( எம்.எப்.எம்.பஸீர்)
வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட 16 வயதான ஹிஷாலினி உடலில் தீ பரவி உயிரிழந்த விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும் பொலிஸ் தலைமையகத்தின் கொவிட் -19 கட்டுப்பாட்டு பிரிவுக்கு பொறுப்பாக செயற்படும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக இன்று (09) நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
விசாரணையாளர்களுடன், முறைப்பாட்டாளர்கள் சார்பில் ஆஜரான அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றுக்கு விடயங்களை முன்வைக்கும்போது இரு வேறு இதனை சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டார்.
அத்துடன் சிகிச்சைகளிடையே தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டதாக ஹிஷாலினி குறிப்பிட்டதாக வெளிப்படுத்தியதாக கூறப்படும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றிய தற்போது வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளதாக கூறப்படும் வைத்தியர் ரந்திக்கவிடம் விசேட வாக்குமூலத்தைப் பதிவு செய்யவுள்ளதாகவும் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
இதற்கான தொடர்பாடலை ஏற்படுத்தித் தருவதாக சுகாதார சேவைகள் பனிப்பாளர் நாயகம் அறிவித்ததாக விசாரணைகளை மேற்பார்வை செய்யும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவும் இதன்போது நீதிவானுக்கு விளக்கினார்..
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரினதும் பிணைக் கோரிக்கைகளை நிராகரித்த நீதிமன்றம், அவர்களின் விளக்கமறியல் காலத்தை எதிர்வரும் ஆகஸ்ட் 23 ஆம் திகதி வரை கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்தார்.
