Our Feeds


Thursday, December 1, 2022

ShortTalk

VIDEO: உங்கள் மட்டக்களப்பு மாவட்ட வாழ்வாதாரத்திற்கும் உதவியிருக்கிறோம் - சாணக்கியனுக்கு சீனா உடனடி பதிலடி




இலங்கை மற்றும் இலங்கை மக்களுடன் சீனா உண்மையாக நின்றால், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு சீனா ஆதரவளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் தெரிவித்த கருத்துக்கு இலங்கைக்கான சீன தூதரகம் பதிலளித்துள்ளது.



அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினரின் புரிதல் தவறானது மற்றும் முழுமையற்றது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் கொவிட்க்கு எதிரான போராட்டத்திற்காகவும் சீனா இலங்கைக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கியுள்ளதாக தூதரகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை நிதி நெருக்கடியை எதிர்கொண்ட போது முதலில் பதிலளித்த நாடு சீனா என்றும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சீன ஜனாதிபதியும் சீனப் பிரதமரும் இலங்கைக்கு பல்வேறு வழிகளில் ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இரு தரப்பினரின் நிதித் திணைக்களங்களும் உயர் மற்றும் திறமையான மட்டத்தில் தொடர்பு கொண்டு வருவதாகவும் சீன நிதி நிறுவனங்கள் ஏப்ரல் மாதம் முதல் இலங்கை நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், பல்வேறு சீன வங்கிகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்தில் பிரதான பங்கேற்பாளராக இலங்கைக்கு ஆதரவளிக்க ஏனைய நாடுகளை ஊக்குவிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடனாளிகள் தொடர்பான ஒவ்வொரு கலந்துரையாடலிலும் சீனா தீவிரமாகப் பங்குபற்றியுள்ளதாகவும், இலங்கையின் மிகப்பெரும் கடனாளி சீனா அல்ல எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »