(எம்.மனோசித்ரா)
நாட்டுக்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவுமே ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து விலகினேன்.
ஐக்கிய மக்கள் சக்தியும் , ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளி கட்சிகளும் டலஸ் அழகப்பெருமவின் வெற்றியை உறுதிப்படுத்துவற்கு கடுமையாக உழைக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் பதவி விலகலையடுத்து வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று (19) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடவுள்ளதாக முன்னர் அறிவித்திருந்தார்.
எவ்வாறிருப்பினும் இன்று அமர்வுகள் ஆரம்பமாக சற்று நேரத்துக்கு முன்னர் டுவிட்டர் பதிவொன்றை இட்டு , தான் வேட்புமனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று அறிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது டுவிட்டர் பதிவில் , ‘ நான் நேசிக்கும் எனது நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக ஜனாதிபதி பதவிக்கான எனது வேட்புமனு தாக்கல் செய்யும் தீர்மானத்தை வாபஸ் பெறுகிறேன்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் இணைந்து டலஸ் அழகப்பெருமவை வெற்றி பெறச் செய்வதற்கு கடுமையாக உழைப்போம்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.