Our Feeds


Saturday, November 6, 2021

ShortNews Admin

அரசாங்கத்திற்குள் தொடர்ந்து அதிகரிக்கும் பதற்றம்! - விமல், மஹிந்த நடத்திய அவசர கூட்டம் - நடந்தது என்ன?



பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஆகியோருக்கு இடையில் புதன்கிழமை இரவு அவசரக் கூட்டம் நடைபெற்றதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் விமல் வீரவங்ச இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளதாகவும், அரசாங்கத்திற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இடையிலான நெருக்கடிகள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


கட்சிகளுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி தலைமையில் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தை விரைவில் நடத்துவதற்கும், அதன் பின்னர் கட்சித் தலைவர்களுக்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் கலந்துரையாடலை நடத்துவதற்கும் பிரதமர் இணங்கினார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அண்மையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்தாம் ஆண்டு நிறைவு மாநாட்டில் விமல் வீரவன்ச கலந்து கொள்ளவில்லை எனவும் அவரது கட்சி பிரதிநிதிகள் மாத்திரமே கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »