அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது மனுக்களின் விசாரணையை இலங்கை உயர் நீதிமன்றம் நேற்று முடித்துக்கொண்டது.
இதனையடுத்து உயர்நீதிமன்றின் தீர்மானம் நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நீதியரசர்களான புவனேகா அலுவிஹார மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை இரண்டாவது நாளாக நேற்றும் இடம்பெற்றது.
வினிவிந்த பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்கு உள்ளிட்ட ஒன்பது பேரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 22வது திருத்தத்தின் ஊடாக அரசியலமைப்பின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக மனுக்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சரத்துக்களை நிறைவேற்றவேண்டுமானால் அதனை நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளாலும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமாகவும் நிறைவேற்ற வேண்டும் என்று மனுக்களில் கோரப்பட்டுள்ளன.