 12,732 குடும்பங்களைச் சேர்ந்த 41,360 நபர்களுக்குக் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் 11,142 குடும்பங்களைச் சேர்ந்த 33,394 நபர்களுக்கும், பதுளை மாவட்டத்தில் 5,435 குடும்பங்களைச் சேர்ந்த 20,418 நபர்களுக்கும் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வறட்சியான வானிலை காரணமாக இதுவரை 35,149 குடும்பங்களைச் சேர்ந்த 115,534 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதிகபட்ச பாதிப்பு மொனராகலை மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளது.
மேலும் அம்பாறை, அனுராதபுரம், பதுளை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கும் வறட்சியான வானிலையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் டெங்கு உயிரிழப்பு 73 ஆக அதிகரிப்பு
இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், நாடு முழுவதிலும் இதுவரை மொத்தம் 96,228 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
செப்டெம்பர் மாதத்தின் முதல் 04 நாட்களில் மட்டும் 737 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
குறிப்பிட்ட தரவுகளின்படி, ஜூலை மாதத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவ்வெண்ணிக்கை 29,964 ஆகும்.
இதற்கு மேலதிகமாக, ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஓகஸ்ட் மாதத்தில் 10,155 நோயாளர்களும், மே மாதத்தில் 8,590 நோயாளர்களும், ஜனவரி மாதத்தில் 7,866 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
மாகாண மட்டத்தில் அவதானிக்கும் போது, மேல் மாகாணமே அதிகளவிலான பாதிப்பைச் சந்தித்துள்ளதுடன், மொத்த நோயாளர்களில் 52.84% அதாவது 50,851 நோயாளர்கள் அங்கிருந்தே பதிவாகியுள்ளனர்.
அதேபோல், தென் மாகாணத்தில் 13,950 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,818 நோயாளர்களும், சபரகமுவ மாகாணத்தில் 7,925 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
Saturday, September 5, 2026

மைதானம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது – அமைச்சர் வசந்த சமரசிங்க
(க.சிவலிங்கமூர்த்தி)
அனுராதபுரத்தில் கூட்டமொன்றை நடத்துவதற்கு மைதானம் வழங்கப்படவில்லை எனக் கூறி நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், கிடைக்காத மைதானத்தைக் காரணம் காட்டி மக்களை ஏமாற்ற முயல்வதாகவும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டினார்.
அனுராதபுரம் - நாச்சாதூவ பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (04) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நகர சபைக்குச் சொந்தமான மைதானங்களில் ஒன்று பொலிஸ் அணிவகுப்புப் பயிற்சிக்காகவும், மற்றொன்று வேறு ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் முன்னரே பதிவு செய்யப்பட்டிருந்ததாலுமே வழங்க முடியாமல் போனது. முன்அனுமதி இன்றி மைதானங்களை ஒதுக்க முடியாது என்ற போதிலும், காலியாக இருக்கும் வேறு எந்தவொரு மைதானத்தையும் வழங்குவதற்கு நகர சபை தயாராகவே உள்ளது.
எனவே அனுராதபுரத்தில் கூட்டமொன்றை நடத்துவதற்கு மைதானம் வழங்கப்படவில்லை எனக் கூறி நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை
நாமல் இன்று கைது செய்யப்பட்டு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சட்டம் அனைவருக்கும் சமம். நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் எதிர்நோக்கும் சட்ட நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கல் அல்ல் நீதிமன்றத்தில் சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, சட்டவிரோதமாகச் சேர்த்த சொத்துகளை அரசுடைமையாக்குமாறு மக்கள் நமக்கு வழங்கிய அதிகாரத்தின் அடிப்படையில் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டு, இதுவரை 4,000 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள் அரசுக்குக் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
முன்பு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படும் போது பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி தப்பித்த கதைகள் இனி செல்லுபடியாகாது. 2024 செப்டம்பர் மாதத்தில் நாட்டின் சாதாரண மக்கள் வழங்கிய அதிகாரத்தின் அடிப்படையில், ரணில், மைத்திரி, கோட்டாபய என யார் என்ற வேறுபாடின்றி சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
நாங்கள் விரும்பிய எவரையும் சிறையில் அடைக்க முடியாது. 2011, 2012ஆம் ஆண்டுகளின் பழைய முறைப்பாடுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வெளிநாடுகளுக்குச் சென்று சாட்சியங்களைப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.
