‘ஒரே நாடு ஒரு சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் இருந்து மூன்றாவது முஸ்லிம் உறுப்பினரும் விலகியுள்ளார்.
அதேநேரம், ஏற்கனவே இன்டிகாப் சூபர், மற்றும் நிஸார்தீன் ஆகியோர் விலகிய நிலையில் கலீல் உல் ரஹ்மானும், தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.
அதற்கமைய தற்போது ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் ஒரு முஸ்லிம் உறுப்பினர் மாத்திரமே அங்கம் வகிக்கிறார்.
இதேவேளை, ‘ஒரே நாடு ஒரே சட்டம் ‘ ஜனாதிபதி செயலணி, முஸ்லிம் தனியார் சட்டங்களில் திருத்தம் செய்து அவற்றை பாதுகாப்பதற்கு பதிலாக அந்த சட்டங்களை பறித்தெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள தமது 6 பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இதற்கு தாம் உடன்படமுடியாது, அத்துடன் முஸ்லிம் இனத்தின் முன்னோர்கள் பெற்றுத்தந்த உரிமைகளை காட்டிக்கொடுக்கவோ, பறித்துக்கொடுக்கவோ முடியாது என்றும் விலகிய கலீலுள் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாது, இனங்களின் உரிமைகள் தொடர்பில் இணக்கங்களை ஏற்படுத்தாமல், அந்த உரிமைகளை பறிக்கத் துணிகிறது. முஸ்லிம் இன முன்னோர்கள் இலங்கையின் சட்டங்களுக்கு இணங்கவே முஸ்லிம் தனியார் சட்டங்களை இயற்றியுள்ளனர்.
அந்த வகையில், கண்டிய சட்டம் மற்றும் தேச வளமை சட்டங்கள் பிராந்தியங்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டமாக அமைகின்ற நிலையில், முஸ்லிம் தனியார் சட்டம் என்பது முஸ்லிம்களின் வாழ்க்கைத்திட்டமாகும் என்று கலீலுள் ரஹ்மான் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் காதி நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகளுக்கு மேன்முறையீட்டை செய்யவேண்டுமானால் இலங்கையின் மேல் நீதிமன்றத்தில் அதனை செய்யமுடியும். இதன்போது அந்த சட்டத்தை எவ்வாறு அடிப்படைவாதம் என்று கூறமுடியும்? என்று வினவியுள்ளார்.
இதேவேளை அரச பணிகளில், முஸ்லிம் பெண்களின் உரிமை என்ற விடயத்திலும் அடிப்படைவாதம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம் ஆணைக்குழுவின் வரைவுகளில் ஒரினச் சேர்க்கை குற்றமாக பார்க்கப்படாது என்று கூறப்படுகின்ற நிலையில் அநாச்சாரங்களை ஏற்றுக்கொள்ளும், ஜனாதிபதி செயலணி, முஸ்லிம் இனத்தின் கலாசாரத்தை ஏன் மறுக்கிறது என்று அவர் ஜனாதிபதிக்கான கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.