Our Feeds



Thursday, August 13, 2026

Zameera

மாத்தறை கூட்டுறவு வங்கி வைப்பாளர்களுக்கு உடனடி தீர்வு தேவை – சஜித்


 மாத்தறை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் வாடிக்கையாளர்களும் வைப்பாளர்களும் தற்போது பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.




மாத்தறை கூட்டுறவு கிராமிய வங்கி வைப்பாளர்கள் சங்கத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.




2026 மார்ச் இறுதி மற்றும் ஏப்ரல் மாதம் வரை வைப்பாளர்கள் தமது வைப்புத் தொகையைப் பயன்படுத்துவதிலும், வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதிலும் எவ்வித பிரச்சினையும் காணப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.




எனினும், தற்போது அதிகாரம் படைத்த சிலரின் செல்வாக்கு காரணமாக கூட்டுறவுச் சங்கத்தின் நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாகவும், இதனால் ஆயிரக்கணக்கான வைப்பாளர்களும் வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.




பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்கான முறையான வழிமுறைகூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




கூட்டுறவுத் துறை நாட்டின் முக்கிய பொருளாதாரக் கருவிகளில் ஒன்றாகும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இத்துறையின் செயற்பாடுகள் முடக்கப்படுவதற்கு அரசாங்கமும் அதன் பிரதிநிதிகளும் காரணமாக உள்ளனரா என்பது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.




கூட்டுறவுத் துறைக்கு பொறுப்பான அதிகாரிகள் வைப்பாளர்களின் பணத்துக்குப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும், அரசாங்கம் உடனடியாக தலையிட்டு வைப்பாளர்கள் தமது பணத்தை மீளப் பெறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.




மேலும், கடந்த சில மாதங்களாக இழந்த வட்டியுடன் கூடிய தமது மூலதனத்தை மீளப் பெறுவதற்கான சந்தர்ப்பத்தையும் வைப்பாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.




பல வருடங்களாக சிறப்பாக இயங்கி வந்த இந்தத் திட்டம் திடீரென முடங்கியதற்கான காரணம் என்ன என்பதையும், இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பதையும் கண்டறிய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.




கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் உள்ளிட்ட பொறுப்பான அனைத்து அதிகாரிகளும் வைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் அவர்கள் நாடாளுமன்றத்திற்கு முன்பாக விளக்கமளிக்க நேரிடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Zameera

VAT செலுத்த ஓகஸ்ட் 20 வரை காலக்கெடு


 2026 ஜூலை மாதத்திற்கான பெறப்பட்ட பெறுமதி சேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


வரி செலுத்தத் தவறுதல் அல்லது தாமதித்து செலுத்துதலுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்தத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. 


காசோலை (Cheque), வங்கி வரைவோலை (Bank draft) அல்லது கொடுப்பனவு உத்தரவு (Payment order) மூலம் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவு குறிப்பிட்ட திகதிக்குப் பின்னர் கிடைப்பதும் தாமதமான கொடுப்பனவாகவே கருதப்படும். 


அத்துடன், ஜூலை மாதத்திற்கான VAT அறிக்கைகளை ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். 


அந்த அறிக்கைகள் இணையவழி (Online) முறைமையின் ஊடாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனிடையே, பிடித்தம் செய்யப்பட்ட வரிகளை (Withholding Tax) ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம், வரி செலுத்துவோரைக் கேட்டுக்கொள்கிறது. 


மேலும், ஜூலை மாதத்திற்குரிய சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை (SSCL) ஓகஸ்ட் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் அந்தத் திணைக்களம் நினைவூட்டுகிறது.

Zameera

இலங்கை விமான போக்குவரத்து பாதுகாப்புத் துறை - முதல் முறையாக பெண்ணொருவர் நியமனம்


 விமானநிலையம் மற்றும் விமானச் சேவைகள் தனியார் நிறுவனத்தின் முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு நியமிக்கப்பட்டுள்ளார்.


இலங்கை சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புத் துறையில் இதுவரை ஆண்கள் மாத்திரமே நியமிக்கப்பட்ட நிலையில் முதன்முறையாக ஒரு பெண் பொறுப்பேற்று புதிய சாதனை படைத்துள்ளார்.


அவரது இந்த நியமனமானது இலங்கையின் சிவில் விமானப் பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுவதுடன், இந்த துறையில் சிறப்புமிக்க பதவிகளை நோக்கிச் செல்ல எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் விமானத் துறையில் பெண்களுக்கான ஒரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாகவும் அமைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ShortNews

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ஹிஸ்புல்லாஹ்!


சுமார் மூன்று மணி நேர விசாரணைகளின் பின்னர்,

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் இருந்து இன்று (13) வியாழக்கிழமை பிற்பகல் 12.46 மணியளவில் வெளியேறினார் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்!

ShortNews

‘பெக்கோ சமன்’ தாயார் மீதான துப்பாக்கிச்சூடு - மோட்டார் சைக்கிள் மீட்பு!


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாயார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று ஊருபொக்க பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மாத்தறை - ஊருபொக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Zameera

சமிந்த குலரத்ன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை


 பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன இன்று (13) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 


சபாநாயகரினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 


பாராளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன உள்ளிட்ட தரப்பினரால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. 


இது தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு அங்கு வருகை தந்துள்ளார்.

Zameera

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி: 9 இந்திய மீனவர்கள் கைது


 இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்களும் படகொன்றும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். 


நேற்று (12) இரவு வேளையில், தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடிப் படகொன்றும், அதிலிருந்த 9 இந்திய மீனவர்களும் இவ்வாறு கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். 


குறித்த மீன்பிடிப் படகு சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து, கடல் அடிவாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் 'அடிமடி வலை' (Bottom Trawling) முறையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளது. 


இதன்படி, கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட 9 மீனவர்களும் மீன்பிடிப் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடிப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். 


மேலும், மன்னார் தீவு மற்றும் ஆதாம் பாலத்தை சுற்றியுள்ள மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் தொகுதி சர்வதேச மற்றும் உள்நாட்டு ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மண்டலமாகக் கருதப்படுகிறது. 


எனவே, இந்தப் பகுதி சிறப்பு மீன்பிடி முகாமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக பேணப்பட்டு வருகின்றது.

ShortNews

அவர்கள் அணிந்திருப்பது புர்கா அல்ல - முஸ்லிம் சகோதரிகளின் ஆடை தொடர்பான கோரிக்கை ஏற்புடையதே - கலாநிதி ஜனகன்!


முஸ்லிம் சகோதரிகளின் ஆடை தொடர்பான கோரிக்கை ஏற்புடையது! - கலாநிதி ஜனகன்

முஸ்லிம் சகோதரிகள் முன்வைத்துள்ள ஆடை தொடர்பான கோரிக்கைக்கு நான் முழுமையான ஆதரவை வழங்குகிறேன்.

அவர்கள் அணிந்திருப்பது முகத்தை மறைக்கும் புர்கா அல்ல. முகம் முழுமையாகத் தெரியும் வகையிலான ஹிஜாப் மட்டுமே. எனவே, நோயாளிகளின் பாதுகாப்பிற்கோ அல்லது வைத்தியர்களின் தொழில்சார் கடமைகளை நிறைவேற்றுவதற்கோ இதனால் எந்தவிதமான தடையும் ஏற்படாது என நான் கருதுகிறேன்.

எனவே, வைத்தியர்களும் வைத்தியசாலை நிர்வாகங்களும் இவ்விடயத்தை தேவையற்ற பிரச்சினையாகக் கருதாமல், சம்பந்தப்பட்ட சகோதரிகளின் மத நம்பிக்கைகளையும் அடிப்படை உரிமைகளையும் மதித்து செயற்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

ஒவ்வொரு தனிநபரினதும் மத நம்பிக்கைகளையும் கலாசார அடையாளங்களையும் மதிப்பது இலங்கையின் பன்மைத்துவமான சமூகத்தின் முக்கியமான பண்பாகும். எமது நாட்டில் அனைத்து மக்களும் தமது மதத்தையும் நம்பிக்கைகளையும் சட்டத்தின் வரம்புக்குள் சுதந்திரமாகப் பின்பற்றுவதற்கான உரிமையை அனுபவிக்க வேண்டும்.

பிறரின் நம்பிக்கைகளை மதித்து, வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு, பரஸ்பர புரிந்துணர்வுடன் வாழ்வதே எமது நாட்டின் செழுமையான பண்பாட்டின் அடிப்படையாகும். குறுகிய மனப்பான்மை அல்லது தேவையற்ற தவறான புரிதல்களால் இந்தப் பண்பாட்டுச் செல்வத்தை நாம் ஒருபோதும் பாதிக்கக் கூடாது.

அதேவேளை, வைத்தியசாலைகளில் நோயாளிகளின் பாதுகாப்பு, சுகாதாரத் தரநிலைகள் மற்றும் தொழில்சார் பொறுப்புகள் ஆகியவையும் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, அனைத்து தரப்பினரின் உரிமைகள், பொறுப்புகள் மற்றும் மத உணர்வுகளை சமநிலைப்படுத்தும் வகையில் நீதியானதும் நடைமுறைக்கு ஏற்றதுமான தீர்வொன்று விரைவில் எட்டப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

இலங்கையின் பன்மைத்துவத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில், அனைவரும் ஒருவரது மத நம்பிக்கைகளையும் உரிமைகளையும் மதித்து செயற்படுவோம்.

Zameera

இலங்கை பொருட்களுக்கு இந்தியாவில் வரி விலக்கு


 இலங்கையில் உற்பத்தி செய்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரிவிலக்கு உள்ளதாக தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 


மதுரையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 


மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் இலங்கையின் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த வணிக விளக்கவுரை கூட்டம் இடம்பெற்றிருந்தது. 


இந்நிகழ்வில் தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் உரையாற்றுகையில், இந்தியாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகின்றனர். கடந்தாண்டு சுற்றுலா வந்த 2.5 கோடி பேரில் 33 சதவீதம் பேர் இந்தியர்கள். வரும் 2030 க்குள் இலங்கையின் சுற்றுலா பயணிகள் 5 மில்லியனாக அதிகரிக்கும். 


இலங்கை பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கத்தை சந்திக்கும்போதெல்லாம் இந்தியா உதவுகிறது. இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு சிறப்பு பொருளாதார உதவிகளை செய்துள்ளார். இந்தியாவில் இருந்து பல முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகின்றனர். அவர்களுக்கு நிலம், பத்தாண்டு வரிவிலக்கு, இயந்திர தளவாட சலுகைகளை அளிக்கிறோம். 


ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புகளையும், நீண்டகால விசாவும் இலங்கை அரசு தருகிறது. இலங்கை நிர்வாகம் தொழில் வளர்ச்சிக்காக நிலவளத்தையும் தருகிறது. இலங்கையில் ஆண்டுதோறும் 800 மில்லியன் டொலர் பால்மா நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 


அடுத்து மருந்து வகைகளை ஒரு மில்லியன் டொலர் அளவுக்கு இறக்குமதி செய்கிறது. அவற்றை அங்கு உற்பத்தி செய்யலாம். வரியில்லா வர்த்தக சேவை மூலம் பல்வேறு நாடுகளுடன் வர்த்தகம் செய்ய இந்தியாவுக்கு ஒரு கேட்வே போல இலங்கை அமைந்துள்ளது. 


இந்தியாவின் 5400க்கும் மேற்பட்ட பொருட்கள் ஆண்டுதோறும் 6 பில்லியன் டொலர் அளவுக்கு விற்பனையாகிறது. இதுபோல வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா, தாய்லாந்து, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளுடன் இலங்கை மேற்கொண்டுள்ளது. 


இந்தியாவில் இறக்குமதி வரிவிதிப்பு 22 முதல் 40 சதவீதம் வரி உள்ளது. அதேசமயம் இலங்கையில் பொருட்களை உற்பத்தி செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்தால் அதற்கு வரிவிலக்கு உள்ளது எனக் கூறினார்.

ShortNews

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஹிஸ்புல்லாஹ் எம்.பி!


பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

சொத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Zameera

இளைஞர்கள் மத்தியில் குடல் நோய்கள் அதிகரிப்பு


 இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார். 


இளம் தலைமுறையினர் செயற்கை உணவுகளை அதிகம் உட்கொள்வதில் ஆர்வம் காட்டுவதே இந்த நிலைமைக்குக் காரணம் என அவர் கூறுகிறார். 


சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க இதனைத் தெரிவித்தார். 


"நமது குடலுக்கும் மூளைக்கும் இடையே ஒரு சிக்கலான தொடர்பு உள்ளது. அதை நாம் 'குடல்-மூளை அச்சு' (gut-brain axis) என்று கூறுகிறோம். அதாவது நாம் அதிக மன அழுத்தத்தில் இருந்தாலோ அல்லது பதற்றத்தில் இருந்தாலோ, அது தானாகவே நமது குடலிலும் உணரப்படும். இந்தச் சிக்கலான செயல்முறை மற்றும் நாம் உட்கொள்ளும் உணவுப் பிரச்சனைகள் ஆகியவற்றின் சேர்க்கையால் IBS (Irritable Bowel Syndrome - எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி) நிலை ஏற்படலாம். இந்த நிலை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நமது வாழ்க்கை முறை இப்போது மாறியுள்ளது; உணவுப் பழக்கவழக்கங்களும் மாறியுள்ளன. காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் மற்றும் தானியங்கள் போன்ற இயற்கை உணவு முறையிலிருந்து பல இளைஞர்கள் விலகி, இலகுவாகக் கிடைப்பதால் செயற்கை உணவுகளை நோக்கிச் செல்வதை நான் காண்கிறேன். இதன் காரணமாக, அவர்களிடம் தற்போது IBS நிலை அதிகமாகக் காணப்படுகிறது." என்றார்.

Zameera

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் பதவியேற்பு


 கொழும்பில் தனது இராஜதந்திரப் பணிகளைத் தொடங்கும் விதமாக, இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுள்ளார். 


அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் லாண்டோ (Landau) தலைமையில் நடைபெற்ற இந்த வாழ்த்து மற்றும் பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் எரிக் மேயருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது. 


எரிக் மேயர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் பரந்த அனுபவம் கொண்ட ஒரு மூத்த வெளியுறவுச் சேவை அதிகாரியாவார். 


தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் மூத்த அதிகாரியாகப் பணியாற்றினார். 


இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் எரிக் மேயரை வரவேற்றுள்ளதோடு, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பங்களிப்பை மேலும் வலுப்படுத்த அவரது தலைமையின் கீழ் பணியாற்றத் தூதரகக் குழு ஆவலுடன் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது. 


வொஷிங்டன் மற்றும் கொழும்புக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதிலும், பகிரப்பட்ட நலன்கள் மற்றும் முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதிலும் எரிக் மேயரின் பதவிக் காலம் கவனம் செலுத்தும் என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. 


பொருளாதார ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு, நல்லாட்சி மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் அமெரிக்காவும் இலங்கையும் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையிலேயே மேயரின் இந்த நியமனம் அமைந்துள்ளது. 


புதிய தூதுவரை கொழும்பிற்கு வரவேற்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் அவருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Zameera

ஐரோப்பாவில் அரிய முழுச் சூரிய கிரகணம்: பகலில் இருளில் மூழ்கிய பல பகுதிகள்


 ஐரோப்பிய கண்டத்தில் பல பகுதிகளில் நேற்று (12) அரிய வகை முழுச் சூரிய கிரகணம் தென்பட்டது. இதன்போது நிலவு சூரியனை முழுமையாக மறைத்ததால், பல பகுதிகள் பகல் வேளையிலேயே இருளில் மூழ்கின.




இந்த அரிய வானியல் நிகழ்வைக் காண ஸ்பெயின் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.




கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் வடக்கு ஸ்பெயின் ஆகிய பகுதிகளைக் கடந்து முழுச் சூரிய கிரகணம் தென்பட்டதுடன், ஐரோப்பிய பிரதான நிலப்பரப்பில் 1999ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதிக்குப் பின்னர் தென்பட்ட முதல் முழுச் சூரிய கிரகணம் இதுவாகும்.




சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, நிலவு சூரியனை மறைப்பதன் காரணமாக சூரிய கிரகணம் ஏற்படுகிறது.




ஸ்பெயினின் பல நகரங்கள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் திரண்ட மக்கள், தெளிவான வானிலைக்கு மத்தியில் சில நிமிடங்கள் நீடித்த முழு இருளை வியப்புடன் கண்டுகளித்தனர்.




அதேவேளை, சுவிட்சர்லாந்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள சாசரல் மலைப்பகுதி உள்ளிட்ட பல இடங்களிலும் பகுதிச் சூரிய கிரகணம் தென்பட்டது.




பிரித்தானியாவில் சூரியனின் 90 சதவீதத்துக்கும் அதிகமான பகுதியை நிலவு மறைத்த நிலையில், பகுதிச் சூரிய கிரகணம் தெளிவாகக் காட்சியளித்தது. லண்டனில் உள்ள பிரபல பிக் பென் மணிக்கூட்டு கோபுரத்தின் பின்னணியிலும் கிரகணம் காட்சியளித்தது.




மேலும், பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஐரோப்பிய தடகள சம்பியன்ஷிப் போட்டியின்போதும் ரசிகர்கள் இந்த அரிய வானியல் நிகழ்வை ரசித்ததுடன், ஹங்கேரியின் அகாட் பகுதியில் உள்ள அவதானிப்புக் கோபுரத்திலும் வானியல் ஆர்வலர்கள் கிரகணத்தை பார்வையிட்டனர்.