Our Feeds



Friday, May 22, 2026

Sri Lanka

குப்பை கூழங்களால் நிரம்பி வழியும் கல்முனை கண்ணகி அம்மன் காணி - மாநகர சபையினரின் கவனயீனம்!


கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள காணி  குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகின்றது.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட  கண்ணகி அம்மன் கோவில் காணியின் போடப்படும் குப்பையினால் வீதியின் இரு மருங்கும் நிரம்பி வழிகின்றன.

இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியால் உடற்பயிற்சிக்காக  செல்லும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.  இது தவிர அருகில் உள்ள கடற்கரை பகுதிக்கும் குறித்த குப்பை கூழங்கள் காற்றினால் பரவி விழுகின்றன.

மேலும் குறித்த காணியில் கொட்டப்படும் குப்பைகளில்  பியர் ரின்கள் பிளாஸ்டிக் கலன்கள் உள்ளிட்ட உக்க முடியாத பல்வேறு பொருட்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் காணியில் தேங்கி நிற்கின்ற குப்பைகளில்  நீர் தேங்குவதனால்  டெங்கு போன்ற நோய்களும் பரவுவதற்கு காரணமாக அமைகின்றது.

மேலும்  கல்முனை கடற்கரை பள்ளிவாசல் அருகில் இந்த கண்ணகி அம்மன் கோவில் காணி காணப்படுவதுடன் தொடர்ச்சியாக சட்டவிரோத குப்பை கூழங்கள் தினமும் கொட்டப்பட்டு வருகின்றன. அத்துடன்  இப்பகுதியில் நாய்கள் மாடுகள் காகங்கள் குப்பைகளை உண்பதுடன் இதனால் அயலில் உள்ள கிணறுகள் கால்வாய்கள் அசுத்தமடைகின்றன.

கல்முனை மாநகர சபையினர் எவ்வித நடவடிக்கையும்  முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

பாறுக் ஷிஹான்

Zameera

பாடசாலை மாணவர்களிடையே பரவும் மெனிஞ்சைடிஸ் வைரஸ்

 

பாடசாலை மாணவர்களிடையே தற்போது வைரஸ் மெனிஞ்சைடிஸ் (Viral Meningitis) நோய் நிலைமை பரவி வருகின்ற போதிலும், அது குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பிரதான தொற்றுநோயியல் நிபுணர் விசேட வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார். 


முதன்முதலில் தெனியாய பகுதியில் பதிவான மெனிஞ்சைடிஸ் எனப்படும் மூளைக்காய்ச்சல் நோய் நிலைமை, தற்போது மேலும் சில பகுதிகளில் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 


இதன்படி, தியத்தலாவையில் 28 நோயாளர்களும், வெலிமடையில் 13 நோயாளர்களும், ரிகில்லகஸ்கட பகுதியில் சுமார் 25 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக விசேட வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்தார். 


ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைப் பகிர்ந்து கொண்டார். 


இது ஒரு வைரஸ் மெனிஞ்சைடிஸ் நிலைமை எனவும், இது குறித்து தொற்றுநோயியல் பிரிவும் மாகாண சுகாதார அதிகாரிகளும் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் விசேட வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். 


அத்துடன், இந்நோய் பாடசாலை மாணவர்களிடையே அதிகமாக பரவியுள்ளதுடன், கடுமையான காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும் என்றும் அவர் மேலும் கூறினார். 


எவ்வாறாயினும், இந்த நோய் நிலைமை முறையான சிகிச்சையின் மூலம் குணமடையக்கூடியது என்பதால், இது குறித்து தேவையற்ற பயம் கொள்ளத் தேவையில்லை என விசேட வைத்தியர் பாலித கருணாபேம சுட்டிக்காட்டியுள்ளார். 


இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த விசேட வைத்தியர் பாலித கருணாபேம, 


"இந்த நாட்களில் மெனிஞ்சைடிஸ் நோய் நிலைமை பதிவாகி வருகிறது. தெனியாயவிலேயே இதனை முதலில் அவதானித்தோம். தற்போது தியத்தலாவை, வெலிமடை மற்றும் ரிகில்லகஸ்கட ஆகிய வைத்தியசாலைகளிலும் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 


இது குறித்து தொற்றுநோயியல் பிரிவும் மாகாண சுகாதார அதிகாரிகளும் உரிய ஆய்வுகளையும் கண்காணிப்புகளையும் மேற்கொண்டனர். அதற்கமைய, இது வைரஸ் மெனிஞ்சைடிஸ் நிலைமை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 


இந்த நோய் பாடசாலை மாணவர்களிடையேயே பரவி வருகின்றது. கடுமையான காய்ச்சல், தலைவலி, வாந்தி என்பன இதன் அறிகுறிகளாகும். இந்நோய்க்கு ஆளான அனைத்து நோயாளர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


சிகிச்சைகளுடன் 5 முதல் 7 நாட்களுக்குள் இந்நோய் குணமடைந்துவிடும். எனவே, வீண் அச்சம் கொள்ள வேண்டாம். இந்நோயைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 


அனைத்து நோயாளர்களுக்கும் உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யாருக்கும் நிலைமை பாரதூரமாக இல்லை. தற்போது நிலவும் மழைக்காலம் மற்றும் வெசாக் காலத்தில் தன்சல் நிலையங்கள் குறித்தும் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 


அத்துடன், இந்நோய் நிலைமையைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோருகிறோம். குறிப்பாக, இந்நோய் அசுத்தமான நீர் மற்றும் உணவு மூலமே பரவுவதால் அவதானமாக இருங்கள். 


முறையான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். எப்படியிருப்பினும், இந்நோய் பரவுவதைக் குறைப்பதற்காக நாம் குறிப்பாக பாடசாலைகளுடன் சிறந்த ஒருங்கிணைப்புடன் பணியாற்றி வருகிறோம்" என்றார்.

Sri Lanka

அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் சாரதிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்!



தற்போது பெய்து வரும் பலத்த மழைக்கு மத்தியில், அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும் போது மின்சாரப் பலகைகளில் (Digital Boards) காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை வாசகங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை, சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக வாகனங்களின் முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரச் செய்து பயணிக்குமாறும், குறிப்பாக மணிக்கு 60 கிலோமீட்டர் வேக எல்லையை பேணி வாகனங்களை செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அத்துடன், இரு வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளியைப் பேணுமாறும், திடீரென பிரேக் பயன்படுத்தும் போது வாகனம் ஆபத்தான முறையில் வழுக்கிச் செல்லக்கூடும் என்பதால் அது குறித்து விழிப்புடன் அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்துமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Sri Lanka

நுவரெலியா தபால் நிலையத்தில் இடிதாங்கி திருட்டு - பொலிஸார் விசாரணை!


நுவரெலியா பிரதான நகரின் மத்தியில் அமைந்துள்ள விலைமதிப்பற்ற வளமாக கருதப்படும் நுவரெலியா தபால் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கி மற்றும் செப்பிலான இணைப்புத் திருடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடந்த 10.04.2026 முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


அதன்படி நுவரெலியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ் நுவரெலியா பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து இன்று (22) சிறப்பு  விசாரணைகளுக்கு நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு வருகை தந்தனர்.


நுவரெலியாவில் பழமையான இக் கட்டிடத்தில் மின்னல் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் ஒரு அறிவியல் கருவியாக காணப்பட்டது. இது கட்டிடத்தை விட உயரமாக காணப்பட்ட கடிகார கோபுரத்தில் பொருத்தப்பட்டு, மின்னலின் அதிகப்படியான மின்சாரத்தை ஈர்த்து, பாதுகாப்பாக பூமிக்குள் செலுத்தும்.


இவ்வாறு நுவரெலியா பிரதான நகரில் உள்ள இடிதாங்கி திருடப்பட்டதால் நுவரெலியாவில் காணப்படும் மோசமான காலநிலையின்போது இடி மின்னல் காலங்களில் இவ் கட்டிடங்கள் மற்றும் நுவரெலியா வாழ் மக்களுக்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றன.


இடிதாங்கி கருவிகளில் பயன்படுத்தப்படும் செம்பு (Copper) போன்ற உலோகங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் இவை சமூக விரோதிகளால் குறிவைக்கப்படுகின்றன எனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.


இதனால் உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரதும் கோரிக்கையாக உள்ளது.

Sri Lanka

நிலைமை மோசமடைவதற்குள் நடவடிக்கை வேண்டும்!


தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து அவசர பாராளுமன்ற விவாதம் ஒன்றை நடத்துமாறு எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகள், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

சபாநாயகருக்கும் எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் இன்று (22) பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இதன்போது அவர்கள் சபாநாயகரிடம் இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளதுடன், இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது X தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

"ரூபாய் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. எங்களிடம் தெளிவான பதில்களோ அல்லது திட்டங்களோ இல்லை. இன்று ஏனைய கட்சித் தலைவர்களுடன் இணைந்து சபாநாயகரை சந்தித்து, நிலவும் நெருக்கடி குறித்து அவசர பாராளுமன்ற விவாதத்தைக் கோரினோம். நிலைமை மோசமடைவதற்கு முன்னர் மக்களுக்கு நேர்மையான மற்றும் உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன." என எதிர்க்கட்சித் தலைவர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Sri Lanka

அதிகூடிய மூலதனச் செலவைக் கொண்ட ஆண்டாக 2027 ஆம் ஆண்டு மாற்றப்படும் - ஜனாதிபதி!



இலங்கை வரலாற்றில் அதிகூடிய மூலதனச் செலவைக் கொண்ட ஆண்டாக 2027 ஆம் ஆண்டை மாற்றி, மூலதனச் செலவாக 2,000 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

 1,744.85 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் அம்பாறை பலநோக்கு நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (22) முற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

அம்பாறை நகர சபைக்கு சேவைகளைப் பெற்றுக்கொள்ள வரும் மக்களின் வசதிகளை மேம்படுத்துவதுடன், வர்த்தக சமூகம் ஒரு சட்டப்பூர்வமான மற்றும் முறையான இடத்தில் தமது வியாபாரங்களை அபிவிருத்தி செய்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதும், அம்பாறை மாவட்ட மக்களின் கலாசார வாழ்க்கையை மேம்படுத்துவதுமே இதன் நோக்கங்களாகும். 70 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றப்படாமல் இருந்த மக்களின் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் இந்த பலநோக்கு கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடனான அரங்கு, வர்த்தக வளாகம், அலுவலக வளாகம் மற்றும் பாரிய அளவிலான வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த பலநோக்கு கட்டிட வளாகத்தின் நிர்மாணப் பணிகள், 2028.12.31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

பல வருடங்களாக அம்பாறை நகர சபையின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் அங்கு தொழிலாளராகப் பணியாற்றிவரும் ஈ. டி. ஹேமச்சந்திரவும் இந்நிகழ்வில் ஒரு அதிதியாகக் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அம்பாறை மாவட்டத்தின் வீதிகள், பாலங்கள், கால்வாய்கள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக 2026ஆம் ஆண்டிற்கு 22,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். அத்துடன், இந்த நிதி ஒதுக்கீடுகளை 2026 நிதி ஆண்டிற்குள்ளேயே முறையாகப் பயன்படுத்தி, மக்களுக்கு விரைவாகப் பலன்களை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

Sri Lanka

மலைபோல் குவிந்த வாகன இலக்கத் தகடுகள்!


கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட, ஆனால் வாகன உரிமையாளர்களால் இன்னும் பெறப்படாத சுமார் ஒரு இலட்சம் வாகனப் பதிவுத் தகடுகள், தற்போது அதன் வளாகத்தில் குவிந்து கிடப்பதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) அறிவித்துள்ளது.


நாராஹேன்பிட்டியவில் உள்ள அதன் தலைமை அலுவலகத்திலும், கொழும்பு மாவட்டம் உட்பட நாடு முழுவதும் உள்ள மாவட்ட அலுவலகங்களிலும் உரிமை கோரப்படாத பதிவுத் தகடுகளின் பெரும் இருப்பு குவிந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.


அதன்படி, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பதிவுத் தகடுகளுக்கு விண்ணப்பித்து, இன்னும் அவற்றைப் பெறாத அனைத்து வாகன உரிமையாளர்களும், ஜூன் 30, 2026-க்கு முன்னர் தங்களது தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.


ஏனைய மாவட்டங்களில் உள்ள உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகங்கள் அல்லது மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் கிளை அலுவலகங்களிலிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் தகவல்களுக்கோ அல்லது விசாரணைகளுக்கோ 011-2033333 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வாகனப்பதிவுத்தகடுப்பிரிவை தொடர்புகொள்ள முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Zameera

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்தைச் சந்தித்த பிரதமர்


 ஐக்கிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, லண்டனில் அமைந்துள்ள மார்ல்பரோ இல்லத்தில் (Marlborough House), பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் ஷெர்லி அயோர்கோர் போச்வே (Shirley Ayorkor Botchwey) அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். 


2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கற்றல் பேரவையின் 43 ஆவது நிர்வாகச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர், பொதுநலவாய கட்டமைப்பிற்குள் இருதரப்பு ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடினார். 


பொதுநலவாய அமைப்பினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஒத்துழைப்பிற்குப் பிரதமர் தனது நன்றிகளைத் தெரிவித்ததோடு, பொதுநலவாய அமைப்பின் வகிபாகத்தையும் வினைத்திறனையும் மேலும் பலப்படுத்துவதில் செயலாளர் நாயகம் வழங்கி வரும் தலைமைத்துவத்தைப் பாராட்டினார். 


அத்தோடு, காலநிலை மாற்றம், காலநிலை நிதியுதவி, ஜனநாயக நல்லாட்சி, பெண்களின் அரசியல் பங்களிப்பு மற்றும் உறுப்பு நாடுகளுக்குப் பொதுநலவாய அமைப்பின் ஆதரவு ஆகிய விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. 


பொதுநலவாய செயலகம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பாராட்டிய பிரதமர், நாட்டில் காணப்படுகின்ற தாக்குப்பிடிக்கும் தன்மையை மேலோங்கச் செய்தல், நிலைபேறான அபிவிருத்தி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நல்லாட்சி ஆகியவற்றில் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். 


தொழில்நுட்ப உதவி, மனிதவள மேம்பாட்டுத் திட்டங்கள், காலநிலை நிதியுதவி மற்றும் தேர்தல் முகாமைத்துவம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கு இலங்கைத் தொடர்ந்தும் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகச் செயலாளர் நாயகம் இதன்போது உறுதியளித்தார். 


எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் வேலைத்திட்டங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதுடன், உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கு உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர். 


இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீர, இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் பலரும் பிரதமருடன் கலந்துகொண்டனர்.


Sri Lanka

எல்லா இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான சூழலை உருவாக்குவோம் - நிந்தவூரில் ஜனாதிபதி!


சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் என எல்லா இன மக்களும் ஒன்றாகவும், ஒற்றுமையாகவும் வாழ்வதற்கான சூழலை உருவாக்கும் வேலைகளையே நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (22) நிந்தவூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோது தெரிவித்தார்.

1997ஆம் ஆண்டு காலப் பகுதியில் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்பினால் அடிக்கல் நடப்பட்ட நிந்தவூர் கலாசார மண்டபத்தின் (அஸ்ரப் ஞாபகார்த்த மண்டபம்) அபிவிருத்திப் பணிகள் நீண்ட காலமாக கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டன.

இந்நிலையில் இந்த மண்டபத்தின் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்காக 2026 வரவு - செலவு திட்டத்தில் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக நிந்தவூர் அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி அநுர குமார  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சகல இன மக்களும் ஒன்றிணைந்து இந்த அரசாங்கத்தினை உருவாக்கினார்கள்.  பல்வேறு காரணங்களுக்காக எங்களுக்கு வாக்களித்தீர்கள். கடந்த காலங்களில் மக்களின் வாக்குகளைப் பெற்று அரசாங்கத்தை அமைத்தவர்கள் மக்களின் மனங்களில் இனவாதத்தை விதைத்தார்கள். 

அந்த இனவாத அரசாங்கத்தை தோற்கடித்ததன் மூலமாக எங்களுடைய அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். ஆதலால் தேசிய ஐக்கியத்தை உருவாக்குகின்ற வகையில் மக்களின் வரம் எமக்கு கிடைத்துள்ளது. அதனால் நாங்கள் ஒருபோதும் இனவாத அரசியலுக்கு இடமளிக்கப் போவதில்லை.

சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் என எல்லா இன மக்களும் ஒன்றாகவும் ஒற்றுமையாகவும் வாழும் சூழலை உருவாக்கும் வேலைகளையே நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்.

கடந்த காலங்களில் மக்கள் பல்வேறு அம்சங்களில் முரண்பாடுகளுடன் வாழ்ந்தார்கள். ஆனால் எங்களுடைய அரசாங்கம் உருவாக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்துள்ளபோதிலும் மக்கள் அச்சமின்றி முரண்பாடுகள் தோன்றா வண்ணம் வாழ்கிறார்கள். இனவாத குழப்பம் இல்லாமல்  சுதந்திரமாக எல்லா இன மக்களும் தங்களின் செயற்பாடுகளை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருக்கிறோம்.

மக்களை இனவாதத்திற்குள் தள்ளி அச்சத்துடனும் முரண்பாடுகளுடனும் வாழச் செய்த அரசியல் முடிந்துவிட்டது. நாட்டில் இலஞ்சம், ஊழல் போன்றவற்றை ஒழிப்பதற்காகவும் நீங்கள் எங்களுக்கு வாக்களித்தீர்கள். அவற்றை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளையும் செய்து கொண்டிருக்கிறோம்.அரசியல் பகுப்பாய்வு

அரசியல் கொள்ளை மற்றும் களவுகளை நிறுத்தி இருக்கிறோம். இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் ஒன்றுமே கூற முடியாத நிலையில் பல்வேறு பொய்களைக் கூறுகின்றனர். நான் இன்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். நானோ எனது அமைச்சர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ ஒரு சதமேனும் களவெடுக்க மாட்டோம். அவ்வாறானதொரு அரசாங்கமே உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சட்ட அமுலாக்கத்தில் பாரபட்சம் காட்டப்பட்டது. அதிகாரம் இருந்தால், செல்வம் இருந்தால் அத்தகையவர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது. ஏழைகளுக்கும், அதிகாரம் இல்லாதவர்களுக்கும் சட்டம் பாய்ந்தது. அப்படித்தான் நமது நாடு இருந்தது.

இன்று நாம் நாட்டை கட்டியெழுப்புகிறோம். சட்டம் அனைவருக்கும் சமமானது. பாரபட்சமற்ற நீதி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. சட்டத்தை பலப்படுத்துகிறோம். பாரபட்சமற்ற முறையில் நியாயம் செய்கிறோம்.

நாங்கள் முன்னாள் ஜனாதிபதிகளை இலஞ்ச ஆணைக்குழுவின் முன்னால் கொண்டு வந்துள்ளோம். நீண்ட காலமாக கைவிடப்பட்ட இந்த மண்டபத்தின் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக நாங்கள் 300 மில்லியன் ரூபா நிதியை முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்துள்ளோம்.

இதனை பூரணப்படுத்துவதற்காக மொத்தமாக எவ்வளவு நிதி தேவை என்று மதிப்பீடு செய்யுங்கள். அதற்கான முழு நிதியையும் அடுத்த வரவு - செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்வோம் என்றார். 

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் வஸந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் ஆதம்பாவா, எம்.ஏ.எம்.தாஹிர், எம்.எஸ்.உதுமாலெப்பை உட்பட மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Sri Lanka

274 பேர் ஒரே நாளில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து புதிய உலக சாதனை!


உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில் 274 மலையேறுபவர்கள் நேபாளப் பகுதி வழியாக ஏறி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பகுதிக்கு இடையில் அமைந்துள்ள 8,849 மீற்றர் (29,032 அடி) உயரமுடைய எவரெஸ்ட் சிகரத்துக்கு இரு பக்கங்களிலிருந்தும் ஏற முடியும்.

எனினும், இந்தத் தடவை சீன அதிகாரிகள் மலை ஏறுவதற்கான அனுமதியை வழங்காததன் காரணமாக, திபெத் பகுதி வழியாக மலையேறுபவர்கள் எவரும் செல்லவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நேபாளப் பகுதி வழியாக ஒரே நாளில் அதிகளவிலானோர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த சாதனை 2019ஆம் ஆண்டு மே 22 அன்று பதிவாகியிருந்தது.

அன்று ஒரே நாளில் 223 பேர் சிகரத்தை அடைந்தமையே முன்னைய சாதனையாக இருந்தது என்று நேபாள பயண இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரிஷி பண்டாரி தெரிவித்துள்ளார்.

தற்போது அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டு, ஒரே நாளில் 274 பேர் சிகரத்தை எட்டி வரலாற்று சாதனைப் பதிவை ஏற்படுத்தியுள்ளனர்.

Sri Lanka

எந்தவொரு பொருளுக்கும் இறக்குமதி தடை விதிக்கப்படமாட்டாது - அமைச்சர் அனில் ஜயந்த!


நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில், எக்காரணத்தைக் கொண்டும் எந்தவொரு அத்தியாவசிய அல்லது இதர பொருட்களுக்கும் இறக்குமதித் தடைகள் விதிக்கப்பட மாட்டாது என வர்த்தக அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Sri Lanka

மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி நாட்டில் ஏற்படாது - ஜனாதிபதி!


2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி நாட்டில் மீண்டும் ஏற்படும் என சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், அவ்வாறானதொரு நிலைமை நாட்டில் எந்த வகையிலும் ஏற்படாது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.


மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையானது ஒரு வெளிப்புற நெருக்கடியாக இருந்தபோதிலும், அதனையும் முகாமைத்துவம் செய்துகொள்ளக்கூடிய சக்தி அரசாங்கத்திடம் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.


நிந்தவூர் கலாசார நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் நிகழ்வில் இன்று (22) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.


நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், இனவாதத்திற்கு இடமளிக்காதிருத்தல், ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குதல், அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை உருவாக்குதல் மற்றும் அரசியல்வாதிகளின் எல்லையற்ற சலுகைகளைக் குறைத்தல் ஆகியவையே தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக மக்கள் வழங்கிய மக்கள் ஆணையின் எதிர்பார்ப்பாக இருந்தது.


அதற்காக அரசாங்கம் தற்போது கணிசமான அளவு பணிகளை ஆற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல், அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை உருவாக்கும் பொறுப்பு தமது அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்படாவிட்டால், வேறு எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் அது நிறைவேறாது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இன்று அதிகாரம், செல்வம் மற்றும் அந்தஸ்த்து ஆகியவற்றைப் பார்க்காமல் அனைவருக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். 


அத்துடன், ஓய்வூதியம் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் எல்லையற்ற சலுகைகளை ஒழித்து, அரசியல்வாதிகளை மக்களுக்காகப் பணியாற்றும் ஒரு குழுவாக மாற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 


1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிந்தவூர் கலாசார நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 2014 ஆம் ஆண்டு முதல் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தன. 


மிகவும் வளமான கலாசார பாரம்பரியத்தைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் கலாசார விழுமியங்களைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்குக் கையளிக்கும் நோக்கிலும், அம்பாறை மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு அமைவாகவும், இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 24 வருடங்களின் பின்னர் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 


இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பிடப்பட்ட தொகை 945.04 மில்லியன் ரூபாய் ஆகும் என்பதுடன், அதில் 300 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது. 


எஞ்சிய நிதியொதுக்கீடுகளும் தேவைக்கேற்ப ஒதுக்கப்படவுள்ளதுடன், திட்டத்தின் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளும் 2027-12-31 ஆம் திகதியளவில் நிறைவடையவுள்ளன.

Sri Lanka

200 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்!


கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகி வருகிறது.

இதனால் தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த சில மணித்தியாலங்களிலும் தொடர்ச்சியாக கன மழை பெய்வதற்கான சாத்தியங்கள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 200 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


அத்துடன், மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், நேற்று காலை 08.30 முதல் இன்று அதிகாலை 04 மணி வரையான காலப்பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சி கம்பஹா மாவட்டத்தில் பகுதியில் பதிவாகியுள்ளது.


அதன்படி, கம்பஹா - கிரிந்திவெல பகுதியில் 244 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், வேயங்கொட பகுதியில் 238 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.


மேலும், அவிசாவளையில் 230 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.


இதனிடையே மழையுடனான வானிலைக் காரணமாக 03 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.


அதன்படி, கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல பிரதேச செயலக பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் .ரத்தினபுரி, குருவிட்ட ஆகிய பிரதேச செலயக பிரிவுகளுக்கும் 02 ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


களுத்துறை மாவட்டத்திள் புலத்சிங்கள் பிரதேச செயலக பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பிரதேச செயலக பிரிவுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அத்தனகலு ஓயாவை அண்மித்த தாழ்நில பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.


எனவே, அத்தனகலு ஓயாவை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.