Our Feeds



Wednesday, June 17, 2026

Zameera

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை


 இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிப்பதாக அறிவித்தார். 


இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னரே கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 


இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை அகடமியில் இணைந்தது தொடர்பான விசாரணைக்கு அமைவாக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு இணங்க யோஷித ராஜபக்ஷ இன்று (17) குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார். 


நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Zameera

கோட்டாபயவின் மனு நாளை பரிசீலினைக்கு


 உயிர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை நாளை (18) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) தீர்மானித்துள்ளது.


Zameera

சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்த காத்தான்குடியில் முக்கிய மாநாடு


 இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில், சிறுவர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த முக்கிய மாநாடு காத்தான்குடி நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகபூர்வ பதாகை காட்சிப்படுத்தப்பட்டது. இதில் அதிகாரசபையின் இலச்சினையுடன், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை என்ற வாசகம் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பிரதானமாக இடம்பெற்றிருக்கின்றது.

மேலும், அவசர உதவி மற்றும் தொடர்புகளுக்கான முகவரி, தொலைபேசி எண்கள் (0112778911-14) மற்றும் இணையதள விவரங்களும் இதில் இடம்பெற்றுள்ளது.

​இந்த மாநாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ் அருள்ராஜ் கலந்து கொண்டார். இதில் பல்வேறு திணைக்களங்களைச் சேர்ந்த அரச அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் சட்டத்தரணிகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல், பாதுகாப்பு மற்றும் தற்போதைய சவால்கள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த மாநாடு, எதிர்காலத்தில் சிறுவர் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கான முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Zameera

குமார ஜயகொடியின் வழக்கு விசாரணை ஆரம்பம்


 ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் திறந்த நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டப்பட்ட வேளையில், தான் குற்றமற்றவர் என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வழக்கின் சாட்சி விசாரணைகள் ஆரம்பமாகின.

கடந்த 2016ஆம் ஆண்டு லங்கா உர நிறுவனத்தின் கொள்வனவு முகாமையாளராகப் பணியாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்தின் களஞ்சிய வளாகத்தில் கார்பெட் விரிக்கும் ஒப்பந்தத்தை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சாதகமான முறையில் வழங்கியதன் மூலம், அரசாங்கத்திற்கு 8,859,708 ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Zameera

பெசிலைக் கைதுசெய்யுமாறு சிஐடிக்கு உத்தரவு!


 சுற்றுலா மேம்பாட்டுப் திணைக்களத்திலிருந்து நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக பெசில் ராஜபக்ஷவை கைதுசெய்யுமாறு இன்று (17) கொழும்பு கோட்டை நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கு நீதிமன்றத்தின் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த வழக்கு ஒக்டோபர் 14 அன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Zameera

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ கைது


 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ கைது


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 


இன்று (17) காலை, இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை அகாடமியில் இணைந்தது தொடர்பான விசாரணை ஒன்றுக்காக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்திருந்த அறிவித்தலுக்கு அமைய அவர் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார். 


அதனைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Admin

Breaking: கோட்டாவின் மனு 1.30 க்கு விசாரணை | முக்கிய நீதிபதி விசாரணையிலிருந்து விலகினார்.



2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் போது, தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள ரிட் மனு (Writ Petition), இன்று (17) பிற்பகல் 1.30 மணிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.


முன்னாள் ஜனாதிபதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா முன்னிலையாகவுள்ளார்.


இன்று காலை இந்த விடயம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இந்த மனு தொடர்பான ஆவணங்கள் இன்று காலை 8.00 மணியளவில் தான் கிடைத்ததாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். அத்துடன், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளிடமிருந்து மேலதிக அறிவுறுத்தல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


இதற்கிடையில், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரியவுடன் அமர்வில் இருந்த நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ, இந்த மனுவை விசாரணை செய்வதிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

Zameera

உடவளவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் நீர்வெட்டு!


 உடவளவை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் 13 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

உடவளவை நீர் வழங்கல் திட்டத்தின் அத்தியாவசிய பராமரிப்புப் பணி காரணமாக இந்தத் தற்காலிக நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, உடவளவை  நகரம் மற்றும்  RET நகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (17)  முற்பகல் 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 13 மணிநேரத்திற்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.

இக்காலப்பகுதியில் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Zameera

யோஷித ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜர்


 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று காலை (17) இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜரானார்.

Zameera

சுரேஷ் சலே தான் அறிந்த தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கூறுவதே சிறந்தது - நளிந்த ஜயதிஸ்ஸ


 (எம்.மனோசித்ரா)


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்துத் தனக்குத் தெரிந்த உண்மைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வெளிப்படுத்துவதே சுரேஷ் சலே செய்ய வேண்டிய மிகச் சிறந்த செயலாகும். அதுவே ஒரு புலனாய்வு அதிகாரி என்ற ரீதியில் அவருக்குப் பெருமையையும் மதிப்பையும் வழங்கும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


மாறாக, புலனாய்வுப் பிரதானியை மாற்றுமாறு கோரிப் போராடுவதோ அல்லது தான் தெரிந்து வைத்துள்ள முக்கிய தகவல்களை மறைத்து வைத்திருப்பதோ முற்றிலும் பொருத்தமற்ற செயலாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில்  செவ்வாய்கிழமை (16)  இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,


சுரேஷ் சலே தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


அவர் தற்போது எந்தவொரு சாதாரண சிறைக்கூண்டிலும் அடைக்கப்படவில்லை. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உரிய பாதுகாப்புப் பிரிவினரின் கண்காணிப்பின் கீழ், ஒரு நோயாளிக்கு வழங்கப்படும் சாதாரண மருத்துவ சிகிச்சைகளே அவருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இவருக்கும் வைத்தியசாலையில் தேவையான பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறையில் முறையான காற்றோட்டமோ அல்லது அடிப்படை வசதிகளோ இல்லை என கூறப்படுகிறது.


எனினும், சுரேஷ் சலேவுக்காக அரசாங்கம் புதிய சொகுசு அறைகளைத் தயாரிக்கவில்லை. கடந்த அரசாங்கங்களின் காலத்திலும் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் கைதிகள் வைக்கப்பட்டிருந்த அதே சாதாரண அறைகளிலேயே அவரும் வைக்கப்பட்டிருந்தார்.


இதற்கு முன்னர் அங்கு தங்கியிருந்த எவரும் இத்தகைய புகார்களை முன்வைக்கவில்லை. அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் உறவினர்களைச் சந்திப்பதற்கான அனுமதிகள் எவ்வித தாமதமுமின்றி வழங்கப்பட்டு வருகின்றன.


பொதுவாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்கள் உணவு உட்கொள்ளாமல், ஊசி மூலம் மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் செலுத்தப்படும் போது இவ்வாறான சாதாரண தொற்றுகள் ஏற்படுவது இயல்பானதே. இதற்கான சிகிச்சைகளும் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.

Zameera

குச்சவெளி பள்ளவக் குள பகுதியில் குடிநீர் பிரச்சினை தீர்வு – பிரதேச சபை தவிசாளர் நடவடிக்கை


 திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள பள்ளவக் குள மக்கள் குடி நீரின்றி தவிப்பதாக கடந்த வாரம் தெரிவித்திருந்ததை அடுத்து குறித்த பிரச்சினை ஊடகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை அடுத்து குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாரக் உரிய பகுதிக்கு கள் விஜயம் செய்து குடி நீரை வழங்கி பிரச்சினையை தீர்த்து வைத்தார்.

முன்னர் செய்தி - சுமார் 2004 ம் ஆண்டு குடியேற்றப்பட்ட குறித்த பகுதி மக்கள் தற்போது வரை நிரந்தர குடி நீரின்றியே வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

குச்சவெளி பிரதேச சபை மூலமாக பவுசர் மூலமாக குடி நீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் இரு மாதங்களாக அதுவும் இடை நிருத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து (12) குறித்த பகுதி ஜூம் ஆபள்ளி நிருவாகம்,கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் கூட்டாக தெரிவிக்கையில் நாங்கள் குடி நீரின்றி தவிக்கிறோம் பாடசாலை செல்லும் பிள்ளைகள் பெண்கள் என பலரும் கஷ்டங்களை இதன் மூலம் எதிர்நோக்குகிறார்கள். 

குறித்த பகுதியில் சுமார் 350 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். சுத்தமான குடிநீரை பெறுவதும் மனித உரிமைகளில் ஒன்றாக உள்ளது.

குச்சவெளி பிரதேச சபை மூலமாக குடி நீர் விநியோகம் செய்வதற்காக நிதி விடுவிக்கப்பட்ட போதிலும் இரு மாதங்களாக  குடி நீர் விநியோகம் இடம்பெறவில்லை. ஓரிரு வாரங்களுக்குல் குடி நீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் பிரதேச செயலகம்,பிரதேச சபையை முற்றுகையிடுவோம் எனவும் தெரிவித்தனர்.

Zameera

80 டொலருக்கும் கீழ் சரிந்தது கச்சா எண்ணெய்


 உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை இன்று (17) அமெரிக்க டொலர் 80 என்ற எல்லைக்கும் கீழ் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று அமெரிக்க டொலர் 76.28 க்கு நெருக்கமான மதிப்பை எட்டியிருந்தது.

அதேபோல், ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அமெரிக்க டொலர் 79.13 ஆகப் பதிவாகியிருந்தது.

இதற்கிடையில், மர்பன் (Murban) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 7.02% என்ற பெரும் வீழ்ச்சியைக் கண்டு, அமெரிக்க டொலர் 71.81 ஆகக் குறைந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் போர் வெடித்த ஆரம்பக் காலக்கட்டத்தில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68 டொலர் முதல் 70 டொலர் வரையான வரம்பில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Zameera

வானிலை தொடர்பில் அறிவிப்பு!


 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.



ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் மாலை 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.



மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், தெற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.



இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.