காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவருமான றஊப் அப்துல் மஜீதின் கடற்கரை வீதியிலுள்ள வீட்டை உடைத்து திருடிய சந்தேகத்தில் காத்தான்குடி பொலிஸார் ஒருவரைக் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம்.ஏ.றஹீம் தெரிவித்தார்.
குறித்த வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்த நிலையில் இரு தினங்களின் பின்னர் மீண்டும் வந்து திறந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவை உடைத்து பெறுமதியான வெண்கலத்திலான கழுகு சிலை மற்றும் மின்பிறப்பாகி என்பவை திருடப்பட்டுள்ளன.
பின்னர் குறித்த பொருட்களை கடை ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஏ.றஹீம் தலைமையில் கருணாரட்ன ஜெயசிங்க, சானக தனோஜன், சந்திரதாச ஆகிய பொலிஸ் குழுவினரே சந்தேக நபரைக் கைது செய்தனர்.
சந்தேக நபர் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.