Our Feeds



Monday, June 8, 2026

Admin

சுரேஷ் சலே, இதுவரை உணவோ அல்லது நீரோ உட்கொள்ளவில்லை - அவரது மனைவி மனோரி சலே!


வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, இதுவரை உணவோ அல்லது நீரோ உட்கொள்ளவில்லை என்று அவரது மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார்.

இன்று (08) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்று சுரேஷ் சலேயின் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு வெளியில் வந்த போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

"அவர் இன்னும் உணவோ, நீரோ எதுவும் உட்கொள்ளவில்லை. அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைத்தியர்கள் கண்காணித்து வருகிறார்கள், சேலைன் ஏற்றப்படுகிறது. அவர் உண்பதோ, குடிப்பதோ இல்லை; வேறு எதையும் செய்வதில்லை. அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை" என்று அவர் கூறினார்.

சுரேஷ் சலே தற்போது தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

Admin

சலேவுக்கு ஆதரவான போராட்ட கூடாரங்கள் அகற்றப்பட்டது - பொலிஸார்!


கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று(08) காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக முன்னெடுத்த போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரம் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது.

போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்தை அகற்றிய பொலிஸார், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பலப்படுத்தியுள்ளனர்.


Admin

உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு!


2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில், இப்பரீட்சை செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணையும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

Admin

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு!



2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடைபெறும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பரீட்சையின் இரண்டாம் பகுதி வினாத்தாள் அன்றைய தினம் முற்பகல் 09.30 மணி முதல் 10.45 மணி வரை நடத்தப்படும்.

முதலாம் பகுதி வினாத்தாளை முற்பகல் 11.15 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Zameera

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் வெற்றிகரமாக மீட்பு


 எத்தியோப்பியாவில் கடத்தப்பட்டிருந்த மூன்று இலங்கையர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். 


வேலைவாய்ப்புகளுக்காக எதியோப்பியா சென்றிருந்த போதே இந்த மூன்று இலங்கையர்களும் அங்கு கடத்தலுக்கு உள்ளாகியிருந்தனர். 


இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக இலங்கை தூதரகம் அங்குள்ள போலே (Bole) துணை நகர பொலிஸ் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ததை அடுத்து, கடந்த மே 26ஆம் திகதி இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. 


காணாமல் போவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த மூன்று இலங்கையர்களும் எத்தியோப்பியாவை வந்தடைந்திருந்தனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 


இதன்போது பொலிஸார் மேற்கொண்ட நுணுக்கமான அவதானிப்புகள் மற்றும் விசாரணைகளின் விளைவாக, சம்பந்தப்பட்ட இலங்கையர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்துச் சென்ற வாகனம் பற்றிய தகவல்கள் கண்டறியப்பட்டன. 


இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் போது, அவர்கள் எத்தியோப்பியாவின் ஒரோமியா (Oromia) பிராந்தியத்தில் உள்ள ஷஷெமேன் (Shashemene) நகரில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வீட்டில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது. 


இதற்கமைய நடத்தப்பட்ட சோதனையின் போது, இந்த மூன்று இலங்கையர்களையும் வெற்றிகரமாக மீட்பதற்கு அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் சாமர்த்தியமாக செயற்பட்டதோடு, இச்சோதனையில் எதியோப்பிய நாட்டவர்கள் இருவர் மற்றும் பாகிஸ்தானியர்கள் நால்வர் உட்பட 6 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். 


இதற்கிடையில், இந்த இலங்கையர்களை விடுவிப்பதற்காக சந்தேக நபர்கள் ஒருவருக்கு 30,000 டொலர்கள் வீதம், மொத்தம் 90,000 டொலர்கள் பணத்தை கப்பமாகப் கோரியிருந்தனர். 


எத்தியோப்பிய தேசிய உளவு மற்றும் பாதுகாப்பு சேவை, பெடரல் பொலிஸார், தகவல் வலையமைப்பு பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் ஒரோமியா பிராந்திய பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு முயற்சியின் மூலம் இந்த மூன்று இலங்கையர்களும் எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

Zameera

விமல் வீரவங்ச தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு


 விமல் வீரவங்சவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது சட்டபூர்வ வருமானத்தை மீறி 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியதாக விமல் வீரவங்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று (08) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் சாட்சியாளர்களிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதனையடுத்து, வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


Zameera

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு


 பிலிப்பைன்ஸில் இன்று (08) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இந்த அனர்த்தத்தில் 114 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜேர்மனிய புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் அண்டை நாடான இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் இந்தோனேசியாவுக்கான எச்சரிக்கை நீக்கப்பட்டது.


Zameera

மீனவர்களின் பிரச்சினைகளை ஆராய சஜித் அம்பாந்தோட்டை விஜயம்


 அம்பாந்தோட்டை நகரை அண்டிய பகுதிகளில் கரை வலை மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (08) அப்பகுதிகளுக்கு கள விஜயங்களை மேற்கொண்டுள்ளார்.



பரம்பரை பரம்பரையாக கரை வலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் இந்த மீனவர்களின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. 3 இறங்குதுறைகள் அமைந்து காணப்பட்டாலும், அவை ஒரு இறங்கு துறையாக மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன. மீன்பிடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் காரணமாக இறங்குதுறைகளை நீக்குவதற்கு இந்த மீனவர்களும் இணக்கம் தெரிவித்திருந்தனர். 



காலாகாலமாக ஒரு நாள் படகு மற்றும் பல நாள் படகு மீன்படித் தொழில் ஈடுபட்டு வந்தோரே இவ்வாறு இந்த வாக்குறுதிகளை நம்பி தமது கரை வலை மீன்பிடி அனுமதிப் பத்திரங்களை இழந்துள்ளனர். இதன் காரணமாக இவர்களினது சட்டப்பூர்வமான கரை வலை மீன்பிடி அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் இவர்கள் 22 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம்.



சிறிய படகுகள் மற்றும் ஏனைய மீன்பிடி தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், 750 மீட்டர் தூரத்திற்கு அப்பால் கரை வலை மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான புதிய அனுமதிப் பத்திரங்களை இந்த மீனவர்கள் தற்சமயம் எதிர்பார்க்கின்றோம். 



தற்போதுள்ள மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் அனுமதிப் பத்திரம் இல்லாமல் இந்த கரை வலை மீன்பிடி தொழிலை முன்னெடுப்பதற்கு அனுமதிக்காமல் இருக்கின்றனர். இந்த பிரச்சினை நீதிமன்றம் வரை நீண்டுள்ளன என்று இப்பிரதேச மீனவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் முன் தெரிவித்தனர்.



இப்பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்திய சஜித் பிரேமதாச, இப்பிரச்சினையை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு தேவையான தலையீடுகளை மேற்கொள்வேன் என்று வாக்குறுதியளித்துள்ளார்.

Zameera

வாகன இலக்க தகடு அச்சிடல் ஆரம்பம்


 ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் இன்று (08) வேரஹெர மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வளாகத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 


போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் இந்த பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. 


இதன்போது கருத்துத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, 


வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் அச்சிடும் பணி சில காலம் நிறுத்தப்பட்டிருந்தது. நாங்கள் நீண்ட காலமாக வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் மூலமே செய்து வருகிறோம். 


அந்த வகையில், உரிய கொள்முதல் நடைமுறைகளின்படி நாங்கள் கொள்முதல் பணிகளை ஆரம்பித்தோம். சம்பந்தப்பட்ட நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்த பின்னர், தரம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மதிப்பீடுகளுக்கு அமைய, அந்த நிறுவனத்தின் ஊடாக அச்சிடும் பணிகளை ஆரம்பிப்பதற்கான நாளாக இன்றைய தினத்தை நிர்ணயித்திருந்தோம். 


அதன்படி தற்போது சுமார் அச்சிடப்படாத ஆறு இலட்சம் வாகன இலக்கத் தகடுகள் தேங்கிக்கிடக்கின்றன. 


நாங்கள் ஒப்பந்தத்தை வழங்கிய நாளில் இருந்து கணக்கிட்டால், அச்சிடுவதற்கு சுமார் ஒன்றரை இலட்சம் வாகன இலக்கத் தகடுகள் உள்ளன. 


அவற்றை அச்சிடும் பொறுப்பு இந்த ஒப்பந்த நிறுவனத்திற்கு உள்ளது. எஞ்சிய பகுதியை எவ்வாறு அச்சிடுவது, இந்த நிறுவனத்தின் மூலமாகவா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். 


எதிர்காலத்தில் இந்தத் தேக்க நிலையை முழுமையாகத் தீர்க்க முடியும் என நம்புகிறோம். தற்போது தினசரி கிடைக்கப் பெறும் அனைத்து இலக்கத் தகடுகளையும் அச்சிட்டு விநியோகிக்கும் திறன் உள்ளது. 


அத்துடன், ஒருவர் தனது வாகனத்தைப் பதிவு செய்து, இலக்கத் தகடு அச்சிடப்பட்டு இங்கிருந்து வெளியேறியதும், அவரது கைத்தொலைபேசிக்கு அது குறித்த குறுஞ்செய்தி ஒன்று செல்லும் புதிய முறையையும் நாம் ஆரம்பித்துள்ளோம் என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

Zameera

பண்டாரவளை பிரதேச செயலகத்தில் ஆவணங்கள் சேதம்


 பண்டாரவளை பிரதேச செயலகத்திற்குள் சிலர் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த ஆவணங்களை நாசம் செய்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நேற்று (07) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

அங்கு நுழைந்த நபர்கள், பிரதேச செயலகத்தின் மூன்று மாடிகளிலும் இருந்த ஆவணங்களையும் கலைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Admin

பிள்ளைகள் அனைவருக்கும் சமமான கல்வி - பிரதமர்!


பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிப் பொறுப்புக்கூறலுடன் அனைத்துப் பிள்ளைகளும் கல்வியின் தரத்தை சமமாக அனுபவிக்கக்கூடிய ஜனநாயகக் கல்வி முறையொன்றை ஏற்படுத்த அரசாங்கம் முன்நிற்கும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையின் மனிதவள முகாமைத்துவ மொடியுலின் முதலாம் கட்டம் மற்றும் 'ஈ-தக்சலாவ' கற்றல் முகாமைத்துவ முறைமையின் முன்னோடித் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிப் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கம் என்ற வகையில், அனைத்துப் பிள்ளைகளும் கல்வியின் தரத்தை சமமாக அனுபவிக்கக்கூடிய ஜனநாயகக் கல்வி முறையொன்றை ஏற்படுத்த வேண்டும். 

அதற்காகச் சரியான தரவுகள், கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பக் காரணிகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும். 

எமது அரசாங்கத்தைப் பொறுத்தவரை டிஜிட்டல் மயமாக்கல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். மாறிவரும் உலகிற்கு ஏற்ப நாமும் மாறி முன்னோக்கிச் செல்ல வேண்டும். 

அத்துடன், அரச சேவைகளை மிகவும் வினைத்திறனாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மக்களுக்கு வழங்க டிஜிட்டல் மயமாக்கல் அவசியம் என நாம் நம்புகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Admin

நாட்டுக்காக போராடிய சலேவை பழியிட முடியாது - உதய கம்மன்பில!


புலிகள் அமைப்பை திருப்திப்படுத்த நாட்டுக்காக போராடிய சுரேஷ்  சலேவை பழியிட போவதில்லை என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பயங்கராவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள உளவுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவை பாதுகாப்பதற்காக இன்று (08) திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Admin

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தடைபடக்கூடாது!


எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை தொடர்பில் இன்று (8) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

சுரேஷ் சலே தம்மீது அவதூறு வழக்கை தொடர்ந்துள்ள நிலையில், அதனை இல்லாது செய்வதற்காகவே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக சிலர் போலியான வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றார்கள்.

அது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டிய தேவை உள்ளது. தாம் வௌியிட்ட கருத்து ஒன்று தொடர்பில், அவர் தமக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருப்பது உண்மையாகும். 

அந்த வழக்கை இருதரப்பின் இணக்கப்பாடுகளுக்கு அமைய முடிவுக்கு கொண்டு வர முடியும் என சலே தம்மிடம் கோரியிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் எனது சட்டத்தரணிகள் குழாமினரும் அருகில் இருந்தனர். 

ஆனால் அவ்வாறான தேவை ஒன்று இருக்கவில்லை. நான் வௌியிட்ட கருத்துக்கள் சரியானவை என நம்புகின்றேன். அதனால் இந்த வழக்கை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வோம் எனக் கூறியிருந்தேன். 

எவ்வாறாயினும் அவர் தற்போது கைது செய்யப்பட்டமையான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை அடிப்படையிலேயாகும். அந்த விசாரணைகள் அனைத்தும் தடையின்றி நடைபெற வேண்டும். 

குறித்த தாக்குதலின் பின்னணியில் ஒரு அரசியல் சூழ்ச்சி உள்ளதா என்பதை அறிந்துக் கொள்ள பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிமை உண்டு. 

எனவே அந்த விசாரணைகள் எந்தவொரு அழுத்தங்களாலும் இடைநிறுத்தப்படக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.