Our Feeds



Friday, July 26, 2024

Sri Lanka

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி!


மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று (26) நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 140 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி சார்பில் Muneeba Ali அதிகூடிய ஓட்டங்களாக 37 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் Udeshika Prabodhani மற்றும்  Kavisha Dilhari ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

இந்நிலையில் 141 ஓட்டங்களை  பெற்றால் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கை அணி துடுப்பெடுத்தாட அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட19.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு141 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பில் Chamari Athapaththu அதிகூடிய ஓட்டங்களாக 63 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் பாகிஸ்தான்  அணி சார்பில் Sadia Iqbal 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய இலங்கை அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

Sri Lanka

நாயை குளிப்பாட்டுவது போல் தேர்தலை ஜனாதிபதி வழிநடத்துகிறார் !


தேசபந்து தென்னகோன் எதிர்காலத்தில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றினால் அது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் பிரதமர் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

''நாயை குளிப்பாட்டுவதற்கு அழைத்துச் செல்வது போல் இந்த ஜனாதிபதி இந்த தேர்தலை வழிநடத்துகிறார். குறிப்பாக, தேர்தலை சந்திக்காமல் தனது இருப்பை எப்படி பலப்படுத்துவது என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் முயற்சி செய்து வந்தார். சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த பொலிஸ் மா அதிபர் நியமனத்தை தவிர்த்து வந்தார். மேலும் இன்று பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட மாட்டார் என்றும் பதவி வெற்றிடமில்லை என்றும் கூறுகின்றனர். தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் நீண்ட விளக்கமளிக்கவுள்ளார். முடிந்தால் இன்று நீங்கள் சொன்ன கதையை வெளியே சென்று சொல்லுங்கள் என்று தினேஷ் குணவர்தனவுக்கு சவால் விடுகிறோம்''. என்றார்.

Sri Lanka

முன்பதிவு இல்லாமல் செல்வதை தவிர்க்கவும்!


முன்பதிவு செய்யப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் மட்டுமே குடிவரவு மற்றும் குடியகல்வு தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பதிவு செய்யாமல் செல்வதை தவிர்க்குமாறு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.

2025 ஆண்டு முதல் புதிய e passport வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://www.immigration.gov.lk/ ஊடாக முன் பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sri Lanka

இலங்கை தமிழரசு கட்சியின் அதிரடி அறிவிப்பு!


ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை என இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது.

எனினும் ஜனாதிபதி தேர்தலில் போடியிடும் பிரதான வேட்பாளர்களுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்  தெரிவித்தார்.

Sri Lanka

ஜனாதிபதி தேர்தல் – இதுவரை 4 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்!


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நான்கு வேட்பாளர்கள் இன்று (26) கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி,
01) சுயேட்சை வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க,
02) சரத் கீர்த்திரத்ன
03) தொன் ஓஷல லக்மால் அனில் ஹேரத்
04) ஏ.எஸ் .பி லியனகே
            
ஆகியோர்  இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.






Sri Lanka

கமலா ஹரிசிற்கு ஆதரவை வெளியிட்டார் ஒபாமா!


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலாஹரிஸ் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி பராக்ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார்.

பராக் ஒபாமாவின் இந்த ஆதரவு காரணமாக கமலா ஹரிஸ்  அமெரிக்க அரசியலில் தீவிரமாக செயற்படும் ஜனநாக கட்சியின் தலைவர்களில் அனேகமானவர்களின் ஆதரவை பெற்றுள்ளார்.

பில் கிளின்டன் ஹரி கிளின்டன் என ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் உடனடியாக கமலா ஹரிசிற்கு ஆதரவை வெளியிட்ட போதிலும் ஒபாமா ஆதரவை வெளியிடாதது கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில் ஒபாமா தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

தனது மனைவியுடன் இணைந்து கமலாஹரிசினை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒபாமா தனது ஆதரவை வெளியிட்டுள்ளதுடன்  குறித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

"ஐபோனில் ஹரிஸ் ஒபாமாவை செவிமடுப்பதை வீடியோவில் காணமுடிகின்றது.நான் கமலா குறித்து பெருமிதம் அடைகின்றேன் ,இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக விளங்கப்போகின்றது என மிச்செல் ஒபாமா தெரிவித்துள்ளார்.

