Our Feeds


Friday, November 5, 2021

ShortNews Admin

நீதியமைச்சர் வஹாப் வாதத்தை பின்பற்றுபவர் - சிங்கள ராவய குற்றச்சாட்டு



தற்போதைய அரசாங்கத்தின் முறைகேடுகள் காரணமாக நாட்டின் அனைத்து துறைகளிலும் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சிங்கள ராவய அரசியல் கட்சியின் தலைவர் அக்மீமன தயாரதன தேரர் தெரிவித்துள்ளார்.


தெஹிவளை பௌத்த கேந்திரத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டக் கல்லூரி நுழைவுக்கான பரீட்சையிலும் கூட சிக்கல்கள் காணப்படுகின்றன.

கொழும்பு சட்டக் கல்லூரிக்கான நுழைவுப் பரீட்சைக்கு ஆங்கில மூலம் தோற்றிய 3,584 மாணவர்களில் 177 பேர் சித்தியடைந்துள்ளதாகவும் சிங்கள மொழி மூலப் பரீட்சைக்குத் தோற்றிய 1,619 மாணவர்களில் 19 பேர் மாத்திரமே சித்தியடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், தமிழ் மொழி மூலப் பரீட்சையில் தோற்றிய 380 மாணவர்களில் 37 பேர் சித்தியடைந்துள்ள போதிலும்,  அரசாங்கத்திற்குத் தெரிந்தே இந்தப் பரீட்சை பெறுபேறுகளில் சில முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான முறைகேடுகளை உருவாக்கி இனவாதத்தை தூண்ட முற்படும் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஒரு அடிப்படைவாதி என்றும் அவர் முன்னாள் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை விஞ்சும் அளவுக்கு செயற்பட்டுவருவதாகவும் சிங்கள ராவய கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற அடிப்படையில் ஜனாதிபதி செயலணியின் புதிய தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரரை நியமித்தமைக்கு நீதியமைச்சரின் வஹாபிய அணுகுமுறை காரணமாகவே அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் மேலும்  குறிப்பிட்டார்.

இந்த ஜனாதிபதி செயலணியின் மூலம், ஒரே நாட்டுக்கு பொருத்தமான ஒரே சட்டத்தை உருவாக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்படுகிறது. இதுவொரு நல்ல முன்னேற்றம் என்றும், இந்த செயற்பாட்டுக்கு பாரம்பரிய முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்காத போதிலும், நீதியமைச்சர் அதனை எதிர்ப்பது வியப்புக்குரியது எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய நீதியமைச்சர் இந்த செயற்பாட்டை எதிர்ப்பதற்கு பிரதான காரணம், இவர் வஹாப் வாதத்தை ஆதரிப்பதே தவிர வேறில்லை என அக்மீமன தயாரதன தேரர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »