Our Feeds


Friday, April 21, 2023

News Editor

விசேட தேவையுடைய இரு சிறுமிகள் கட்டிவைத்து சித்திரவதை – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பில் விசேட தேவையுடைய இரு சிறுமிகளை கட்டிவைத்து சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மற்றும் மனித உரிமை ஆணைக் குழுவினர் குறித்த பராமரிப்பு நிலையத்துக்கு நேற்று வியாழக்கிழமை (20) சென்று விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான பராமரிப்பு நிலையத்தில் 22 பெண்கள் 4 ஆண்கள் உட்பட 26 சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில் அண்மையில் அங்குள்ள ஒரு சிறுமியின் இரு கைகளை பின்பக்கமாவும் இரு கால்களையும் கயிற்றினால் கட்டி அறையில் வைக்கப்பட்ட காட்சியும், இன்னுமொரு சிறுமியை இரு கைகளையும் கயிற்றால் கட்டி ஊஞ்சல் ஒன்றில் கட்டிவைத்து சித்திரவதை செய்த காட்சியும் காணொளிகளாக சில ஊடகங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் வெளியாகின.


இதனையடுத்து, பொலிஸார் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவினர் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.


இதில் வாய்பேச முடியாத இரு பிள்ளைகளையே இவ்வாறு கட்டிவைத்து சித்திரவதை செய்துள்ளதாகவும், அங்கு கடமையாற்றி வரும் சிலர் சிறுவர்களுக்கு நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட பாவனை பொருட்களை திருடிச் செல்வதாகவும் அதனை கண்டுபிடித்து அவர்களை எச்சரித்த கோபத்தினால் இவ்வாறு செய்துள்ளதாக பாராமரிப்பு நிலைய பொறுப்பாளர் கூறியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது


இதேநேரம் அங்கு கடமையாற்றும் 3 பேரிடம் வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் ஏனைவர்கள் வீட்டிற்குச் சென்ற நிலையில் அவர்களின் வாக்கு மூலங்கள் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னரே இந்த சித்திரவதையை செய்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இது தோடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவரகின்றனர்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »