நாட்டில் 20 லட்சத்துக்கும் அதிகமான சமையல் எரிவாயு கொள்கலன்களை இந்த மாதத்தில் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்களுக்கு தொடர்ந்தும் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டார்.
இதற்கமைய நேற்றைய தினமும் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்தது. அதனை தரையிறக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
அத்துடன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று இன்றைய தினமும் நாட்டை வந்தடையவுள்ளது.
தற்போது நாட்டில் பல பகுதிகளில் காணப்பட்ட எரிவாயுவுக்கான மக்களின் வரிசை குறைவடைந்துள்ளது.
தொடர்ந்தும் மக்களுக்கு எரிவாயு வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக நாளாந்தம் ஒரு லட்சம் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.