உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தமை தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 16 பேரையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீற்றர் போல் நேற்று (15) உத்தரவிட்டார்.
கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைகுண்டுத் தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் அம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும் காத்தான்குடியை சேர்ந்தவர்கள், சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 66 பேரை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸார் வழக்கு தாக்குல் மேற்கொண்டதையடுத்து இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்னர். இந்நிலையில் குறித்த வழக்கில் இருந்து 3 பேரை விடுவித்ததுடன் 63 பேரில் 47 பேர் பிணையில் வெளிவந்துள்ளதுடன் 16 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சிறைச்சாலையில் இருந்து பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட 16 பேருடன் பிணையில் வெளிவந்த 47 பேரும் ஆஜராகினர் இதன் போது நீதவன் விளக்கமறியில் தொடாந்து இருந்துவரும் 16 பேரையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறும் பிணையில் வெளிவந்த 47 பேரையும் அடுத்த வருடம் ஜனவரி 31 திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.