
Friday, May 15, 2026

அம்பாறையில் மீண்டும் எரிபொருள் வரிசை

ஜகத் சமந்தவிற்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை
ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்தவிற்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் மேல் நீதிமன்றத்தினால் இன்று (15) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதாக "அத தெரண" செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக, தாக்குதலுக்குள்ளான பிரதேச செயலாளருக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த 10 இலட்சம் ரூபாயைச் செலுத்தத் தவறினால், மேலும் 24 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் சிலாபம் மேல் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக சனத் நிஷாந்த மற்றும் அவரது சகோதரருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இருப்பினும், சனத் நிஷாந்த 2024 ஜனவரி 25 அன்று கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தமையால், இன்று நீதிமன்றத்தில் அவரது சகோதரர் ஜகத் சமந்த மாத்திரமே முன்னிலையாகியிருந்தார்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சாட்சியங்கள் மற்றும் விடயங்களை ஆராய்ந்த பின்னரே இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் மே 19 முதல் 22 வரை கூடுகிறது
பாராளுமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் பாராளுமன்றம் கூடும் தினங்கள் பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதன் பிரகாரம் பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும், காலை 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 10.00 மணி முதல் 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், 11.00 மணி முதல் 11.30 மணிவரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை உண்ணாட்டரசிறை சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மறுநாள் 20ஆம் திகதி புதன்கிழமை காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் இலங்கை மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு பற்றிய அறிக்கை குறித்த ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறும்
21ஆம் திகதி வியாழக்கிழமை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஒன்பது தீர்மானங்கள் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
22ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, எஸ்.ஜீ.முதுகுமாரண, சந்திரதாஸ கலப்பதி, நந்தன குணதிலக, ஜனக் மஹேந்திர அதிகாரி மற்றும் கனகசபை தம்மன்பிள்ளை ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணை எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

யாழில் மின்னல் தாக்கி ஒருவர் பலி
யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.
வயலில் தொழிலில் ஈடுபட்டிருந்த போது மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் சங்கானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
-யாழ். நிருபர் பிரதீபன்-

21 பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக அறிவிப்பு
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 21 பிரதான நீர்த்தேக்கங்களும், 19-க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்கின்றன.
நீர்ப்பாசன பணிப்பாளர் நீர் முகாமைத்துவ பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி ஹேரத் குறிப்பிடுகையில், இன்று (15) காலை 6.00 மணி நிலவரப்படி இந்த நிலைமை பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
அநுராதபுரம் மாவட்டம்: ராஜாங்கனை, நாச்சிதூவ மற்றும் யாண் ஓயா நீர்த்தேக்கம்.
பதுளை மாவட்டம்: அம்பேவெல நீர்த்தேக்கம்.
ஹம்பாந்தோட்டை மாவட்டம்: லுணுகம்வெஹெர, திஸ்ஸ வாவி, வீரவில யோத வாவி மற்றும் வெஹெரகல நீர்த்தேக்கம்.
குருநாகல் மாவட்டம்: அம்பகொல வாவி, உஸ்கல சியம்பலன்கமுவ, மெதியாய, மாகல்ல மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கம்.
கண்டி மாவட்டம்: நாலந்தா மற்றும் வாமடில்ல நீர்த்தேக்கங்கள்.
மொனராகலை மாவட்டம்: ஹதபானகல மற்றும் அலிகொடஆர நீர்த்தேக்கங்கள்.
புத்தளம் மாவட்டம்: இகிணிமிட்டிய மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்கள்.
மன்னார் மாவட்டம்: யோத வாவி.
அதேநேரம் இன்று காலை 6.00 மணியளவில் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் தலா 3 அடி வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 1,600 கன அடிக்கும் அதிகமான நீர் கலா ஓயாவிற்கு திறந்து விடப்படுகிறது.
லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் தலா 4 அங்குலம் வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 1,740 கன அடி நீர் கிரிந்தி ஓயாவிற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
வெஹெரகல நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் தலா 3 அங்குலம் வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 700 கன அடி நீர் மாணிக்க கங்கைக்கு திறந்து விடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அலிகொடஆர நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் தலா 3 அடி வீதம் திறக்கப்பட்டு, விநாடிக்கு 680 கன அடி நீர் கிரிந்தி ஓயாவிற்கு திறந்து விடப்படுகிறது.
யாண் ஓயா நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு கதவு 6 அங்குலமாகவும், ஏனைய இரண்டு கதவுகள் தலா 4 அங்குலம் வீதமும் திறக்கப்பட்டுள்ளன
தப்போவ நீர்த்தேக்கத்தின் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்றொழில் திட்டங்களுக்கு உதவ ஜப்பான் தயார்
இலங்கையின் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க ஜப்பான் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ISOMATA Akio தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தூதுவருக்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையே தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது பின்வரும் முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவித் திட்டங்கள் மற்றும் அவற்றை மேலும் வலுப்படுத்துவது குறித்து அமைச்சர் விளக்கமளித்தார்.
கடற்றொழில் அமைச்சின் எதிர்கால இலக்குகள் மற்றும் இலங்கையின் கடல் வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து அமைச்சர் தூதுவரிடம் எடுத்துரைத்தார்.
கடற்றொழில் துறையில் ஜப்பான் பெற்றுள்ள நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அமைச்சரின் விளக்கங்களைக் கேட்டறிந்த ஜப்பான் தூதுவர், இலங்கையின் கடற்றொழில் துறையை நவீனமயப்படுத்துவதற்கும், புதிய புத்தாக்கத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கும் ஜப்பான் அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும், அதற்கான முழுமையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் சந்திப்பு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Thursday, May 14, 2026

புத்தளத்தில் சீரற்ற வானிலை : 27,222 பேர் பாதிப்பு
புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, நேற்று மாலை வரை 7,206 குடும்பங்களைச் சேர்ந்த 27,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் வை.ஐ.எம். சில்வா தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான மழையினால் புத்தளம், ஆனமடுவ மற்றும் வன்னாத்தவில்லு ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட 22 கிராம சேவகர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவே அதிகளவு பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. அங்கு 19 கிராம சேவகர் பிரிவுகளில் 7,190 குடும்பங்களைச் சேர்ந்த 27,178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனமடுவ பிரதேச செயலகப் பிரிவில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேரும், வன்னாத்தவில்லு பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வன்னாத்தவில்லு பகுதியில் ஒரு வீடு முழுமையாகச் சேதமடைந்துள்ளது.
புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் 2 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, 16 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேர் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குத் தேவையான சமைத்த உணவு, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளைப் பிரதேச செயலாளரின் கண்காணிப்பின் கீழ் மாவட்ட நிர்வாகம் வழங்கி வருகின்றது.
சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி மற்றும் ரத்மல்யாய பகுதிகளில் வெள்ளநீர் வீதிக்கு மேலாகப் பாய்வதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புத்தளம் தள வைத்தியசாலை, பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயம், பாடசாலைகள் மற்றும் பல அரச திணைக்களங்களுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளமையால் அவற்றின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
-புத்தளம் நிருபர் ரஸ்மின்-

இந்திய கடற்படை கப்பல் நாளை கொழும்புக்கு
இந்திய கடற்படையின் 'நட்புறவுப் பாலங்களை' உருவாக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக, 16 நாடுகளைச் சேர்ந்த பல்தேசியக் குழுவினருடன் ஐஎன்எஸ் சுனைனா எனப்படும் 'ஐஓஎஸ் சாகர்' (IOS Sagar) கப்பல் நாளை (15) கொழும்பை வந்தடையவுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை அறிவித்துள்ளது.
கடற்படை நடவடிக்கைகள், தகவல் தொடர்பு நடைமுறைகள், கடலில் உயிர் பாதுகாப்பு, தீயணைப்பு, சேதத் தடுப்பு, தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் நடவடிக்கைகள் (VBSS) மற்றும் மேம்பட்ட கப்பல் கட்டுப்பாட்டுப் பயிற்சிகள் போன்ற பல விசேட பிரிவுகள் இப்பயிற்சியில் உள்வாங்கப்பட்டுள்ளன.



