ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சஹாரான் ஹசீமுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட IS அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பிலிருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சந்தேகதபர் நேற்றிரவு (ஜன. 02) பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த வருடம் ஓக்டோபர் மாத்தில் இந்தியாவின் கோயம்புத்தூரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சந்தேகநபர்களுடன் தொடர்புகளை பேணியதாக கூறப்படும் ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களில் பங்கேற்றதாகக் கூறப்படும் சனோபர் அலி ஆகியோர் டிசம்பர் 29ம் திகதி இந்தியாவில் கைது செய்யப்பட்டனர்.
இந்த சந்தேகநபர்கள் 2022 பெப்ரவரியில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியின் ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளில் உள்ள வனப்பகுதியின் உட்பகுதியில் குற்றவியல் சதித்திட்டத்தில் ஈடுபட்டதுடன், இலங்கையில் 2019 ஏப்ரலில் நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹாரான் ஹசீமுடன் தொடர்பில் இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட IS அமைப்பைச் சேர்ந்தவருடன் காத்தான்குடியைச் சேர்ந்த 30 வயதுடைய உவர் லெப்பை அஹமட் நுஸ்கீன் என்ற சந்தேகநபர், பேஸ்புக் ஊடாக தொடர்புகளை பேணிவந்துள்ளதாக இந்திய உளவுத்துறை விசாரணையின் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இலங்கை உளவுத்துறைக்கு இது குறித்து அறிவிக்கப்பட்ட நிலையில், காத்தான்குடி – பழைய கல்முனை வீதி எம்.பி.சி.எஸ். குறுக்கு வீதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தனது வீட்டில் வைத்து விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.