Our Feeds


Wednesday, October 12, 2022

ShortTalk

போதைப்பொருளுக்கு அடிமையான எனது மகனை திருத்தித் தாருங்கள்: இன்னொரு தாய் யாழ். பொலிஸாரிடம் மன்றாட்டம்!


 

(மயூரன்)


யாழ். தாவடி பகுதியில் நீண்ட நாட்களாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தார் எனக் கூறப்படும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை திருத்தி தருமாறு குறித்த இளைஞரின் தாயார் பொலிஸாரிடம் மன்றாட்டமாக கோரியுள்ளார்.


யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட புலானாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் நேற்று (11) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞனின் தாயார் இவரை திருத்தி தருமாறு பொலிஸாரிடம் மன்றாட்டமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

28 வயதான குறித்த இளைஞர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய போதைப்பொருள் வியாபாரிகளுடன் நீண்ட காலமாக தொடர்பை பேணி வந்துள்ளதோடு இதனை பிரதான தொழிலாக கொண்டு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் போதைக்கு அடிமையான 15 வயதான தனது மகனை ” எனது மகன் எனக்கு வேண்டாம்” என கடிதம் எழுதி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தாய் ஒருவர் ஒப்படைத்திருந்தார்.

குறித்த சிறுவனை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் சிறுவனை அச்சுவேலியில் உள்ள நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »