Our Feeds


Tuesday, June 22, 2021

www.shortnews.lk

ரிஷாதை கைது செய்து இத்தனை நாள் தடுத்து வைத்திருப்பது ஏன்? - அமைச்சர் கெஹலிய பதில்

 



(எம்.மனோசித்ரா)


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் அரசியல் நோக்கங்கள் கிடையாது. நீதிமன்றமே இது தொடர்பில் சுயாதீனமாக தீர்மானித்து நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (22) நடைபெற்ற போது , ‘ உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ள போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர்  ஆகியோர் ஏன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாமல்  தொடர்ந்தும் தடுத்து வைக்கபபட்டுள்ளனர் ? ‘ என்று கேள்வியெழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து சுமார் 3 நாட்கள் கடந்துள்ளன. இது சட்டரீதியான நிலைமையாகும். மாறாக பலவந்தமாக யாரையும் தடுத்து வைத்திருப்பதில்லை. நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி , நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட காரணிகளுக்கமையவே அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இது தொடர்பில் எம்மால் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. இலங்கையில் சுயாதீன பொலிஸ் , சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சுயாதீனமான நீதித்துறை காணப்படுகிறது. நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பான தீர்மானங்கள் நீதிமன்றத்தினாலேயே எடுக்கப்படும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »