
Thursday, April 23, 2026

இலங்கை, ஈரான் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல்
ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பஸ் அரக்சி மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையே தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தத் தொலைபேசி உரையாடலின் போது, ஐரிஸ் டெனா என்ற கப்பலில் இருந்த மாலுமிகளை மீட்பதற்கான நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும், அந்தக்கப்பலின் பணியாளர்கள் மற்றும் ஏனைய ஈரான் கடற்படை அதிகாரிகளின் உடல்களை ஈரானுக்குத் திருப்பி அனுப்புவதற்கு வழங்கிய ஒத்துழைப்பிற்காகவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்ததாக இலங்கையிலுள்ள ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஈரான் வெளிவிவகார அமைச்சர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக இழைத்ததாகக் கூறப்படும் குற்றங்களைச் சுட்டிக்காட்டியதுடன், 'ஐரிஸ் டெனா' கப்பல் மீதான தாக்குதலானது அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட 'முன்னெப்போதும் இல்லாத போர்க்குற்றம்' என்றும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படை விதிகள் மற்றும் 1949 ஜெனீவா உடன்படிக்கைகளை கடுமையாக மீறும் செயலாகும.
இந்தக் குற்றத்தை ஈரான் ஒருபோதும் மறக்காது.
மேலும், இதற்குப் பொறுப்பான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அனைத்து சட்ட மற்றும் அரசியல் வழிமுறைகளையும் ஈரான் பயன்படுத்தும் என்றும் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி இதன்போது சுட்டிக்காட்டினார்.
வெளிவிவகார அமைச்சர்களான அப்பாஸ் அரக்சி மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணையை திறக்க முடியாது – ஈரான் அதிரடி அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர்நிறுத்தத்தை மீறியுள்ளதன் காரணமாக, ஹோர்முஸ் நீரிணையை திறக்க முடியாது என்று ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவினால் ஈரான் துறைமுகங்கள் முடக்கப்படுவது உலகப் பொருளாதாரத்தைப் பிணைக் கைதியாக வைத்திருப்பதற்குச் சமமானது என்று ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராகவே இருந்ததாகவும், ஆனால் அர்ப்பணிப்புகளை மீறுதல், தடைகளை ஏற்படுத்துதல் மற்றும் அச்சுறுத்தல் விடுத்தல் போன்றவை உண்மையான பேச்சுவார்த்தைக்குப் பெரும் தடையாக அமையும் என்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், ஈரானுடன் புதிய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் அடுத்த 36 முதல் 72 மணித்தியாலங்களுக்குள் ஆரம்பமாக வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இராஜதந்திர முயற்சிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீட்டிக்க ஜனாதிபதி தீர்மானித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
'நிவ்யோர்க் போஸ்ட்' பத்திரிகை செய்தியின்படி, பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் முன்னெடுக்கப்படும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான பாதையை எட்டியுள்ளன. இது குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், "அது நடப்பதற்கு வாய்ப்புள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (22) முடிவடையவிருந்த போர்நிறுத்தத்தை, பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க நீடிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நிலக்கரி ஊழலை மூடிமறைக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்
முன்னாள் மின்சக்தி அமைச்சர் குமார் ஜயகொடி பதவி விலகியதன் மூலம் நிலக்கரி ஊழலை மூடிமறைத்துவிடலாம் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நம்புவதாகவும், ஆனால் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய நிலக்கரி இறக்குமதி விவகாரத்தில் பாரிய முறைகேடுகள் நடந்துள்ளன என குற்றம் சாட்டினார்.
தற்போது நிலக்கரி விநியோகிக்கும் நிறுவனத்திற்கு 25 கப்பல்களைக் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில் 12 கப்பல்கள் நாட்டுக்கு வந்திருந்தன. அந்தக் கப்பல்களுக்கான தாமதக் கட்டணங்களை அறவிட அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன், அந்த அனைத்து கப்பல்களிலும் இருந்த நிலக்கரியின் தரம் குறைவாகவே காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தரம் குறைந்த 9 நிலக்கரி கப்பல்களை இறக்குமதி செய்ததன் மூலம் மாத்திரம் சுமார் 8,497 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்கனவே தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட மரிக்கார், தரமற்ற நிலக்கரியினால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன் விளைவாக, அடுத்த 6 மாத காலப்பகுதியில் டீசல் மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்காக மேலதிகமாக 40 முதல் 50 பில்லியன் ரூபா வரை செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஊழல் காரணமாக நாட்டுக்கு ஒரு ரூபா நஷ்டம் ஏற்பட்டிருந்தாலும் அதற்கு முன்னாள் அமைச்சரும், கூட்டுப் பொறுப்பின் அடிப்படையில் ஒட்டுமொத்த அமைச்சரவையுமே பொறுப்புக் கூற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
2009 ஆம் ஆண்டு முதல் நிலக்கரி இறக்குமதி குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், குமார் ஜயகொடியின் காலத்தில் நடந்த பாரிய ஊழல்களை மறைப்பதற்காக இந்த ஆணைக்குழுவைப் பயன்படுத்தக் கூடாது என எச்சரித்தார்.
விசாரணைகள் முதலில் குமார ஜயகொடியிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவரும் இத்தகைய ஊழல்களில் சம்பந்தப்படவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்கம் தற்போது அவசரமாக கொள்வனவு செய்துள்ள 5 கப்பல்களின் நிலக்கரி தரம் குறித்தும் தமது கட்சி மிகுந்த அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய வானிலை
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அமெரிக்க கடற்படை செயலாளர் ஜோன் பெலன் பதவி விலகல்
ட்ரம்ப் நிர்வாகத்தின் கடற்படை செயலாளர் ஜோன் பெலன் தனது பதவியிலிருந்து விலகுவதாக பென்டகன் அறிவித்துள்ளது. பென்டகன் ஊடகப் பேச்சாளர் ஷோன் பார்னெல் சமூக வலைதளப் பதிவொன்றில், இந்த பதவி விலகல் "உடனடியாக அமலுக்கு வரும்" வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பெலனின் விலகலைத் தொடர்ந்து, கடற்படை துணைச் செயலாளர் ஹங் காவோ பதில் செயலாளராகப் பணியாற்றுவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து வெளியேறிய உயர்மட்ட இராணுவத் தலைவர்களில் ஒருவராக பெலன் இணைந்துள்ளார். இவர் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் பரிந்துரைக்கப்பட்டு, 2025 மார்ச் மாதம் கடற்படைச் செயலாளராகப் பதவியேற்றார்.
பெலனின் விலகலுக்கான குறிப்பிட்ட காரணம் எதனையும் கடற்படை இதுவரை வெளியிடவில்லை. எனினும், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் சமீபத்தில் பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளைப் பதவிகளிலிருந்து நீக்கியிருந்தார். பெலனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ள ஹங் காவோ, 25 வருட அனுபவமிக்க ஒரு கடற்படை நிபுணராவார். விடைபெறும் பெலன் ஆற்றிய சேவைக்காக பென்டகன் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணிக்கு இடையே நிலவும் கடும் போர் பதற்றம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்த தலைமைத்துவ மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் துறைமுகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை முடக்கம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் மீறுவதால், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியாது என ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாப் கூறியுள்ளார். உலக எண்ணெய் விநியோகத்தின் பெரும்பகுதி கடந்து செல்லும் இந்த நீரிணையில் இரண்டு கப்பல்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
Wednesday, April 22, 2026

திருகோணமலையில் பேருந்து விபத்து: 22 பேர் காயம்
திருகோணமலையில் இருந்து மூதூர் நோக்கி ஏ-15 வீதியில் பயணித்த பேருந்து ஒன்று கங்கைத்துறை பாலத்திற்கு முன்பாக வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 22-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் புதன்கிழமை (22) மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது பேருந்தில் 35-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன் இதில் பேருந்தின் சாரதிக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காவத்தை சம்பவம் : 9 பேர் கைது
காவத்தை, நீலகாமம் தோட்ட பிரதேசத்தில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டை உடைத்து, அங்கிருந்தவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில், ‘கறுப்பு ஆடை’ அணிந்த கும்பலை சேர்ந்த ஒன்பது பேர் காவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக செயற்பட்ட பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பிரதிப் பொலிஸ் மா அதிபரைத் தொடர்புகொண்டு கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து பொலிஸாரால் கைது நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவும், பெருந்தோட்டப் பகுதிகளில் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுக்கவும் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனப் பிரதி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் காவத்தை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தேசிய மக்கள் சக்தியென்பது இலங்கை மக்களுக்கான கட்சியாகும்
தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன. நாம் அவ்வாறு செயல்படமாட்டோம். எம்மிடம் இனவாதம் கிடையாது. தேசிய மக்கள் சக்தியென்பது இலங்கை மக்களுக்கான கட்சியாகும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984.73 மில்லியன் ரூபா மதிப்பில் குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்பின் இரண்டாவது கட்டப் பணிகள் இன்று (22) ஆரம்பிக்கப்பட்டது.
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் அரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், 2027 ஒக்டோபர் 26ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, குறிகாட்டுவான் இறங்குதுறையை இணைக்கும் வீதி பணிகளும் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.
இந்நிகழ்வில், வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகம், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ச.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், வடக்கு மாகாணக் கடற்படைத் தளபதி, யாழ். மாவட்டச் செயலாளர், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன், வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:
நெடுந்தீவில் 1,400 குடும்பங்கள் வாழ்கின்றன. சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடித்துறைக்கு இங்கு நிறைய இடம் உள்ளது. எனவே, அப்பகுதியை அபிவிருத்தி செய்ய வேண்டியது கட்டாயத் தேவையாகும்.
போக்குவரத்து பிரச்சினைதான் இப்பகுதிக்கு பெரும் பிரச்சினையாகும். இதனால் பாடசாலையைக்கூட உரிய நேரத்துக்கு ஆரம்பிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. அப்பகுதியில் உள்ள அரச அலுவலகங்கள்கூட 3 மணிக்கு மூடப்படுகின்றது.
நெடுந்தீவு இலங்கை படத்தில் இருந்தாலும் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் இங்கு கிடைக்கவில்லை. போக்குவரத்து பிரச்சினையே நெடுந்தீவின் கழுத்தை நெறித்துள்ளது எனலாம்.
நெடுந்தீவுக்குள்ளும் பிரச்சினைகள் உள்ளன. வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. வேறு குறைப்பாடுகள் இருப்பின் அவற்றை தீர்க்கலாம்.
எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அதேவேளை, கொழும்பு அரசுகள் கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தை கைவிட்டிருந்தன. ஆனால் எமது ஆட்சி அவ்வாறு இல்லை. யாழ்ப்பாணம் மற்றும் தீவக பகுதிகளுக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நெடுந்தீவு, பருத்தித்துறை மற்றும் நைனாதீவு போன்ற பகுதிகளுக்கு யாழ்ப்பாண அரசாங்கம் (உள்ளாட்சி மன்றங்கள்) கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
கப்பல் போக்குவரத்து, இறங்குதுறைமுகம் பிரச்சினைகள் உரியவகையில் தீர்க்கப்படும். நெடுந்தீவுக்கு இரு இ.போ.ச பஸ்கள் கோரப்பட்டிருந்தன. அதனையும் நாம் விரைவில் வழங்குவோம்.
அதேவேளை, எமது அரசாங்கத்திடம் இனவாதம் இல்லை. கொள்கை அடிப்படையிலேயே செயல்பட்டு வருகின்றோம். எனினும், வடக்கிலும், தெற்கிலும் உள்ள சில குழுக்கள் இனவாதம் பேசி அரசியல் நடத்துகின்றன.
தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன. நாம் அவ்வாறு செயல்படமாட்டோம். எம்மிடம் இனவாதம் கிடையாது.

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சிறையிலிருக்கின்றார் - போட்டுடைத்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி சிறையிலிருக்கின்றார். நாட்டில் முன்னெடுக்கப்படும் 'சமாதான நடைபயணம்' போன்ற செயல்பாடுகள் வரவேற்கத்தக்கவை. என்றாலும், நடைபயணம் செல்வது மட்டும் போதாது. சமாதானத்திற்காக நடைமுறையில் எந்தவொரு செயல்பாடும் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
அத்தனகல்ல பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை (21) இடம்பெற்ற ஒரு நிகழ்வின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்தும் பதிலளித்த அவர்,
அனைத்து நல்ல விடயங்களும் அத்தனகல்லவிலிருந்தே ஆரம்பிக்கின்றன. அரசாங்கம் மற்றும் நாட்டு மக்களுக்குத் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன். நாட்டில் முன்னெடுக்கப்படும் 'சமாதான நடைபயணம்' போன்ற செயல்பாடுகள் வரவேற்கத்தக்கவை. என்றாலும், நடைபயணம் செல்வது மட்டும் போதாது. சமாதானத்திற்காக நடைமுறையில் எந்தவொரு செயல்பாடும் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை என்றார்.
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின் நினைவு தினம் குறித்துக் கேட்கப்பட்ட போது, ஈஸ்டர் தாக்குதலின் 'சூத்திரதாரி' அல்லது அதன் பின்னணியில் உள்ள முக்கிய நபர் இப்போது சிறையில் இருக்கிறார் என்று அவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்குச் சரியான நீதி வழங்கப்பட்டு சமாதானம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு என்றும் அவர் கூறினார்.


