Tuesday, September 15, 2026
உயிரளவியல் தரவு அடையாள அட்டைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
உயிரளவியல் தரவு அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்பாக இன்று (15) செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
“கண்காணிப்பு அரசுக்கு வழிவகுக்கும், இந்தியாவுக்கு தரவுகளைத் தாரைவார்க்கும் உயிரளவியல் தரவு அடையாள அட்டையை எதிர்ப்போம்”, “இந்தியாவுடனான இரகசிய ஒப்பந்தங்கள் 7ஐயும் வெளிப்படுத்துக” உள்ளிட்ட தொனிப்பொருள்களை முன்வைத்து, மக்கள் போராட்ட இயக்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தெருநாய்களால் அதிகரிக்கும் வீதி விபத்துகள்
(நமது நிருபர்)
இலங்கையில் எற்படும் வீதி விபத்துக்களில் ஏறத்தாழ 30 வீதமானவை தெருநாய்களினால் இடம்பெறுகின்றன அத்தோடு நாய் கடிக்கான மக்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிக்காக வருடந்தோறும் சுமார் 1 பில்லியன் ரூபா வரையிலாக செலவிடப்படுகின்றது என விலங்குத் தொகையை மனிதாபிமான முறையில் நிர்வகிப்பதற்கான கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமித் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைப்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அதிகரித்து வருகின்ற தெருநாய்களின் எண்ணிக்கையானது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்துகின்றது. மனிதர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளும் சமூகத்தின் மீதான அக்கறை பற்றிய புரிந்துணர்வு இன்மையுமே தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதற்கு முக்கிய காரணிகளாகும். குறிப்பாக குப்பை உள்ளிட்ட கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் அவற்றை தான்தோன்றித்தனமாக இட்டுச்செல்வதினாலே தெருநாய்களுக்கு இலகுவாக உணவு கிடைக்க வழிவகுக்கின்றது.
இதனால் விலங்குத் தொகையை நிர்வகிப்பதற்கான புதிய சட்டத்திட்டம் இத்தகைய தெருநாய்கள் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்துவதற்கான நீண்டகால தீர்வினைப் பெற்றுத்தரும்.
அந்த புதிய சட்டத்திட்டத்தின் பிரகாரம் உரிமையாளர்கள் தாங்கள் வளர்க்கும் நாய்களினை சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனத்தில் பதிவு செய்தல் அவசியமாகும். மேலும் உரிமையாளரும் பராமரிப்பாளரும் இல்லாத நாய்கள் உரிய உள்ளூராட்சி நிறுவனத்தில் ஒப்படைக்கப்படும்.
இதனூடாக நாய்களுக்கு தடுப்பூசிப் போடுவதும் கருத்தடை செய்வதனையும் அரசாங்கம் பொறுப்பேற்கும். ஆக வீதிகளில் பராமரிப்பின்றி நாய்கள் கைவிடப்படாது.
உரிமையாளரும் பராமரிப்பாளரும் இல்லாத தெருநாய்களை உரிய உள்ளூராட்சி நிறுவனமானது பொறுப்பேற்கும் என முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்திட்டத்தின் ஊடாக நாட்டின் தெருநாய்கள் தொடர்பான பிரச்சினைக்கு சிறந்த மற்றும் நீண்டகால தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கையினைப் பொறுத்தமட்டில் வீதி விபத்துக்களில் 30 வீதமானவை தெருநாய்களினால் இடம்பெறுகின்றன. அதுமட்டுமன்றி நாய்க்கடி தடுப்பூசிக்காக வருடந்தோறும் சுமார் 1 பில்லியன் ரூபா அளவில் செலவிடப்படுகின்றன. இது மக்களின் வரிப்பணம் ஆகும். ஆகவே நாம் அனைவரும் இந்தப் பிரச்சினைத் தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
இந்த விலங்குகள் விருப்பத்தின் பெயரில் வீதிக்கு வருவதில்லை. மக்களின் பொறுப்பட்ட மற்றும் புரிதலற்ற செயற்பாடுகளே தெருநாய்கள் வீதியில் இருப்பதற்கு முக்கிய செல்வாக்கு செலுத்துகின்றன என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்
போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் சோதனைகளை தீவிரப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
தினமும் இடம்பெறும் வீதி விபத்துகள் மற்றும் பாரிய விபத்துகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகளின் போது, போதைப்பொருள் பயன்பாடு, மதுபோதையில் வாகனம் செலுத்துதல், ஆபத்தான மற்றும் கவனயீனமான முறையில் வாகனம் செலுத்துதல் மற்றும் அதிகப்படியான சோர்வு என்பன அதற்கு முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், விசேடமாக டிப்பர் வாகனங்கள், லொறிகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பயணிகள் பேருந்து சாரதிகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தி இச்சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக சேனாதீர மேலும் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்திய பல பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், அவர்களின் சாரதி உரிமங்களை இடைநிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
மேலும், ஏதேனும் ஒரு பேருந்து சாரதி அதிக வேகத்தில், போட்டியிடும் வகையில், ஒழுக்கீனமாக அல்லது போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்தினால், அது தொடர்பில் 070 47 55 600 என்ற WhatsApp இலக்கத்திற்கு வாகனத்தின் இலக்கம் தெளிவாக தெரியக்கூடிய வகையில் காணொளிப் பதிவொன்றை அனுப்பித் தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அவ்வாறு பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், தராதரம் பாராது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் வலியுறுத்தினார்.
முன்னாள் பொலிஸ்மா அதிபரினால் ஷானி மற்றும் ரவியின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
முன்னாள் பொலிஸ்மா அதிபரினால் ஷானி மற்றும் ரவியின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் மூலம், பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மற்றும் இருவர் மீறியுள்ளதாக இலங்கை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமையச் செயற்பட்டதன் மூலம், ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன், பிரதம பொலிஸ் பரிசோதகர் இந்திக சில்வா மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன ஆகியோர் மீறியுள்ளதாக நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இலங்கை மக்களின் உயிரியளவியல் தரவுகளை இந்தியாவுக்கு வழங்கக்கூடாது - வசந்த முதலிகே
(க.சிவலிங்கமூர்த்தி)
இலங்கை மக்களின் உயிரியளவியல் தரவுகளை இந்தியாவுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டதாகக் கூறப்படும் இரகசிய ஒப்பந்தங்களின் முழுமையான விபரங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
மக்கள் போராட்ட முன்னணியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை மக்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டையை வழங்கும் திட்டத்தின் கீழ் கைரேகை, கருவிழி உள்ளிட்ட உயிரியளவியல் தரவுகளை சேகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. நாம் தொழில்நுட்பத்துக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், மக்களின் மிகவும் உணர்வுபூர்வமான உயிரியளவியல் தரவுகளை அரசாங்கம் சேகரித்து வைத்திருப்பதற்கும், அவை இந்திய நிறுவனங்களின் தலையீட்டிற்கு உட்படுத்தப்படுவதற்குமே எமது எதிர்ப்பு.
ஒருவரின் பெயர், முகவரி, பிறந்த திகதி போன்ற தனிப்பட்ட தகவல்களுக்கும் கைரேகை, கருவிழி, முக அடையாளம் போன்ற தனித்துவமான உயிரியளவியல் தரவுகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது. இவ்வாறான தரவுகள் எதிர்காலத்தில் மக்களை கண்காணிக்கவும், உளவு பார்க்கவும் அல்லது அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தவும் முடியும்.
இலங்கையில் ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப நிபுணர்கள் இருக்கின்ற நிலையில், இத்திட்டத்தை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் இந்திய நிறுவனங்களை ஏன் ஈடுபடுத்த வேண்டும்? மேலும், இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது கைச்சாத்திடப்பட்டதாகக் கூறப்படும் ஏழு ஒப்பந்தங்களின் முழுமையான விபரங்களை அரசாங்கம் ஏன் மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை?
ஆட்பதிவு திணைக்களத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டிருந்த திட்டம் கடந்த மே மாதம் 30ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், இந்தப் பொறுப்பு இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மக்களின் உயிரியளவியல் தரவுகளை எந்தவொரு இந்திய நிறுவனத்திற்கும் வழங்குவதற்கு அரசாங்கத்துக்கு உரிமை கிடையாது.
எனவே, உயிரியளவியல் தரவுகளை இந்தியாவுக்கு வழங்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். அதேவேளை, இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இரகசிய ஒப்பந்தங்களின் முழுமையான விபரங்களையும் அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். இதனை வலியுறுத்தியே செவ்வாய்கிழமை (15) இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்துக்கு முன்பாக மக்கள் போராட்ட முன்னணி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளது என வசந்த முதலிகே மேலும் சுட்டிக்காட்டினார்.




