அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (01) பணிப் புறக்கணிப்பு, சுகயீன விடுமுறை, எதிர்ப்பு பேரணிகள் மற்றும் கறுப்பு உடையணிந்து கடமைக்கு சமுகமளித்தல் ஆகிய எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.
இதேவேளை, ஆசிரியர்கள் அதிபர்கள் இன்று கறுப்பு உடை அணிந்து மற்றும் கறுப்புப் பட்டி அணிந்து இன்று பெரும்பாலான பாடசாலைகளில் கடமைக்கு சமுகமளித்துள்ளனர்.
சம்பள அதிகரிப்பின் இரண்டாம் கட்டம் இந்த வருடம் வழங்கப்படாமை, நிலுவை சம்பளத்திற்கும் வரி அறவிடப்படல் உட்பட பல்வேறு காரணங்களை முன்வைத்து ஆசிரியர்கள் அதிபர்கள் இந்த கறுப்பு வார போராட்டத்தில் குதித்துள்ளனர்.
நீர்கொழும்பு கல்வி வலையத்தில் கட்டானை கல்விக் கோட்டத்தில் வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் அதிபர், ஆசிரியர்கள் இன்று கறுப்பு ஆடை அணிந்து கடமைக்கு சமுகமளித்தனர். எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பாடசாலை வாயிலில் கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
இதேவேளை பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.