Our Feeds



Wednesday, November 19, 2025

Zameera

காணி விடுவிப்பில் ஆளும் தரப்பு தமிழ் பிரதிநிதிகள் மௌனம் - சாணக்கியன்


 எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஆளும் தரப்பில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள் மக்களின் காணி விடுவிப்பு பற்றி எவ்விடத்திலும் பேசியதில்லை. காணி விடுவிப்பு நிகழ்வுக்கு நாடா வெட்டுவதற்கு மாத்திரமே இவர்கள் செல்கிறார்கள். மிகுதியாகவுள்ள காணிகளை விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். திருகோணமலை  மாவட்டத்தில் தமிழ் இன பிரதிநிதித்துவம் வீழ்ச்சியடைந்து, சிங்கள இன பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. குடியேற்றங்களே இதற்கு பிரதான காரணமாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில்  பாதுகாப்பு அமைச்சு மற்றும்  பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்  அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும்  உரையாற்றியதாவது,

ஒவ்வொரு வரவு - செலவுத் திட்டத்திலும் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்தி நிதி ஒதுக்கப்படுவதாக அரசாங்கங்கள்  குறிப்பிட்டன.இம்முறையும் அவ்வாறான நிலையே காணப்பட்டது.

யுத்தத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்  பாதிக்கப்பட்டன.. அந்த மாகாணங்களின் அபிவிருத்திக்காக பெருந்தொகையான நிதி ஒதுக்கப்படவில்லை.  கல்வித்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்படவில்லை. பிரதமர் ஹரிணி அமரசூரிய கடந்த காலங்களில்  வரவு - செலவுத் திட்டத்தில் 6 சதவீத மானியம் ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பேரணியாக வந்தார். அவர் தான் இன்று கல்வி அமைச்சராக உள்ளார். ஆனால் கல்வி அமைச்சுக்கு 6 சதவீதம் மானியம் ஒதுக்கப்படவில்லை.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் உரையாற்றிய போது  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனை  இராணுவ முகாமுக்குள் இருந்த பாடசாலை முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புசார் ஆலோசனை குழு கூட்டத்தில்  மேலும் பல காணிகள் விடுவிக்கப்படும் என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.இதற்காக நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்.ஆளும் தரப்பில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள்  தமிழ் மக்களின் காணி விடுவிப்பு பற்றி எவ்விடத்திலும் பேசியதில்லை.காணி விடுவிப்பு நிகழ்வுக்கு நாடா வெட்டுவதற்கு மாத்திரமே இவர்கள் செல்கிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில்  பாலடிவேட்டை, காயங்கேணி, கல்லடி மற்றும்  குருக்கள்மடம் ஆகிய பகுதிகளில் இராணுவ முகாம்கள் விடுவிக்கப்பட வேண்டும். வடக்கு மாகாணத்தில் காணிகள் மற்றும் இராணுவ முகாம்கள் விடுவிக்கப்படவில்லை.

வலிகாமம் வடக்கில்  ஒரு பிரதேச  செயலக பிரிவில்  மாத்திரம் 2500 ஏக்கர் காணி இராணுவத்தினர் வசம் உள்ளது. அதேபோல் வடக்கில் மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள காணிகளும் இராணுவ வசம் உள்ளது. காணிகளை விடுவிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு வீதிகள் மாத்திரமே விடுவிக்கப்படுகின்றன.

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரால் நடத்தப்படும் ஒரு சலூன்தான் உள்ளது என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.ஆனால் ஒன்றை விட பல சலூன்களை இராணுவத்தினர் நடத்துகிறார்கள்.இது தான் உண்மை.

 தேசிய மக்கள் சக்தியில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பிரதிநிதிகள் இனி வடக்கு, கிழக்குக்கு இனி செல்ல முடியாது. அமைச்சர் சந்திரசேகரை மக்கள் தெரிவு செய்யவில்லை. அவர் தேசியப் பட்டியலில் தான் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.

திருகோணமலை  பகுதியில் புத்தர் சிலை ஒன்று புதிதாக  பிரதிஸ்டை செய்யப்பட்டமை தற்போதைய பிரச்சினையான காணப்படுகிறது. இந்த பிரச்சினை தொடர்பில் எமது கட்சியின்  மூத்த தலைவரான காலஞ்சென்ற சம்பந்தன் 20 ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டுள்ளார்.

1827 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் இன பிரதிநிதித்துவம் 81 சதவீதமாகவும், சிங்கள இனத்தவர்களின் சதவீதம் 1 ஆகவும் காணப்பட்டது. ஆனால் தற்போது தமிழ் இன பிரதிநிதித்துவம் 32 சதவீதமாகவும், சிங்கள இன பிரதிநிதித்துவம் 26 சதவீதமாகவும் காணப்படுகிறது. குடியேற்றங்களே இதற்கு பிரதான காரணம் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.

Zameera

Ai செல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது - சுந்தா் பிச்சை




 செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை அறிவுறுத்தியுள்ளாா்.

 

இது குறித்து அவா் கூறியதாவது:

 

ஏஐ செயலிகள் தவறுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மக்கள் அந்தச் செயலிகளை மற்ற செயலிகளுடன் சோ்த்துப் பயன்படுத்த வேண்டும். அதே போல், ஒரே ஏஐ தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி இருக்கக் கூடாது. அதனால்தான் மக்கள் கூகுள் தேடுதல் தளத்தையும் பயன்படுத்துகிறாா்கள்

 

படைப்பாற்றலுடன் ஏதாவது எழுத விரும்பினால் அதற்கு ஏஐ கருவிகள் உதவும். ஆனால் இந்தக் கருவிகளை அவை சிறப்பாகச் செய்யும் சிலவற்றுக்கு மட்டும் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அவை சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது.

 

மிகத் துல்லியமான தகவல்களைத் தருவதற்காக நாங்கள் மிகுந்த உழைப்பைச் செலுத்துகிறோம். ஆனால், தற்போதைய ஏஐ தொழில்நுட்பங்கள் அதிநவீனமானதாக இருந்தாலும் சில தவறுகளை செய்கின்றன.

 

தொழில்நுட்பம் எவ்வளவு விரைவாக வளா்கிறதோ, அதற்கேற்ப அதனால் ஏற்படும் தீங்குகளைத் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வேகமாக உருவாக்க வேண்டும். அதனால்தான் எங்கள் நிறுவனம் ஏஐ பாதுகாப்புக்கான முதலீட்டையும் ஏஐ தொழில்நுட்ப வளா்ச்சிக்கான முதலீட்டுக்கு ஏற்ப அதிகரித்து வருகிறது. உதாரணமாக, ஒரு படம் ஏஐ-யால் உருவாக்கப்பட்டதா என்பதைக் கண்டறிய உதவும் தொழில்நுட்பத்தை நாங்கள் இலவசமாக அளிக்கிறோம்.

 

ஏஐ போன்ற சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தை ஒரே ஒரு நிறுவனம் மட்டும் வைத்திருக்கக் கூடாது. ஒரே ஒரு நிறுவனம் மட்டும் ஏஐ-ஐ உருவாக்கி அனைவரும் அதையே பயன்படுத்த வேண்டிய நிலை வந்தால் அது மிகவும் கவலைக்குரியது என்று அவா் எச்சரித்தாா்.


Zameera

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் சங்கக்கார

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மீண்டும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ரோயல்ஸ் உடன் தனது பயணத்தை தொடங்கிய குமார் சங்கக்கார வழிநடத்தலில் சஞ்சு செம்சுன் தலைமையிலான அணி கடந்த 4 சீசன்களில் இரண்டு முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

இருப்பினும் 2024 உலகக் கிண்ண வெற்றிக்கு இந்திய அணியை வழிநடத்திய பயிற்சயாளர் ராகுல் டிராவிட் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பயிற்சியாளரானார்.

ஆனால் சஞ்சு செம்சனுடன் ஏற்பட்ட பகைமை வதந்திகளை தொடர்ந்து அண்மையில் ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பதவியை துறந்தார்.

இதனால் 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வழிநடத்துவதற்காக மீண்டும் குமார் சங்கக்கார தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமை பயிற்சியாளராக சங்கக்கார நியமிக்கப்பட்டதற்கு சிறப்பு AI வீடியோவை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெளியிட்டுள்ளது.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் காரில் இருந்து இறங்கி மாஸாக நடந்து காட்சியை AI மூலமாக சங்ககாரா நடந்து வருவது போல எடிட் செய்துள்ளனர்.

ஹுகும் பாடலின் இந்தி வெர்சனை இந்த எடிட் வீடியோவிற்கு பயன்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

 

Zameera

இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை - ஜனாதிபதி


 திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இன்னும் ஆடுகின்றீர்கள். இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள். இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. மீண்டும் பழைய இனவாத நாடகத்தை ஏற்படுத்த முடியாது .அதற்கு இடமும் கிடையாது என ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார்.


அத்துடன் திருகோணமலை புத்தர் சிலை பிரதிஷ்டை பகுதி இவ்வளவு காலம் விகாரையாக பயன்படுத்தப்படவில்லை. சிற்றூண்டி சாலையாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே மத வழிபாட்டிடத்தை அமைப்பது போலவே வேறு கதையும் இதனுள் இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம் பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான நிதிஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு உறுதியளித்த அவர் மேலும் பேசுகையில்,

திருகோணமலை விவகாரம் தற்போது சர்ச்சைக்குரியதாக காணப்படுகிறது. ஆகவே இவ்விடயம் பற்றி குறிப்பிட வேண்டும் . இந்த நாட்டில் இனவாதம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு முகங்களில் வந்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சிகள் கவிழும் போது, ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள், ஜனநாயக ரீதியிலான பிரச்சினைகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஆகிய காரணங்கள் இருந்தன. ஆனால் இப்போது எங்கள் அரசாங்கத்தின் மீது இதுபோன்ற எந்த குற்றச்சாட்டுகளும் கிடையாது. இதன்படி தோல்வியடைந்த தரப்புகளுக்கு அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்திற்கான நியாயப்படுத்தக்கூடிய தொனிப்பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அவர்களுக்கு இனவாதத்தை உருவாக்க வேண்டிய தேவை எழுகின்றது.

பொலிஸார் சட்டத்தை போன்று இதுபோன்ற விடயங்களிலும் அவதானம் செலுத்த வேண்டும். சட்டத்தை செயற்படுத்தும் போது சமூகத்தில் ஏற்படக்கூடிய குழப்ப நிலைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும்.

இந்நிலையில் திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு செயலாளரிடம் அறிக்கையொன்றை கோரியிருந்தேன். அதன்படி பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த புத்தர் சிலை அங்கிருந்து பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் நிலையப் பதிவுகளில் உள்ளன. அடுத்ததாக இந்த மோதல் பொலிஸாருக்கும் இனவாத குழுக்களுக்கும் இடையிலேயே ஏற்படும். இதனால் மீண்டும் அந்த புத்தர்சிலை அந்த இடத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 2014இல் வழங்கப்பட்ட உரித்தொன்று இருக்கின்றது. இவ்வளவு காலம் இது விகாரையாக பயன்படுத்தப்படவில்லை. சிற்றூண்டி சாலையாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த சிற்றூண்டிசாலையின் சட்டவிரோத நிர்மாணம் இருப்பதாக அதனை அகற்றுவதற்கு கரையோர பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளரால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சின் செயலாளரும் அதனை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பொலிஸாருக்கும், கரையோர பாதுகாப்பு அதிகார சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் நடத்தி கலந்துரையாடலின் போது பிக்கு ஒருவர் இதற்காக ஒருவார கால அவகாசம் கோரியுள்ளார். இந்த அவகாசம் 14ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. இவ்வாறான நிலைமையிலேயே புத்தர் சிலை தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது.

இது மத வழிபாட்டிடத்தை அமைப்பது போலவே வேறு கதையும் இதனுள் இருப்பதாக தெரிகின்றது. அதனை விகாரைக்கு சொந்தமான இடம் என்பதால் இதில் விகாரை இருந்ததாக பொதுமக்கள் நினைக்கலாம். ஆனால் விகாரையின் தேரர் ஒருவருக்கு சொந்தமான இடமொன்று இருந்தது. அங்கு வழிபாடு செய்யும் இடம் இருக்கவில்லை. குறிப்பிட்ட சம்பவத்தின் பின்னர் மாவட்ட செயலக அலுவலகத்தில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். கரையோர பாதுகாப்பு அதிகார சபைக்கு சொந்தமான பகுதி மற்றும் விகாரைக்குரிய காணி ஆகியன அளக்கப்பட்டு அதனை பிரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்துடன் நீதிமன்றம் அங்கே புதிய கட்டிடங்களை அமைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது

இப்போது திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இன்னும் ஆடுகின்றீர்கள். இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள்.இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. நான் மட்டுமல்ல இந்த நாட்டின். பௌத்த மக்களும் இனவாதத்துக்கு இடமளிக்க போவதில்லை. தமிழ், முஸ்லிம்களும் இடமளிக்க போவதில்லை. மீண்டும் பழைய இனவாத நாடகத்தை ஏற்படுத்த முடியாது. இது வரலாற்றில் மட்டுமே இருக்கும். நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் இலங்கையில் இனவாதம் எழுதப்படாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.
Zameera

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு


 கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 


ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக மலையக போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதனால் கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் இவ்வாறு நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 

அத்துடன் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மழையுடனான வானிலை நிலவுவதன் காரணமாக ரயில் மார்க்கத்தில் உள்ள மண்மேடுகளை அகற்றும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


Tuesday, November 18, 2025

Zameera

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மரண தண்டனைக்கு எதிராக போராட்டம் – இருவர் உயிரிழப்பு


 பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டின் தலைநகர் டாக்காவில் பல நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டக்காரர்கள் பேரணிகளை நடத்தினர்.

சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து வன்முறைகள் ஏற்படும் என்று எதிர்பார்த்து டாக்கா மற்றும் பங்களாதேஷின் பல்வேறு இடங்களில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸாருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களை கலைக்க முயன்ற பொலிஸார், அவர்கள் மீது தடியடி நடித்தியும் கையெறி குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தி அவர்களை அங்கிருந்து கலைத்தனர்.

இதனால், கோபமடைந்த போராட்டக்காரர்கள், பொலிஸார் மீது செங்கல் உள்ளிட்ட பொருட்களை வீசி எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zameera

21 எதிர்ப்பு பேரணியில் மகிந்த ராஜபக்‌ஷவும் கலந்துகொள்ள உள்ளார்


 எதிர்வரும் 21ஆம் திகதி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒழுங்கு செய்துள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் கலந்துகொள்ள உள்ளார். 


தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆசீர்வாதம் பெறுவதற்காக கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்தபோது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். 

முன்னதாக இந்த பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்கமாட்டார் என நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Zameera

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் – ஜனாதிபதி தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு குழுவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்


 திருகோணமலை ஜயந்தி போதிராஜ விகாரையில் நடந்த சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு சாதகமானதா? பாதிப்பானதா? 1951ஆம் ஆண்டில் அந்த விகாரை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2010 இல் பௌத்த விவகாரங்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2014 இல் புனித பூமிக்கான உரித்து கிடைத்துள்ளது. ஏதோவோரு பிரச்சினை உருவாகின்றது. அந்த பிரச்சினையில் புத்தர்சிலையை கொண்டு செல்லும் தரப்பாக பொலிஸார் மாற்றப்பட்டுள்ளனர்.

புத்தர் சிலையை அகற்றுவதற்கு பொலிஸாருக்கு உள்ள உரிமை என்ன? தவறை புரிந்துகொண்டு மீண்டும் அந்த புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வரவுசெலவுத் திட்டத்தின் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று (18) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

பௌத்த மதத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமை தொடர்பில் நாம் அனைவரும் அறிவோம். அதேபோன்று மற்றைய மதங்களுக்கு வழங்கப்படும் உரிய கௌரவம் மற்றும் இடம் என்பன வழங்கப்பட வேண்டும்.

இந்நிலையில் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் வகையில் தேசிய ஒருமைப்பாட்டு குழுவொன்றை அமைக்க வேண்டும். ஜனாதிபதி அதனை செயற்படுத்த வேண்டும். இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் போது இதனை பொலிஸாரிடம் ஒப்படைத்து பலனில்லை.

நாட்டுத் தலைவர் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். இது சாதாரண பிரச்சினையல்ல என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஏனைய மதங்களில் இது போன்ற பிரச்சினைகள் வரும் போதும் நாங்கள் இவ்வாறு செயற்பட்டோம். சிறந்த பௌத்தர்கள் போன்றே நடந்து கொண்டோம்.

ஆனால் தற்போது சில குழுக்கள் பௌத்த மதத்தை திரிபுப்படுத்துகின்றன. இந்த நிலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு நான் ஜனாதிபதிக்கு கூறுகின்றேன்.

ஜனாதிபதி தீயை உருவாக்கக் கூடாது. தீயை அணைப்பதற்கே நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பு பிரிவினர் இதுபோன்ற விடயங்களில் தலையிடாது.

நாட்டின் ஜனாதிபதி இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிச் செல்லாத வகையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகாநாயக்க தேரர் மற்றும் இந்த பிரச்சினையில் தொடர்புபட்டுள்ள சகல குழுக்களையும் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுங்கள். பிரச்சினையில் இருந்து நழுவிச் செல்வது தலைமைத்துவம் அல்ல. இதனை தீர்க்க வேண்டும்.

நாட்டில் பல இடங்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆகவே இவற்றுக்கு முறையான தீர்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை, உண்மையான மக்கள் இறையாண்மை, நாட்டின் சுதந்திரத்தை பலப்படுத்தும் சாதகமான செயற்பாடுகளுக்கு எதிர்க்கட்சி கூட ஒத்துழைப்பை வழங்க தயார்.

ஆனால் விகாரைகளுக்குள் சென்று செயற்படுவதற்கு பொலிஸாருக்கு உரிமை கிடையாது. இதனால் இந்தப் பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மத வழிபாட்டு இடங்களில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும் போது நாங்கள் தெளிவான நிலைப்பாடுகளிலேயே இருந்தோம். தீயை உருவாக்கமால் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய வகையில் நாம் செயற்பட்டுள்ளோம். அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

தேர்தல் காலங்களில் இராணுவ வீரர்களுக்கான படையணிகளை உருவாக்கிய அரசாங்கம் இன்று அவர்களை கிடப்பில் போட்டுள்ளது.

நாட்டின் ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் முப்படைகள், பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படைகள் மகத்தான சேவைகளை ஆற்றியுள்ளன.

இன்று, ஊனமுற்ற இராணுவ வீரர்கள் 3 பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவில், பொது நிர்வாக சுற்றறிக்கை 15/2025 மூலம் சகல அரச மற்றும் ஆயுதமேந்திய படை அதிகாரிகளின் ஓய்வூதியங்களை திருத்துவதற்கு முன்மொழியப்பட்டன.

ஓய்வூதிய சுற்றறிக்கை இலக்கம் 2/2025, ஊடாக ஆயுமேந்திய முப்படைகளின் பொலிஸார் மற்றும் விசேட அதிரடைப் படையில் பணியாற்றுவோர் ஓய்வு பெற்ற பிறகும் 55 வயது வரை, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெறும் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு, இறந்த அதிகாரியின் விதவைகளுக்கு ஓய்வூதியம் கிடைக்காது என சுற்றறிக்கை அனுப்பி வைத்து, பின்னர் அதனை திருத்தம் செய்துள்ளனர்.

வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஓய்வூதிய திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அது செல்லுபடியற்றது என்று அறிவித்து உத்தரவுகளை பிறப்பிக்கிறார். ஜனாதிபதியின் முன்மொழிவை பணிப்பாளர் நாயகம் எவ்வாறு நிராகரிக்க முடியும் என்ற விடயத்தில் பிரச்சினை காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி உரிமைகளை வழங்கும்போது, ​​பணிப்பாளர் நாயகம் குறித்த உரிமைகளை வெட்டுச் செய்கிறார். 2025 ஆம் ஆண்டு தீர்மானம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்த வெட்டு நடக்கக்கூடாது. இது உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும், இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் நிலையான கொடுப்பனவுகளைக் கூட அரசாங்கம் குறைத்துள்ளது. இதுபோன்ற அநீதிகளை இழைக்க வேண்டாம்.

சுனாமி, விமான விபத்துகள் போன்றவற்றால் காணாமல் போன பாதுகாப்புப் படையினருக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டிருந்தாலும், ஓய்வூதிய திணைக்கள பணிப்பாளர் இவற்றை இரத்துச் செய்துள்ளார்.

அவர்கள் திரும்பி வருவார்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் நிலையான கொடுப்பனவுகளை வழங்குவதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளார்.

பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதியையும் விஞ்சி செயற்பட்டுள்ளார். இது நாட்டின் கொள்கைக்கு முரணாக அமைந்து காணப்படுகின்றன என்று தெரிவித்தார்.

ஊனமுற்ற இராணு வீரர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தற்போதைய ஆளும் தரப்பினர் எதிர்க்கட்சியில் இருந்தபோது அடிக்கடி பேசி குரல் கொடுத்தனர்.

இன்று ஆட்சிக்கு வந்த பிற்பாடு இவற்றை மறந்து செயற்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இப்போதாவது நீதியை நிலைநாட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

போதைப்பொருள் ஒழிப்பைப் போலவே, இணையவழி கடன் மாபியாவையும் துடைத்தெறிய வேண்டும்.

போதைப்பொருள் வியாபாரம் ஒழிக்கப்படும் என்று பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர் அறிவித்துள்ளார். அந்த நேர்மறையான நடவடிக்கைகளை நாம் பாராட்டுகிறோம்.
இந்நடவடிக்கைகளை பாரபட்சமின்றி முன்னெடுக்க வேண்டும். இதனை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

போதைப்பொருள் வியாபாரம் போலவே, இனையவழி கடன் மாபியாவும் மிக மோசமாக அதிகரித்து, நாட்டில் மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு இது வந்துள்ளது. சட்டவிரோத கடன் வழங்கும் செயல்முறை குறித்து இதற்கு முன்னரும் பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறோம்.

ஆனால் இதற்கு தெளிவான தீர்வு எதுவும் இல்லை. இதன் காரணமாக, அண்மையில் அத்தனகல்லை பி்ரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மெகா கேஷ் என்ற நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட கடன் காரணமாகவே இந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிறுவனத்தில் இருந்து, இந்த இளம் பெண் பெற்ற கடனுக்கு வட்டி விகிதம் 500% ஆக காணப்பட்டுள்ளது. இவ்வாறு கடன் பெறுவதற்கு வறுமை அதிகரிப்பே காரணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மெகாபின் லங்கா, வன் கெரடிட், ஆசாத் டெவலப்மென்ட், சூப்பர்மேன் போன்ற பல நிறுவனங்கள் நாடு முழுவதும் பரவி காணப்படுகின்றன. இந்த சட்டவிரோத நிறுவனங்களை இழுத்து மூட வேண்டும்.

இந்த சட்டவிரோத நிறுவனங்கள் மத்திய வங்கி கடிதம் போன்று போலியான கடிதங்களை எழுதி கடன் பெறுநர்களை மிரட்டி வருகின்றன. தவனை தொகை ஒரு நாள் தாமதமானால் கூட கடன் பெறுநர்களின் வேலை தளங்களுக்குச் சென்று மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இந்த சட்டவிரோத நிறுவனங்களுக்கு எதிராக சட்டங்களை இயற்றுவதற்குத் தேவையான முழு ஆதரவையும் பெற்றுத் தருவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

டிசம்பர் மாதத்தில் இலங்கையர் தினத்தைக் கொண்டாடுவதற்காக ஒதுக்கப்பட்ட 3000 இலட்சம் ரூபாவை, நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஒதுக்குங்கள்.

டிசம்பர் 11, 12 மற்றும் 13 ஆகிய திகதிகள் இலங்கையர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டிற்குள் ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கான வழிமுறைகளை பெற்றுக் கொடுப்பது இதன் நோக்கமாக காணப்படுகின்றன.

இதற்காக 3000 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த 3000 இலட்சத்தை செலவிட 7 நாள் விலைமனு செயல்முறையும் கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கையர் தினத்திற்காக ஒதுக்கப்பட்ட 3000 இலட்சம் ரூபாவை காணாமல் போனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு பயன்படுத்துங்கள்.

நல்லிணக்க திட்டத்திற்கான நிதிசார் பக்க பலத்தை பெற்றுக் கொடுக்குமாறு இதனைப் பயன்படுத்துமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.

சகவாழ்வு பற்றிப் பேசும் அரசு, இந்த 3000 இலட்சத்தை வீணாக்காமல், நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க, தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த, நல்லிணக்கத்தை ஏற்படுத்த பயன்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேட்டுக்கொண்டார்.


Zameera

கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் சம்பள ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்


 (இணையத்தள செய்திப் பிரிவு)

(129 ஆவது அத்தியாயமான) கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் சம்பளத்தை முறைமைப்படுத்தல்) சட்டத்தின் 66 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 

2025.11.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 18 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் (ஊழியர் மற்றும் பணிக்கொடை முறைமைப்படுத்தல்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் இலக்க 03 இனைத் திருத்தம் செய்வதற்காக 2025.07.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகள் மூலம் தங்குமிட வசதிகளுடன் கூடிய தங்ககங்கள் மற்றும்  விருந்தகங்களில் பணிபுரியும் உணவுப் பானங்களைப் பரிமாறும் பெண் ஊழியர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு பிற்பகல் 6.00 மணிக்குப் பின்னர் மற்றும் முற்பகல் 6.00 மணிக்கு முன்னர் பணியாற்றுவதற்கு இயலுமாகும் வகையில் தேவையான சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த பணிகளுக்காக கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் தொடர்பான (சேவை மற்றும் பணிககொடையை முறைமைப்படுத்தல்) சட்டத்தின் 66 ஆம் பிரிவின் கீழ்  அமைச்சரால் ஆக்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும், பின்னர் அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

Zameera

350 மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை




 பல மருந்து வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வௌியிடப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 


இன்று (18) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

குறித்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் 350 மருந்து வகைகளுக்குக் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் என்றும், அந்த வர்த்தமானி அறிவித்தலைப் பின்பற்றாதவர்களுக்கு எதிராகச் சட்டம் அமுலாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 

இந்த அறிவித்தல், தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் பதிவு செய்யப்படவுள்ள மருந்துகளுக்கும் பொருந்தும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

"நாம் சமர்ப்பித்த புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, இனிமேல் பதிவு செய்யப்படும் அனைத்து மருந்துகளின் விலையும் குறையும். 

அதன்படி, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை (NMRA) இந்த வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்திய பின்னர், பதிவு செய்யப்படும் மருந்துகளின் அடிப்படையில் தான் அந்த இலக்கம் வௌியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, பதிவு செய்யும் காலப்பகுதிக்கு அதிக காலம் எடுக்கப்படாது. 

இன்னும் சில மாதங்களில் இலங்கையில் பயன்படுத்தப்படும் அனைத்து மருந்துகளும் இந்த விலை சூத்திரத்தின்படி தான் பதிவு செய்யப்படும். 

"வர்த்தமானி அறிவித்தலை வௌியிட்டு, எதிர்காலத்தில் அந்த விலைகள் குறித்து மக்களுக்கு அறிவிக்கவும், அதன்படி செயற்படாதவர்களுக்கு எதிராகச் சட்டத்தை அமுலாக்கவும் எதிர்பார்க்கிறோம்." என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Zameera

கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் சத்தியாக்கிரக போராட்டம்

திருகோணமலை - புல்மோட்டை கனிய மணல் கூட்டுத் தாபனத்தில் பணியாற்றி வரும் 83 ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவித்து கொட்டும் மழையிலும்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக இன்றய தினம் செவ்வாய்க்கிழமை (18) 37வது நாளாகவும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

சுமார் 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமையால் பொருளாதார ரீதியாக தங்களது குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலை பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

 இது தொடர்பில் உரிய துறை சார் அமைச்சர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த தேர்தலின் போது தங்களுக்கு அனுர அரசாங்கம் தீர்வுகளை பெற்று தரும் என்ற நம்பிக்கையில் வாக்களித்த போதிலும் தங்கள் பிரச்சினைகளை கண்டு கொள்ளாதது போல் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

தங்களுக்கு சாதகமான தீர்வை பெற்றுத் தரக் கோரி சத்தியாக் கிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Zameera

கொலன்னாவை முதல் கொழும்பு துறைமுகம் வரை குழாய் அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்


 (இணையத்தள செய்திப் பிரிவு)

கொலன்னாவை முனையம் தொடக்கம் கொழும்பு துறைமுகம் வரைக்குமான குழாய் வழியில் குழாயிடல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 

2025.11.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 18 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

இறக்குமதி செய்யப்படும் பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் கொழும்பு துறைமுகம் தொடக்கம் கொலன்னாவை முனையம் வரைக்குமான 05 குழாய் வழிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றது.

குறித்த குழாய் வழிகள் மிகவும் பழையவையாவதுடன், கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக கசிவுகள் ஏற்பட்டுள்ளன. அதனால்,நம்பகமான குழாய்த் தொகுதி இருக்க வேண்டிய தேவையைக் கருத்தில் கொண்டு, அதற்கான கருத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்காக இதற்கு முன்னரும் கருத்திட்ட முன்மொழிவுகள் கோரப்பட்டிருப்பினும், குறித்த முன்மொழிவுகள் மூலம் பொருத்தமான முதலீட்டாளர் இதுவரை தெரிவு செய்யப்படவில்லை.

அதனால், இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்திய பெறுகைச் செயன்முறையை முடிவுறுத்தி, கொழும்பு துறைமுகத்தின் டொல்ஃபின் எண்ணெய்க் கப்பல் தடாகத்திலிருந்து கொலன்னாவை முனையம் வரைக்கும் 18 அங்குலம் மற்றும் 14 அங்குலம் விட்டத்துடன் கூடிய குழாய் உள்வழியை சோதனை செய்யக்கூடிய வகையிலான இயந்திரோபகரணங்களைப் பயன்படுத்தக் கூடிய 02 குழாய் வழிகளை நிர்மாணித்தல், கொழும்பு துறைமுகத்தின் டொல்ஃபின் எண்ணெய்க் கப்பல் தடாகத்திலிருந்து சேரம் வாயில் வரைக்கும் 12 அங்குல விட்டத்துடன் கூடிய கடலுக்கு அடியில் செல்லும் குழாய் வழியை நிர்மாணித்தல் மற்றும் கொழும்பு துறைமுகம் மற்றும் கொலன்னாவை முனையங்களை தேவைக்கேற்ப மாற்றியமைத்தல் போன்ற கருத்திட்டக் கூறுகளுடன் கூடிய ‘கொலன்னாவை முனையம் தொடக்கம் கொழும்பு துறைமுகம் வரைக்குமான குழாய் வழியில் குழாயிடல் கருத்திட்டம்’ பொறியியல், பெறுகை, நிர்மாணித்தல் மற்றும் இயக்குதல் (EPCC) கருத்திட்டமாக அமுல்படுத்துவதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

Sri Lanka

தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கம் பாராளுமன்றத்தை பயன்படுத்திக் கொள்கிறது - பிரசாத்!


பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் குறித்து ஆளும் தரப்புடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட நாங்கள் தயாராகவுள்ளோம்.  ஆனால் 159 பேரில் ஒருவர் கூட விவாதத்துக்கு தயாரில்லை. தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கம் பாராளுமன்றத்தை பயன்படுத்திக் கொள்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன தெரிவித்தார்.



பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற   2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள்,வெளிநாட்டு , வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, நீதி  மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும்  உரையாற்றியதாவது,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பற்றி நாங்கள் குறிப்பிட்ட விடயத்தை அரசாங்கம் இனவாத முரண்பாடாக மாற்றியமைத்துள்ளது. ஜனாதிபதியின் அறிவிப்பில் சட்ட ரீதியிலான சிக்கல் காணப்பட்டது. இதனை தெளிவுப்படுத்தவே பாராளுமன்றத்திலும்,  வெளியிடங்களிலும் கேள்வியெழுப்பினோம். ஆனால் அரசாங்கம் அதனை தவறாக பயன்படுத்திக் கொண்டது.



இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் குறித்து ஆளும் தரப்புடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட தயார். எவராவது உள்ளீர்கள். அவ்வாறு இருந்தால். வாருங்கள். வெளிவிவகார அமைச்சரே நீங்கள் இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து  தெரிவித்தீர்கள். நீங்களாவது பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள்.



பகிரங்க விவாதத்துக்கு வருவதற்கு எவரும் தயாரில்லையா, 159 பேர் உள்ளீர்கள் தைரியமாக வாருங்கள். பத்தரமுல்லை காரியாலயத்தின் அனுமதி இல்லாமல் ஆளும் தரப்பால் ஏதும் செய்ய முடியாது.பகிரங்க விவாதத்தில் ஈடுபட நாங்கள் தயார். மக்களுக்கு உண்மையை குறிப்பிடுங்கள்.



தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கம் பாராளுமன்றத்தை பயன்படுத்திக் கொள்கிறது.தவறுகளை சுட்டிக்காட்டும் போது அவற்றை திருத்திற் கொள்ளாமல் இதற்கு இனவாத உருவமளித்து மக்களை தவறாக வழிநடத்துகிறது. முடிந்தால் பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள் என்றார்.