Our Feeds


Sunday, December 25, 2022

SHAHNI RAMEES

பல பிரதேசங்களில் கடும் மழை : வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் இன்று இலங்கையை கடக்கின்றது!

 

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் (டிச.25) நாளையும் (டிச. 26) பலத்த மழை மற்றும் கடுங்காற்று நிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் திருகோணமலைக்கு வடகிழக்காக 350 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

இது இன்றைய தினம் இலங்கையை கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மேற்படி தாழமுக்கம் காரணமாக நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.   

அத்தோடு நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடக்கு முதல் வடமேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை பதிவாகக்கூடும்.

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 



நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.  

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் மற்றும் நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன், அக்கடல் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதனால் மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும், தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் கடலில் பயணம் மேற்கொள்வோர் மற்றும் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்வோரும் மீனவர்களும் மறு அறிவித்தல் வரை கடல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »