Our Feeds



Thursday, June 18, 2026

Zameera

தற்கொலை இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் ; யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை சைக்கிள் பயணம்


 தற்கொலை இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் எனும் தொனிப்பொருளில் இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய சைக்கிள் பயணத்தை இன்று (18) வியாழக்கிழமை காலை ஆரம்பித்தார்.


யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இருந்து காலை 7.30 மணியளவில் யாழ் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி கொடி அசைத்து சைக்கிள் பயணத்தை ஆரம்பித்து வைத்தார்.


தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்ற விழிப்புணர்வு சைக்கிள் ஓட்ட வீரர் இது வரை 63,421 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை மிதிவண்டியில் கடந்து சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது. 


பல விழிப்புணர்வு சைக்கிளோட்டங்களை இவர் தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்டுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த இந்த விழிப்புணர்வு பயணம் “தற்கொலை இல்லாத சமூகம்” என்பதை உருவாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பயணத்தின் நோக்கங்களாக - மனநலம் விழிப்புணர்வு , தற்கொலை தடுப்பு , மனிதநேயம் மற்றும் கருணை , நம்பிக்கை மற்றும் மனநல நலன், உலக அமைதி என்பன அமைகின்றன. இவரது இப்பணயத்தின் செய்தியாக , “ஒவ்வொரு வாழ்க்கையும் மதிப்புமிக்கது. நீங்கள் தனியாக இல்லை. நம்பிக்கையைத் தேர்ந்தெடுக்கவும்.” என்பதேயாகும்.

Zameera

டெங்கு அதிகரித்தால் வைத்தியசாலைகளுக்கு சவால் - நளிந்த ஜயதிஸ்ஸ


 டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், அந்த நிலைமையைத் தாங்குவதற்கு வைத்தியசாலை கட்டமைப்புக்கு கடினமாகிவிடும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 


டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் பொதுமக்களினதும் நிறுவனங்களினதும் பொறுப்பு மிகவும் முக்கியமானது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 


வீடுகள், அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய இடங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுக்க வேண்டும் எனவும், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் சுகாதாரக் கட்டமைப்புக்கு கடுமையான அழுத்தம் ஏற்படக்கூடும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 


பேருவளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 


அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, 


நீண்ட கால அடிப்படையில் நாம் எதனைச் செய்ய முயன்றாலும், குறுகிய காலத்தில் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு இருக்கும் ஒரே தீர்வு நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதுதான். 


அதற்கு நாம் செய்ய வேண்டியது நம்மைச் சுற்றியுள்ள சூழலை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமே. இதைவிடக் கூடுதலாக நோயாளர்கள் பதிவாகத் தொடங்கினால், அதனை எமது வைத்தியசாலை கட்டமைப்பால் தாங்கிக்கொள்ள முடியாமல் போய்விடும். 


இவ்வாறானதொரு பிரச்சினை முன்னோக்கிச் செல்லும்போது இது போன்றதொரு நிலைமையே ஏற்படும். அவ்வாறு நடந்தால் தான் நோயாளர் பராமரிப்புச் சேவைகள் வீழ்ச்சியடையும். இந்த நிலையை இன்னும் எம்மால் கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Zameera

சுரேஷ் சலே விசாரணைக்கு தடையில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால


 சுரேஷ் சலேவுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு எந்தவித தடைகளும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் விசாரணைகள் தடுக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை எனவும் கூறினார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் செயல்பாடுகளுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்றும், அதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை என சுட்டிக்காட்டினார்.

மேலும், அரசியல் நோக்கங்களுக்காக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், விசாரணைகள் முறையான முறையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

(எம்.ஏ.அமீனுல்லா)

Zameera

மாகாண சபைத் தேர்தலுக்கான திகதியை 30 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும் – சுரேன் ராகவன்


 (செ.கவிஷனா)


இலங்கையில் நீண்ட காலமாக பிற்போடப்பட்டு வரும் மாகாண சபை தேர்தல்களை காலதாமதமின்றி உடனடியாக நடத்துவதற்கான உத்தியோகப்பூர்வ திகதியை ஜனாதிபதி இன்னும் 30 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் அது மக்களின் அரசியல் உரிமைகளை பறிப்பது போன்ற செயலாகும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உப செயலாளர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.


கொழும்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை காரியத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,



இலங்கையில் நீண்டகாலமாக பிற்போடப்பட்டு வரும் மாகாண சபை தேர்தல்களை காலதாமதமின்றி உடனடியாக நடத்த வேண்டும். இதன் மூலம் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை தற்போதைய சூழலில் முடக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு நேரடியாகக் கிடைக்க வேண்டிய அரசியல், கலாசார மற்றும் பொருளாதார ரீதியான வாய்ப்புகள் அனைத்தும் முற்றாகத் தடைப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி இன்னும் 30 நாட்களுக்குள் மாகாண சபை தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ திகதியை அறிவிக்க வேண்டும்


இலங்கையின் அரசியல் வரலாற்றில் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத ஒரு காலகட்டத்தில், இந்தியாவின் ஆலோசனையின் பேரில் ஒரு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய சூழலில் இந்த 13 ஆவது திருத்தம் என்பது நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பில் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது. எனவே, தற்போதைய அரசியல் மற்றும் நிர்வாக நெருக்கடிகளுக்கு தீர்வாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்பதே தற்போதைய பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஜனநாயகத்தின் முக்கிய தூணாக காணப்படும் தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்துவதன் மூலம், அரசாங்கம் தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த விளக்கமளிக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


தேர்தல் கோரிக்கைகளுக்கு மத்தியில், அரசாங்கத்தின் மீது பாரிய நிதிசார் குற்றச்சாட்டுகளும் நாடாளுமன்ற உறுப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ளன. பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் மற்றும் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து தற்போதைய அரசாங்கம் நேரடியாக நிதி பெற்றுள்ளது. இவ்வாறான பிரிவினைவாத அமைப்புகளிடமிருந்து அரசாங்கம் எவ்வித நிதியையோ அல்லது உதவிகளையோ பெறவில்லை என்பதை ஜனாதிபதியும் அரசாங்கத் தரப்பும் நாடாளுமன்றத்திலோ அல்லது அதற்கு வெளியிலோ நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.


நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் நீதித்துறை சார்ந்த விவகாரங்களின் வெளிப்படைத்தன்மை குறித்தும் தற்போது பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக ஒட்டுமொத்த நாட்டையும் பாதித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தொடர்புடைய விவகாரங்களில் முறையான வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை என அவர் சாடினார். இந்த விசாரணைகளில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் அரசியல் தலையீடுகள் முற்றாகத் தவிர்க்கப்பட்டு, நாட்டின் சட்டத்தின் ஆட்சி முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றார்.

Zameera

கோட்டாபய ராஜபக்‌ஷவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு


 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவின் மேலதிக பரிசீலனையை எதிர்வரும் 24ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SHAHNI RAMEES

15 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை!

 

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான
Zameera

பிள்ளையான், சலே போன்றோர் சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டும்


 பிள்ளையான், சுரேஷ் சலே போன்றோர் சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களை விடுதலை செய்கின்றபோது கொலை செய்திருக்கின்ற ஆதாரங்களை அழிப்பதற்கான சக்திகள் வெளியில் இருப்பதை உணரமுடிவதாக கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.பி.எம்.புஹாரி தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நீதி கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வியாழக்கிழமை (18) கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் அரசியல் வேண்டாம், பக்கச்சார்பு வேண்டாம், என்பதை வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரியும் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டனர்.

இது குறித்து,கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.பி.எம்.புஹாரி தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிர்த்த தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நாங்கள் ஆதரவாக நிற்கின்றோம். அரசின் நீதி வழங்கும் முயற்சிகளின் அர்ப்பணிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

அத்துடன், ஊழல் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்களின் தலையீட்டை நாங்கள் எதிர்க்கின்றோம். அவர்களின் தலையீட்டால் நடைபெற்று வரும் விசாரணைகளை நிறுத்தி, தாமதமின்றி முன்னோக்கிச் செல்லுமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறோம். விசாரணை செயல்முறையைத் திசைதிருப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

மேலும், தேவையான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, சூத்திரதாரிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தும் வரை சுரேஷ் சலே மற்றும் பிள்ளையானைப் பாதுகாக்க வேண்டும். உயிர் பிழைத்தவர்களும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், முறையான சிகிச்சையும் ஆதரவும் இன்றி காயங்கள், மன அதிர்ச்சி மற்றும் உடல் ஊனங்களால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களை குணப்படுத்த அரசு வழிவகை செய்யவில்லை.

எனவே, விடுவிக்கப்பட்ட முஸ்லிம் கைதிகளுக்கு எதிரான தொடர்ச்சியான சித்திரவதை, அச்சுறுத்தல் மற்றும் கண்காணிப்பை முடிவுக்குக் கொண்டுவரவும், அவர்கள் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்யவும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்நிலையில், அரசு விசாரணையை முடித்து, மேலும் தாமதமின்றி நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்து, இந்த முன்னாள் அரசு பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

Zameera

எரிபொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - சஜித்


 தற்போதைய அரசாங்கம் மத்திய கிழக்கு போரை காரணமாகக் காட்டி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளது எனக் கூறி இலங்கையிலும் எரிபொருட்களின் விலைகளை கூட்டியது. ஆனால் இன்றைய நிலரவரப்படி போருக்கு முந்தைய நிலையோடு ஒப்பிடும் போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்துள்ளன. 


சர்வதேசத்தில் எண்ணெய் விலை கூடும்போது இலங்கையிலும் விலை கூடும் என்றால், உலகில் எண்ணெய் விலை குறையும்போது இலங்கையிலும் குறைய வேண்டும். ஆகவே அரசாங்கம் அதிகரித்ததைப் போலவே, உடனே அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 


நமது நாட்டில் எண்ணெய் மீது அதிக வரி விகிதம் விதிக்கப்படுகின்றன. இவர்கள் ஆட்சிக்கு வரும்வேளை இந்த வரிகளை நீக்கி விட்டு, துறைமுகத்தில் இறக்குமதியாகும் அதே விலைக்கே எரிபொருட்களைத் தருவோம் என்று பெரிதாக பிரஸ்தாபித்தனர். 


இருந்த போதிலும், துறைமுகத்தில் இறக்குமதி செய்யும் விலையிலோ அல்லது உலக சந்தையில் எண்ணெய் விலை குறையும் மட்டத்திற்கு ஏற்ப ஏனும், குறைந்த விலையில் எரிபொருட்களை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாதவர்களாகவே இன்றுவரையில் இருந்து வருகின்றனர். இதனால் நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையீனத்தில் காணப்படுகின்றனர். இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையிழந்து போயுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 


இந்த அரசாங்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் பொய் அரசியலையே செய்து வருகின்றது. உருட்களை செய்து வருகின்றது. மக்களை இவ்வாறு தொடர்ந்தும் ஏமாற்றலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது போலும். நாட்டின் 220 இலட்சம் மக்களையும் முட்டாள்கள் என கருதி செயற்பட்டு வருகின்றது. மக்கள் அரசாங்கத்தின் வழிக்கு ஆடுவார்கள் என்ற கீழ்தரமான கருத்துடன் இந்த அரசாங்கம் தமது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. 


ஈரானும் அமெரிக்காவும் சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளன. இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ள இந்த தருணத்தில், விலைகளை கூட்டியதற்கு பயன்படுத்திய சுலோகத்தை அவ்வாறே பிரயோகித்தி, நாட்டில் எரிபொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் மக்கள் பக்கம் நின்று செயற்பட வேண்டும். அரசாங்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் பொய்கள், உருட்களை மட்டுமே செய்து வரக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 


தற்போதைய அரசாங்கம் பொய்யால் மக்களை ஏமாற்றிவிட்டது. இதனை நன்றாகவே செய்துள்ளது. இதனாலேயே மக்கள் அரசியல்வாதிகளின் மீது நம்பிக்கையிழந்துபோயுள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் விற்பனை பொருள் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகளை பணத்திற்கு வாங்க முடியாது. 


பணத்துக்கு விலை போக மாட்டனர். மக்கள் துயருக்காக எப்போதுமே குரல் கொடுப்போம். ஆகவே உடனே அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலயே ஐக்கிய மக்கள் சக்தி உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Zameera

பாடசாலை விடுதி கட்டமைப்பை மேம்படுத்த 1,008 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு


 நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை விடுதி கட்டமைப்பை விரைவாக அபிவிருத்தி செய்வதற்காக 1,008 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 


நாட்டின் பாடசாலை கட்டமைப்பில் தற்போதுள்ள 126 விடுதிக் கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் காணப்படுவதனாலும், அவற்றின் பராமரிப்புப் பணிகள் முறையாக இடம்பெறாமையினாலும், அங்கு தங்கியிருக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கும் வாழ்வாதாரத்திற்கும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கண்டறிந்துள்ளது. 


இந்நிலைக்கு விரைவான தீர்வுகளை வழங்கி, விடுதிகளில் தங்கியிருக்கும் பிள்ளைகளுக்குத் தரமான கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்புமிக்க சூழலை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். 


இதற்கமைய, குறித்த விடுதிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அத்தியாவசிய வசதிகளை 2 ஆண்டுகளுக்குள் விரைவாக நவீனமயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 


கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த விசேட திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Admin

“கோட்டா”வின் முக்கிய சகா அதிரடி கைது | ஒரே நேரத்தில் 2 அரச நிறுவனங்களில் சம்பளம் பெற்றாராம்...



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளார்.


இரண்டு அரச நிறுவனங்களில் ஒரே நேரத்தில் ஊதியம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Zameera

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தாக்கல் செய்த மனு இன்று பரிசீலனைக்கு


 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று (18) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 


மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் சரத் திஸாநாயக்க ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்படவுள்ளது. 


மனுதாரரான கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளதுடன், பிரதிவாதிகள் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹார்ஷி ஹேரத் சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளார். 


இந்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அதன் நிலையப் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

Zameera

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்


 மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார் என்று செய்திகள் வௌியாகியுள்ளன. 


பிரான்ஸ் ஜனாதிபதி உடனான இரவு விருந்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் இதனை உறுதிப்டுத்தியுள்ளார். 


ஜி7 உச்சிமாநாட்டை தொடர்ந்து வெர்சாய் அரண்மனையில் மெக்ரோனுடன் இரவு உணவு அருந்தியபோது, ​​டிரம்ப் தனிப்பட்ட முறையில் ஒரு பிரதியில் கையெழுத்திட்டார் என்ற செய்தி குறித்து கேட்கப்பட்டபோது, ​​"கையெழுத்திட்டதை உறுதிப்படுத்த முடியும்," என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 


இந்நிலையில், அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயியும் உறுதிப்படுத்தினார்.

Zameera

இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக மாறியது செம்மணி


 யாழ்ப்பாணம்:


பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உட்பட 380 பேரின் எச்சங்கள் மீட்பு; ஓராண்டுக்கு முன்னர் அநாமதேயமாகக் கண்டறியப்பட்ட புதைகுழியில் அதிரடித் திருப்பம்.


ஐநா சித்திரவதைக்கு எதிரான குழுவின் (UN CAT) இலங்கை விஜயத்தின் போது மேலும் 14 உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.


376 உடல்களுடன் முதலிடத்தில் இருந்த மன்னார் சத்தொச புதைகுழி தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.


பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உட்பட சுமார் 380 மனித உடல்களுக்குச் சொந்தமான எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு தற்செயலாகக் கண்டறியப்பட்ட யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி (Mass Grave), இலங்கையின் வரலாற்றிலேயே கண்டறியப்பட்ட ஆகப் பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது.


கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி முதல் 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் திகதி வரையான ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலப்பகுதியில், மூன்று கட்டங்களின் கீழ் செம்மணி சித்துப்பாத்தி (Chemmani Sithubathi) மனிதப் புதைகுழியில் 81 நாட்களாக அகழ்வாராய்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


இதன் மூலம் அடையாளம் காணப்பட்ட 380 உடல்களுள், 362 மனித உடல்களுக்குரிய எலும்புக்கூடுகள் இதுவரை முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


ஐக்கிய நாடுகளின் சித்திரவதைக்கு எதிரான குழுவின் (UN Committee Against Torture) பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பின்னணியிலேயே, ஜூன் 17ஆம் திகதியன்று இப்பொதுப் புதைகுழியிலிருந்து மேலும் 14 நபர்களுக்குரிய எலும்பு எச்சங்கள் புதிதாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


கண்டெடுக்கப்பட்ட சான்றுப் பொருட்கள்

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து மனித எலும்புகளுடன் சேர்த்து, இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட 120 இற்கு நெருக்கமான ஏனைய தனிப்பட்ட சான்றுப் பொருட்களுள் (Personal belongings) பச்சிளம் குழந்தைகளுக்கான பால் போத்தல்கள், பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர்களின் காலணிகள், பாடசாலைப் பைகள் மற்றும் சில நாணயக் குற்றிகளும் அடங்குகின்றன.


நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிநடத்தலில் யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் அகழ்வாராய்ச்சிப் பணிகள் முதன்முறையாக கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன.


இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழிகளின் வரிசை

செம்மணி புதைகுழி நாட்டின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியுள்ள நிலையில், இலங்கையின் ஏனைய முக்கிய மனிதப் புதைகுழிகளின் விபரங்கள் வருமாறு:


வரிசை மனிதப் புதைகுழியின் பெயர் கண்டெடுக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை / விபரம்

01 யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி 380 உடல்கள் (தற்போது நாட்டின் மிகப்பெரிய புதைகுழி).

02 மன்னார் சத்தொச புதைகுழி 376 உடல்கள் (28 சிறுவர்களின் உடல்கள் உட்பட - தற்போது நாட்டின் 2ஆவது பெரிய புதைகுழி).

03 மாத்தளை மருத்துவமனை புதைகுழி 155 உடல்கள் (2013ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது - 3ஆவது பெரிய புதைகுழி).

04 கொழும்பு துறைமுகப் புதைகுழி 106 உடல்கள் (குறைந்தபட்சம் 106 பேரின் எச்சங்கள் மீட்பு - 4ஆவது பெரிய புதைகுழி).

05 மன்னார் திருக்கேதீஸ்வரம் புதைகுழி 82 உடல்கள் (2013ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது - 5ஆவது பெரிய புதைகுழி).

06 முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் புதைகுழி 52 உடல்கள் (அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த போது 52 உடல்கள் மீட்பு - 6ஆவது பெரிய புதைகுழி).

அரசாங்க விசாரணைகள் அல்ல, அனைத்தும் தற்செயலான கண்டுபிடிப்புகள்!

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள இந்த அனைத்துப் பிரதான மனிதப் புதைகுழிகளும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புலனாய்வு அல்லது திட்டமிட்ட விசாரணைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல என்றும், அவை அனைத்தும் வெவ்வேறு காரணங்களுக்காக நிலத்தைத் தோண்டிய போது தற்செயலாகவே (By accident) வெளிச்சத்திற்கு வந்தவை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி நாடாளாவிய ரீதியில் ஒளிபரப்பிய விசேட நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றிருந்த அன்றைய நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷண நாணாயக்கார முதன்முறையாகப் பகிரங்கப்படுத்துகையில், இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 17 மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.