முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த ஜுட் குமார் ஹிஷாலினியிடம் இறுதித் தருணம் வரை வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவில்லை என ஶ்ரீலங்கா பொலிஸ் அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஹிஷாலினியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அது வெற்றியளிக்கவில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வாக்குமூலம் வழங்கும் அளவிற்கு ஹிஷாலினி, அந்த சந்தர்ப்பத்தில் சுகாதார நிலைமையை கொண்டிருக்கவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிஷாலினியிடம் வாக்குமூலம் பெற பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது அதிகாரிகள் முயற்சித்த போதிலும், அது சத்தியப்படாமை தொடர்பில் தமது அதிகாரிகள் அறிவித்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும், இந்த சம்பவம் தொடர்பில் அறிய கிடைத்த தருணம் முதல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்ததாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ரிஷாட் பதியூதீனின் வீட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மற்றுமொரு துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில், வாக்குமூலங்கள் மற்றும் மீள் வாக்குமூலங்கள் 35 இதுவரை பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறுகின்றது.
எந்தவொரு நபரினதும் அழுத்தங்களுக்கு அடிப்பணியாது, பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து, விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு தொடர்ச்சியாக விடயங்களை தெளிவூட்டி, அனைத்து குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்துவதாக பொலிஸ் தலைமையகம் உறுதியளித்துள்ளது. (TC)