தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள்
பராமரிப்பு மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுமார் 31 பேர் கொல்லப்பட்டனர்.இதில் குழந்தைகளும் பெரியவர்களும் அடங்குவர் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் முன்னாள் பொலிஸ் அதிகாரி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நபரை கைது செய்வதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தாய்லாந்து பிரதமர் இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த அனைத்து விசாரணை அமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது தாய்லாந்தில் துப்பாக்கி வைத்திருப்பவர்களின் விகிதம் அதிகமாக உள்ளது. ஆனால், சட்டவிரோத ஆயுதங்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை என அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.