விஹாரைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு மின்சாரத்தை குறைந்த விலையில் விநியோகிக்க நாட்டில் பிரத்தியேகமான மின்னுற்பத்தி நிலையங்கள் ஏதும் கிடையாது. மத தலங்கள் தமது மாதாந்த மின்கட்டணத்தை முகாமைத்துவம் செய்துகொள்ள வேண்டும்.
மத தலங்களுக்கு மின்கட்டணத்தின் ஊடாக நிவாரணம் வழங்கும் தீர்மானத்தை எமது அமைச்சால் எடுக்க முடியாது. நிதியமைச்சு நிவாரணம் வழங்க தீர்மானித்தால் அதனை செயற்படுத்த தயார் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று (20) செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற அமர்வு கூடியபோது விஹாரைகள் மற்றும் மத தலங்களுக்கு மின்கட்டணத்தில் நிவாரணம் வழங்கல் குறித்து எதிர்தரப்பினர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, நாடாளுமன்றத்தின் ஒரு மாதத்துக்கான மின்கட்டணம் 60 இலட்சம் ரூபாவாக காணப்படுகின்ற நிலையில் எதிர்வரும் காலங்களில் இத்தொகை மேலும் அதிகரிக்க கூடும். ஆகவே சூரிய சக்தியிலான மின்சக்தி திட்டத்தை நாடாளுமன்றத்திலும் செயற்படுத்துவது அவசியமானதாகும்.
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் அரச பாடசாலைகள் மற்றும் மாகாண கல்வி திணைக்களங்களின் கூரைகளில் சூரிய சக்தியிலான மின்னுற்பத்திக்கான திட்டம் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளன.
மின்கட்டண அதிகரிப்பினால் சகல பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
2013ஆம் ஆண்டு மின்கட்டணம் அதிகரிக்கப்ட்டு 2014ஆம் ஆண்டு நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையம் ஸ்தாபிக்கப்பட்டதை தொடர்ந்து மின்கட்டணம் குறைக்கப்பட்டது.2013ஆம் ஆண்டுக்கு பின்னர் மின்கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.