Our Feeds



Saturday, June 13, 2026

Zameera

ஆதிவாசித் தலைவர் பிரதமர் ஹரிணியுடன் சந்திப்பு


 ஆதிவாசித் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ அவர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (12) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.


இதன்போது, ஆதிவாசி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தங்களின் பாரம்பரிய காணிகளைப் பயன்படுத்துவதில் ஆதிவாசி மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து ஆதிவாசித் தலைவர் பிரதமருக்குத் தெளிவுபடுத்தினார்.


ஆதிவாசி மக்கள் எவ்விதத் தடங்கலுமின்றித் தமது பாரம்பரிய காணிகளை அனுபவிப்பதற்கு உரிமை உண்டு என்றும், அதற்காகத் தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைந்து முடிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் பிரதமர் இதன்போது விளக்கமளித்தார்.


அண்மையில் ஏற்பட்ட 'தித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட ஹென்னானிகல கிராம மக்களுக்கு இதுவரை நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்பதை ஆதிவாசித் தலைவர் எடுத்துரைத்தார். இதன்போது, பிரதமர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முறையாக நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்தார்.


தம்பானை பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அது குறித்து ஆராய்ந்து தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாகப் பிரதமர் தெரிவித்தார்.

Zameera

செம்மணி தொடர்பான விடயத்தில் நீதி வழங்குவதில் அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது - இராமலிங்கம் சந்திரசேகர்


 (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


செம்மணி தொடர்பான விடயத்தில் நீதி வழங்குவதில் அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது அது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி நீதி அமைச்சர் செம்மணிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு பற்றிய அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,


செம்மணி புதைகுழி விடயத்தில் நாங்கள் ஆரம்ப காலத்தில் இருந்து ஆழமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றோம். கடந்த காலங்களில் இவ்வாறு மனித எச்சங்கள் தென்படும் போது அவற்றை தெரியாமல் மூடி மறைக்கும் செயற்பாடுகளே நடந்தன. ஆனால் எமது அரசாங்கம் அவ்வாறு செயற்படவில்லை. அதற்கு தேவையான நிதிகளை ஒதுக்குகின்றது.


இதற்கு காரணம் என்னவென்றால் நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் தமிழ் மக்களிடையே நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டும் என்றால் இவ்வாறான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். அந்த வகையில் செம்மணி தொடர்பான விடயத்தில் நீதி வழங்குவதில் எமது அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது.



இதன்படி எதிர்வரும் 17ஆம் திகதி நீதி அமைச்சர் அவ்விடத்திற்கு செல்லவுள்ளார். இதன்படி செம்மனி தொடர்பில் ஆழமான கருத்தாடல்கள் நடத்தபப்படவுள்ளன. அத்துடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார். இதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அத்துடன் அங்குள்ள பிரதேச சபைகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அங்குள்ள பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல் நடக்கவுள்ளது என்றார்.

Zameera

சுரேஷ் சலே விவகாரத்தை திசைதிருப்ப முயற்சி – ரியாஸ் பாரூக்


 (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)


பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டமை தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் தலைவர் என்று தன்னை நினைத்துக் கொள்பவர் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இவர் ஏன் இதனை குறிப்பிடவில்லை. சுரேஸ்  சலேவின் விவகாரத்தை திசை திருப்பவே இவ்வாறான கருத்துக்களை தற்போது குறிப்பிடுகிறார்கள் என  தேசிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாரூக் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற  நடைபெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின்  கீழான விதிகள், குறைநிரப்பு  மதிப்பீடு தொடர்பான  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உரையாற்றும் போது,  சந்தேகத்தின் அடிப்படையில்   கைதாகியுள்ள சுரேஷ் சலே தொடர்பில் பாராளுமன்றத்தில் ஒரு குழு அவருக்கு சார்பாக கதைத்ததுடன், இன்னுமொரு குழு எதிராகவும் மேலும் ஒரு குழு அமைதியாகவும் இருந்ததுது. இதன்போது இன்னுமொரு விடயமும் இடையில் புகுந்து சென்றது.


இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் தலைவர் என்று தன்னைத் தானே கூறிக்கொண்டிருப்பவர்   பிரபாகரனின் மகன் தொடர்பில்  கருத்தொன்றை  குறிப்பிட்டுள்ளார். அது அவருக்கு சம்பந்தப்படாத விடயமே. ஆனால் அவர் தனக்குள்ள சிறப்புரிமையின் அடிப்படையில் கதைத்தார்.

பிரபாகரனின் மகனை  ஏன்  காப்பாற்றவில்லை  என்று அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்படியென்றால் அந்த காலத்தில் அரசாங்கம் யாருடையது. எமது 159 பேரும் அப்போது இருந்தார்களா? இப்போது அது தொடர்பில் கதைப்பவர்கள் அப்போது எங்கே இருந்தார்கள். எங்கே பார்த்துக்கொண்டிருந்தனர். இவர்கள் சுரேஸ் சலேவின் பிரச்சினையை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.


அசாத் மௌலானா சனல் 4 ஊடகத்திற்கு வழங்கிய வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அது தவறானது என்ற கருத்தை கொண்டு செல்வதற்காகவே இந்த விடயத்தை உள்ளே புகுத்துவதற்காகவே முயற்சிக்கின்றனர். மறைமுகமாக இதனை செய்ய முற்பட்டுள்ளார். குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை குழப்புவதற்கே முயற்சிக்கின்றனர். ஆனால் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் இந்த அரசாங்கம் விசாரணைகளை நிறுத்தாது என்றார்.

Zameera

நாங்கள் தொடர்ந்து அரசாங்கத்தில் இருக்கப்போகிறோம் என்று நினைத்துக்கொண்டே செயலாற்றுகிறோம்


 தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் உறுதியுடன் செயலாற்றி வருவதாக விவசாய, காணி, நீர்ப்பாசன மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

“நாங்கள் தொடர்ந்து ஆட்சியில் இருப்போம் என்ற உறுதியில் இருக்கிறோம். இப்போது நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்துள்ளோம், அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை ரத்து செய்துள்ளோம், நாடாளுமன்றத்தில் 125 ரூபாய்க்கு வழங்கப்பட்ட உணவை 2000 ரூபாயாக மாற்றியுள்ளோம். முன்னரெல்லாம் வெறும் 125 ரூபாய்க்கு நாள் முழுவதும் சாப்பிட்டார்கள். அதில் ஒரு கெட்ட விஷயமும் இருக்கிறது, அதை நிமல் சிறிபால போன்ற ஒரு அமைச்சரைப் பார்க்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது.

நாங்கள் ஆட்சிக்கு வரும்போது இரண்டு ஹெக்டேயருக்கான உர மானியம் 30,000 ரூபாயாக இருந்தது. இப்போது நாங்கள் 60,000 ரூபாய் வழங்குகிறோம். சிலர் ஆங்காங்கே உர விலை அதிகம் என்று கூறுகிறார்கள். உண்மைதான், விலை அதிகம் தான். உலகளாவிய சூழ்நிலைகளுடன் அவை அதிகரிக்கின்றன. ஆனால், அந்த முப்பதாயிரத்தை அறுபதாயிரமாக மாற்றியது யாருக்கும் தெரிவதில்லை. எது தெரிகிறது? இந்த யுத்தச் சூழ்நிலைக்கு மத்தியில் உர விலை அதிகரித்தது மட்டுமே.”

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் ஊழியர்கள் குழுவொன்றுக்கு புதிய நியமனங்களை வழங்கும் முகமாக நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே லால் காந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Zameera

உலகின் முதல் ட்ரில்லியனரான இலோன் மஸ்க்


 ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதைத் தொடர்ந்து அதன் உரிமையாளரான இலான் மஸ்க், உலகின் முதல் டிரில்லியனர் என்ற சாதனையை படைத்துள்ளார் 


எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 


இந்த நிறுவனம் தற்போது பங்குச் சந்தைக்குள் களமிறங்கியுள்ளது. 


குறித்த ஐபிஓ, எலான் மஸ்க்கை முதல் டிரில்லியனர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக மாற்றியுள்ளது. 


ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் பங்குகள் பொதுப் பங்குச் சந்தையில் விற்பனைக்கு வந்தன. 


அவை உடனடியாக தலா சுமார் 150 டொலர் (112 பவுண்டுகள்) வீதம் விற்பனையாகின. 


அதன் பிறகு, பங்கின் விலை வேகமாக 160 டொலர் வரை உயர்ந்ததுடன், தொடர்ந்து மேலும் அதிகரிக்கும் அறிகுறிகளையும் காட்டியது. 


வியாழக்கிழமையன்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கணித்திருந்த 135 டொலர் ஆரம்பப் பட்டியல் விலையை (Estimated listing price) விட, தற்போது 160 டொலர் என்ற அளவில் அதன் பங்குகள் 18% கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Friday, June 12, 2026

Zameera

O/L, A/L பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்


 2026 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரம்) மற்றும் கல்விப் பொதுத் தராதர (உயர்தரம்) பரீட்சைகள் திட்டமிடப்பட்ட தவணை அட்டவணையின்படி உரிய தினங்களில் நடாத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 


2025.09.11 ஆம் திகதியிட்ட 30/2025 ஆம் இலக்கச் சுற்றறிக்கை மற்றும் பாடசாலைப் பரீட்சை திகதிகள் உள்ளடக்கப்பட்டு பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2025.07.09 ஆம் திகதியிட்ட 6/1/2025 ஆம் இலக்க சுற்றறிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட திகதியில் இடம்பெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதற்கமைய, அந்தப் பரீட்சைகளுக்குரிய பாடத்திட்டங்களை முழுமையாகக் கற்பித்து முடித்து, மாணவர்களைப் பரீட்சைக்குத் தயார்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 


ஏதேனும் ஒரு பாடசாலையில் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதம் காணப்படின், அதற்கென முன்கூட்டிய திட்டமிடலுடன் செயற்பட்டு, மேலதிக நேரத்தை ஒதுக்கியேனும் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்குத் தேவையான நடடிவடிக்கைகளை எடுக்குமாறும், இது குறித்து தீவிர கவனம் செலுத்துமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 


இது தொடர்கான கடிதம் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Zameera

பூஜித்தவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்புக்கான திகதி நிர்ணயம்


 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி அறிவிப்பதற்கு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது. 


குறித்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பான போதிய புலனாய்வு தகவல் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமை மூலம் குற்றவியல் ரீதியாகக் கடமையை மீறியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சந்தேகநபர் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பான வழக்கு இன்று (12) பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய நீதிபதிகளைக் கொண்ட கொழும்பு நிரந்தர மேல் நிதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 


இவ்வழக்கு தொடர்பான வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வமான சமர்ப்பணங்கள் இரு தரப்பினராலும் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளன. 


இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராயந்த நீதிபதிகள் குழாம், இந்த வழக்கின் தீர்ப்பை ஜூலை மாதம் 31 ஆம் திகதி அறிவிப்பதாகத் தெரிவித்தது. 


இதேவேளை, இதே குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கும் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது. 


இதன்போது, முறைப்பாட்டு தரப்பினர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா தமது சமர்ப்பணங்களை முன்வைத்தார். 


அதனைத் தொடர்ந்து, பிரதிவாதியான ஹேமசிறி பெர்னாண்டோ சார்பில் சட்டத்தரணி சமிந்த அத்துகோரள சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன், அவரது மேலதிக சமர்ப்பணங்களை எதிர்வரும் திங்கட்கிழமை (15) வரை ஒத்திவைப்பதற்கும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

Zameera

சுரேஷ் சலேயின் உடல்நிலை கவலைக்கிடம் - உறவினர்கள்


அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று (12) முற்பகல் அவரது நலன் குறித்துக் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய உறவினர்கள், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் அவரது உயிருக்கு கணிசமான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சுரேஷ் சலே தொடர்பாக அஸ்கிரி விஹாரையின் மகாநாயக்க தேரர், கலாநிதி வரகாகொட ஸ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரரும் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சுரேஷ் சலேயின் மனைவி அஸ்கிரி விஹாரைக்கு வருகை தந்து, தனது கணவர் சார்பாகக் கோரிக்கை விடுத்ததாக அந்தக் கடிதத்தில் மகாநாயக்க தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன் கணவருக்கு ஏதேனும் நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டதாகவும், அந்த வேண்டுகோளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சலேயின் மனைவி கேட்டுக்கொண்டதாகவும் அஸ்கிரி மகாநாயக்க தேரர் ஜனாதிபதிக்குத் தெரிவித்துள்ளார்.

Zameera

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை!



தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி அவர் நாட்டில் அமுல்படுத்திய இராணுவச் சட்டம் தோல்வியில் முடிவடைந்தது. அந்த இராணுவச் சட்டத்தை நியாயப்படுத்துவதற்கான ஒரு போலிச் சூழலை உருவாக்கும் நோக்கில், வட கொரிய வான்பரப்புக்குள் இராணுவ ஆளில்லா விமானங்களை ஊடுருவச் செய்ய அவர் உத்தரவிட்டிருந்தார்.


இந்தச் சட்டவிரோத ஊடுருவல் உத்தரவு தொடர்பான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதை அடுத்தே, முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு இந்த மிகக் கடுமையான 30 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Zameera

கூகுள் பணிப்பாளர் இராஜிநாமா!


 Google நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு பாதுகாப்புப் பிரிவு பணிப்பாளர் ரெனே மேயர்ஹோஃபர் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஒப்பந்தத்தில் நிறுவனம் ஈடுபட்டதும், கார்பன் சமநிலை இலக்கிலிருந்து விலகியதாக அவர் குற்றம்சாட்டியதும் இந்த முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நிர்வாகம் தனது ஒழுக்கநெறி திசையை இழந்துவிட்டது” என குறிப்பிட்ட அவர், நிறுவனத்தின் தற்போதைய திசையுடன் தன்னை இணைத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.


Zameera

6,000 கிலோ கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது


 அனுமதிப்பத்திரமின்றி 6,000 கிலோ கழிவுத் தேயிலையை சந்தேக நபர் ஒருவர் லொறியொன்றினூடாக கொண்டு சென்றபோது சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் (11) இரவு கைதுசெய்துள்ளனர்.

அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து குளியாபிட்டியாவிற்கு ஹட்டன் வழியாக கழிவுத் தேயிலையை ஏற்றிச் செல்லும்போதே ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வைத்து ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் லொறியினை நிறுத்தி மேற்கொண்ட சோதனையின் போது உரிய அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கழிவு தேயிலையை ஏற்றிச் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்து மேற்கொண்ட விசாரணையின் பின்னர் கழிவு தேயிலை கடத்துவதற்கு பயன்படுத்திய லொறி ஆகியவற்றை இன்று (12) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

(செ.திவாகரன்)

Zameera

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை


 இலங்கையின் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (12) முற்பகல் 4.00 மணி முதல் நாளை (13) முற்பகல் 4.00 மணி வரையான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படும் மஞ்சள் நிறத்திலான 'முதலாம் கட்ட' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளின் விபரம் பின்வருமாறு:

களுத்துறை மாவட்டம்:

பாலிந்தநுவர

கண்டி மாவட்டம்:

தொழுவ

நுவரெலியா மாவட்டம்:

அம்பகமுவ

இரத்தினபுரி மாவட்டம்:

பெல்மதுல்ல

அயகம

இரத்தினபுரி

கொடகவெல

கலவான

நிவித்திகல

Zameera

ஸ்ரீலங்கன் விமானம் மீது மின்னல் தாக்கம் - அவசரமாக தரையிரக்கம்


 சிட்னி நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ் விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மின்னல் தாக்கியதையடுத்து, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மீண்டும் அவசரமாகத் திருப்பி அனுப்பப்பட்டதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ் நிறுவனத்தின் UL-606 எனும் இந்த விமானம், இன்று (12) அதிகாலை 1:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிட்னி நோக்கிப் புறப்பட்டது.

ஏர்பஸ் A330 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தில், சம்பவத்தின் போது 217 பயணிகள் மற்றும் 16 விமானப் பணியாளர்கள் பயணம் செய்துள்ளனர்.

விமான நிலையத்திற்கு அருகாமையில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் மின்னல் தாக்கத்தின் காரணமாக, விமானத்தின் மீது மின்னல் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், விமானி பயணத்தை இடைநிறுத்தி, அதிகாலை 1:40 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை மீண்டும் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.

பாதிக்கப்பட்ட பயணிகளை சிட்னிக்கு அழைத்துச் செல்வதற்காக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதே ரகத்தைச் சேர்ந்த மற்றொரு ஏர்பஸ் A330 விமானத்தை ஏற்பாடு செய்தது. குறித்த மாற்று விமானம் இன்று காலை 6:06 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

இதனிடையே, மின்னல் தாக்குதலுக்குள்ளான விமானம், மேலதிக பரிசோதனைகள் மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ் ஹேங்கருக்கு (Hangar) கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.