Our Feeds


Tuesday, February 16, 2021

www.shortnews.lk

நவீன குளியலறையில் குளிக்கும் மரிக்கார் வாய்க்கால், வரம்பு பற்றி எதுவும் தெரியாதவர்! – ஹாபிஸ் நசீர் அஹமட்

 



சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் முஸ்லிம்களை அணிதிரட்டுவது இனிமேலும் சாத்தியப்படாது.



ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் செய்து கொண்ட தேசியப் பட்டியல் ஒப்பந்தத்தை உதாசீனம் செய்து துரோகம் இழைத்த ஐக்கிய மக்கள் சக்திக்குப் பின்னால், முஸ்லிம்களை அணிதிரளச் செய்வது இனிமேல் சாத்தியப்படாதென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சிறுபான்மை சமூகங்களின் (தமிழ், முஸ்லிம்) சுமார் 12 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஒரு தேசியப்பட்டியலையேனும் வழங்காமல் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்குப் பாரிய துரோகம் இழைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்பிக்கள் பற்றி விமர்சிக்குமளவுக்கு, சூனிய அரசியல் செய்யும் எந்தவித அரசியல் ஞானமுமற்ற, மரிக்கார் எம்பிக்கு அறிவு இருக்குமென நான் நினைக்கவில்லை.

தனித்துவ கட்சியின் ராஜதந்திரங்களை தெரிந்து கொள்ளும் அறிவும் மரிக்காருக்கு இல்லை. வெறும் அபிவிருத்தி அரசியல் கோஷம் செய்யும் மரிக்கார் எம்பி, உரிமை அரசியலுக்குள் மூக்கை நுழைக்கக் கூடாது.

வடக்கு கிழக்கின் மேய்ச்சல் தரைகள் பறிபோவது பற்றியும் இவருக்குத் தெரியாது. திட்டமிட்டவாறு காணிகள் பறிபோவதால், ஏழை விவசாயிகள் படும் அவஸ்தையும் மரிக்காருக்குப் புரியாது. அரச உயர் பதவிகளில் சிறுபான்மை இனத்தவரை உள்வாங்குவதற்காக, நாங்கள் எதிர் நீச்சலடிப்பதும் இந்த எம்பிக்கு விளங்காது. நவீன குளியலறையில் குளிக்கும் மரிக்கார், வாய்க்கால், வரப்பு, நீர்ப்பாய்ச்சல், விவசாயம் பற்றி எதுவும் தெரியாதவர்.

பேரினவாதத்துக்கு மட்டும் சாமரம் வீசும் மரிக்கார் எம்பி, சிறுபான்மை அரசியலின் அபிலாஷைகள் பற்றி நன்கு படித்தால், அவருக்கு ஏற்பட்டுள்ள குழப்பம் தீர்ந்துவிடும். சிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகளைப் புறந்தள்ளும் இலட்சணத்தில் உள்ள கட்சியில் இருக்கும் மரிக்கார் எம்பி, எவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளைப் புரிந்து கொள்வார்.

இருபதை ஆதரித்ததன் நோக்கத்துக்குப் பின்னால் சமூகங்களுடனான இணக்கப்பாடு உள்ளது. இதை, மரிக்கார் புரிந்து கொள்ளல் அவசியம். ஏனைய சமூகங்களிடமிருந்து முஸ்லிம்கள் தனிமைப்படுதல் மற்றும் அந்நியப்படும் நிலைமைகளை இல்லாமல் செய்யும் சிந்தனைகளும் இந்த ஆதரவில் உள்ளன. அத்துடன் முஸ்லிம்களின் பாதுகாப்பு, இருப்புக்கான உத்தரவாதம், ஜனாசாக்களை அடக்குதல் ஆகியவையும் இதில் தங்கியுள்ளன.

அதுமாத்திரமன்றி இழந்துபோன முஸ்லிம் சமூகத்தின் பேரம்பேசல் சக்தியை வேறு வகையில் நிரூபிக்கும் இராஜதந்திரங்களும் இதில் உள்ளன. மரிக்கார் எம்பி இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும் இல்லாவிடின் புரியும் வரை வாய்மூடி இருக்க வேண்டும் என்றும் ஹாபிஸ் நஸீர் தெரிவித்துள்ளார்.


(பெரியபோரதீவு நிருபர்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »