Our Feeds


Tuesday, January 3, 2023

ShortTalk

முட்டையை இறக்குமதி செய்ய வேண்டாம் : பிரச்சினையை பேசி தீர்க்கலாம் - அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம்




(இராஜதுரை ஹஷான்)


முட்டை இறக்குமதி செய்ய வேண்டாம், பிரச்சினையை பேசி தீர்மானித்துக் கொள்ளலாம். வெளிநாடுகளில் இருந்து முட்டையை இறக்குமதி செய்தால் உள்ளூர் முட்டை உற்பத்தி தொழிற்துறை பாதிக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.முட்டை உற்பத்திக்கான மூலப் பொருட்கள் மற்றும் கோழி தீவனத்தின் விலையேற்றம் ஆகிய காரணிகளினால் முட்டை உற்பத்தி துறை பாதிக்கப்பட்டுள்ளது.உற்பத்தி செலவு அதிகரித்துள்ள காரணத்தினால் முட்டைக்கான விலையை தீர்மானிக்க முடியாத நிலை காணப்படுகிறது.

இவ்வாறான காரணிகளினால் சந்தையில் முட்டைக்கான கேள்வி அதிகரித்துள்ளது.முட்டைக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.இவ்வாறான பின்னணியில் முட்டை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இது அவதானத்திற்குரியது.

வெளிநாடுகளில் இருந்து முட்டையை இறக்குமதி செய்தால் உள்ளூர் முட்டை உற்பத்தி தொழிற்துறை பாதிக்கப்படும்.பிரச்சினையை பேசி தீர்மானித்துக் கொள்ளலாம்.ஆகவே முட்டை இறக்குமதிக்கான அனுமதியை மீள்பரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலைக்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து சந்தையில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டு,முட்டையின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது.சந்தையில் ஒரு முட்டையின் விலை 60 ரூபா முதல் 70 ரூபாவாக உயர்வடைந்துள்ளது, பெரும்பாலான பகுதிகளில் முட்டைக்கான தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »