(செ.கவிஷனா)
நாட்டில் தவணை முறை அடிப்படையில் அரிசி வழங்கப்படப் போவதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று இலங்கை வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்
அரச சேவை முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 28ஆவது வருடாந்த மாநாடு கோட்டை ஓய்வுபெற்ற இராணுவத்தினர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது அரசாங்கக் களஞ்சியசாலைகளில் பெருமளவிலான நெல் இருப்பு உள்ளதால், அடுத்த போக நெல் அறுவடையைச் சேமிக்க வேண்டுமாயின் தற்போதுள்ள நெல் இருப்புகளை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, களஞ்சியசாலைகளில் உள்ள நெல்லை அரிசியாக்கி, அதனை அஸ்வசும நலன்புரி திட்ட பயனாளிகளுக்கும், அரசாங்க ஊழியர்களுக்கும் சலுகை அல்லது எளிய முறையில் விநியோகம் செய்ய முடியுமா என்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது, இது விவசாயிகளின் நெல்லுக்கு நியாயமான விலையைப் பெற்றுத் தருவதற்கும், நுகர்வோருக்குக் குறைந்த விலையில் அரிசியை வழங்குவதற்கும் எடுக்கப்படும் ஒரு சமநிலையான முயற்சியாகும்.
இந்த எளிய விநியோக முறையைத் தவறாகப் புரிந்து கொண்டு அல்லது வேண்டுமென்றே திசை திருப்புவதற்காக, அரசாங்கம் தவணை முறையில் அரிசி தரப்போகிறது என்று சிலர் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.
விவசாயிகளையும், நுகர்வோரையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம், எஞ்சிய அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது மற்றும் அரிசி மா சார்ந்த உற்பத்திகளை ஊக்குவிப்பது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
மேலும், விவசாயிகளிடம் இருந்து மிகக் குறைந்த விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்து அவற்றை களஞ்சியப்படுத்திய பின்னர் தங்களுக்கு தேவையான பெரும் இலாபத்துக்கு விற்கும் சில நெல் ஆலை உரிமையாளர்கள் நாட்டில் காணப்படுகின்றனர்.
இவ்வாறு மக்களின் உழைப்பை சுரண்டி சொகுசு வாழ்க்கையை வாழும் விடயம் குறித்து அரசாங்கம் தலையிடுவதை விரும்புவதில்லை. கடந்த காலங்களில் 260 ரூபாவுக்கு விற்கப்பட வேண்டிய கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளை 400 ரூபா வரை அதிக விலைக்கு விற்று நுகர்வோரை இவர்கள் சிரமத்துக்கு உள்ளாக்கியதால் நுகர்வோர் அதிகார சபை ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சந்தையில் ஏற்பட்ட இந்த விலை ஏற்றத்தை கட்டுபடுத்தவும் நுகர்வோருக்கு சாதகமான விலையை உருவாக்கவும் கீரி சம்பாவிற்கு மாற்றீடாக ஒரு குறிப்பிட்ட அளவு அரசியை தற்காலிகமாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்காக ஒரு மாத காலத்துக்கு மாத்திரம் அரிசி இறக்குமதி மீதான கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக தற்போது சந்தையில் அரிசி விலை கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அடுத்த 6 மாதங்களுக்கு தேவையான அரிசி இருப்பு நாட்டில் காணப்படுகிறது. மேலும் கடந்த காலங்களில் நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் சதொச ஆகிய பொது நிறுவனங்கள் பல பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கி இருந்தபோதிலும் தற்போதைய அரசாங்கம் நெல் கொள்வனவுக்காக கடந்த அமைச்சரவை கூட்டத்தில் 6000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது என்றார்.