(எம்.மனோசித்ரா)
முச்சகரவண்டியில் சென்று பெண்களின் தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 4 தங்க சங்கிலிகள் , தங்க பதக்கம் மற்றும் ஜெனரேட்டர் இயந்திரங்கள் இரண்டு என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய கஹதுட்டுவ, ஹொரணை மற்றும் பிலியந்தல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டமை மற்றும் கொஹூவல பொலிஸ் பிரிவில் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டமை என்பவற்றுடனும் இவர்கள் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 மற்றும் 29 வயதுடைய கோணபல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். நுகேகொட குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.