Our Feeds



Thursday, July 23, 2026

ShortNews

சட்டத்தின் இறைமை மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவு!


சனநாயகம், சட்டத்தின் இறைமை மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு!

உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியசர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் அரசாங்கத்தின் யோசனை தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் நடாத்திய விசேட கலந்துரையாடல் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர, இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அழைப்பின் பேரில் இக்கூட்டம் நடாத்தப்பட்டது....

ShortNews

தெமட்டகொடையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம்!


தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்துப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ShortNews

கோட்டாபயவின் ரிட் மனு மேலதிக பரிசீலனைக்காக ஒத்திவைப்பு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, மேலதிக பரிசீலனைக்காக ஓகஸ்ட் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று அழைக்கப்பட்டபோது, மனுதாரர் கோட்டாபய ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா பதிலுரைகளைச் சமர்ப்பித்தார்.

இதன் மேலதிக சமர்ப்பணங்களை ஓகஸ்ட் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ShortNews

அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைச்சாலைகளில் இல்லை - நீதியமைச்சர்!


நமது நாட்டில் உள்ள சிறைச்சாலைச் சட்டங்களில் "அரசியல் கைதி" என்ற பதத்துக்கான முறையான விளக்கம் எங்கும் கிடையாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நீதிமன்றங்களைப் பொறுத்தவரை எவரையும் "அரசியல் கைதி" என்று குறிப்பிட்டு யாரும் விளக்கமறியலிலோ அல்லது சிறைத்தண்டனையிலோ அடைக்கப்படுவதில்லை. அவர்கள் சந்தேக நபர்களாகவோ அல்லது குற்றவாளிகளாகவே நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்படுகிறார்கள் என குறிப்பிட்டார்.

தேர்தல் காலத்தில் வடக்கு, கிழக்கில் பிரசாரம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாகக் கூறினாரே, அந்த நிலைப்பாட்டில் அரசாங்கம் இன்னும் இருக்கிறதா என அஜித் பி. பெரேரா கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கையில், இந்த விவகாரம் தொடர்பான பட்டியலைத் தான் பலமுறை ஆராய்ந்ததாகத் தெரிவித்த அமைச்சர், இவர்கள் அனைவரும் நாட்டின் சட்டத்தை மீறிய குற்றத்திற்காகவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டவர்கள் என்றும், பல பேர் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் என்றும் விளக்கமளித்தார்.

கடந்த கால அரசியல் சூழல்களைக் கருத்திற்கொண்டு, சிறைச்சாலையில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னாள் நீதியரசர் துரைராசா சமர்ப்பித்த அறிக்கையின்படி, கைதிகளின் தண்டனைக் காலத்தைக் குறைப்பது மற்றும் பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த நடவடிக்கையானது வடக்கு, கிழக்கு, தெற்கு என நாடு முழுவதற்கும் பொதுவானதாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார்.

எது எவ்வாறாயினும், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றுவதற்கு, அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ShortNews

கரையோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கு அவசர நடவடிக்கை!


புதிதாக அபிவிருத்தியடைந்து வரும் வடக்கு மற்றும் கிழக்குக் கரையோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறும், கடற்கரைப் பகுதிகளை அபிவிருத்தி செய்த பின்னர் அங்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோதக் நிர்மாணங்களால் கடற்கரைக்கு பெரும் சேதம் ஏற்படுவதால், அதனைத் தடுப்பதற்கு அதிகபட்ச சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அந்த நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக செயற்பாட்டுக் குழுவை நியமிக்குமாறும் ஜனாதிபதி மேலும் அறிவுறுத்தினார்.

சுற்றாடல் அமைச்சுக்கு  2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போதே ஜனாதிபதி  அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

“வளமான நாடு - அழகான வாழ்க்கை, நிலைபேறான உயிர்சார் உலகம் - என்னும் பசுமையான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளின் கீழ், சுற்றாடல் அமைச்சினால் 19,719 மில்லியன் ரூபா வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இதன்படி, சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வனஜீவராசிகள் திணைக்களம், வனப்பாதுகாப்பு திணைக்களம், தேசிய மிருகக் காட்சிச்சாலைத் திணைக்களம், தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம், நீர் வளச் சபை, கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களம், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட நிறுவனங்களால் 2026ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மீண்டெழும் மற்றும் மூலதனச் செலவினங்களின் முன்னேற்றம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

ஒலுவில் கடலரிப்பைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நிபுணர் குழுவொன்றை நியமித்து, விரைவாக அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தினார்.

இலங்கையில் மனித-யானை மோதலைக் குறைப்பதற்காக 2026 வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது விசேடமாக கேட்டறிந்ததுடன், மந்தகதியில் இடம்பெறும் இத்திட்டங்கள் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன என்றும், தேவையான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தும் திட்டங்கள் தாமதமாவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எனவே, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் குறித்து உணர்வுபூர்வமாகச் சிந்தித்து, இத்திட்டங்களை உரிய காலத்திற்குள் நிறைவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இவ்வருடத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளை இவ்வருடத்திற்குள்ளேயே பயன்படுத்தி உரிய நிர்மாணப் பணிகளை மேற்காள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும், யானை வேலியின் எல்லை மற்றும் அளவை தீர்மானிக்க வேண்டியது வனவிலங்கு வலயங்களை அடையாளப்படுத்துவதற்காக அன்றி, மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே என்று ஜனாதிபதி இங்கு மேலும் வலியுறுத்தினார்.

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் நீர் மூலங்கள் பாதுகாப்புத் திட்டங்கள், தூய்மையான கடற்கரைத் திட்டம், கரையோரப் பொழுதுபோக்கு பூங்காக்களை உருவாக்கும் திட்டம், சிங்கராஜ மற்றும் கன்னெலிய வனப்பகுதிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கான பிரவேச வசதிகளை உருவாக்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரைாயடப்பட்டது.

இலங்கைக்காகத் தரமான கார்பன் உமிழ்வுக் கொள்கையொன்றை தயாரிப்பதற்குச் சுற்றாடல் அமைச்சு தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதன் மூலம் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்திக் கொள்ள முடியும் என்றும் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி இதன்போது குறிப்பிட்டார்.

வெளிநாட்டுக்கடன் உதவிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டங்களைப் பெற்றுக்கொள்வது திட்டமிட்டபடி இடம்பெறாமையினால், ஒரே பணிக்காக வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுவதாகவும், அதனால் எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ளப்படும் வெளிநாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நிலையான குழுவொன்றை நியமித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல இங்கு குறிப்பிட்டார்.

வனஜீவிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களங்களுக்கு உரிய ஓய்வு விடுதிகளை அபிவிருத்தி செய்து, நவீன மற்றும் உயர் தொழில்நுட்பத்துடன் மக்களுக்கு வழங்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், மலர் வளர்ப்பை ஒரு கைத்தொழிலாக அபிவிருத்தி செய்வதற்கும், உயிர் பல்வகைமையைப் பாதுகாப்பதற்கும் தேசிய தாவரவியல் பூங்காக்களை அபிவிருத்தி செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

சுற்றாடல் பிரதி அமைச்சர் என்டன் ஜயகொடி, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபொன்சு ஆகியோருடன், நிதி அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ShortNews

"எதிர்க்கட்சி முற்றிலும் அகற்றப்படும்" இது ஜனநாயக விரோதம் - நாமல் எச்சரிக்கை!


எதிர்க்கட்சியை அகற்றிவிடலாம் என அரசாங்கம் நினைத்தால் அது பெரும் தவறான எண்ணமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பிரதி அமைச்சர் ஒருவர் எதிர்க்கட்சியை முற்றிலும் அகற்றிவிட்டதாகவும், மீதமுள்ளவற்றையும் விரைவில் அகற்றிவிடுவோம் என்றும் கூறுவது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கூற்று என அவர் சாடினார்.

அத்துடன் நீதித்துறையின் நியமனங்களை அல்லது நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதன் மூலம் அரசாங்கம் தனது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முற்படுவதாகவும், அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் எதிர்க்கட்சியை ஒடுக்க முடியாது என்றும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

ShortNews

டெங்கு சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி!


தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, பெலவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையொன்றின் போது, வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால், இராணுவம், விமானப்படை, இலங்கை பொலிஸ் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் நேற்று (22) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

பெருமளவிலான நாய்கள் வளர்க்கப்படும், மிகவும் அசுத்தமான நிலையில் காணப்பட்ட வீடொன்றைச் சோதனையிட்ட போதே, அங்கிருந்து உயிருள்ள டெங்கு நுளம்புக் குடம்பிகள் மற்றும் குறித்த துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இதனையடுத்து, பொலிஸாரால் குறித்த துப்பாக்கி பொறுப்பேற்கப்பட்டதுடன், வீட்டின் உரிமையாளரான பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். 

உயிருள்ள நுளம்புக் குடம்பிகள் காணப்பட்ட மற்றுமொரு வீட்டைச் சோதனையிட்ட போது, அவ்வீட்டின் உரிமையாளர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால், இரு தரப்பினருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. 

அதேநேரம் நுளம்புக் குடம்பிகளுடன் வளாகங்களைப் பேணிய குற்றத்தின் கீழ், இந்த நடவடிக்கையின் போது இனங்காணப்பட்ட 13 நபர்களுக்கு எதிராகக் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை உடனடியாக அழித்து, டெங்கு ஒழிப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ShortNews

எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் இன்று விசேட கூட்டம்!


எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இன்று (23) விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த விசேட கூட்டமானது இன்று பிற்பகலில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்போது, நீதி அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான ஆதரவை பெறுவது மற்றும் தற்போதைய அரசியல் நகர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, July 22, 2026

SHAHNI RAMEES

"Saudiக்கு இனி No Entry" - பழிக்கு பழி வாங்கிய ஹூதிகள்!


 ஹூதிகளின் அறிவிப்பு:
சவுதி அரேபியாவின் எண்ணெய்
ShortNews

நீதிமன்ற உத்தரவுக்கமையவே செம்மணியில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் - அரசாங்கம் அறிவிப்பு!


யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக அரசாங்கம் ஏற்கனவே தனது தெளிவான நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. நீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் நடைபெறும் இந்தச் செயற்பாடுகளில் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இது குறித்து வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்த விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. நீதிமன்ற மருத்துவ அதிகாரி, நீதி அமைச்சு உட்பட இது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பான குழுவினர் அகழ்வுப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள் அவ்வப்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் அரசாங்கத்திற்கு மறைப்பதற்கு எதுவுமில்லை என்பதால், இந்தச் செயற்பாடுகளில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினரின் இந்த கண்காணிப்பு விஜயம் குறித்து அரசாங்கத்திற்கு விசேடமாக எந்தவொரு அறிவிப்பும் வழங்கப்படவில்லை.

அகழ்வுப் பணிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் முற்றிலும் சட்ட ரீதியானவையாவே இருக்கும். அந்த வகையில் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளுக்கு அமையவே செம்மணி புதைக்குழி அகழ்வின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குச் செல்ல முடியும் என்றார்.

ShortNews

78,000 ஐத் தாண்டியது டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை!


நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 78,125 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நேற்று (21) ஒரே நாளில் 1,097 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, தற்போது நாடு முழுவதும் உள்ள 162 மருத்துவ அதிகாரிப் பிரிவுகள் அதிஅபாய வலயங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான வளர்ச்சி காணப்படுவதுடன், மே மாதத்தில் 8,590 நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 21,535 நோயாளர்களும், ஜூலை மாதத்தில் கடந்த 21 நாட்களில் மட்டும் 22,749 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இந்த ஆண்டில் டெங்கு நோய் காரணமாக 56 மரணங்கள் சம்பவித்துள்ளதுடன், நோயாளர்களின் இறப்பு விகிதம் 0.07% ஆகப் பதிவாகியுள்ளது.

மாகாண மட்டத்தில் அவதானிக்கும் போது, மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் 52.78% ஆகும் (41,236 நோயாளர்கள்).

தென் மாகாணத்தில் 11,950 நோயாளர்களும் (15.30%), மத்திய மாகாணத்தில் 6,603 நோயாளர்களும் (8.45%) பதிவாகியுள்ளனர்.

மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 16,478 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 15,540 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இவற்றைத் தவிர, மாத்தறை மாவட்டத்தில் 5,454 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 5,228 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 5,135 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

பொதுமக்கள் தங்களைச் சுற்றியுள்ள வளாகங்களைப் சுத்தமாக வைக்குமாறும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதாரப் பிரிவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

Admin

யோசிதவுக்கு எதிரான வழக்கு ஆகஸ்ட் 7 வரை ஒத்திவைப்பு!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர் யோசித ராஜபக்‌ஷவுக்கு சொந்தமான தனியார் வங்கி கணக்கொன்றில் 17 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டமை தொடர்பான வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்திவைத்து ஹோமாகம மேல் நீதிமன்றம் நேற்று (21) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மேற்படி வழைக்கு நேற்றைய தினம் ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி கிரிஷாந்தி அமரதுங்க முன்னிலையில் விசாரணைக்க எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் பூரண விசாரணைகள் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. வழக்கு விசாரணையின் போது பிரதிவாதியான யோசித ராஜபக்‌ஷ திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தோடு, அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்டிஸ் முன்னிலையாகியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மகன் யோசித ராஜபக்‌ஷவுக்குச் சொந்தமான தனியார் வங்கிக் கணக்கில் 17 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டமை தொடர்பாகப் பணச் சுத்தழகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டு, கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதி ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.

அதன்போது பிரதிவாதியான யோசித ராஜபக்‌ஷவை தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு ரொக்கப் பிணைகளிலும், தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி கிரிஷாந்தி அமரதுங்க உத்தரவிட்டிருந்தார். அத்துடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்த நீதிபதி, ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Admin

தேவேந்திரமுனையில் துப்பாக்கிச் சூடு!


தேவேந்திரமுனை, கந்தர பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (22) அதிகாலை காரில் வந்த சிலர் கைத்துப்பாக்கி ஒன்றினால் இத்துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எவருக்கும் காயம் அல்லது பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதி, தேவேந்திரமுனை பகுதியில் அமைந்துள்ள மீனவர் ஒருவரின் வீட்டின் மீதே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.