அத்துடன், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதிபதிகளின் சேவைக் காலத்தை இரண்டு ஆண்டுகள் நீடித்து, நீதித்துறையின் சுயாதீனத்தையும் திறனையும் உறுதிப்படுத்தவே அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

நாமல் ராஜபக்ஷ மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தது மொட்டு கட்சி
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், இக்ககுற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அரசியல் காரணங்களுக்காகவே சுமத்தப்பட்டுள்ளவை என்றும் தமது கட்சி நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இடம்பெறக்கூடிய ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதற்காகவே இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிக அதிகாரங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதே தவிர, அரசியலுக்கான ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு அல்ல என அந்த கடிதத்தில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நாட்டிலுள்ள சுயாதீன அரச நிறுவனங்கள் அரசியல் அச்சுறுத்தல்களுக்கான கருவிகளாகப் பயன்படுத்த முற்பட்டால், நாட்டையும் நாட்டின் ஜனநாயகத்தையும் மதிக்கும் அனைத்துப் பிரஜைகளும் அது குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களை ஒன்றிணைத்து எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் மக்கள் பேரணியொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த பின்னணியில், பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வார்கள் என கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை கேள்விக் குறியாக உள்ளதாகவும் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டபோதிலும், எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவிருந்த மக்கள் பேரணி அவர் எதிர்பார்த்தபடியே நடத்தப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2027 இறுதிக்குள் IMF திட்டத்திலிருந்து இலங்கை விலகும்
எதிர்வரும் 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்திலிருந்து விலகவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களின் திறனை அதிகரிக்கும் நோக்கில், தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அரசு அதிகாரிகளின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்ததாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.
இதற்கமைய, ஆரம்ப வரவுசெலவுத் திட்டங்கள் மூலம் பல கட்டங்களாக சம்பளம் உயர்த்தப்பட்டதுடன், வரவிருக்கும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவுத் திட்டம் மூலமும் சுமார் பத்தாயிரம் ரூபாவினால் சம்பளம் உயர்த்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
முன்னர் 17,000 ரூபாவாக இருந்த அரசு சேவையின் குறைந்தபட்ச சம்பளம், அடுத்த ஆண்டாகும்போது 40,000 ரூபாவைத் தாண்டும் வகையில் கணிசமான அளவில் உயரும் என்றும் அவர் கூறினார்.
அரசு ஊழியர்கள் சம்பளம் குறித்த அழுத்தமின்றி கடமையையாற்றுவது திறமையான சேவைக்கு அவசியமான ஒன்றாகும் எனவும், தற்போதைய பொருளாதாரத்தால் தாங்கக்கூடிய அதிகபட்ச அளவில் இந்த சம்பளத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து உரையாற்றிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத்:
"தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்ததும் முதன்முதலில் செய்தது அரசு சம்பளம் பெறும் அனைவரினதும் சம்பளத்தை உயர்த்தியமையாகும். முதலாவது வரவுசெலவுத் திட்டத்தில் சுமார் பத்தாயிரம் ரூபா உயர்த்தப்படுகிறது. இரண்டாவது வரவுசெலவுத் திட்டத்திலும் அதே அளவு உயர்த்தப்படுகிறது. மூன்றாவது வரவுசெலவுத் திட்டம் நவம்பர் மாதம் வருகிறது. நவம்பர் மாதம் அதே அளவால் உயர்த்தப்படும். அப்போது இதற்கு முன் சுமார் பதினேழாயிரம் ரூபாவாக இருந்த குறைந்தபட்ச சம்பளம், அடுத்த ஆண்டாகும்போது நாற்பதாயிரம் ரூபாவைத் தாண்டும் ஒரு சம்பள உயர்வாகும். அது சும்மா பேச்சளவிலான உயர்வு அல்ல. அரசு சேவையின் திறனை அதிகரிப்பதற்காகவே நாங்கள் அதைச் செய்தோம்...
நீங்கள் அழுத்தத்துடன் தொழில் செய்தால், குறிப்பாக சம்பளம் குறித்த அழுத்தத்திற்கு உள்ளானால், அதற்கு நாங்கள் உண்மையாகவே தீர்வை வழங்க வேண்டும். இல்லையெனில் உங்களது கடமை சரியாக நடக்காது. எனவே, இது ஒரு மிகப்பெரிய சம்பள உயர்வு என்றும், இதைவிட சம்பளத்தை உயர்த்த முடிந்தால் இன்னும் நல்லது என்றும் நாங்கள் நினைக்கிறோம். ஆனால் நமது நாட்டின் பொருளாதாரத்தால் தாங்கக்கூடிய அளவே இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்ததாக, குறிப்பாக 2027 முடிந்து நமது நாடு IMF இல் இருந்து விலகி, இதைவிட அதிக நிவாரணங்களை வழங்க அரசு எதிர்பார்க்கிறது." என்றார்.






