Our Feeds



Friday, June 12, 2026

Zameera

O/L, A/L பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்


 2026 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரம்) மற்றும் கல்விப் பொதுத் தராதர (உயர்தரம்) பரீட்சைகள் திட்டமிடப்பட்ட தவணை அட்டவணையின்படி உரிய தினங்களில் நடாத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 


2025.09.11 ஆம் திகதியிட்ட 30/2025 ஆம் இலக்கச் சுற்றறிக்கை மற்றும் பாடசாலைப் பரீட்சை திகதிகள் உள்ளடக்கப்பட்டு பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2025.07.09 ஆம் திகதியிட்ட 6/1/2025 ஆம் இலக்க சுற்றறிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட திகதியில் இடம்பெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதற்கமைய, அந்தப் பரீட்சைகளுக்குரிய பாடத்திட்டங்களை முழுமையாகக் கற்பித்து முடித்து, மாணவர்களைப் பரீட்சைக்குத் தயார்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 


ஏதேனும் ஒரு பாடசாலையில் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதம் காணப்படின், அதற்கென முன்கூட்டிய திட்டமிடலுடன் செயற்பட்டு, மேலதிக நேரத்தை ஒதுக்கியேனும் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்குத் தேவையான நடடிவடிக்கைகளை எடுக்குமாறும், இது குறித்து தீவிர கவனம் செலுத்துமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 


இது தொடர்கான கடிதம் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Zameera

பூஜித்தவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்புக்கான திகதி நிர்ணயம்


 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி அறிவிப்பதற்கு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது. 


குறித்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பான போதிய புலனாய்வு தகவல் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமை மூலம் குற்றவியல் ரீதியாகக் கடமையை மீறியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சந்தேகநபர் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பான வழக்கு இன்று (12) பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய நீதிபதிகளைக் கொண்ட கொழும்பு நிரந்தர மேல் நிதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 


இவ்வழக்கு தொடர்பான வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வமான சமர்ப்பணங்கள் இரு தரப்பினராலும் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளன. 


இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராயந்த நீதிபதிகள் குழாம், இந்த வழக்கின் தீர்ப்பை ஜூலை மாதம் 31 ஆம் திகதி அறிவிப்பதாகத் தெரிவித்தது. 


இதேவேளை, இதே குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கும் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது. 


இதன்போது, முறைப்பாட்டு தரப்பினர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வா தமது சமர்ப்பணங்களை முன்வைத்தார். 


அதனைத் தொடர்ந்து, பிரதிவாதியான ஹேமசிறி பெர்னாண்டோ சார்பில் சட்டத்தரணி சமிந்த அத்துகோரள சமர்ப்பணங்களை முன்வைத்ததுடன், அவரது மேலதிக சமர்ப்பணங்களை எதிர்வரும் திங்கட்கிழமை (15) வரை ஒத்திவைப்பதற்கும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

Zameera

சுரேஷ் சலேயின் உடல்நிலை கவலைக்கிடம் - உறவினர்கள்


அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று (12) முற்பகல் அவரது நலன் குறித்துக் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய உறவினர்கள், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் அவரது உயிருக்கு கணிசமான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சுரேஷ் சலே தொடர்பாக அஸ்கிரி விஹாரையின் மகாநாயக்க தேரர், கலாநிதி வரகாகொட ஸ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரரும் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சுரேஷ் சலேயின் மனைவி அஸ்கிரி விஹாரைக்கு வருகை தந்து, தனது கணவர் சார்பாகக் கோரிக்கை விடுத்ததாக அந்தக் கடிதத்தில் மகாநாயக்க தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன் கணவருக்கு ஏதேனும் நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டதாகவும், அந்த வேண்டுகோளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சலேயின் மனைவி கேட்டுக்கொண்டதாகவும் அஸ்கிரி மகாநாயக்க தேரர் ஜனாதிபதிக்குத் தெரிவித்துள்ளார்.

Zameera

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை!



தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி அவர் நாட்டில் அமுல்படுத்திய இராணுவச் சட்டம் தோல்வியில் முடிவடைந்தது. அந்த இராணுவச் சட்டத்தை நியாயப்படுத்துவதற்கான ஒரு போலிச் சூழலை உருவாக்கும் நோக்கில், வட கொரிய வான்பரப்புக்குள் இராணுவ ஆளில்லா விமானங்களை ஊடுருவச் செய்ய அவர் உத்தரவிட்டிருந்தார்.


இந்தச் சட்டவிரோத ஊடுருவல் உத்தரவு தொடர்பான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதை அடுத்தே, முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு இந்த மிகக் கடுமையான 30 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Zameera

கூகுள் பணிப்பாளர் இராஜிநாமா!


 Google நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு பாதுகாப்புப் பிரிவு பணிப்பாளர் ரெனே மேயர்ஹோஃபர் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஒப்பந்தத்தில் நிறுவனம் ஈடுபட்டதும், கார்பன் சமநிலை இலக்கிலிருந்து விலகியதாக அவர் குற்றம்சாட்டியதும் இந்த முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நிர்வாகம் தனது ஒழுக்கநெறி திசையை இழந்துவிட்டது” என குறிப்பிட்ட அவர், நிறுவனத்தின் தற்போதைய திசையுடன் தன்னை இணைத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.


Zameera

6,000 கிலோ கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது


 அனுமதிப்பத்திரமின்றி 6,000 கிலோ கழிவுத் தேயிலையை சந்தேக நபர் ஒருவர் லொறியொன்றினூடாக கொண்டு சென்றபோது சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் (11) இரவு கைதுசெய்துள்ளனர்.

அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து குளியாபிட்டியாவிற்கு ஹட்டன் வழியாக கழிவுத் தேயிலையை ஏற்றிச் செல்லும்போதே ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வைத்து ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் லொறியினை நிறுத்தி மேற்கொண்ட சோதனையின் போது உரிய அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கழிவு தேயிலையை ஏற்றிச் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்து மேற்கொண்ட விசாரணையின் பின்னர் கழிவு தேயிலை கடத்துவதற்கு பயன்படுத்திய லொறி ஆகியவற்றை இன்று (12) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

(செ.திவாகரன்)

Zameera

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை


 இலங்கையின் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (12) முற்பகல் 4.00 மணி முதல் நாளை (13) முற்பகல் 4.00 மணி வரையான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படும் மஞ்சள் நிறத்திலான 'முதலாம் கட்ட' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளின் விபரம் பின்வருமாறு:

களுத்துறை மாவட்டம்:

பாலிந்தநுவர

கண்டி மாவட்டம்:

தொழுவ

நுவரெலியா மாவட்டம்:

அம்பகமுவ

இரத்தினபுரி மாவட்டம்:

பெல்மதுல்ல

அயகம

இரத்தினபுரி

கொடகவெல

கலவான

நிவித்திகல

Zameera

ஸ்ரீலங்கன் விமானம் மீது மின்னல் தாக்கம் - அவசரமாக தரையிரக்கம்


 சிட்னி நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ் விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மின்னல் தாக்கியதையடுத்து, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மீண்டும் அவசரமாகத் திருப்பி அனுப்பப்பட்டதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ் நிறுவனத்தின் UL-606 எனும் இந்த விமானம், இன்று (12) அதிகாலை 1:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிட்னி நோக்கிப் புறப்பட்டது.

ஏர்பஸ் A330 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தில், சம்பவத்தின் போது 217 பயணிகள் மற்றும் 16 விமானப் பணியாளர்கள் பயணம் செய்துள்ளனர்.

விமான நிலையத்திற்கு அருகாமையில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் மின்னல் தாக்கத்தின் காரணமாக, விமானத்தின் மீது மின்னல் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், விமானி பயணத்தை இடைநிறுத்தி, அதிகாலை 1:40 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை மீண்டும் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.

பாதிக்கப்பட்ட பயணிகளை சிட்னிக்கு அழைத்துச் செல்வதற்காக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதே ரகத்தைச் சேர்ந்த மற்றொரு ஏர்பஸ் A330 விமானத்தை ஏற்பாடு செய்தது. குறித்த மாற்று விமானம் இன்று காலை 6:06 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

இதனிடையே, மின்னல் தாக்குதலுக்குள்ளான விமானம், மேலதிக பரிசோதனைகள் மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ் ஹேங்கருக்கு (Hangar) கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Zameera

உலகை பாதிக்கும் எல்-நினோ நிலை ஆரம்பம்


 உலகம் முழுவதும் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்வதற்கும், கடுமையான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமையும் ஒரு முக்கிய இயற்கை நிகழ்வான 'எல்-நினோ' (El-Nino) நிலை தற்போது அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சாதாரண அளவை விட 0.5 டிகிரி செல்சியஸால் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு (NOAA) அறிவித்துள்ளது. இது எல்-நினோ நிலையாகக் கருதுவதற்குத் தேவையான வரம்பைத் தாண்டியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்முறை எல்-நினோ நிலை மிகவும் வலுவடைந்து, "கடுமையான எல்-நினோ" நிலையாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது வரலாற்றில் பதிவான மிகக் கடுமையான எல்-நினோ நிகழ்வுகளில் ஒன்றாக மாறக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

மனித செயல்பாடுகளால் பல தசாப்தங்களாக ஏற்பட்டு வரும் புவி வெப்பமயமாதலுடன் இந்த நிலையும் இணைவதால், வரும் ஓராண்டு காலம் (பெரும்பாலும் 2027 ஆம் ஆண்டு) வரலாற்றில் அதிக வெப்பம் பதிவாகும் ஆண்டாக மாறக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், இந்த நிலைமை காரணமாக உலகம் முழுவதும் காலநிலை வடிவங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் வறட்சி, அதிக மழைப்பொழிவு, வெள்ளப்பெருக்கு, வெப்ப அலைகள் மற்றும் விவசாய உற்பத்தியைப் பாதிக்கும் மோசமான சூழ்நிலைகள் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமத்திய ரேகை பசிபிக் பிராந்தியத்திற்கு மேலேயுள்ள காற்று வடிவங்களிலும் தற்போது மாற்றங்கள் அவதானிக்கப்பட்டு வருவதாக NOAA அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. கடல் வெப்பநிலை அதிகரிப்பதற்கு வளிமண்டலமும் எதிர்வினையாற்றி வருவதற்கான தெளிவான அறிகுறி இதுவெனக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, வரும் மாதங்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் மோசமான காலநிலை நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

Zameera

சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு


 பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் தன்னை தடுப்புக் காவலில் வைப்பதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை இரத்துச் செய்யக் கோரி, அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரீட் மனு மீதான மேலதிக விசாரணை ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேல்முறையீட்டு நீதிமன்றத் நீதிபதி ரோஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இம்மனு வியாழக்கிழமை (11) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இதன்போது சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன, ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கருத்தியல் இலங்கையில் எவ்வாறு செயற்பட்டது என்பதை விளக்கினார். 39 இலங்கையர்கள் சிரியாவுக்குச் சென்று அவ்வமைப்பில் இணைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் குறிப்பிட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

மாவனல்ல புத்தர் சிலைகள் உடைப்புச் சம்பவம் மற்றும் சஹ்ரான் ஹாஷிமின் குழுவினர் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலாந்த ஜயவர்தனவினால் 97 எச்சரிக்கை அறிக்கைகளும் 129 பேர் அடங்கிய பட்டியலும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அத்துடன், கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாக 2019 ஏப்ரல் 4 ஆம் திகதி இந்தியப் புலனாய்வுப் பிரிவு எச்சரித்திருந்தது.


எனினும், சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற்று விசாரணைகளை முன்னெடுக்காமல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோர் அலட்சியமாகச் செயற்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி குற்றஞ்சாட்டினார்.


மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் சுரேஷ் சலேவுக்குத் தொடர்பிருப்பதாக எந்தவொரு விசாரணை ஆணைக்குழு அறிக்கையிலும் கண்டறியப்படவில்லை எனவும், தாக்குதலைத் தடுக்கத் தவறியமைக்காக ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜயகீ த அல்விஸ் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.


இதையடுத்து மேலதிக சாட்ச்சி பதிவுகளுக்காக மனு மீதான விசாரணை ஜூலை 10 ஆம் திகதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது.

Zameera

உயிர்த்த ஞாயிறு விவகாரத்தில் மௌனம் சந்தேகம் எழுப்புகிறது


 (க.சிவலிங்கமூர்த்தி)


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரும் போது, பாராளுமன்ற அறை ஒன்றுக்குள் பதுங்கி, கட்டிலுக்கு அடியில் தூங்குவதைப் போல மௌனமாக இருக்கின்றார் இது நாட்டு மக்களிடையே பெரும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது என நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


கொலன்னாவையில் அமைந்துள்ள டி.பி.இலங்கரத்ன அரங்கின் வளாகத்தில் நேற்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


விமல் வீரவங்ச உள்ளிட்ட தரப்பினரால் புறக்கோட்டையில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் சத்தியாக்கிரக போராட்டம், மக்களின் தனிப்பட்ட எதிர்ப்பினாலும் சுயாதீனமான தலையீட்டினாலும் தற்காலிகமாக கைவிடப்பட்டு, பின்வாங்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பிஸ்கட்டுகளை சாப்பிட்டுக்கொண்டு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் புதிய போராட்ட முறைகளை நாட்டுக்கு கற்றுக்கொடுத்த, சிறைக்குச் செல்ல பயந்து நடுங்கும் குற்றவாளிகளே இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்து நாடகமாடுகின்றனர்.


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் என்பது, தங்களின் அரசியல் சதித்திட்டங்களுக்காகவும், அதிகார பேராசைக்காகவும், தேவாலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த அப்பாவி பிள்ளைகள், தாய்மார்கள் மற்றும் தந்தையர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த ஒரு சம்பவமாகும் என்பதை மக்கள் தற்போது தெளிவாக புரிந்துகொண்டுள்ளனர். ஆரம்பத்தில் தனித்தனியான சம்பவங்களாக தெரிந்த விடயங்கள், தற்போது ஒரே நேர்க்கோட்டில் தெளிவாக வெளிவரத் தொடங்கியுள்ளன.



ஒருபுறம் முஸ்லிம் தீவிரவாத இளைஞர் குழுவொன்று சிறையில் இருந்த போது, அப்போதைய இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே மூலமாக அந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளன. நாட்டின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக, அந்த தற்கொலை குண்டுதாரி குழுவை தங்களுக்கு சாதகமான காலம் கணியும் வரை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான பின்னணியை வழங்கி, தரவுகளை பரிமாறிக்கொண்டுள்ளனர் என்பது தற்போது நீதிமன்றம் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் மூலம் அம்பலமாகி வருகின்றது. தேவாலயங்களுக்கு எத்தனை பேர் வருகிறார்கள், எப்போது வருகிறார்கள் என்ற உளவுத் தகவல்களை திரட்டுவதற்கு சுரேஷ் சலே தலைமையிலான குழுவினர் இவர்களுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டுள்ளனர்.


சுரேஷ் சலேயை அரசியல் ரீதியாக பயன்படுத்தியது மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரே ஆவர். இந்த கொடூர தாக்குதல் நடந்து சில நாட்களிலேயே, கோட்டாபய ராஜபக்ஷ தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார் என அறிவித்தார். தாக்குதல் நடந்து 3 நாட்களுக்குள் மஹிந்த ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் பிள்ளையானை (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன என்பதை இது காட்டுகிறது.


தற்போது நாமல் ராஜபக்ஷ இதுவொரு பிரச்சினையா என வினவுகின்றார். நாமல் ராஜபக்ஷவின் வீட்டைப் பாதுகாக்கும் பிரச்சினை இதுவல்ல. இந்த தாக்குதலில் 200 க்கும் மேற்பட்ட இலங்கை மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர், 500 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து இன்றும் வேதனையை அனுபவித்து வருகின்றனர். மக்களின் இந்த கண்ணீரின் மீதே ராஜபக்ஷவினர் அரசியல் விளையாட்டை நடத்த முற்பட்டனர். இதனாலேயே மக்கள் இந்த புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தனர்.Geographic Reference


இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டதைப் போல, இது குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் ஆண்டாகும். நீண்டகாலமாக எவ்வித அச்சமும் இன்றி திரிந்த சுரேஷ் சலே போன்றவர்கள் மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட சில இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டவுடன், இந்த அரசியல் குற்றவாளிகள் பதற்றமடைந்துள்ளனர். சுரேஷ் சலேயிற்கு கட்டளையிட்ட சூத்திரதாரி யார் என்பது வெளிச்சத்திற்கு வரும் போது, அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் அரசியல் கூட்டத்தினர் கலக்கமடைந்துள்ளனர். எனினும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, இந்த அரசியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் வரை அரசாங்கமும் மக்களும் பின்வாங்கப் போவதில்லை.


இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்படும் போது,; எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நடுங்கத் தொடங்கியுள்ளார். நாட்டில் எந்தவொரு பிரச்சினை ஏற்பட்டாலும் முகநூல் நேரலை மூலமாகவோ அல்லது ஊடகவியலாளர் சந்திப்புகள் மூலமாகவோ சர்வதேச தரவுகளைக் கூறி பாராளுமன்றத்தில் கூட நாட்டுக்கு அறிவுரை வழங்கும் சஜித் பிரேமதாஸ, தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரும் போது, பாராளுமன்ற அறை ஒன்றுக்குள் பதுங்கி, கட்டிலுக்கு அடியில் தூங்குவதைப் போல மௌனமாக இருக்கின்றார். ஊமையை போல அவர் ஒரு வார்த்தையேனும் பேசாமல் மௌனம் காக்கின்றார். இது நாட்டு மக்களிடையே பெரும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.


உண்மையில், இந்த விடயத்தில் சஜித் பிரேமதாச தனது சர்வதேச அறிவைப் பயன்படுத்தி கருத்துக்களை முன்வைத்திருக்க வேண்டும். சஜித் பிரேமதாசவின் சகோதரி சட்டவிரோதமான முறையில் பணத்தை கையாண்ட போது, தாம் தலையிட்டு அதனை தீர்த்து வைத்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பகிரங்கமாக கூறியிருந்தார். எனவே, இந்த சட்ட நடவடிக்கைகள் எந்நேரத்திலும் தங்கள் பக்கமும் திரும்பலாம் என்ற பயத்திலேயே அவர்கள் மௌனம் காக்கின்றனர்.


அரசாங்கம் புலனாய்வு மற்றும் விசாரணைப் பிரிவினருக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கியுள்ளது. அரசியல் தலையீடுகள் இன்றி அதிகாரிகள் சுயாதீனமாக செயற்படுவதனாலேயே விசாரணைகள் மிக வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. மக்கள் வழங்கிய ஆணையின்படி, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் இறுதி இலக்கை நோக்கி அரசாங்கம் உறுதியாக பயணிக்கும் என்றார்.

Admin

ஈரானுக்கு எதிரான தாக்குதலை ரத்து செய்கிறேன் - பின்வாங்கிய டிரம்ப்!


ஈரானிய இஸ்லாமியக் குடியரசுடனான பேச்சுவார்த்தைகள் ஈரானியத் தலைமையின் உயர்மட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாகிய நான், இன்று மாலை ஈரானுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களையும் குண்டுவீச்சுகளையும் ரத்து செய்துள்ளேன்.

அமெரிக்கா, இஸ்ரேல், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், துருக்கி, பாகிஸ்தான், பஹ்ரைன், குவைத், ஜோர்டான், எகிப்து மற்றும் பிற நாடுகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினராலும், பேச்சுவார்த்தைகளும் இறுதி அம்சங்களும் கருத்திலும் விவரத்திலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பரிவர்த்தனை இறுதி செய்யப்படும் வரை கடற்படை முற்றுகை முழு வீச்சில் அமலில் இருக்கும் — கையெழுத்திடும் நேரமும் இடமும் விரைவில் அறிவிக்கப்படும்.

டொனால்ட் ஜே.டிரம்ப்

Thursday, June 11, 2026

Zameera

ரணில் தலைமையில் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு!


 ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (11) பிற்பகல் நடைபெற்றது.


 


கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பலரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


 


கட்சி அமைப்பை மீண்டும் வலுப்படுத்துவதற்கும், அதனை மறுசீரமைப்பதற்கும் செயல்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து பல முக்கிய ஆலோசனைகளும் கருத்துகளும் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளன.


 


மேலும், ஏனைய அரசியல் கட்சிகள், சக்திகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் எதிர்காலத்தில் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது குறித்தும் செயற்குழு உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


 


கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனித்தனியாகச் செயல்படுவதை விடுத்து, பல்வேறு சக்திகளை ஒன்றிணைத்து எதிர்கால அரசியல் சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.


 


இதற்கிடையில், கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு முரணாகச் செயல்பட்ட உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்த விபரங்களைக் கட்சியின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி தலதா அத்துகோரள செயற்குழுவிடம் சமர்ப்பித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.