Our Feeds



Thursday, September 3, 2026

Zameera

அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகம் வாக்குமூலம்


 முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினர் தற்போது வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும், அண்மையில் டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாகவே இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும், அருந்திக பெர்னாண்டோவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலும் இதன்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக மேலதிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Zameera

எல்-நினோ தாக்கத்தினால் தொழில் இழந்தவர்களுக்கு நிவாரணம்


 எல்-நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் 4ஆவது கூட்டம் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 


எல்-நினோ தாக்கம் காரணமாக வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து இதன் போது விசேடமாக கவனம் செலுத்தப்பட்டது. 


எல்-நினோ காலநிலை காரணமாக மரக்கறி மற்றும் பழச்செய்கைகளுக்கு ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைப்பது தொடர்பிலும், நாட்டில் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படாதவாறு பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 


இதுவரை 6 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் எல்-நினோ தாக்கத்திற்கு ஆளாகியுள்ளதால், அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமைபோல் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான தடையற்ற நீர் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டது. 


பெரும்போகத்தை ஆரம்பிப்பது தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை செப்டம்பர் 4 ஆம் திகதி நடத்துவதற்கும், எல்-நினோ தாக்கத்திற்குள்ளாகியுள்ள ஆறு மாவட்டங்களின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் 'சூம்' தொழில்நுட்ப ஊடாக கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதுடன், செப்டம்பர் 14 ஆம் திகதி உபகுழு மீண்டும் கூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

ShortNews

அருந்திக பெர்னாண்டோவிடம் CCIB விசாரணை!


மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB), முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்து வருகிறது.

துபாயிலிருந்து அண்மையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, பெர்னாண்டோவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலும் விசாரணையாளர்கள் வாக்குமூலம் பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ShortNews

பொரளையில் துப்பாக்கிச் சூடு!


பொரளை - சகஸ்புர பகுதியில் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

குறித்த முச்சக்கரவண்டி கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் இருந்தே பொலிஸாரின் கட்டளையை மீறி இவ்வாறு செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அந்த முச்சக்கரவண்டியில் 5 பேர் இருந்துள்ளதுடன், அதிலிருந்த 3 வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த நபர்கள் கொலன்னாவை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ShortNews

22 தொடர்பில் எழுத்துமூல சமர்ப்பணங்களுக்கு பிற்பகல் வரை அவகாசம்!


அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான எழுத்துமூல சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்வதற்கு இன்று (03) வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர் அந்த எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நேற்று (02) நிறைவடைந்தது.

மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்த நீதியரசர்கள் குழாம், அது தொடர்பான எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை இன்றைய தினத்திற்குள் சமர்ப்பிக்குமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

குறித்த சட்ட மூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான உயர் நீதிமன்றின் வியாக்கியானம் பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.

Zameera

உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்ள சர்வதேச ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு அவசியம் :அணிசேரா மாநாட்டில் அருண் ஹேமச்சந்திரா வலியுறுத்து


 (க.சிவலிங்கமூர்த்தி)



அணிசேரா நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களின் முதலாவது மாநாட்டின் 65 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உயர் மட்ட நினைவூட்டல் மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அண்மையில் செர்பியாவின் பெல்கிரேட் நகருக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.


உலகளவில் மோதல்கள், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் மனிதநேய நெருக்கடிகள் சர்வதேச அமைப்புக்குத் தொடர்ச்சியாகச் சவால்களை விடுத்து வரும் பின்னணியில், புதுப்பிக்கப்பட்ட ஒற்றுமை, வலுவான சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கான அதிகளவிலான குரல் என்பவற்றின் அவசியத்தை இலங்கை சார்பில் பிரதி அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.Travel Guides & Travelogues


குறித்த மாநாட்டில் அவர் மேலும் உரையாற்றுகையில்,


தற்போது உலகம் ஒரு ஆழமான நிச்சயமற்ற காலப்பகுதியை எதிர்கொண்டுள்ளது. ஆயுதமேந்திய மோதல்கள் அதிகரித்து வருவதாலும், சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் பேணுவதற்காக நிறுவப்பட்ட அமைப்புகளுக்கு அழுத்தம் அதிகரித்து வருவதாலும் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நெருக்கடிமிக்க காலங்களில் உலக நாடுகளுக்கு இடையிலான ஒற்றுமையே மிகவும் முக்கியமானது.



இயற்கைப் பேரழிவுகள், மனிதநேய அவசரநிலைகள், பொருளாதார அதிர்ச்சிகள் அல்லது ஆயுதமேந்திய மோதல்களை எதிர்கொள்ளும் நாடுகள் இவ்வாறான சவால்களைத் தனியாக எதிர்கொள்வதற்கு ஒருபோதும் விட்டுவிடக்கூடாது. அணிசேரா இயக்கம் என்பது உறுப்பு நாடுகளுக்கும் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்துக்கும் இடையில் நடைமுறை ரீதியான ஒத்துழைப்பு, காலத்துக்கு ஏற்ற உதவி மற்றும் பரஸ்பர ஆதரவை வழங்குவதற்கான ஒரு தளமாகத் தொடர்ந்து செயல்பட வேண்டும்.


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ், இலங்கை இறையாண்மை, பலதரப்புவாதம், அமைதியான சகவாழ்வு மற்றும் அனைத்து நாடுகளுடனுமான ஆக்கபூர்வமான ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஒரு சுயாதீனமான மற்றும் கொள்கை ரீதியான வெளிநாட்டுக் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்றது.


வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டுக்குரலை வலுப்படுத்துவதற்கும், அணிசேரா இயக்கத்தின் ஊடாக அமைதி, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கும் இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.

Zameera

22ஆவது திருத்தம் மூலம் : மக்களை ஏமாற்ற முயற்சி – சாமர சம்பத்


 (செ.கவிஷனா)



நாட்டில் தற்போது உண்மைக்கும் பொய்மைக்கும் இடையிலான போராட்டமே இடம்பெற்று வருகிறது. அரசாங்கம் அரசியலமைப்புத் திருத்தங்களை முன்வைத்து மீண்டும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது. அரசியல் பழிவாங்கல்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமை குறித்து நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க மக்கள் அச்சமின்றி வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.


ஸ்ரீ ஜெயவர்த்தனபுரவில்  நேற்று புதன்கிழமை (02) ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 75 ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,


உண்மைக்கும் பொய்மைக்கும் இடையிலான போராட்டமே இன்று நாட்டில் நடைபெற்று வருகிறது, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்து மீண்டும் ஒருமுறை மக்களை ஏமாற்ற அரசாங்கம் முயற்சிக்கிறது. 


உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்குச் சாதகமாகச் சட்டங்கள் அமைக்கப்பட்டு, அவர்களின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது, ஆனால் இலங்கையிலுள்ள சாதாரண, மக்களுக்கு மட்டுமே சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. 



முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்கவின் விவகாரத்தில் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்கும்போதே அவர் பலமுறை வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளாரே தவிர, சாதாரண மக்களுக்கு வழங்கப்படாத கட்டுப்பாடுகள் அரசியல் பழிவாங்கல்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.


நாட்டின் முக்கிய நிறுவனங்கள் மற்றும் நீதிமன்றங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இந்த அரசாங்கம் இயங்க நினைப்பது சாத்தியமற்றது, பிரேமதாச மற்றும் ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக் காலங்களில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைப் போல இந்த அரசாங்கமும் விரைவில் வீழும்.


நீதிமன்ற வழக்குகளின் பெயரால் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளைக் தள்ளிவைத்து அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. 1991ஆம் ஆண்டு பிரேமதாசவின் காலத்தில், அவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட முதலாவது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது துணிச்சலுடன் செயல்பட்ட மூத்த தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள்.


துப்பாக்கிச் சூடுகள் மற்றும் கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், விஜயதாச ராஜபக்ஷ போன்ற தலைவர்கள் பாராளுமன்றத்திற்குத் தீர்மானத்தைக் கொண்டுவரத் துணிந்த வரலாற்றையும் நினைவில் கொள்ள வேண்டும். 


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 75 வயதாகிறது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன, சஜித் பிரேமதாசவின் கட்சி என அனைத்துக் கட்சிகளின் தலைமைகளிலும் வயது முதிர்ந்த தலைவர்களே வீற்றிருக்கின்றனர்.



இருப்பினும், சுதந்திரக் கட்சி மட்டுமே மூத்த அனுபவமிக்கத் தலைவர்களையும் இளம் தலைமுறையினரையும் இணைத்து இயங்கும் வலுவான வரலாற்றைக் கொண்டுள்ளது.


ஜே.வி.பி அமைப்பைத் நாட்டின் பிரதான எதிரியாக கொண்ட தலைவர்கள், முன்னொரு காலத்தில் தங்களுக்கு உதவியாக இருந்தவர்கள். இன்று மக்களுக்கு நெருக்கடிகளைத் தரும் சக்திகளாக மாறியுள்ளனர்.


மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காணாமல், ஊடக விவாதங்களில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றர். 


நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், தற்போதைய மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்தவும் மக்கள் எவ்வித அச்சமுமின்றி வீதிகளில் இறங்கிப் போராட முன்வர வேண்டும்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்தவொரு அரசியல் கூட்டணிக்கும், சவால்களுக்கும் எப்போதும் தயாராகவே உள்ளது என்றும், மக்களைப் பாதுகாக்கும் அரணாகத் தொடர்ந்து இயங்கும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உறுதியளித்தார்.

Zameera

போதை மாத்திரைகளுடன் பெண் கைது


 மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்புர பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் பெண் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 




கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (02) மாலை இந்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 




இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது. 




கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Zameera

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு


 கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (03) இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.




அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசியமான பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று இரவு 8.00 மணி முதல் நாளை (04) இரவு 8.00 மணி வரை இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும்.




நுகேகொடை, கொஹுவலை, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை, மொறட்டுவை, சொய்சாபுரம் மற்றும் இராவதாவத்தை.கடலோர மற்றும் உப பகுதிகளானஅங்குலானை, இதிபெத்த, கடுபெத்த, கல்தெமுல்ல, மோதறை, கொரளவெல்ல, எகொடவுயன மற்றும் கட்டுக்குருந்த. மற்றும் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகள் கொழும்பு 06, செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாளிகாகொடெல்ல, வங்கிச் சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹவ்லொக் வீதி, கல்யாணி வீதி, வைத்தியசாலை வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை.




பராமரிப்புப் பணிகள் காரணமாக நுகர்வோருக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படும் அசௌகரியங்களுக்குச் சபை வருத்தம் தெரிவித்துள்ளதுடன், குறிப்பிட்ட இந்த 24 மணி நேரத்திற்கு நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு  கேட்டுக்கொண்டுள்ளனர்.

Wednesday, September 2, 2026

ShortNews

முன்னாள் கொழும்பு மேயரின் மகன் விமான நிலையத்தில் கைது!


கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் மூத்த மகன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் வைத்து மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டடக் கட்டுமானத் திட்டமொன்றுக்குச் செலுத்த வேண்டியிருந்த சுமார் 36 மில்லியன் ரூபாய் பணத்தை செலுத்தத் தவறியமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பாக மத்திய குற்ற விசாரணைப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Zameera

பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்


 பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் குழுவொன்று, விரிவுரையாளர்கள் மற்றும் துறைத்தலைவர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பக் கோரி பேராதனை கலஹா சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பேராதனை பல்கலைக்கழகத்தில் பெருமளவு விரிவுரையாளர் மற்றும் துறைத்தலைவர் பதவிகள் வெற்றிடமாக உள்ளதாகவும், அவற்றை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.


வெற்றிடங்கள் நிரப்பப்படாததால் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களிலும் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.



பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

SHAHNI RAMEES

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்: பிள்ளைகளை தண்டிக்க வேண்டாம்; சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு எச்சரிக்கை

 


இலங்கையின் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு,

ShortNews

புலமைப்பரிசில் பெறுபேறு - தேசிய ரீதியிலான முதலாம் இடம்!


2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 (குருநாகல்) மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக இன்று (02) பிற்பகல் பரீட்சைத் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் மொழி மூலமாக அதிகூடிய புள்ளியாக 188 பதிவாகியுள்ளதுடன், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே இந்த புள்ளி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இம்முறை பரீட்சையில் விசேட தேவையுடைய 1,018 மாணவர்கள் தோற்றினர்.

அதேபோல், இம்முறை அதிகூடிய வெட்டுப்புள்ளியாக 139 அமைந்துள்ளதுடன், பேறுகளுக்கு அமைய 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட அதிக புள்ளிகளைப் பெற முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஒகஸ்ட் 09ஆம் திகதி நடைபெற்ற இந்த பரீட்சைக்காக 294,132 விண்ணப்பதாரர்கள் பதிவாகியிருந்த நிலையில், அவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.