நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் தற்போது சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அரசாங்கத்துடன் இணைவாராயின், அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வேதாராச்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இரவு 10 மணியளவில் சிறைச்சாலை அதிகாரியொருவரின் கைப்பேசிக்கு அழைப்பொன்றை மேற்கொண்டு, ரஞ்சன் ராமநாயக்கவை தொடர்புகொண்டு உரையாடும் போதே இராஜாங்க அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வேதாராச்சி தெரிவித்தார்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அரசாங்கத்துடன் இணைய முடியாதென தெரிவித்ததாகவும், தற்போது அவர் அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் மலசலகூடம் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வேதாராச்சி குறிப்பிட்டார்.
