புதிய அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட்டதில் ரிஷாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் முதுநபினுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டதில் அஇமக கட்சிக்குள் பெரும் சர்ச்சை ஏற்ப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாராளுமன்றில் உரையாற்றிய கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுத்தீன் அவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்த தனது கட்சியின் எம்.பி க்களான இஷாக் ரஹ்மான், முஷர்ரப் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகியோரை துரோகிகள் என்றும், தன்னையும் தன் கட்சிகயையும் நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றி கயவர்கள் என்றும் கடும் தொனியில் பாராளுமன்றில் பகிரங்கமாக பேசியிருந்தார்.
ரிஷாத் பதியுத்தீனின் பாராளுமன்ற உரையைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற இராஜாங்க அமைச்சர் முஷர்ரப் அவர்கள் தான் 20ம் திருத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் இருப்பினும் அஇமக எம்.பி க்களான இஷாக் ரஹ்மான் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் 20ம் திருத்தத்தை ஆதரித்து அரசுக்கு ஆதரவு வழங்கினார்கள். நான் இரட்டை குடியுரிமை சரத்திற்குத் தான் ஆதரவளித்தேன்.
அரசுக்கு நாம் வழங்கிய ஆதரவு தன்னிச்சையான ஒன்றல்ல எனவும் ஆளும் மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவருடன் அஇமக தலைவர் ரிஷாத் பதியுத்தீன் அவர்கள் டீல் பேசிய அடிப்படையில் தான் தாம் அரசை ஆதரித்ததாகவும் அது பொய்யென்றால் பகிரங்மாக தலைவர் ரிஷாத் சத்தியம் செய்து மறுக்க முடியுமா? எனவும் பகிரங்க சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை கொழும்பில் ஒன்று கூடிய அஇமக வின் உச்சபீட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அஇமக வின் தலைவர் ரிஷாத் பதியுத்தீனிடம் இராஜாங்க அமைச்சர் முஷர்ரப் விடுத்துள்ள சவால் தொடர்பில் கேள்வியெழுப்பப் பட்டது.
இராஜாங்க அமைச்சர் முஷர்ரப் சவால் விடுத்தது போல் சத்தியம் செய்து மொட்டுக்கட்சியுடன் டீல் பேசவில்லை என்று மறுப்புத் தெரிவிப்பதற்கு ரிஷாத் பதியுத்தீன் மறுப்புத் தெரிவித்ததுடன், கட்சியின் தலைவரான நான் சிறுபிள்ளைத் தனமாக நடக்க முடியாது எனவும் தெரிவித்தார்.