
Tuesday, July 14, 2026

OCI வீசா பெற குறைந்த கட்டணம் அறவிட வேண்டும் | இந்திய உயர்ஸ்தானிகரிடம் இ.தோ.க தலைவர் நேரில் கோரிக்கை
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது, இந்திய துணை ஜனாதிபதி C.P இராதாகிருஸ்ணன் இலங்கைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் OCI வீசாவை வழங்குங்கவதற்கான நடைமுறையை இலகுப்படுத்திய போதிலும், OCI வீசா பெறுவதற்கான கட்டணம் இலங்கை ரூபா மதிப்பில் 90 ஆயிரம் என்பதால், அதனை பெற்றுக் கொள்வதில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். எனவே OCI வீசாவை பெறுவதற்கு விசேட சலுகை முறையில் குறைந்த கட்டணம் அறவிட வேண்டும் என செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.
தெலுங்கானா முதலமைச்சரை சந்தித்தது குறித்தும், அவருடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் குறித்தும் செந்தில் தொண்டமான் சந்தோஷ் ஜாவிடம் தெளிவுப்படுத்தினார்.
மேலும் இச்சந்திப்பின் போது சமகால அரசியல் நிலவரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Just_In: ஞானசார தேரர் உள்ளிட்ட 10 பேருக்கு வழங்கப்பட்ட VIP பாதுகாப்பு நீக்கப்பட்டது.
விஐபி பாதுகாப்பு குறித்த சமீபத்திய ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் தற்போது காவல்துறை பாதுகாப்பைப் பெறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
வாராந்திர அமைச்சரவைக்குப் பிந்தைய ஊடக சந்திப்பின் போது எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த ஜெயதிஸ்ஸ, விஐபி பாதுகாப்பிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரால் பொலிஸ் மா அதிபருக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ள பல நபர்களுக்கு விஐபி பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது என்றார்.
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலா, முகமது ரிஸ்வி சாலி, சரத் குமார, அஜித் சாந்த பிரியதர்ஷனா, ருவன் விஜயவீர, திலங்க யு. கமகே, சுனில் பியான்வில, தினேஷ் ஹேமந்த, ரஞ்சித் மத்தும பண்டார, எச்.எல். தர்மசேன மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோர் தற்போது விஐபி பாதுகாப்பைப் பெறாத நபர்கள் என அவர் குறிப்பிட்டார்.
மற்ற முக்கிய பிரமுகர்களுக்கான காவல்துறை பாதுகாப்பு குறைக்கப்பட்ட போதிலும், 13 அரசியல்வாதிகள் மற்றும் பல தனிநபர்கள் தொடர்ந்து முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பைப் பெற்று வருவதாகக் கூறி, கடந்த வாரம் வெளியான ஒரு செய்தித்தாள் அறிக்கையை ஒரு பத்திரிகையாளர் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அவரது கருத்துக்கள் வெளிவந்தன.
சில தற்போதைய மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள், அரச புலனாய்வு சேவையால் நடத்தப்படும் அச்சுறுத்தல் மதிப்பீடுகளின் அடிப்படையில் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பைப் பெற்று வருகின்றனர் என்று ஜெயதிஸ்ஸ கூறினார்.
காவல்துறை சுற்றறிக்கை எண் 2687/2020-இன் கீழ், காவல்துறை பாதுகாப்பைக் கோரும் நபர்கள் முதலில் ஒரு கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும், அதன் பிறகு அரச புலனாய்வு சேவை ஒரு அச்சுறுத்தல் மதிப்பீட்டை மேற்கொள்கிறது என்று அவர் விளக்கினார். பின்னர், பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் தலைமையிலான ஒரு குழு, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்து பரிந்துரைகளை வழங்குகிறது.
புலனாய்வு மதிப்பீடுகள் மற்றும் நிறுவப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.

ஈரான்-அமெரிக்கா மீண்டும் மோதல் | உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 9% உயர்வு
மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 9% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.30 அமெரிக்க டொலராகவும், WTI எண்ணெய் விலை 78.14 அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை தொடர்பான அமெரிக்கா–ஈரான் மோதல் நிலைமை காரணமாக எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள அச்சமே இந்த விலை உயர்வுக்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சையிலிருந்த மேலும் இரு சிறைச்சாலை காவலர்கள் உயிரிழப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலைக் காவலர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு சிறைக்காவலர்கள் நேற்று (13) திங்கட்கிழமை மற்றும் இன்று (14) செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த சிறைக்காவலர்கள் 25 மற்றும் 39 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே மற்றும் அதிகாரிகளுக்கிடையே பயங்கர மோதல்கள் வெடித்தன.
தற்போதைய மரணங்களுடன் சேர்த்து, உயிரிழந்த சிறைச்சாலையின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
இந்த மோதல்களின் போது சிறைச்சாலைக்குள் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 21 ஆகும். அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட ஒட்டுமொத்தமாக 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இக்கொடூர மோதலில் காயமடைந்த மேலும் பல கைதிகளும், சிறை அதிகாரிகளும் தற்போதும் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சவுதி அரேபியா மீது யமன் ஹவுதி படைப் பிரிவினர் பாரிய ஏவுகணைத் தாக்குதல். - நடந்தது என்ன?
சவுதி அரேபியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அபா (Abha) சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஹவுதி படைப் பிரிவினர் நடத்தியுள்ள பலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
அபா பகுதி சவுதி அரேபியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும், யேமன் எல்லைக்கு அருகில் உள்ள மலைப்பாங்கான தெற்கு பிராந்தியத்தின் தலைநகராகவும் விளங்கும் நிலையில், இத்தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யேமனின் சனா சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து சவுதி அரேபியா அண்மையில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தது. இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே அபா விமான நிலையம் மீது இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரானிய ஆதரவு பெற்ற ஹவுதி படைப் பிரிவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2022 மார்ச் மாதம் சவுதியின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஹவுதிகள் நடத்திய கடுமையான தாக்குதல்களுக்குப் பிறகு, இரு தரப்பிற்கும் இடையே போர்நிறுத்த உடன்பாடு ஒன்று எட்டப்பட்டது. அதன் பின்னர், கடந்த நான்கு ஆண்டுகளாக சவுதி அரேபியாவுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஹவுதி அமைப்பினர் எவ்விதப் பொறுப்பும் ஏற்காத நிலையில், அவர்கள் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்ட முதல் தாக்குதல் இதுவாகும்.
இதன் மூலம் இரு தரப்பிற்கும் இடையே நிலவி வந்த நான்கு வருட கால அமைதி உடன்பாடு அதிகாரப்பூர்வமாக முறிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
Monday, July 13, 2026

தமிழ் பேசும் 6 கட்சிகளின் ஒன்றிணைவு நீண்ட கால பிரச்சினைகளுகு்கு தீர்வுகாணும் வரலாற்று சந்தர்ப்பம்.
(எம்.என்.எம்.அப்ராஸ்)
தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகள் பொதுவான அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட முன்வந்திருப்பது, இலங்கையின் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள அரசியல், சமூக மற்றும் அரசியலமைப்புச் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும் என்று பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும் சமூக செயற்பாட்டாளருமான கலாநிதி முபிஸால் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒரே மேடையில் அமர்ந்து, பொதுவான கோரிக்கைகள் மற்றும் பொதுவான அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இணைந்து செயல்பட முன்வந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும்.இது எந்தவொரு சமூகத்திற்கும் எதிரான அரசியல் முயற்சியாக அல்லாது, ஜனநாயக அடிப்படையில் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வுமிக்க அணுகுமுறையாகப் பார்க்கப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் பேச்சுவார்த்தைகளும் இணக்கப்பாட்டு முயற்சிகளும் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அவற்றில் பல இடைநடுவில் கைவிடப்பட்டதன் காரணமாக சிறுபான்மை மக்களிடையே நம்பிக்கையின்மை உருவாகியுள்ளது. இந்நிலையில், தற்போதைய இந்த ஒன்றிணைவு மற்றும் தொடர்ச்சியான சந்திப்புகள், தமிழ் பேசும் மக்களிடையே புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளன. இந்த அரசியல் உரையாடல் எந்தவித இடையூறும் இன்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான நிலையான தீர்வுகள் ஜனநாயக உரையாடல், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் அரசியல் ஒத்துழைப்பின் மூலமே சாத்தியமாகும் என்றும், எனவே இவ்வாறான கூட்டு அரசியல் முயற்சிகளுக்கு அனைத்துத் தரப்பினரும் ஆக்கபூர்வமான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
தமிழ் பேசும் மக்களின் அரசியல் ஒற்றுமை, அவர்களது ஜனநாயக உரிமைகள், சமத்துவம் மற்றும் நீதியை வென்றெடுப்பதற்கான முக்கிய அடித்தளமாக அமைய வேண்டும் அது நாட்டின் தேசிய ஒற்றுமையையும் ஜனநாயகப் பண்பாட்டையும் வலுப்படுத்தும் ஒரு நேர்மறையான அரசியல் முன்னேற்றமாக அமையும் என்றும் கலாநிதி முபிஸால் அபூபக்கர் அபூபக்கர் குறிப்பிட்டார்.





