Our Feeds


Wednesday, February 22, 2023

ShortTalk

டலஸ், பீரிஸ் உள்ளிட்ட SLPP யிலிருந்து பிரிந்துள்ள குழுவை மன்னிக்கத் தயார் - மஹிந்தானந்த அலுத்கமகே!



(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் ஜி.எல் பீரிஸ், டலஸ் அழகபெரும தலைமையிலான தரப்பினரை மன்னிக்கிறோம்.

அவர்கள் மீண்டும் எம்முடன் இணைந்துக் கொள்ளலாம் என முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற  கொழும்புதுறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான  இரண்டு கட்டளைகள்  மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டடார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவை அடிப்படையாக கொண்டு பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொருளாதார திட்டங்களை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இடைநிறுத்தியதால் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்கள்.கடற்பரப்பை மண்ணால் ,கற்களாலும் நிரப்ப வேண்டும்.

இந்த செயற்திட்டத்தை நிறைவு செய்யும் போது நாட்டில் பாறை வளம இல்லாமல் போகும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தெரிவித்தார்.

அவர் ஒரு பொய்யர் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் கொழும்பு துறைமுக நகர பணிகள் வெற்றிகரமாக தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

அரசாங்கததில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும்  ஜீ.எல்.பீரிஸ் ,டலஸ் அழகபெரும  போன்றவர்கள் தேர்தல் தொடர்பில் கதைக்கின்றனர். 

மக்களாணை இருக்குமாயின்  முதலில் அவர்கள் கிராமிய அபிவிருத்து சங்கத்தின் தேர்தலிலாவது வென்று காட்டாட்டும். நீங்கள் தனியாக கட்சியை அமைத்துள்ளீர்கள்.

 நீங்கள்  எமது  நண்பர்களே. எமது கட்சியில் இருந்து பிரிந்துவந்து உங்களுடன் இணைவார்கள் என்றே நினைத்தீர்கள். எங்களின் பொதுஜன பெரமுன அப்படியே இருக்கின்றது.

நண்பர்களே நீங்கள் மீண்டும் எங்கள் பக்கம் வாருங்கள். உங்களை மன்னிக்க நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனால் எங்களுடன் வாருங்கள் மீண்டும் இணைந்து செயற்படுவோம்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு நாங்கள் கட்சி என்ற ரீதியில் தயாராக உள்ளோம்.திட்டமிட்ட வகையில் தேர்தலை நடத்தாவிட்டால் நாங்களும் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொள்வோம்,பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட தயாராக உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள், ஆகவே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »