
Wednesday, April 22, 2026

ஹோர்முஸ் நீரிணையில் இரண்டாவது கப்பல் மீது துப்பாக்கிச் சூடு
ஹோர்முஸ் நீரிணையில் இரண்டாவது கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு மேற்கே எட்டு மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் மீதே இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அது தற்போது கடலில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் துப்பாக்கிச் சூட்டினால் கப்பல் பணியாளர்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் அவர்கள் பாதுகாப்பாக கணக்கில் எடுக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் தொடங்கியதிலிருந்து, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து ஈரானால் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அமெரிக்க இராணுவம் ஈரானிய துறைமுகங்களுக்கு முற்றுகையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் சலே பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் ஆஜர்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கடந்த வழக்கு விசாரணையின் போது, கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார பிறப்பித்த உத்தரவிற்கமைய, சந்தேகநபரான சுரேஷ் சலே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மூன்றாவது சந்தேகநபராக சுரேஷ் சலேவை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பெயரிட்டுள்ளது.
சுரேஷ் சலே சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கடந்த வழக்குத் தவணையின் போது கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவிற்கு அமையவே அவர் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் சற்று நேரத்தில் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

2026 இல் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையக்கூடும்
2025 ஆம் ஆண்டில் இலங்கை எட்டிய பொருளாதார வளர்ச்சி வீதத்தை விடக் குறைவான ஒரு பெறுமதியே 2026 ஆம் ஆண்டில் பதிவாகக்கூடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (22) நடைபெற்ற “BIG FOCUS” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 30 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாக விவசாயத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கைத்தொழில் துறையில் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமை மற்றும் ஏற்றுமதித் துறையில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளும் பலவீனமடையும் அபாயம் உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
உலகப் பொருளாதாரச் சூழலும் இதில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகச் சுட்டிக்காட்டிய பேராசிரியர், சர்வதேச நாணய நிதியம் (IMF) உலகப் பொருளாதார வளர்ச்சி முன்னறிவிப்புகளைக் குறைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
உலகப் பொருளாதார வளர்ச்சி மந்தமடைவது இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரண்டின் ஏற்றுமதியையும் பாதிக்கும் என்றும், எரிபொருள், உரம் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகச் சங்கிலி முறிவுகளும் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூன்றரை கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
கைது செய்யப்பட்டவரிடமிருந்து சுமார் 216,000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
கற்பிட்டி, நுரைச்சோலையிலிருந்து கொழும்பு நோக்கி மரக்கறிகளை ஏற்றி வந்த லொறி ஒன்றில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மரக்கறி ஏற்றிச் சென்ற பல வாகனங்களை மறித்துச் சோதனை செய்த போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளின்படி, இந்தப் போதை மாத்திரைகள் இந்தியாவிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தி வரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

‘Walk For Peace’ அமைதி நடைப்பயணம் தம்புள்ளையில் இன்று ஆரம்பம்
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ (அமைதிக்கான நடைப்பயணம்), அரச அனுசரணையுடன் இன்று (22) தம்புள்ளையில் ஆரம்பமாகின்றது. இந்தப் பயணம் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி வரை தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது.
இன்று காலை 6.30 மணிக்கு இந்த அமைதி நடைப்பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வொஷிங்டன் வரை, 10 மாநிலங்களைக் கடந்து 110 நாட்களாக 200-க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் அமைதிக்காக மேற்கொண்ட நடைப்பயணம் முழு உலகின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. அந்தப் பயணமே தற்போது இலங்கையில் ‘ஏஹிபஸ்ஸிகோ’ (Ehipassiko) அமைதி நடைப்பயணம் என்ற பெயரில் அரச அனுசரணையுடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பன்னாகர (Pannakara) தேரர் தலைமையிலான பௌத்த தேரர்கள் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்தனர். இந்த அமைதி நடைப்பயணத்தில் ‘ஆலோகா’ (Aloka) எனும் நாயும் தேரர்களுடன் இணைந்துள்ளது.
இந்த நடைப்பயணத்தின் முதல் நாளான இன்று மாத்தளை அலுவிஹாரை வரை பயணம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, களுத்துறை, வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

பிரேமலால் ஜயசேகர இன்று நீதிமன்றில் ஆஜர்
கைது செய்யப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர இன்று (22) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, துப்பாக்கியைக் காட்டி நபரொருவரை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் நுவரெலியா பகுதிக்கு வருகை தந்திருந்த போது, அவிசாவளையிலிருந்து சுற்றுலா வந்திருந்த குழுவினருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதிலேயே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது அவர் தன்னிடம் இருந்த பிஸ்டல் ரக துப்பாக்கியைக் காட்டி அந்தக் குழுவினரை அச்சுறுத்தியதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய, நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
மேலும், சந்தேகநபரிடமிருந்த துப்பாக்கிக்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் 2025 ஆம் ஆண்டுடன் காலாவதியாகியுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கையின் மறுசீரமைப்பு பணிகளுக்காக பிலிப்பைன்ஸ் நிதியுதவி
டிட்வா சூறாவளியினால் இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, மறுசீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 100,000 அமெரிக்க டொலரை நிதியுதவியாக வழங்கியுள்ளது.
இந்த நிதியுதவியை இலங்கையிலுள்ள பிலிப்பைன்ஸ் தூதுவர் நினா பி. கெய்ங்லெட், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில், கடினமான இந்த மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் தருணத்தில், பிலிப்பைன்ஸ் அரசாங்கமும் அந்நாட்டு மக்களும் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கும், காட்டிய ஒற்றுமைக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிதியுதவியானது சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்கும் பெரும் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tuesday, April 21, 2026

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வோம்


