முன்னாள் அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளின் பிரகாரம், அவரது வெற்றிடத்திற்காக மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷவிடம் பெரும் எண்ணிக்கையான கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தம்மிக்க பெரேரா விலகுவாரா இல்லையா என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று (25) வெளியாகும் என எதிர்பார்கக்ப்படுகிறது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று இடம்பெறவுள்ளதாகவும், இதில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தம்மிக பெரேரா பதவி விலகினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்ட போதிலும் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் பொதுஜன பெரமுனவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆளும் செயலாளர் ரேணுகா பெரேரா, தென் மாகாண முன்னாள் ஆளுநர் வில்லி கமகே மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் முன்னாள் தலைவர் எஸ்.அமரசிங்கவின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கட்சியின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ மீண்டும் அந்த பதவியை பொறுப்பேற்குமாறு அதிகமானோர் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.