(க.சிவலிங்கமூர்த்தி)
அரசியலமைப்பின் 22 ஆவது அரசியலமைப்புச் சட்டமூலமானது தனிநபர்களினதும் ஒரு குறிப்பிட்ட குழுவினதும் நலன்களுக்காகவே கொண்டுவரப்படுகின்றது. இதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் எவ்வித நன்மையும் பயக்காது என மக்கள் போராட்ட முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
நுகேகொடவில் அமைந்துள்ள என மக்கள் போராட்ட முன்னணியின் காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி நுவன் போபகே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்துக்கு 02 ஆண்டுகள் நிறைவடைவதனை முன்னிட்டு விழாக்கள் நடத்தப்படும் அதேநேரம், தற்போதைய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்காகவே இந்த 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தன்னிச்சையாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.
மக்கள் பங்கேற்பு ஜனநாயகம் பற்றிப் பேசும் அரசாங்கம், இச்சட்டமூலம் குறித்து எவ்வித பகிரங்க உரையாடலையும் நடத்தவில்லை.
இச்சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 50 இற்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசாங்கத்துக்கு ஆதரவாக மனுத்தாக்கல் செய்ய ஜானக அதிகாரி, லக்ஷ்மன் நிபுணாரச்சி போன்ற தமக்கு நெருக்கமானவர்களைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டது.
பொதுமக்களின் சார்பில் ஆதரவாக மனுக்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக எதிர்ப்ப தரப்பில் அரசியல் கட்சிகள், வெகுஜன இயக்கங்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் முன்வந்தனர்.
மேலும், குற்றச்சாட்டிற்கு உள்ளான நீதிபதியே வழக்கை விசாரிக்கும் அமர்வில் அமர்வதுடன், 13 நீதிபதிகள் கொண்ட முழுமையான அமர்வையோ அல்லது மக்கள் தீர்ப்புக்கு செல்வதையோ அரசாங்கத் தரப்பு சட்டத்தரணிகளும் சட்ட மா அதிபரும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
நீதிமன்ற அமைப்புச் சட்டத்தின் 49 ஆவது பிரிவின்படி நலன்களின் முரண்பாடு ஏற்படும் போது நீதிபதிகள் விலக வேண்டும். ஆனால் இறுதியில் தலைமை நீதிபதியின் விருப்பத்துக்கு அமைவாகவே 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உருவாக்கப்பட்டது.
அத்துடன், இச்சட்டமூலத்தை மக்கள் தீர்ப்புக்கு கொண்டு செல்ல அரசாங்கம் பயப்படுகிறது. மக்கள் தீர்ப்புக்கு சென்றால் நிச்சயமாகத் தோல்வியடைவோம் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், பாராளுமன்றத்தில் உள்ள 159 பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டு இதனை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
குறைந்தபட்சம் நீதிவான் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள் விசாரிக்கப்படுவதில்லை என்ற அடிப்படைச் சட்ட அறிவு கூட இல்லாத உறுப்பினர்களே பாராளுமன்றத்தில் அதிகளவில் உள்ளனர். ஜனாதிபதியோ அல்லது மேலிடத்தில் இருப்பவர்களோ கூறுவதை மட்டுமே இவர்கள் செய்வார்கள்.
இவர்கள் கண்ணை மூடிக்கொண்டு கைகளை உயர்த்தி இதனை நிறைவேற்றுவார்கள். இது மக்கள் ஜனநாயகமல்ல, மாறாக அரசாங்கத்தின் தன்னிச்சையான ஜனநாயக விரோதப் போக்காகும். சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை, நீதித்துறை ஆகிய அனைத்துக்கும் மேலாக மக்களே முதன்மையானவர்கள்.
எனவே, தனிநபர்களின் நலனுக்காகக் கொண்டுவரப்படும் இந்த ஜனநாயக விரோத 22 ஆவது அரசியலமைப்புச் சட்டமூலத்தைத் தோற்கடிக்க மக்கள் வீதியிலிறங்கிப் போராட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.