இறைத் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய வாழ்வை விமர்சிக்கும் இந்தியாவின் ஆளும் நரேந்திர மோடியின் பா.ஜ.க கட்சியின் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் கருத்து சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது.
அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பா.ஜ.க செய்தித் தொடர்பாளரின் இந்தப் பேச்சு இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம். இது தொடர்பாக அரபு நாடுகள் கடும் கண்டனமும் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், குவைத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இந்தியத் தயாரிப்புகள் விற்பனை அலமாரியிலிருந்து ஒதுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
குவைத் நகருக்கு அருகிலிருக்கும் பகுதி ஒன்றில் இயங்கி வரும் சூப்பர் மார்க்கெட்டில், இந்தியத் தயாரிப்புகளான அரிசி, மிளகாய் மற்றும் மசாலாப் பொருள்கள் உள்ள அலமாரியானது முற்றிலும் பிளாஸ்டிக் கவரால் மூடிவைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பிளாஸ்டிக் கவரின்மீது, அரபு மொழியில் ``இந்தியத் தயாரிப்புகளை நாங்கள் அகற்றிவிட்டோம்" என்ற குறிப்பும் ஒட்டப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தி நிறுவனத்திடம் பேசிய அந்த சூப்பர் மார்க்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி நாசர் அல்-முதாரி, ``குவைத் முஸ்லிம் மக்களாகிய நாங்கள், நபிகள் நாயகத்தை இழிவுபடுத்துவதை ஒருபோதும் ஏற்கமாட்டோம்" எனக் கூறினார்.
மேலும், முற்றிலுமாக இந்தியத் தயாரிப்புகளை நிராகரிப்பது குறித்தும் பரிசீலித்து வருவதாகவும், அதிகாரியொருவர் கூறியுள்ளார்.