இலங்கை முஸ்லிம்கள் தேசிய பங்கங்கேற்பை உள்ளார்ந்த ரீதியில் அதிகரிக்க வேண்டும் எனவும் தேசிய பங்கேற்புகளிலிருந்து இன்னும் ஒதுங்கி இருக்கவே முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.
மரபான ஒழுங்குகளுக்குள் கட்டுண்டு மூடிய நிலைப்பாடுகளில் இருந்த வன்னம் சமூக விவகாரங்களை கையாள்வதும், அதனை அடிப்படையாக கொண்டு தீர்வுகளை எட்ட நினைப்பதும் தொடர்ந்தும் எமது சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுறுதி வாய்ந்த போக்காக அமையாது என சுட்டிக்காட்டினார்.
இலங்கை முஸ்லிம் சமூகம் பிற துறைகளை போன்றே அரசியலிலும் தீர்மானமிக்க, செல்வாக்கு செலுத்தும் ஆற்றலை கொண்டிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார். அன்மைய நாட்டின் தேசிய விவகாரங்களில் எமது அரசியல் வகிபங்கின் பாத்திரம் சரியானதாக அமைந்தனவா என்பது குறித்து பறந்த அடிப்படையில் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் திறந்த ஜனநாயக பங்கேற்பிற்கு இஸ்லாம் முன்மாதிரியானது எனவும் தெரிவித்தார்.
அரசியல் மாற்றம் குறித்து சிந்திக்கும் நாம் எங்களுக்குள்ளாலயே அந்த மாற்றம் உருவாக வேண்டும் என்பதை மறந்து விடுகிறோம் என்றும், நாங்கள் ஒவ்வொருவரும் அவரவர் போக்கில் திருப்தி காணும் நிலைப்பாடு மாறி தேசிய இலக்குகளில் எமது விவகாரங்களை கையாளும் போக்குகள் குறித்து சிந்திக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
ஜனநாயக ரீதியான கட்சி அரசியல் பங்கேற்பு, சமூக அரசியல் பங்கேற்பு, சிவில் சமூக அரசியல் பங்கேற்பு, தொழிற் சங்க ரீதியான அரசியல் பங்கேற்புகளுக்கான வாயில்கள் பரவலாகவே எமது நாட்டில் திறந்திருப்பதாகவும் எமது ஈடுபாட்டின் குறைபாட்டால் ஏற்படும் பின்னடைவுகளிலிருத்து மீளுவதற்கும் முன்னோக்கி செல்வதற்கும் முயற்சிக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், இந்நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் உண்மையான அரசியல் பங்கேற்பு குறித்து புத்துசாதூரியமாகவும் மூலோபாயமாகவும் செயல்வடிவம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அரசியலால் கிடைக்கும் அடைவுகள் குறித்து சிந்திக்கும் நாம் அதை பெறும் அரசியல் செயல்வடிவ ஒழுங்குகள் குறித்து சிந்திக்காதிருப்பது பாரிய பின்னடைவு என தெரிவித்த அவர், ஒதுங்கிய போக்கு, பங்கேற்காமை போக்கு மற்றும் கவணக்குறைவான அரசியல் போக்குகளால் எமது சமூகத்தின் வலுவாக்கம் மேம்படாது எனவும் தெரிவித்தார்.
மார்க்க கல்வியை கற்றவர்கள் சமூக தேசிய விவகாரங்களில் கூடிய ஈடுபாட்டை காண்பிக்க முன்வர வேண்டும்.
காலத்துக்கேற்ற மென்திறன்களை வளர்த்துக் கொண்டு நாட்டிற்கு பிரயோசனமளிக்கும் நல்ல விடயங்களில் பங்கேற்க வேண்டும். எமது நாட்டில் இதற்கு எந்தவித தடைகளும் இல்லை. முறையான பங்கேற்கேற்புகள் அதிகரிக்கப்படும் போது இடைவெளிகள் குறையும். ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த மௌலான அபுல் ஹஸன் அலி நத்வி (ரஹ்) அவர்கள் கூறிய ஒரு விடத்தை மேற்கோள் காட்ட விரும்புகிறேன் ”இலங்கையில் இஸ்லாமிய அழைப்புகளுக்கான வாயில்கள் திறந்தே உள்ளன. சிறந்த பண்பாடுகளால் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவதாலையே இங்கு இஸ்லாமிய அழைப்பு பணி மேற்கொள்ளலாம்.” இலங்கையில் ஜனநாயக ரீதியான பங்கேற்புக்கான பரப்பையே அவர் இதன் ஊடாக சுட்டிக்காட்டுவதாக நான் நினைக்கிறேன் என தெரிவித்தார்.
ஸம் ஸம் நிறுவனத்தினால் இளம் உலமாக்களை இலக்காக் கொண்டு (7) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட “சங்கல்ப” எனும் நிகழ்வில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.