காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக லண்டன் விமானி ஒருவர் தன்னுடைய வேலையைத் துறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதீத மழைப்பொழிவு, வெள்ளம், திடீரென உயரும் வெப்பநிலை ஆகிய இயற்கை பேரிடர்கள் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் விமானப் போக்குவரத்து காரணமாக புவி வெப்பநிலை அதிகரிப்பதை அறிந்த விமானி ஒருவர் தன்னுடைய வேலையை இராஜினாமா செய்துள்ளார்.
இலண்டனைச் சேர்ந்த டோட் ஸ்மித் எனும் விமானி ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலாத்துறை விமானியாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு திடீரென ஏற்பட்ட குடல் வீக்கத்தால் அவதிப்பட்ட ஸ்மித் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தாவர உணவு வகைக்கு மாறினார்.
அதனைத் தொடர்ந்து சூழலியலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ச்சியாக செய்திகளை சேகரித்து படிப்பதில் ஆர்வம் காட்டிய ஸ்மித் அப்போது விமானப் போக்குவரத்து கார்பன் வெளியீட்டில் முக்கியப் பங்காற்றுவதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தனது சக விமானிகளிடம் தனது அச்சத்தைப் பகிர்ந்து கொண்டதுடன் இவற்றுக்கு எதிராக போராட எண்ணி தன்னுடைய பணியை இராஜினாமா செய்துள்ளார்.
