பிரான்ஸிலுள்ள பரிஸ் செயின்ற் ஜேர்மைன் கழகத்தில் (பிஎஸ்ஜி) விளையாடும் ஆர்ஜென்டீன அணித்தலைவர் லயனல் மெஸி, அக்கழகத்தின் ரசிகர்களுக்கு உலகக் கிண்ணத்தை அக்காட்சிப்படுத்த அனுமதி கோரியுள்ளார். எனினும், இக்கோரிக்கைக்கு அனுமதியளிப்பதற்கு கழக நிர்வாகிகள் தயங்கி வருகின்றனர் என செய்தி வெளியாகியுள்ளது.
கத்தார் 2022 உலகக் கிண்ண சுற்றுப்போட்டி முடிவடைந்த நிலையில் வீரர்கள் தமது கழகங்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
கழகங்களின் போட்டிகளுக்குத் திரும்பும் வீரர்கள் தாம் வென்ற பரிசுகளை, கழகத்தின் முதல் போட்டிக்கு முன்னர் ரசிகர்களுக்கு காட்சிப்படுத்துவது சம்பிரதாயமாகவுள்ளது.
இதன்படி, PSG கழகத்தில் தான் மீண்டும் பங்குபற்றவுள்ள முதல் போட்டிக்கு முன், உலகக் கிண்ணத்தை காட்சிப்படுத்து லயனல் மெஸி அனுமதி கோரியுள்ளார். ஆனால், ஆர்ஜென்டீன அணி இம்முறை இறுதிப்போட்டியில் பெனல்டி முறையில் 4:2 கோல் விகிதத்தில் பிரான்ஸை தோற்கடித்தே சம்பியனாகியது.
கத்தாரிலும் ஆர்ஜென்டீனாவிலும் வெற்றிக்கொண்டாட்டங்களில் பிரான்ஸின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பேயை கேலி செய்யும் வகையில் ஆர்ஜென்டீன வீரர்கள், குறிப்பாக கோல் காப்பாளர் மார்டினஸ். நடந்துகொண்டனர். பிஎஸ்ஜி கழகத்தில் எம்பாப்வே பல வருடங்களாக விளையாடி வருகிறார். லயனல் மெஸி, கடந்த வருடம் அக்கழகத்தில் இணைந்தார்.
இந்நிலையில், உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பிரான்ஸை, ஆர்ஜென்டீனா தோற்கடித்துடன் எம்பாப்வேயை ஆர்ஜென்டீன வீரர்கள் கேலி செய்த பின்னணியில், ஆர்ஜென்டீனாவின் கிண்ணத்தை தமது கழக ரசிகர்களிடம் காட்சிப்படுத்தும்போது ஏற்படக் கூடிய பிரதிபலிப்புகள் குறித்து பிஎஸ்ஜி கழக நிர்வாகிகள் கரிசனை கொண்டுள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது,