(எம்.எம்.சில்வெஸ்டர்)
சர்வதேசத்தை நாடினால் அது எமது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும். எந்த அரசியல் சாயமும் பூசப்படாதவர்களைக் கொண்டு முறையான உள்ளக விசாரணை ஒன்றை நடத்த வேண்டும். மேலும், முன்னாள் சட்ட மா அதிபர் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை பெரும் சதி (GRAND CONSPIRACY) என கூறியிருந்ததை நாம் ஆழமாக ஆராய வேண்டும் என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
உயித்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பியுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகச் சந்திப்பொன்று இன்று தினம் (13) கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போதே கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், “உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 26 மாதங்கள் கடந்துள்ளன. இந்தத் தாக்குதல் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு 5 மாதங்களாகியுள்ள நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக பொறுப்புக் கூற வேண்டியவர்கள, அதனை திட்டமிட்டவர்கள், இந்த கொடூரத் தாக்குதலை தவிர்க்க முடிந்திருந்தும் அதனை பொருட்படுத்தாது விட்டவர்கள் ஆகியோரை சட்டத்துக்கு முன்கொண்டுவரும் செயற்திட்டம் மிகவும் மந்தகதியில் நடத்தப்பட்டு வருகின்றதை நாம் மிகவும் கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பொதுமக்களின் மில்லியன் கணக்கான பணத்தைக் கொண்டு செயற்படுத்தப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எந்த காரணத்துக்காக தாமதப்படுத்தப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு செயற்பாடுகள் குறித்து எமக்கு திருப்தி இல்லை என மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்தார்.