Our Feeds


Tuesday, October 11, 2022

SHAHNI RAMEES

ஜப்பானும் இலங்கையும் ஒப்பந்தத்தில் கைச்சாத்து.!

 

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் காபன் குறைப்பு கூட்டுப் பொறிமுறையை
நடைமுறைப்படுத்தும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி
அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர். அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில்
கைச்சாத்திட்டனர். அதனை தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை
சந்தித்த ஜப்பான் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

புவி வெப்பமடைவதற்கு காரணமான பசுமை இல்ல வாயு உமிழ்வைக்
குறைப்பதற்காக உலகளாவிய ரீதியில் ‘கியோத்தோ’ அமைப்பு நிறுவப்பட்டது.

No description available.

இந்த அமைப்பின் இரண்டாவது பதவிக் காலத்தின் போது (2013-2020) ஜப்பான் அந்த
அமைப்பிலிருந்து விலகிக் கொண்டது. அதனைத்தொடர்ந்து உலகளாவிய பசுமை
இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் பங்களிப்புச் செலுத்துவதற்காக 2013
ஆம் ஆண்டளவில் காபன் அளவைக் குறைக்கும் இருதரப்பு கூட்டுப்
பொறிமுறையொன்றை ஜப்பான் அறிமுகம் செய்தது.

வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளுடன் இணைந்து, பசுமை இல்ல வாயு
வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும், குறைக்கப்பட்ட அளவை வளர்ச்சி
அடைந்துவரும் நாடுகளுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பகிர்ந்து கொள்வதற்கும்
ஏற்ற வகையில் இப்பொறிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

No description available.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான சாசனத்துக்கமைய அதன் உறுப்பினர்களால் 21ஆவது மாநாட்டில் கைச்சாத்திடப்பட்ட ‘பெரிஸ்’ ஒப்பந்தத்தில் இணக்கம் காணப்பட்ட தீர்மானங்களை தேசிய மட்டத்தில்
நடைமுறைப்படுத்துவதற்காகவே ஜப்பான் இத்திட்டத்தை தயார் செய்துள்ளது.

இந்த திட்டம் தற்போது மங்கோலியா, பங்களாதேஷ், எதியோப்பியா, கென்யா,
மாலைத்தீவு, வியட்நாம், லாவோஸ், இந்தோனேசியா, கோஸ்டரிகா, பலாவு,
கம்போடியா, மெக்சிக்கோ, சவுதி அரேபியா, சிலி, மியான்மார், தாய்லாந்து,
பிலிப்பைன்ஸ் ஆகிய 17 நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக்
குறைப்பதன் மூலம், வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் குறைக்கப்படும் காபன் உமிழ்வு அலகுகள் (Carbon Credit Sharing) இரு நாடுகளுக்கும் இடையில் பகிரப்படும்
வகையில் இந்த பொறிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் இப்பொறிமுறையை (Joint
Crediting Mechanism – JCM), செயல்படுத்த அவசியமான தொழில்நுட்பப்
பங்களிப்பை ஜப்பானிய அரசாங்கம் அல்லது ஜப்பானின் தனியார் துறை வழங்கும்.
அத்தோடு இதன் ஆரம்ப செலவில் ஒரு பகுதி, இந்தத் திட்டங்களில் முதலீடு
செய்யப்படுகிறது.

மேலும் இப்பொறிமுறையின் கீழ் ஆற்றல், தொழில்துறை, போக்குவரத்து, கழிவு
முகாமைத்துவம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளுடன் தொடர்புடைய திட்டங்களும் செயல்படுத்த முடியும்.

காபன் குறைப்பு கூட்டுப் பொறிமுறையை (JCM) அமுலாக்குவதன் மூலம் நாட்டிற்கு
காபனைக் குறைக்கக்கூடிய முன்னணி தொழில்நுட்பம், புதிய உற்பத்தி முறைகளின்
அறிமுகம், அதற்கான நிர்மாணப் பணிகள், இயந்திரங்கள், உபகரணங்கள் உள்ளிட்ட
உள்கட்டமைப்புகளை மேம்படுத்தல் ஆகியன கிடைப்பது மற்றுமொரு நன்மையாகும்.

2016ஆம் ஆண்டு செப்டெம்பர் 21 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட காலநிலை மாற்றம்
தொடர்பான பெரிஸ் உடன்படிக்கைக்கு இலங்கை இணங்கியுள்ளது.

ஐக்கியநாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான சாசனத்திற்கமைய 2021 ஆம் ஆண்டுஜூலை 30 ஆம் திகதியன்று இலங்கை, தேசிய அளவில் எரிசக்தி, தொழில்துறை, போக்குவரத்து, கழிவு முகாமைத்துவம், விவசாயம், காடு ஆகிய துறைகளில் பசுமைஇல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு தனது பங்களிப்பைச் செலுத்துவதற்கு உடன்பட்டுள்ளது.

அதற்கமைய, காபன் குறைப்பு கூட்டுப் பொறிமுறையை (JCM) இலங்கையில்
நடைமுறைப்படுத்துவதன் ஊடாக பெரிஸ் உடன்படிக்கையின் கீழ் உறுதியளித்துள்ள
இலக்குகளை அடைவதற்கான உலகளாவிய முயற்சிக்கு இலங்கை பங்களிக்கும்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான காபன் குறைப்பு கூட்டுப்
பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் அனுமதி பெறப்பட்டுள்ளதுடன் அது
தொடர்பான அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

மேலும், இப்பொறிமுறையை (JCM) இலங்கையில் அமுல்படுத்தும்போது, இது
தொடர்பான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக இரு தரப்பினரையும்
உள்ளடக்கிய ஒருங்கிணைந்த குழு நிறுவப்படுவதுடன் அதன் இணைத் தலைமை
பதவியை இலங்கை மற்றும் ஜப்பான் அரசாங்கங்கள் வகிக்கவுள்ள்ளமை
குறிப்பிடதக்கது.

சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்
சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க,
காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன
உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »