Our Feeds



Tuesday, April 21, 2026

Zameera

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எ.பி.வூட்லர் தெரிவித்துள்ளார்.

தனது துப்பாக்கி முனையில் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகது.

SHAHNI RAMEES

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்போருக்கு நான் என்றுமே டேஞ்சர் தான்! : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


 தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது.

Zameera

சமாதான நடைபயணத்திற்கு ஜனாதிபதி முழு ஆதரவு


 இன்று (21) முதல் இலங்கையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் 'சமாதான நடைபயணம்' (Walk for Peace) திட்டத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். 


இது குறித்து ஜனாதிபதி தனது X தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், "அனைத்து மக்களிடையேயும் ழிப்புணர்வு, கருணை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இன்று ஆரம்பமாகும் 'சமாதான நடைபயணத்திற்கு' ஆதரவளிப்பதையிட்டு நான் பெருமையடைகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 


"இந்த புனிதமான நடைபயணம் தம்புள்ளையில் ஆரம்பமாகி, சர்வக்ஞ தாதுக்கள் மற்றும் அரசமரக் கன்றுடன் நாடு முழுவதும் பயணிக்கும் வேளையில், எமது பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சமாதானம் மற்றும் கருணை ஆகிய நித்திய விழுமியங்கள் குறித்து மீண்டும் சிந்திக்குமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்" என்றும் அவர் மேலதிகமாகத் தெரிவித்துள்ளார். 


இந்த ஆன்மீக வேலைத்திட்டம் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும், உலக சமூகத்திற்கு சமாதானம் குறித்த ஆழமான செய்தியை வழங்கவும் உதவும் என எதிர்பார்ப்பதாகக் கூறி ஜனாதிபதி அநுர திஸாநாயக்க தனது செய்தியை நிறைவு செய்துள்ளார். 


இதேவேளை, இந்த சமாதான நடைபயணத்திற்காக வியட்நாமிய வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான ஏழு பௌத்த தேரர்கள் இன்று (21) காலை இலங்கையை வந்தடைந்தனர். இந்த நடைபயணத்தில் பங்கேற்பதற்காக 'ஆலோகா' என்ற நாயும் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. 


சர்வதேச அளவில் புகழ்பெற்ற "Walk For Peace" சமாதான நடைபயணத் திட்டம் இன்று முதல் 28ஆம் திகதி வரை இலங்கையில் அரச அனுசரணையுடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அரசமரக் கன்றுடன் இந்த நடைபயணத்தில் பங்கேற்கவுள்ளனர். 


ஜனாதிபதி செயலகம், 'Clean Sri Lanka' திட்டம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, முப்படைகள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த சமாதான நடைபயணத்திற்கு தமது பங்களிப்பை வழங்குகின்றன.

Zameera

ஹெராயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

ஹோமாகம, கட்டுவான பகுதியில் 20 கிராம் 830 மில்லிகிராம் ஹெராயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


ஹோமாகம பிராந்திய குற்றத்தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


நிகவெரட்டிய, ரஸ்நாயக்கபுர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 


சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில், ஹோமாகம, மகரகம மற்றும் மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நான்கு முச்சக்கர வண்டிகளை திருடிய குற்றங்களுக்காகத் தேடப்பட்டு வந்தவர் எனத் தெரியவந்துள்ளது. 


இதற்கமைய, திருடப்பட்ட நான்கு முச்சக்கர வண்டிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Zameera

போலி வங்கி இணையதளத்தை தயாரித்து இலட்சக்கணக்கில் மோசடி : சந்தேக நபர் கைது


 தனியார் வங்கி ஒன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்று போலி இணையதளத்தை உருவாக்கி, 1,000,024 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கணினி குற்ற விசாரணை வடமேல் மாகாணப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நேற்று (20) குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு வாரியபொல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் இன்று (21) குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கணினி குற்ற விசாரணை பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Zameera

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது

 இந்தியா -தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்காக ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கி உள்ளது. முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 31-ஆம் திகதி திருவாரூரில் தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் மாவட்டங்களில் பிரசாரம், பொதுக்கூட்டம், ஆகியவற்றில் கலந்துகொண்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

அ.தி.மு.க. கடந்த 2021-ம் ஆண்டு இழந்த ஆட்சியை மீண்டும் பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் களம் கண்டுள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 25ஆம் திகதி மயிலாப்பூரில் தனது பிரசாரத்தை தொடங்கினார். தினமும் 2 அல்லது 3 இடங்களில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

அ.தி.மு.க. தொடங்கப்பட்டு முதல் தேர்தலில் ஆட்சியை பிடித்தது போல த.வெ.க.வும் இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் என்று கூறி களம் இறங்கி இருக்கிறது. அந்த கட்சியின் ஒரே நட்சத்திரமாக இருக்கும் விஜய், பல்வேறு மாவட்டங்களில் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவர் இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் நேரடி போட்டி என கூறி வருகிறார்.

நாம் தமிழர் கட்சி தனது கொள்கையில் எந்த சமரசமும் செய்யாமல், வழக்கம் போல் இந்த தேர்தலிலும் தனித்து களம் காண்கிறது. மற்ற கட்சிகள் செய்ய தயங்கும் காரியத்தை, சீமான் துணிந்து தனது வேட்பாளர்கள் பட்டியலில் 117 ஆண்கள், 117 பெண்கள் என பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கினார். காரைக்குடியில் சீமான் போட்டியிட்டாலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

கோடையின் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஒட்டுவேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். சுமார் 20 நாட்களாக நடந்து வரும் இந்த அனல் பறக்கும் பிரசாரம், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. எனவே அதற்கு மேல் யாரும் பிரசாரம் செய்யக்கூடாது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். அதேபோல், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியிலும், த.வெ.க. தலைவர் விஜய் சென்னை நந்தனத்திலும் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்கள். சீமான் காரைக்குடியில் நிறைவு செய்கிறார்.

இதனையடுத்து தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிடவும் தேர்தல் ஆணைக்குழு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி எந்தவித தேர்தல் கருத்துக்கணிப்பும் இன்று மாலை 6 மணிக்கு பிறகு வெளியிடக்கூடாது. அதேபோல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பும் மேற்கு வங்காள இறுதிகட்ட தேர்தல் முடிந்த பின்னர் வருகிற 29-ந்திகதி மாலை 6.30 மணிக்கு மேல்தான் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Zameera

ஈரானுடனான உடன்பாடு எட்டப்படும் வரை துறைமுக முற்றுகை நீக்கப்படாது


 டெஹ்ரானுடன் ஓர் உடன்பாட்டிற்கு வரும் வரை ஈரான் துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள முற்றுகைகள் நீக்கப்படமாட்டாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுமா? என்பது குறித்த நிச்சயமற்ற நிலை நிலவி வரும் சூழலில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த வாரம் ஆரம்பமான இந்தத் துறைமுக முற்றுகையினால் ஈரான் முற்றிலும் அழிந்து வருவதாக ட்ரம்ப் தனது 'Truth Social' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

அத்துடன், இந்த மோதலில் தனது நாடு முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக போர்நிறுத்தம் வரும் புதன்கிழமையுடன் முடிவடையவுள்ள நிலையிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 

எவ்வாறாயினும், அமைதிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் கட்டம் பாகிஸ்தானில் நடைபெறுமா என்பது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. 

இந்தச் சந்திப்பை முன்னிட்டு பாகிஸ்தான் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்கத் தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கவுள்ள அமெரிக்கத் துணை ஜனாதிபதி J.D. Vance இதுவரை வொஷிங்டனில் இருந்து புறப்படவில்லை என்பதுடன், இந்தப் பேச்சுவார்த்தையில் தாம் கலந்துகொள்வதா? இல்லையா? என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

Zameera

ஈராக்–சிரியா எல்லை திறப்பு

ஒரு தசாப்தத்திற்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, ஈராக் மற்றும் சிரியா நாடுகளுக்கு இடையிலான பிரதான எல்லைக் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இது மத்திய கிழக்கின் வர்த்தக மற்றும் எரிசக்தி போக்குவரத்தில் ஒரு முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

ஈரான் தொடர்பான போர் பதற்றங்களால் தற்போது மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ள ஹோர்முஸ் நீரினைக்கு மாற்றாக இந்த நிலவழிப் பாதையைப் பயன்படுத்த முடியும் என இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. கடல்வழிப் போக்குவரத்தில் சிக்கல்கள் ஏற்படும் போது, இந்த எல்லைப் பாதை ஒரு பாதுகாப்பான மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், நிலவழியாக எண்ணெயைக் கொண்டு செல்வது என்பது கடல்வழி மற்றும் குழாய் வழி மூலமான போக்குவரத்தை விட மிகக் குறைந்த செயல்திறன் கொண்டது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படும் எண்ணெயின் அளவோடு ஒப்பிடுகையில், நிலவழிப் போக்குவரத்து செலவு மற்றும் நேரம் அதிகமாக எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கட்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில் உரையாற்றிய ஈராக்கின் நினிவே மாகாண சபை உறுப்பினர் நாதியா அல்-ஜுபோரி கூறியதாவது:

"இந்த எல்லைப் பாதையின் திறப்பு, வர்த்தகப் பரிமாற்றம் மற்றும் எண்ணெய் போக்குவரத்திற்கான ஒரு பிரம்மாண்டமான கதவைத் திறந்துவிட்டுள்ளது. இது இரு நாடுகளின் பொருளாதாரத்திற்கும் வலுசேர்க்கும்." என் தெரிவித்தார்

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் உள்நாட்டுப் போர்கள் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த எல்லைப் பகுதி மூடப்பட்டிருந்தது. தற்போது நிலைமை சீரடைந்து வருவதால், மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Monday, April 20, 2026

Zameera

ஈரான் ஒப்பந்தம் இன்று பாகிஸ்தானில் கையெழுத்து – ட்ரம்ப் அறிவிப்பு

ஈரான் உடனான ஒப்பந்தம் இன்றைய தினம் பாகிஸ்தானில் வைத்து கையெழுத்திடப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வைத்து குறித்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகவுள்ளதாக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

மறுபுறம், அமெரிக்காவின் "யதார்த்தமற்ற கோரிக்கைகள்" மற்றும் கடற்படை முற்றுகையைச் சுட்டிக்காட்டி, இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகளை ஈரான் புறக்கணிப்பதாக ஈரானிய அரச ஊடகமான IRNA செய்தி வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பது குறித்து ஈரான் தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான சமிக்ஞைகளும் அல்லது உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Zameera

பிள்ளையான் மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றம்


 சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன், மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதற்கமைய, வெலிசர கடற்படை தளத்திலுள்ள சிறைக்கூடத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கைதி ஒருவருக்கு வழங்க வேண்டிய அனைத்து வசதிகளும், பிள்ளையானுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஏதேனும் விசேட தேவைகள் ஏற்படும் பட்சத்தில் அதனை உரிய முறையில் சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு அறிவிக்க வேண்டும் 

கிடைக்கும் கோரிக்கைகளை சட்டரீதியாக அணுகி, இயலுமான விடயங்கள் செய்து கொடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ரவிந்திரநாத் சுப்ரமணியம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Zameera

இந்த வருடம் ஆட்சியை பிடிப்பதற்கான பாரிய திட்டம் இருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு


 இந்த வருடம் ஆட்சியை பிடிப்பதற்கான பாரிய திட்டம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக, பொதுமக்களிடையே புத்தாண்டு தொடர்பான உற்சாகமோ அல்லது உண்மையான புத்தாண்டு உணர்வோ காணப்படவில்லை.

மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே இம்முறை புத்தாண்டை கொண்டாடினர்.

இம்முறை மே தினம் பௌத்தர்களின் புனித நாளான வைகாசி பௌர்ணமி தினத்தில் வருவதால், அரசியல் ரீதியிலான மே தின ஊர்வலங்கள் அல்லது கூட்டங்களை நடத்தப் போவதில்லை.

மே தினத்திற்குப் பதிலாக அன்றைய தினம் சமய வழிபாடுகள் மற்றும் 'பிங்கம் எனப்படும் பௌத்த புண்ணிய காரியங்கள்'உள்ளிட்ட ஆன்மீக நிகழ்வுகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம்.

புதிய ஆண்டில் அரசியல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நிச்சயமாக மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிவித்தார். 

அத்துடன், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான ஒரு பெரிய அளவிலான திட்டத்தை தமது கட்சி வைத்துள்ளது.

வரவிருக்கும் அரசியல் சவால்கள் மற்றும் மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதற்காக தமது கட்சி முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Zameera

8 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகள் வருகை


 இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 8 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 


இதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 809,595 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 


அவர்களில் பெரும்பாலானோர் இந்தியப் பிரஜைகளாவர். அந்த எண்ணிக்கை 167,095 ஆகும். 


அத்துடன் பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். 


இதேவேளை, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 68,961 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். 


இருப்பினும், இந்தத் தரவுகளை அவதானிக்கும் போது கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளமை தெரியவருகிறது.

Zameera

முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவுக்கு பிணை


 ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 

2015ஆம் ஆண்டு சந்தேகநபர் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராகப் பணியாற்றியபோது, உரிய சட்ட நடைமுறைகளை மீறி காலி மாவட்டத்தைச் சேர்ந்த 134 பேரை தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தில் சிற்றூழியர்களாக நியமித்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது. 

காலி மாவட்டத்தில் உள்ள தனது அரசியல் ஆதரவாளர்களுக்கே இவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

ஒழுக்காற்று காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரி பணிப்பாளர் என். யோகராஜாவின் இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு முன்னாள் அமைச்சர் அழுத்தம் கொடுத்துள்ளார். 

இதன் மூலம் அவர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல் புரிந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். 

சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், முன்னாள் அமைச்சரை தலா 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார். 

அத்துடன் சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டது. 

சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு கடுமையாக எச்சரிக்கப்பட்டது. 

இந்த வழக்கு மீண்டும் ஒஆகஸ்ட் 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நீதவான் உத்தரவிட்டார்.