(முஹம்மட் ரிபாக்)
எங்களை விசாரிப்பதற்கு முன்னர், எமது கட்சியின் தலைவரை விசாரணை செய்ய வேண்டும் என உயர் பீடத்தினரிடம் கோரிக்கை விடுப்பதாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தெரிவித்தார்.
சமகால அரசியல் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினரின் புத்தளம் இல்லத்தில் நேற்றிரவு (23) இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
என்னை நம்பி வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டிய கடமை எனக்கு உள்ளது. எனவே, எதிர்க்கட்சியோடு அமர்ந்துகொண்டு என்னால் எனது தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது.
அந்த வகையில் தற்போதுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி, 20 ஆவது திருத்த சட்டத்துக்கு ஆதரவு வழங்கினேன். இன்றுவரை ஆளும் அரசு சார் ஆதரவு உறுப்பினராகவும் செயற்பட்டு வருகிறேன்.
இதனையடுத்து, 20 ஆவது திருத்தத்துக்கு வாக்களிக்கும் நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன் தலைவர் ரிஷாத் பதியுதீனை நானும், நாடாளுமன்ற உறுப்பினர்களான முஷாரபும் இஷாக் ரஹ்மானும் நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினோம்.
அப்போது , உங்களின் விருப்பப்படி 20 ஆவது திருத்த சட்டமூலத்துக்கு வாக்களிக்குமாறும், இவ்வாறு நான் கூறியதாக வெளியிலோ அல்லது ஊடகங்களிலோ சொல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
தலைவர் அன்று சொன்ன ஒரே வார்த்தைக்காக இதுபற்றி நாம் யாரும் வாய் திறக்கவில்லை. ஆனாலும், தனது அரசியல் தேவைக்காக எங்களை கயவர்கள் என்று சொல்லி மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக நாடாளுமன்றத்தில் உணர்ச்சிவசப்பட்டு உரையாற்றியிருந்தார்.
உண்மையில், கட்சியால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்காகவும் செல்லுவதற்கு நான் தயாராகவே உள்ளேன். ஆனால், கட்சியால் முன்னெடுக்கப்படும் அந்த விசாரணை வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.
அண்மையில் புதிய அமைச்சரவை நியமனத்தின்போது இராஜாங்க அமைச்சு ஒன்றை பொறுப்பெடுக்குமாறு அரச தரப்பினால் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. எனினும், புத்தளம் மக்கள் சார்பில் என்னால் 16 அம்ச கோரிக்கைகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடத்தில் முன்வைக்கப்பட்டது.
அந்த 16 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக இருந்தால், பதவிகள் பெறுவது தொடர்பில் யோசிக்கலாம் என அரச தரப்பினருக்கு எடுத்துக் கூறினேன்.
இந்த நிலையில் என்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாகவும், அந்த கோரிக்கைகளில் உடனடியாக செய்யக் கூடியவற்றை செய்து கொடுப்பதாகவும் ஏனைய விடயங்களை கட்டம் கட்டமாக நிவர்த்தி செய்து தருவதாகவும் அரச தரப்பினால் எனக்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
இதுவும் புத்தளம் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன். எனவே, அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியொன்றை பெறுவது தொடர்பில் எனது கட்சி ஆதரவாளர்கள், புத்தளத்தில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் உலமாக்கள் ஆகியோரிடத்தில் ஆலோசனை பெற்று வருகிறேன்.
சகல கட்சித் தலைவர்களும் ஒரே மேசையில் அமர்ந்து பேசுவதுதான் இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.