வாகனமொன்றிற்கு அருகில் நின்றபடி பதிலளிக்கும் கமலாஹரிஸ் கடவுளே மிச்செல் ஒபாமா இது எனக்கு மிகப்பெரிய விடயம் என தெரிவிக்கின்றார்.

ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக, இத்தனை வருடங்களாக நீங்கள் பேசிய வார்த்தைகளும், நீங்கள் கொடுத்த நட்பும், என்னால் வெளிப்படுத்த முடியாததை விட அதிகம் என்று நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். எனவே இருவருக்கும் நன்றிஎன அவர் தெரிவிக்கின்றார்.

Sri Lanka

நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்தி தேர்தலை நடத்த வேண்டும் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.


முழு நாட்டினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எவ்வித இடையூறும் இன்றி நடத்துவதற்கு சகல நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழு இன்று (26) முற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்ற போதே அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு வருட காலத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தி, நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பை வெளியிட்டிருக்கும் நிலையில் இந்தக் காலப் பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர்கள், பொது மக்கள் மற்றும் முழு நாட்டினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் பாதுகாப்பு படைகளின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

பாதூகப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உள்ளிட்ட முப்படைகளின் உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அத்துடன், அரசியலமைப்பு மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

அதேநேரம், கடந்த இரண்டு வருடங்களில் மிகவும் சிக்கலான காலப்பகுதியில் அமைச்சு என்ற ரீதியில் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்ததாகவும், அக்காலப்பகுதியில் தேசிய பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதிப்படுத்தி நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சகல தரப்பினருக்கும் ஜனாதிபதி சார்பில் நன்றி தெரிவித்த அவர் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள சகல நிறுவனங்களின் செயற்பாடுகளையும் உரிய முறையில் முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கினார்.

முப்படைகளையும் மேலும் பலப்படுத்துவது தொடர்பான விடயங்களும், பாதுகாப்பு அமைச்சுத் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த விடயங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இக்கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Sri Lanka

உறுமய வேலைத் திட்டம் அரசியல் வேலைத்திட்டம் அல்ல!


முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரம் வழங்கும் ‘உறுமய’ வேலைத் திட்டம் அரசியல் வேலைத்திட்டம் அல்ல எனவும் எனவே தேர்தல் காலங்களிலும் இத்திட்டம் தொடர்ந்தும் செயற்படும் எனவும் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பத்திரன தெரிவித்தார்.

‘உறுமய’ வேலைத் திட்டத்தின் கீழ் 20 இலட்சம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் பணிகளை இரண்டு வருடங்களுக்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (25) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பத்திரன இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பத்திரன,

‘’இந்த இரண்டு வருட காலப்பகுதியில் இலங்கை மக்களுக்கான மிக முக்கியமான வேலைத்திட்டமான ‘உறுமய’ காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் எமது அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளில் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்க எதிர்பார்த்துள்ளோம். இதுவரை 100,000இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

‘உறுமய’ வேலைத்திட்டம் என்பது பல கட்டங்களின் கீழ் செயற்படுத்தப்படும் ஒரு தொடர்ச்சியான வேலைத்திட்டமாகும். அதன் முதற்கட்டமே தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒருபோதும் அரசியல் வேலைத்திட்டம் அல்ல. தேர்தல் காலங்களில் கூட இந்த காணி உறுதிகள் வழங்கப்படும். ஆனால் அதற்கு அரசியல் தலையீடு இருக்காது.

பிரதேச செயலாளரின் ஊடாக வழங்கப்படும் ஏனைய சேவைகளைப் போன்று இந்த காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கப்படுகின்றன. எனவே, தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பது, இந்த திட்டத்தை நிறுத்துவதற்கு ஒரு காரணமாக இருக்காது. இந்த திட்டம் எந்த தேர்தல் சட்டத்தையும் மீறாது.

ஏனெனில், இந்த காணி உறுதிகள் தேர்தல் காலத்தில் பொது மேடைகளிலோ அல்லது அரசியல்வாதிகளின் பங்களிப்புடனோ வழங்கப்படுவதில்லை. காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் செயல்முறையை மேலும் திறம்படச் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு ஊக்கத்தொகைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

காணி ஆணையாளர் நாயகம் பந்துல ஜயசிங்க,

இரண்டு வருடங்களுக்குள் இந்நாட்டில் அமுல்படுத்தப்பட்ட புரட்சிகரமான வேலைத்திட்டம் ‘உறுமய’ வேலைத்திட்டம் ஆகும். இந்த உறுமய திட்டத்தின் மூலம் முழு உரிமையுள்ள காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதால் இலங்கை மக்கள் தங்கள் காணிகளை சிக்கலின்றி அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது புதிய உறுதிகள் அல்ல. இதுவரை காணிக்காக வழங்கப்பட்ட ஜயபூமி, ஸ்வர்ணபூமி அனுமதிப்பத்திரங்களுக்குப் பதிலாக காணி உறுதிப் பத்திரங்கள் மக்களுக்கு வழங்கப்படுவதுதான் இதன்போது இடம்பெறுகிறது. இதற்காக சுமார் ஒரு இலட்சத்து இரண்டாயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் சுமார் 20,000

முழு உரிமையுள்ள காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், இவ்வருட இறுதிக்குள் 50,000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன.

இதுதவிர, சிறப்பு நிலச் சட்டத்தின் திருத்தம் மற்றும் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அரச நிலங்களை நீண்டகால குத்தகைக்கு வழங்கும் முறையைத் திருத்துதல் ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சர்வேயர் ஜெனரல் டபிள்யூ. சுதத் எல். சி. பெரேரா,

‘’அதிவேக நெடுஞ்சாலைளுக்கான அளவைப் பணிகள், ‘உறுமய’ வேலைத் திட்டம் தொடர்பான வரி வரைபடங்கள் தயாரித்தல், பிம் சவிய திட்டம் தொடர்பான கெடஸ்ட்ரல் வரைபடங்கள் தயாரித்தல் (Cadastral maps), புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் ஏனைய மின்சார திட்டங்களுக்கான அளவைப் பணிகள் என பல பணிகளை இந்த இரண்டு வருடங்களில் நில அளவைத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில், பொதுமக்களுக்கும் அரச மற்றும் அரை அரச நிறுவனங்களுக்கு இணையச் சேவை மூலம் நில வரைபடத் தகவலை (LAS / LISS திட்டம்) வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச நில அளவையாளர் சங்கம் மார்ச் மாத இறுதியில் இருந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற திணைக்களம் மற்றும் அமைச்சு மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து கோரிக்கைகளையும் ஒரே நேரத்தில் நிறைவேற்ற முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்வது அவசியம்.

அவர்கள் பல மாதங்களாக சம்பளம் பெற்றுக்கொண்டு, பணிக்கு சமூகமளிக்காமல் உள்ளனர். நேற்று (24) எமது அமைச்சின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தொழிற்சங்க நடவடிக்கையை நிறுத்திவிட்டு பணிக்கு சமூகமளிக்குமாறு அவர்களிடம் மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும், இந்த நேரத்தில், வேலைநிறுத்தத்தை நிறுத்தி, பணிக்குச் சென்று, கடமைகளுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.’’ எனத் தெரிவித்தார்.

காணி நிர்ணய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திமா சிகேரா,

‘’பொது மக்களின் காணி உரிமைகளை பிரச்சினைகள் அற்ற வகையில் உறுதி செய்வதே காணி நிர்ணய திணைக்களத்தின் பிரதான செயற்பாடாகும். அதன்படி காணி தொடர்பிலான பிரச்சினைகளை விசாரணை செய்து பிரச்சினையின்றி காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ‘பிம் சவிய’ சான்றிதழ், வழங்கும் நிகழ்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுகிறது.

அதன்படி, காணி தீர்வு கட்டளைச் சட்டத்தின் கீழ், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 70% சதவீத காணிகளையும் ஏனைய மாகாணங்களில் 99% காணிகளின் உரிமையையும் பிரச்சினை இன்றி வழங்க முடிந்துள்ளது. மேலும், ‘பிம் சவிய’ திட்டத்தின் ஊடாக, தனியார் காணிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, இதுவரை 1 – 2 தர காணிகளுக்கான 1,000,000 உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.’’ எனத் தெரிவித்தார்.

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி பண்டுக கீர்த்தினந்த,

‘’கடந்த இரண்டு ஆண்டுகளில், காணிச் சீர்திருத்த ஆணைக்குழு நாட்டின் அனைத்து காணிகளையும் அடையாளம் கண்டு அவற்றை டிஜிட்டல் தரவுக் கட்டமைப்பில் இணைத்துள்ளது. மேலும், புதுப்பிக்கப்பட்ட நிலப் பதிவேட்டின் அடிப்படையில் தற்போதுள்ள காணி உறுதிகளை தயாரிப்பதற்கும் முகாமைத்துவம் செய்வதற்குமான கட்டமைப்பொன்று நிறுவப்படவுள்ளது.

அதற்கு மேலதிகமாக வழக்குகளை சமரசம் செய்துகொள்வதற்கும், முறையான அனுமதியின்றி காணிகளை வைத்திருப்போருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்குமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டடு வருகின்றன.

இதேவேளை, காணியின் தற்போதைய பெறுமதியை மதிப்பீடு செய்து சுற்றறிக்கை வௌியிடுதல் வரி வருமானம் சேகரிக்கும் பணிகளை திறம்பட செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை கடந்த இரு வருடங்களில் வினைத்திறனுன் செய்திருக்கிறோம்.’’ என்று தெரிவித்தார்.

காணி பயன்பாடு மற்றும் கொள்கை திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தேவிகா குணவர்தன,

‘’இலங்கையின் காணி பயன்பாட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் தேசிய பயன்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவதே காணி பயன்பாட்டுக் கொள்கை திட்டமிடல் திணைக்களத்தின் முக்கியப் பணியாகும்.

இதன்படி, கடந்த இரண்டு வருடங்களில் தேசிய காணி பயன்பாட்டு தொடர்பான மதிப்பீடு பூர்த்தி செய்யப்பட்டு பிரதேச செயலக மட்டத்தில் தரவு சேகரித்தல் மற்றும் காணி பயன்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்தல் போன்ற செயற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

மேலும், கிராமப்புற மற்றும் நீர்ப் போஷாக்கு பகுதிகள் மட்டத்தில் நில பயன்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்து, மண் மற்றும் நீர் பாதுகாப்பின் மூலம் பயன்படுத்தப்படாத விவசாய நிலங்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். காணி பயன்பாடு தொடர்பிலான அறிக்கை வழங்கும் செயற்பாடுகளை விரைவுபடுத்தியுள்ள அதேநேரம், பாடசாலை மாணவர்களையும் சமூக குழுக்களையும் தௌிவூட்டம் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.’’ என்று தெரிவித்தார்.

Sri Lanka

செயற்பட முடியாவிட்டால் பதவி விலகுங்கள் - ஜனாதிபதியிடம் சஜித் கோரிக்கை!


பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் நியமனம் அரசியலமைப்பில் பொருந்தக்கூடிய விதிகளுக்குள் இல்லையென நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி சஜித் கூறினார்.

ஜனாதிபதி இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியாது. அவர் இன்னும் ஜனாதிபதியாக இருக்கிறார். ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் என்பதற்காக அவர் தனது பொறுப்புகளில் இருந்து விலக முடியாது. அவரால் இதைச் செய்ய முடியாவிட்டால், ஜனாதிபதியை பதவி விலகச் சொல்லுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

Sri Lanka

மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர்?


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த தீர்மானம் எதிர்வரும் திங்கட் கிழமை மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024 ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட விலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேட்சை வேட்பாளராக கட்டுப்பணத்தினை இன்று செலுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Sri Lanka

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் த.மு.கூட்டணியின் முடிவு?


கொழும்பில் ஒகஸ்ட் 2ஆம் திகதி நேரடியாகவும், மெய்நிகர் மூலமாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு கூட்டம் நடைபெறும். இதன்போது செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், ஆராயப்பட்டு அதிகாரபூர்வ தீர்மானங்கள் எடுக்கப்படும்.

உத்தேச ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தில் நடைபெற வேண்டும் என்ற நோக்கில், தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் நலன் சார்ந்து ஏற்கனவே செய்து கொண்டுள்ள சமூக நீதி உடன்படிக்கையை மேலும் தரமுயர்த்துவது, அதன் சாராம்சங்களை ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெறச் செய்வது, ஐக்கிய மக்கள் கூட்டணியில் சட்டபூர்வமாக இணைவது தொடர்பாக, ஐக்கிய மக்கள் கூட்டணியின் நகல் யாப்பை ஆராய்வது, இதையடுத்து இடம்பெற கூடிய பாராளுமன்ற தேர்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில், அரசியல் குழுவில் காத்திரமாக ஆராயப்படும் என கூட்டணி தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

இது தொடர்பில், மனோ எம்.பி மேலும் கூறியுள்ளதாவது;  

தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கு பெறுகின்ற எமது அரசாங்கம் விரைவில் உருவாகும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. த.மு.கூட்டணி, வெறும் வாய் பேச்சில் காலத்தை கடத்தும் கட்சி அல்ல, என்பதை நாம் எமது முதல் கட்ட 2015-2019 நல்லாட்சி காலத்திலேயே நிரூபித்து உள்ளோம். அன்று நாம் ஆரம்பித்து வைத்த பல முற்போக்கு பணிகள் இன்று நின்றுப்போயுள்ளன. அவற்றை மீள ஆரம்பிக்க நாம் மீள ஆட்சிக்கு வர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

வாழ்வாதார காணி உரிமை, வதிவிட வீட்டு காணி உரிமை, இடைகால சம்பளம், கல்வி, சுகாதாரம் ஆகிய அனைத்து துறைகளிலும் மறுமலர்ச்சியை த.மு.கூட்டணி ஏற்படுத்தும். இந்த அரசு மலையக பெருந்தோட்ட மக்கள் மத்தியில், நாள் சம்பளம், இந்திய நன்கொடை வீடமைப்பு திட்டத்துக்கு காணி வழங்கல், சுயமாக வீடு கட்டி கொள்ள காணி வழங்கல் ஆகிய மூன்று முக்கிய துறைகளிலும் படு தோல்வி அடைந்து விட்டது.

த.மு.கூட்டணி பங்காளியாக இடம்பெறும் எமது ஆட்சியில், மலைநாட்டு பெருந்தோட்ட மாவட்டங்களில் தனி வீடுகளை அமைக்க இந்திய வீட்டு திட்டத்துக்கு நாம் தடை இன்றி காணி வழங்குவோம். தவிர சுயமாக சொந்த வீடுகளை கட்டிக்கொள்ளவும் காணி வழங்குவோம். உழைத்து வாழ கொழும்பு உட்பட மாநகரங்ளில் குடியேறி, இன்று வாடகை வீடுகளில் வாழும் மக்களுக்கு தொடர்மாடி மனைகளை வழங்குவோம். மலைநாட்டில் வாழ்வாதார காணி வழங்கல் மூலம் பெருந்தோட்ட தொழில் துறையில் நமது மக்களை தொழில் முனைவர் பங்காளிகளாக மாற்றுவோம்.  

இந்த கொள்கைகள் தொடர்பிலும், ஒகஸ்ட் 2ஆம் திகதி கொழும்பில் நேரடியாகவும், மெய்நிகர் மூலமாகவும் கூடும் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு அதிகாரபூர்வ தீர்மானங்களை எடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Sri Lanka

பொலிஸ் மா அதிபர் விடயத்தில் நான் தவறு செய்யவில்லை - மஹிந்த யாப்பா!


பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோனை சிபாரிசு செய்த விடயத்தில் அரசியலமைப்பு பேரவை எந்த தவறையும் செய்யவில்லையென்றும் தான் சரியாகவே நடந்துகொண்டார் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோனின் சேவையை இடைநிறுத்த உயர்நீதிமன்றம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கான வியாக்கியானத்தை எவரும் அறிய விரும்பினால் நீதிமன்றத்திற்கு செல்வதே நல்லதென சபாநாயகர் மேலும் கூறியுள்ளார்

Sri Lanka

பாணின் விலைக் குறைப்பு!


நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாணின் விலைக் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 450 கிராம் நிறையுடைய பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.