இங்கிலாந்தின் ITN தொலைக்காட்சியின் இளம் செய்தியாளர் போட்டியில் கட்டாய ஜனாஸா எரிப்பை செய்தியாக்கி பங்கு பற்றிய இலங்கை பூர்விகத்தை கொண்ட மர்யம் ஜெஸீம்
இங்கிலாந்தில் உள்ள பிரபல ஆங்கில தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களில் ஒன்றான ஐ டி என் எனப்படும் தொலைகாட்சி நிறுவனம் தனது 65 ஆண்டு நிறைவை முன்னிட்டு 7-14 வயதை சேர்ந்த பாடசாலை மாணவர்களிடத்தில் ஒளிபரப்பு ஊடகத்துறையில் ஆர்வம் மற்றும் விழிப்புணர்வை ஊட்டும் விதத்தில் போட்டி நிகழ்ச்சி ஒன்றை கடந்த டிசம்பர் மாதம் ஏற்பாடு செய்திருந்தது .
65 வினாடிகளில் 'மகிழ்ச்சி , மாற்றம் மற்றும் உத்வேகம் ' என்ற தொனிப் பொருளை கருவாகக் கொண்டு காணொளி ஒன்றை போட்டியாளர்கள் சமர்ப்பிக்க பணிக்கப்பட்டிருந்தனர் .
இலங்கையையின் பூர்விகமாக கொண்ட இங்கிலாந்தை சேர்ந்த எட்டு வயது மர்யம் ஜெஸீம் , இலங்கையில் நிகழ்ந்து வரும் கட்டாய ஜனாஸா எரிப்பு விடயம் சம்பந்தமாக இலங்கை அரசு தனது கொள்கையை மாற்றி சுமுக நிலைமையை கொண்டு வர வேண்டும் என்ற செய்தியை அவர்கள் வழங்கிய கருப்பொருளுக்கு அமைவாக தனது காணொளி செய்தியை தயாரித்து ஐ டி என் நிறுவனத்துக்கு சமர்ப்பித்து இளம் செய்தியாளர் போட்டியில் கலந்து கொண்டிருந்தார். அவர் வழங்கிய காணொளி போட்டி நிகழ்ச்சிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் , போட்டி பற்றிய வெற்றியாளர் விபரங்கள் வெகு விரைவில் வெளியிடப்படும் எனவும் அந் நிறுவனம் அண்மையில் மர்யம் ஜெஸீமுக்கு அறிவித்துள்ளது .
இப்போட்டியின் நடுவர்களாக ஐ டி என் தொலைக்காட்சி சேவையின் சிரேஷ்ட ஊடகவியலார் ஜோன் ஸ்னோவ் உட்பட பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். செய்திகளின் உண்மைத்தன்மை, படைப்பாற்றல் மற்றும் தொடர்பு படுத்துகை முதலான முக்கிய மூன்று கோணங்களில் போட்டியாளர்களின் காணொளிகள் பரிசீலிக்கப்பட்டு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
மர்யம் ஜெஸீம் அண்மையில் இங்கிலாந்தில் உள்ள ஈமான் சணல் டிவி வழங்கிய தண்ணார்வ தொண்டு நிறுவனத்தின் நிதி சேகரிப்பு நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இலங்கையின் ஜனாஸா எரிப்பு விடயம் சம்பந்தமாக தனது மன ஆதங்கங்களை வெளியிட்டு சர்வதேசங்களிள் வாழும் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுக்களை பெற்றிருந்தார்.
அக்காணொளியை தனது 65 வினாடி செய்தி காணொளியில் உள் வாங்கி தனது செய்தி காணொளி செய்தி அறிக்கையை தயாரித்து வழங்கி உள்ளமை அவரது காணொளி செய்தியில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களில் ஒன்றாகும் .
இங்கிலாந்து மற்றும் எகிப்தில் உள்ள இஸ்லாமிய தொலைக்காட்சி சேவைகளில் தொடர்ச்சியாக அழைப்பு ஓதுனராக பங்கு கொண்டு தஜ்வீத் முறைப்படி ,அழகிய முறையில் அல்குர்ஆன் ஓதி பாராட்டுக்களை பெற்று வருகிறார் .
மர்யம் ஜெஸீம் அவர்களை நாமும் வாழ்த்துவோம்.
