Our Feeds


Monday, November 8, 2021

ShortNews Admin

அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்தாலும் அனைத்துக்கும் ஆதரவளிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை! - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி


 

(எம்.ஆர்.எம்.வசீம்)


மக்கள் எதிர்கொண்டு பொருளாதார பிரச்சினை மற்றும் விவசாயிகளின் உரப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக அரசாங்கத்துக்கு பல தடவைகள் எடுத்துக் கூறியுள்ளோம். எழுத்துமூலமும் அறிவித்திருக்கிறோம். அரசாங்கமே இதற்கு தீர்வு காண வேண்டும். ஏனெனில் அரசாங்கத்தின் தீர்மானங்கள் எடுக்கும் இடத்தில் நாங்கள் இல்லை.

அத்துடன் நாட்டின் தற்போதைய அரசியல் நிலையில் யாருக்கும் தனித்து செயற்பட முடியாது. அதனால் நாங்கள் அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்தாலும் அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களுக்கும் ஆதரவளிக்கவேண்டும் என்பது கட்டாயம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற கட்சி மறுசீரமைப்பு கூட்ட கலந்துரையாலைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு அரசாங்கம் முறையான தீர்மானங்களை மேற்கொண்டு மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் எதிர்நோக்கியுள்ள வறுமை நிலை தொடர்பாக நாங்களும் அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.

மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டிய தேவை தொடர்பாக பல தடவைகள் இடம்பெற்ற கலந்துரையாடல்களின்போதும் எழுத்துமூலமும் தெரிவித்திருக்கின்றோம். என்றாலும் இதுதொடர்பாக தீர்மானம் எடுக்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அரசாங்கத்தின் தீர்மானங்கள் எடுக்கக்கூடிய இடத்தில் நாங்கள் இல்லை. அதனால் நாங்கள் எமது பொறுப்பை நிறைவேற்றி வருகிறோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »