Our Feeds


Thursday, December 15, 2022

ShortTalk

கொழும்பு மயானத்தில் காருக்குள் கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட முக்கிய நபர் - ICU வில் அனுமதி!




கொழும்பு – பொரள்ளை மயானத்தில் கார் ஒன்றிற்குள் கைகள் கட்டப்பட்ட நிலையில், மீட்கப்பட்ட நபர் தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இவ்வாறு மீட்கப்பட்ட நபர் 52 வயதான வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரதான காப்புறுதி நிறுவனமொன்றின் தலைவர் ஒருவரை கடத்திச் சென்று படுகொலை செய்ய முயற்சித்தமை தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரை கடத்திச் சென்று பொரள்ளை மயானத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்ய முயற்சித்ததாக பொரள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

பல கோடி ரூபா பணத்தை வழங்கும் நபர் ஒருவரை சந்திப்பதற்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளமை விசாரணைகளில்  தெரியவந்துள்ளது

கறுவாத்தோட்டம் பிரதேசத்திலுள்ள தனது வீட்டில் இருந்து நேற்று (14) பிற்பகல் அவர் சென்றுள்ளார்.

அதன் பிறகு அவரது மனைவி சிறிது நேரத்தின் பின்னர்  அவரை அழைக்க முயற்சித்த போது, அவரது கையடக்கத் தொலைபேசி செயலிழந்துள்ளது.

தொலைபேசி ஊடாக கிடைத்த சிக்னல்களுக்கு அமைய அவரது தொலைபேசி பொரள்ளை மயானத்திற்கு அருகில் இருப்பதை மனைவி கண்டுபிடித்துள்ளார்.

இதில் சந்தேகமடைந்த தலைவரின் மனைவி, நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஒருவரிடம் கூறி பொரள்ளை மயானத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

தலைவர் வந்த காரின் சாரதி இருக்கையில் கைகள் கட்டப்பட்டிருந்ததையும், கழுத்தில் கம்பியொன்றும் காணப்பட்டதையும் அவர் தனது விசாரணையின் போது பொலிஸாரிடம் தெரிவித்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதன்போது, ​​உடனடியாக செயற்பட்ட நிறைவேற்று அதிகாரி, மயானத்தில் இருந்த தொழிலாளியின் உதவியுடன் தலைவரின் கைகளையும் கழுத்தில் இருந்த கம்பியையும் அகற்றி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரிடமிருந்து எந்த அறிக்கையும் வெளியிட முடியாத நிலையில் இருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைவரின் காருக்கு அருகில் இனந்தெரியாத நபர் ஒருவர் செல்வதை மயானத்தில் பணிபுரிபவர் பார்த்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் தலைவரிடம் பல கோடி ரூபா கடன் பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் தலைவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 03 முறைப்பாடுகளை செய்துள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.


நன்றி : TC

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »