(நா.தனுஜா)
இலங்கையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டம் பிரயோகிக்கப்பட்டிருப்பதானது, கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவியாக அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலைப் பயன்படுத்துவதை வெளிப்படுத்தியிருக்கிறது என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபையினால் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டம் பிரயோகிக்கப்பட்டிருப்பதானது, இலங்கை அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை வெளிப்படுத்தியிருக்கின்றது.
நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் புதிய சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை வெளியிடுவதாக இருந்தால், எந்தவொரு தரப்பினரையும் அடக்குமுறைக்கு உட்படுத்தாத வகையில் அனைவருக்கும் பொதுவானதாக அவ்வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும் என்று மன்னிப்புச் சபை அதன் டுவிட்டர் பதிவில் வலியுறுத்தியிருக்கிறது. (MN)